Saturday, February 14, 2026

தலை எங்கு போகும்- அப்பர் தேவாரங்கள்

நேற்று சிங்கப்பூரில் உள்ள புனிதமரம் பாலசுப்பிரமணியர் ஆலயத்தில் காலை நேரம் நின்ற போது, புதிதாய் வந்திருக்கும் ஓதுவாமூர்த்தி, திரு அங்க மாலையைப் பாடிக்கொண்டிருந்தார். 

தலையே நீ வணங்காய் என்று ஆரம்பிக்கும் இந்த அப்பர் தேவாரம், கண், மூக்கு, வாய் என்று ஒவ்வொரு அங்கமும் இறைபணி செய்யவே இருக்கின்றன என்பதனை அழுத்திச் சொல்லும். 

அதில் வரும் வாக்கே நோக்கிய மங்கை  மணாளனை என்ற வரி வரும் போது என் குருவை நோக்கி, மனம் எப்போதும் செல்லும். 

மூக்கே நீ முரலாய்-முதுகாடுறை முக்கணனை 

வாக்கே நோக்கிய மங்கை மணாளனை மூக்கே நீ முரலாய்



இருபது ஆண்டுகளுக்கு முன்னால் நான் சென்னை திருவான்மியூரில் பெரும்பாண நம்பி ஐயா
திரு.கோடிலிங்கம் அவர்களிடம் தேவாரம் கற்றுக்கொண்டிருந்தேன். இந்த வரி வரும்போது, அவர், வாக்கே நோக்கிய மங்கை 
மணாளனைஎன்றால், "அடுத்து அம்பாள் என்ன சொல்ல போறான்னு சிவபெருமான் காத்துக்கொண்டிருப்பாராம். அப்படி ஒரு கணவர் உனக்கு வாய்க்க வேண்டும். நீ கல்யாணம் பண்ணிக்கோ" என்று  அறிவுறுத்துவார். புன்னகையோடு கடந்த நாட்கள் அவை. இன்று அவர் வாக்குப் பலித்து எங்கள் வீட்டில் இந்த நிகழ்வைத் சொல்லி மகிழ்வதும் உண்டு. 

இன்று மஹாசிவராத்திரி. பலரும் சிவாலயங்களுக்குச் செல்வீர்கள். 

இரவு முழுதும் பல சிவாலயங்களுக்குப் போவது என்பது இன்றைய நாளில் அதிகரித்திருப்பதும் மகிழ்ச்சி தரும் ஒன்று.

மீண்டும் திரு அங்க மாலைக்குள் செல்வோம். 

தலையே நீ வணங்காய்- தலை மாலை தலைக்கணிந்து,

தலையாலே பலிதேரும் தலைவனைத் 

தலையே நீ வணங்காய்

தலைக்கனம் என்ற சொல் கர்வத்தைக் குறிக்கிறது. அவனுக்கு மண்டைக்கனம் அதிகம் என்று சிலர் சொல்லக்கேட்டிருப்பீர்கள். 

தலை தான் நாம் ஒருவர் மற்றவரை அடையாளம் காண உதவும் உடல்பாகம். நம் எல்லாருக்கும், நம் வாழ்க்கையில் அன்பாக இருந்தவர்கள் அனைவரின் முகமும், தலையும் நினைவில் இருக்கும்.

தலை என்பதை தலைமுடியாக/சிகையாகக் கொள்ளாமல், முகத்தோடு சேர்த்துக்கொள்ள வேண்டும். 

ஏன் சிவபெருமான் தலைமாலை அணிந்திருக்கிறார்? தேவாரம் முதல், அபிராமி அம்மைப் பதிகம் வரை பல இடங்களில், சிவபெருமான், தலைமாலை அணிந்தவராகவும், கையில் மண்டையோட்டில், பலி தேறுபவராகவும், அவருக்கு அன்னமிடுபவளாக அம்பாளும் சொல்லப்பட்டிருக்கின்றனர்.

உலகம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டால், யாரும் இருக்க மாட்டார்கள். எந்த உயிரும் இருக்காது. ஓரறிவு முதல், ஆறறிவு உள்ள யாரும் இருக்க மாட்டார்கள். பிரம்மா, விஷ்ணு போன்றவர்களும் இருக்க மாட்டார்கள்.
பாற்கடலைக் கடையும்போது வந்த ஆலகால விஷத்தை உண்ட சிவபெருமான் மட்டுமே என்றும் நிலைத்திருப்பார். 
அதன் குறியீடாகவே அவர் தலைமாலை அணிந்திருப்பவர் என்று அப்பர் பெருமான் தேவாரத்தில் சொல்லப்பட்டிருக்கிறார்.

அப்பர் பெருமான் தன்னைத் தாழ்த்திக்கொள்ளும் பண்பு கொண்டவர். எப்போதும் இறைவனையே சிந்தித்த அருளாளர். 
காரைக்கால் அம்மையார், அரவா நீ ஆடும் போதுன் அடியின் கீழிருக்க என்று கேட்டுக்கொண்டார். 

இன்றும் திருவாலங்காட்டில், இறைவனின் காலுக்கருகில் அமர்ந்து கொண்டிருக்கிறார்.
அப்பர் என்ன கேட்டார் தெரியுமா? 
இன்று காலை இந்த பாடல் கண்ணில் பட்டது. இன்று நாம் பரவலாக கேட்கும் ஒரு சொல். 

பரபரப்பு 



இல்லங்க.

 
கலாய்ச்சுட்டாங்க 

இல்லங்க.

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

இல்லங்க.

வருமானவரி சோதனை அதுவும் இல்லங்க 

அதுக்குப்பிறகு ஒண்ணு நடக்குமே. அதே தான். 
தலைமறைவு ஆனார். 

தலைமறைவு என்ற சொல்லை அஞ்ஞாத வாசம் என்றும் சிலர் அறியலாம். ஆம் மஹாபாரதத்தில் பாண்டவர்கள் பன்னிரண்டு ஆண்டுகள், தலைமறைவு வாழ்க்கை வாழ நேரிட்டது. பெரும்பாலும் இதனை எதிர்மறை கோணம் கொண்ட சொல்லாக அறியலாம்.

சுதந்திர போராட்டக்காலத்தில், பெரிதும் புழக்கத்தில் இருந்த சொல் தலைமறைவு . இன்று குற்றவாளிகள் பிடிபடும்நேரம் வரை பதுங்கியிருத்தலைச் சொல்கிறது.
இந்த சொல் பெரும்பாலும் தற்காலிகமான ஒன்றாகவே கையாளப்பட்டது. 

அப்பர் பெருமான் அப்பன் நீ, அம்மை நீ, அன்புடைய மாமனும் மாமியும் நீ என்பார். 


 
அப்பர் பெருமான் இவ்வுலக வாழ்க்கையில் பல துன்பங்களை அனுபவித்தவர். கல்லில் கட்டி, கடலில் போட்டார்கள். இறைவன் திருவருளால் கரையேறினார்.
கரையேறியதும், ஈன்றாளுமாய் எனத்தொடங்கும் இந்த பாடலைப்பாடினார். 

இறைவன், தாய், தகப்பன், உடன் பிறந்தோராகவும் இருக்கிறார். எப்போதும் தோன்றாத் துணையாய் உடன் இருக்கிறார் என்று உணர்ந்திருக்கிறார். 

சுண்ணாம்பு அறையில் இட்டார்கள்; மதயானையை ஏவினார்கள்.ஒன்றும் ஆகாமல் சிவபெருமான் காப்பாற்றினார். 

 எப்போதும் அவரை ஏதாவது ஒரு துன்பம் தொடர்ந்தபடி இருந்தாலும், அவர் இறைவன் திருவடியை மட்டுமே மனதில் கொண்டு தனது, பணியை மேற்கொண்டார்.

 தெய்வங்கள் பலவும் ஆயுதங்களும், மலர்களும் ஏந்திக்கொண்டு காட்சி அளித்தாலும், அப்பர் பெருமான் கையில் இருப்பது, களையை எடுக்க உதவும் உழவாரம் மட்டுமே. 


 அப்பர் பெருமான் அவ்வாறு உழவாரப்பணி செய்யவில்லை என்றால் இந்த நூற்றாண்டு வரை நம் கோயில், குளங்கள் இருந்திருக்காது. 
அப்படிப்பட்ட அப்பர் பெருமானும் சிவபெருமானிடம் ஒரு வேண்டுகோள் விடுக்கிறார்.
என்ன கேட்டிருப்பார்? 

இறைவனின் சுற்றமாகத் தன்னை எப்போதும் நம்புபவர். நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம் என்று முழங்கியவர்.

ஈசனின் திருவடி நிழலின் அருமையை உணர்ந்தவர். 

என்ன கேட்டிருப்பார்? 

பூக்களைக்கொண்டு பூசை செய்வதை அப்பர் பெருமான் அங்கங்கே தேவாரத்தில் வலியுறுத்தி இருப்பார்
என்ன கேட்டிருப்பார்? 

முருகார் நறுமல ரிண்டை தழுவிவண் டேமுரலும்

பெருகா றடைசடைக் கற்றையி னாய்பிணி மேய்ந்திருந்த

இருகாற் குரம்பை யிதுநா னுடைய திதுபிரிந்தால்

தருவா யெனக்குன் றிருவடிக் கீழொர் தலைமறைவே.  (4-113-2)


பதம் பிரித்த பாடல்:
முருகார் நறுமலர் இண்டை தழுவி,வண்டே முரலும் பெருகு ஆறு அடை சடைக்கற்றையினாய் ,பிணி மேய்ந்திருந்த இருகால் குரம்பை இது நான் உடையது, இது பிரிந்தால் தருவாய் எனக்கு உன் திருவடிக்கீழ் ஓர் தலைமறைவே .


முருகார் :
முருகு ஆர்ந்த- மணம் நிறைந்த 
நறுமலர் இண்டை தழுவி: நறுமலர்களால் ஆன தலைமாலையை அணிந்து 
இண்டை என்பது தலைமாலையைக் குறிக்கும்.  (Head Garland)
வண்டே முரலும்:தமிழில் ஒவ்வொரு சத்தத்திற்கும் நல்ல சொற்கள் இருக்கின்றன. நம் பிள்ளைகளுக்கு ஆங்கிலத்தில் தனித்தனியே சொற்கள் தெரிந்திருக்கும். 
குதிரை ஒலி, பன்றி ஒலி, யானை ஒலி, நாய் ஒலி, வண்டின் ஒலி என்று பலவற்றுக்கும் சொற்கள் இருக்கின்றன. வண்டின் ரீங்காரத்தை முரல்வது என்று சொல்வார்கள். 
செயற்கை மலர்களை வாங்கி வைத்தால், வண்டு வந்து முரலாது.
பெருகு ஆறு அடை சடைக்கற்றையினாய்:
பெருகு ஆறு, கங்கை. அந்த நதி சிவபெருமான் கற்றைச் சடையினுள் அடைந்திருக்கிறது. 
பிணி மேய்ந்திருந்த:பிணியைக் கூரையாகக் கொண்ட

 
நோய் வந்தால் தீரும். பிணி என்பது தீராத ஒன்று. 
பிறவியைத் தான் அனுபவிக்கும் பிணியாக அப்பர் சொல்கிறார். 

இருகால் குரம்பை:
குரம்பை என்பது குடில், சிறிய குடிசை.
இருகால்களைத் தூணாகக்கொண்ட குடிசை இந்த உடல் 
இது நான் உடையது:நான் உடையது இது.என்னிடம் இருப்பது இந்த உடல் 
இது பிரிந்தால் தருவாய்:இந்த உடல் பிரிந்தால் நீ எனக்கு ஒன்றைத் தரவேண்டும்  

எனக்கு உன் திருவடிக்கீழ் ஓர் தலைமறைவே:
உன்னுடைய திருவடிக்கீழே நான் தலைமறைவாக இருக்க வேண்டும். 
தலைமறைவு என்ற சொல்லை நல்ல கோணத்தில், நம்பிக்கையோடு அது என்றும் நிலைத்திருக்கும் இடமாக வரமாகக்கூறுகிறார் அப்பர் பெருமான்.
நாமும் அப்படியே வேண்டுவோமா? (முற்றும்) 



3 comments:

Anonymous said...

திருநாவுக்கரசர் திருவடிகள் போற்றி . நன்றிகள்

Anonymous said...

அருமை மா.. நல்ல சிந்தனை

Anonymous said...

நன்று