Tuesday, July 19, 2016

இயற்கை எழில் கொஞ்சும் -இலம்பையங்கோட்டூர் சம்பந்தர் தேவாரம்!!!

சம்பந்தரின் தேவார பதிகங்களில், இயற்கை அழகு பற்றிய வர்ணனை நிச்சயம் இருக்கும்.   

ஏன் அவர் இயற்கை அழகை ஒவ்வொரு தளத்திலும் வர்ணித்தார் என்று யோசிக்கிறேன்.
அப்பரையும், சுந்தரரையும் விட, சம்பந்தரின் தேவாரத்தில் இந்த வர்ணனைகள் அதிகம் இருக்கின்றன.

சம்பந்தர் அவதரித்த காலத்தில் இப்போது இருப்பதைப்போல, தொழிற்சாலைகள் இருந்திருக்காது. அவர், இயற்கையின் பூரண அழகை போகும் ஒவ்வொரு ஊரிலும் பார்த்திருப்பார்.அவர் இயற்கையின் ரசிகர் .


மற்றொரு காரணமாக நான் நினைப்பது, பல நூற்றாண்டுகள் கடந்து வாழும் நம் போன்றவர்களுக்கு அந்த ஊர் அப்போது எப்படி இருந்தது என்பதை சொல்லும் டைம் கேப்ஸுல் (Time Capsule)ஆகவும், பதிகங்களைப்பயன்படுத்தி இருக்கிறார்.

அப்படி ஒரு பதிகம் இதோ. 
தலம்: இலம்பையங்கோட்டூர்
இந்த தலம்  காஞ்சீபுரம் வட்டத்தில் இருக்கிறது. பிரளய காலத்தில் சிவனார் அமைதியாய் தவமிருக்க தேர்வு செய்த இடம் என்றும் தலக்குறிப்பு கூறுகிறது.

இயற்கை அழகு மிகுந்த இது போன்ற கிராமிய மணம் கமழும் கோயில்களுக்கு போய் வந்தால், இயல்பாகவே நம் மன இறுக்கம் தளர்ந்து விடும்.

உளம் கொள்வார் உச்சி ஆர் கச்சி ஏகம்பன், ஒற்றியூர் உறையும்
                                         அண்ணாமலை அண்ணல்,
விளம்புவான் எனது உரை தனது உரை ஆக, வெள்ள நீர் விரிசடைத்
                                                             தாங்கிய விமலன்-
குளம்பு உறக் கலை துள, மலைகளும் சிலம்ப, கொழுங்கொடி
                          எழுந்து எங்கும் கூவிளம் கொள்ள,
இளம்பிறை தவழ் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையாப்
                        பேணி, என் எழில் கொள்வது இயல்பே?





(Temple Pics Courtesy: http://sivayatra.blogspot.sg/2014/12/blog-post.html)

இந்த பதிகத்தின் பொருளை இப்போது பார்ப்போம்: 

இந்தியாவில்  உருவான மான் இனம்  கலை மான். நிறைய  இலக்கியங்களில்  கலைமானைப்பற்றிய குறிப்புகள் இருக்கின்றன.



(Pic Courtesy: http://araathuhistory.blogspot.com/2011/12/blog-post.html)

குளம்பு உறக் கலை துள, மலைகளும் சிலம்ப

கலை மான்கள் தங்கள் கால் குளம்புகள் நிலத்தில் பதியுமாறு துள்ள, அங்கே எழும்பும் ஓசையை மலைகள் எதிரொலிக்கின்றன.

இது கிட்ட தட்ட 1300 ஆண்டுகளுக்கு முன்னர் பாடிய பதிகம். அப்போது இந்த கோயிலின் அருகில் குன்றுகள் இருந்திருக்க கூடும்.

கொழுங்கொடி
                          எழுந்து எங்கும் கூவிளம் கொள்ள


கூவிளம்= வில்வம் 
வளமையான  கொடிகள் , வில்வ  மரத்தை சுற்றிப்படர்ந்திருக்கின்றன.

Pic courtesy: http://ayurvedaherb.blogspot.sg/2016_01_01_archive.html
இளம்பிறை தவழ் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையாப்
                        பேணி
இளம்பிறை தவழும் வான் அளவிய பொழில்கள் சூழ்ந்த இலம்பையங்கோட்டூரைத் தனது இருப்பிடமாகக் கொண்டு 

என் எழில் கொள்வது இயல்பே?
ஒரு பெண்ணாக தன்னை பாவித்து பாடி இருக்கிறார் சம்பந்தர்.

உன்னை தரிசிக்க வந்த என் அழகைக்கொள்வது நீதியோ என்கிறார்.

உளம் கொள்வார் உச்சி ஆர் கச்சி ஏகம்பன்,
ஒற்றியூர் உறையும்
                                         அண்ணாமலை அண்ணல்


Courtesy:http://www.tantra-kundalini.com/sahasrara.htm
இறைவனை உள்ளத்தில் வைத்து தியானிப்பவர்களுக்கு, முடிவில் சஹஸ்ரஹார சக்ரம் எனப்படும் (ஆயிரம் இதழ் கொண்ட தாமரை) அவர்களின் உச்சியில் பூக்கும். இந்த நிலை உள்ளவர்கள் தான் சமாதி நிலை அடைந்தவர்கள். சமீப நூற்றாண்டுகளில், ரமண மகரிஷி, ராமகிருஷ்ண பரமஹம்சர் முதலிய பெரியவர்கள் அடைந்த நிலை இது.

இறைவனைதத்யானிப்பவர்களுக்கு அவர்கள் உச்சியில் இருப்பவர் , ஒற்றியூர், காஞ்சிபுரம் மற்றும் அண்ணாமலையின் இறைவனாகிய சிவன்.

 எனது உரை தனது உரை ஆக விளம்புவான்
தெய்வத்தமிழ் என்பது இது தான். என் வாயில் வருகின்றன தேவாரம் எனதல்ல, அது இறைவனின் உரை என்கிறார் சம்பந்தர். அவர் வாயில் வருவன, இறைவனின் மொழிகளே.

வெள்ள நீர் விரிசடைத்
                                                             தாங்கிய விமலன்

கங்கையின் வெள்ளைத்தைதன் விரி சடையில் தாங்கிய தூயவர்.

இறைவனின் பண்புகளையும், இலம்பையங்கோட்டூரின் அழகையும் சொல்லி, இவர் என் அழகைக்கொள்வது இயல்போ? என வியந்து பாடுகிறார்.




Thursday, June 30, 2016

பொய்யாத விநாயகர்- பதினோராம் திருமுறை- நம்பியாண்டார் நம்பி

மலேசியாவில் உள்ள மலாக்காவுக்கு போன வருடம் சென்றியிருந்தோம்.
ஊர் சுற்றி பார்க்கும்போது, ஒரு நாள் மாலையில் இந்த பொய்யாத விநாயகர் கோயிலுக்கு போனோம்.
அந்த நாள் பாணி செட்டியார் கோயில். உள்ளே கிணறு இருந்தது, பல விக்கிரகங்கள் வெண்கலத்தில் இருந்தன. அந்த காலத்து ஓட்டு வீடு பாணி அமைப்பு.






பக்கத்திலேயே ஒரு தர்கா, அந்த பின்னர் ஒரு சீனக்கோயில் என நாங்கள் மாலை 6.30 மணிக்கு திரும்பும்போது, ரொம்பவே சிலிர்க்கும் அனுபவம். கோயில் மாலை நேர தீபாராதனையை அடுத்து, தர்காவிலும், சீனக்கோயிலிலும் பிரார்த்தனைகள் நடந்தன.
அந்த பக்கம் போனால் நீங்களும் பார்த்து வாருங்கள்!!!.நம் பிரார்த்தனைகளை இந்த பொய்யாத விநாயகர் நிச்சயம் பொய்க்க விடமாட்டார்.

இந்த பதிவில் நாம் பார்க்கப்போவது, பதினோராம் திருமுறையில் உள்ள, நம்பியாண்டார் நம்பி அவர்கள் அருளி செய்த பாடல்.
திருநாரையூரில் உள்ள பொல்லா பிள்ளையாரைப்பற்றிய பாடல்.
பொல்லா என்ற சொல்லுக்கு உளியால் செதுக்கப்படாத என்று பொருள்.

தானாக சுயம்புவாய் வந்தவர் இந்த பொல்லா பிள்ளையார். நம்பியாண்டார் நம்பி  ராஜராஜ சோழரின் கட்டளைப்படி, திருமுறைகளைத்தொகுத்துக்கொடுத்தார். அவர் இந்த பொல்லா பிள்ளையாரின் ஆசி பெற்று தன் பணியைச்செய்தார்.

கொம்பனைய வள்ளி கொழுநன் குறுகாமே
வம்பனைய மாங்கனியை நாரையூர் - நம்பனையே
தன்னவலம் செய்துகொளும் தாழ்தடக்கை யாயென்நோய்
பின்னவலம் செய்வதென்னோ பேசு.


இந்த பாடல் ரொம்பவே அழகாக இருக்கிறது.


நெஞ்சே! பூங்கொம்பு போன்ற(கொம்பனைய) வள்ளியின் கணவன் (முருகன்), குறுகாமே (வந்து அடையும் முன்னரே), வம்பனைய மாங்கனியை (புதிதாக வந்த மாங்கனியை), பெற, நாரையூர் நம்பனை(தன் தாய் தந்தையரை) வலம் வந்தார். உலகை வலம் வருதலை விட, இந்த வழியே சிறந்தது என்று தேர்ந்தார்.

தாய் தந்தையரை வலம் வந்து, தன் துதிக்கையைதாழ்த்தி துதித்து, மாங்கனியை பெற்றார். அந்த விநாயகரை சொல் நெஞ்சே. சொன்னால், நோய் (வினைகள்), மற்றும் அவலம் (துன்பம்) நம்மை என்ன செய்யும்?

Sunday, June 19, 2016

பிறவாமை காக்கும் பிரான்(பதினோராம் திருமுறை- காரைக்கால் அம்மை)

இன்று மாங்கனித்  திருவிழா!!!.

காரைக்கால் அம்மையின் வாழ்வில் இறைவன் ஒரு பெரும் அற்புதத்தை நிகழ்த்திய நாள்!.

ஒரு வணிகரின் மனைவியாய் ,இல்லறத்தில் வாழ்ந்து சிவனாரை துதித்து வந்தார். ஒரு நாள் ஒரு சிவனடியார்  வந்து அவர் வாசலில் நிற்க, தன் கணவர் முந்தைய நாள் வாங்கி வந்த மாங்கனிகளில் ஒன்றை, சிவனடியாருக்கு கொடுத்தார். 

மதிய உணவுக்கு வீடு வந்த அம்மையின் கணவன் பரமதத்தன், மாம்பழத்தை கேட்க, ஒன்றை பரிமாறினார். இன்னொரு மாம்பழத்தை கேட்க, என்ன செய்வது என்று தெரியாமல், சிவனை வேண்டினார். அவர் கைகளிகளில் ஒரு மாம்பழம் வந்து இறங்கியது. 

அந்த பழத்தை அரிந்து பரிமாறினார்.

அதை உண்ட பரமதத்தன், இந்த மாம்பழம் முற்றிலும் வேறு சுவையில் இருக்கிறது. எப்படி இது வந்தது? என்று கேட்க, சிவன் அருளால் கிடைத்த பழம் என்றார். பயந்து போன பரமதத்தன், வேறு ஊருக்கு சென்று மற்றொரு திருமணம் செய்து கொண்டான். அம்மையின் கால்களில் விழுந்து விட்டான். 
அது காலும், மனித பெண்ணாய் இருந்த அம்மை, எனக்கு பேய் வடிவு கொடு என கேட்க, இறைவன் அவரின் அழகு கோலத்தை மாற்றி, பேய் வடிவு தந்தார். 

எப்படி அவ்வை, தனக்கு முதியவர் கோலம் வேண்டும் என பிள்ளையாரை கேட்டாரோ, அது போல காரைக்கால் அம்மை, பேய் உரு கேட்டார்.

காரைக்காலில் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் இந்த நிகழ்ச்சி மாங்கனி திருவிழாவாக கடைப்பிடிக்கபடுகிறது. பக்தர்களும் மாங்கனியை வாங்கி சிவனுக்கு படைக்கின்றனர்.

இந்த பதிவில்  உள்ள பாடல்கள், காரைக்கால் அம்மை இயற்றிய திருவிரட்டை மணி மாலை, என்னும் பதினோராம் திருமுறையில் உள்ளன .

கட்டளைக் கலித்துறையும், நேரிசை வெண்பாவும் அந்தாதியாய் மாறி மாறி வர இருபது பாடல்களால் தொகுக்கப்படுவது ‘இரட்டைமணி மாலை’  ஆகும்.
இரு விதமான பாக்களால் ஆன அழகிய தமிழ் மாலை.!!!

நிறைய அவ்வையாரின் மூதுரை, நல்வழி போன்ற செய்யுள்களில் நேரிசை வெண்பாக்களை காணலாம். 

நேரிசை வெண்பா என்பது பொதுவாய் நான்கு அடிகளைகொண்டு இருக்கும். நான்காவது அடி மட்டும் 3 சொற்களைக்கொண்டு இருக்கும். இரண்டாவது அடியில் தனிச்சொல் இருக்கும்.
இந்த பதிவில் இருக்கும் இரண்டு பாடல்களும் நேரிசை வெண்பாக்கள் தான்.
ஈசன் அவனல்லாது இல்லை எனநினைந்து
கூசி மனத்தகத்துக் கொண்டிருந்து - பேசி
மறவாது வாழ்வாரை மண்ணுலகத் தென்றும்
பிறவாமைக் காக்கும் பிரான். 


மிக எளிமையாய் விளங்கும் பாடல்!!!. ஈசன் இல்லாமல் நாம் இல்லை என்பதை புரிந்து, நம்மைக்குறித்து நாம் என்ன கர்வம் கொண்டிருந்தாலும், இறைவன் இல்லாமல் நாம் இல்லை என்று எண்ணி, அவர் முன்னே நாம் மிக சிறியவர் என்று கூசி, அவரை மனதில் எப்போதும் எண்ணி கொண்டிருப்பவர்களை, மீண்டும் பிறவாமல் காப்பார் இறைவன்.

சங்கரனைத் தாழ்ந்த சடையானை அச்சடைமேற்
பொங்கரவம் வைத்துகந்த புண்ணியனை - அங்கொருநாள்
ஆவாஎன்று ஆழாமைக் காப்பானை எப்பொழுதும்
ஓவாது நெஞ்சே உரை. 


நம்மை பிறவாமல் காப்பாற்றும் பிரானை எப்போதும் ஓவாது (இடைவிடாது) நெஞ்சே நீ உரை என்கிறார் அம்மையார்.

நம்மை பிறவிக்கடலில் ஆழாமல் காக்க வல்லவர் சங்கரனார். அவர் தாழ் சடை உடையவர்; பாம்பினைத்தன் (பொங்கு அரவம்) தலையில் வைத்திருப்பவர். நம் இறுதி நாளில் (அங்கொரு நாளில்) நம்மை மீண்டும் பிறவி என்னும் கடலில் ஆழாமல் காப்பவனை, நெஞ்சே நீ இடைவிடாது உரைத்திடுவாய்!

இந்த மாதிரி 4 வரி பாடல்கள், எளிதில் நம்மால் மனதில் உள்வாங்க முடியும். இவற்றை நம் அன்றாட பிரார்த்தனையில் சொல்லலாமே!!!

Friday, June 17, 2016

பிள்ளையின் அழகில் மயங்கிய ஆளுடைய பிள்ளை!!!

இந்த தேவாரத்தை பாருங்கள்!!!. ஒவ்வொரு சொற்றொடரிலும் ஒரு யானை இருக்கும். 

நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளே
றொன்றுடையானை யுமையொருபாக முடையானைச்
சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
குன்றுடையானைக் கூறவென்னுள்ளங் குளிரும்மே.



இது முதல் திருமுறையில் உள்ள சம்பந்தர் தேவாரம். எந்த ஊர் என்று உங்களால் சொல்ல முடிகிறதா?

இந்த கோயில் மேலிருந்து பார்த்தால் சோழ நாட்டின் பச்சை வயல்களின் அழகு தெரியும். 

இங்குள்ள சிவனார், ஒரு பெண்ணின் பிரசவ காலத்தில் அவள் தாயின் உருவத்தில் அந்த பெண்ணுக்கு உதவினார். தாயுமானவ சுவாமி என பெயரும் பெற்றார். 

இது திருச்சிராப்பள்ளி தேவாரம்!.மலையே இல்லாத பகுதியில்   உள்ள
ஒரு குன்று கோயில். முன்னாளில் சமண பள்ளியாக இருந்தது. பள்ளி என்று முடியும் ஊர்கள் பெரும்பாலும் சமண பள்ளியாக இருந்திருக்கின்றன.

(Image courtesy:tamilrasigan.wordpress.com)

Audio Link: http://shaivam.org/gallery/audio/tis-sat-nalamnalgum-nalvarnatramizh.htm




என் தேவார ஆசிரியர் திரு. மா.கோடிலிங்கம் சொல்வார்:தந்தையை பாட வந்த சம்பந்தர், பிள்ளையின் அழகில் மயங்கி,( ஆனை முகனை எண்ணி), யானை யானை  என்றே வருமாறு இந்த தேவாரத்தைபாடினார் என்று.


இந்த பாடல் குறிஞ்சி பண்ணில்- ஹரி காம்போஜி ராகத்தில் பாடுவார்.


பாடும்போது ,யானை கட்டி வைத்த இடத்தில  எப்படிமெதுவாக ஆடுமோ  அது மாதிரி அசைத்து அசைத்து  பாடணும் என்பார். சிரித்துகொண்டே நடக்கும் எங்கள் வகுப்பு!!!.

மிக எளிமையான பாடல் இது. 

நன்றுடையானை- நன்மைகளையே தன் உடைமையாகக் கொண்டவனை


தீயதிலானை-தீயது ஒன்றும் இல்லாதவனை 

நரை வெள்ளேறு ஒன்றுடையானை -மிக வெண்மையான எருதை தன் வாகனமாக கொண்டவனை  
உமை ஒரு பாகம் உடையானைஉமையாளை தன் உடலில் ஒரு பாகத்தில் கொண்டவனை 

சென்றடையாத திருவுடையானை-

அவனது அருளில்லாமல்  அடைய  முடியாத முக்தி என்னும் செல்வத்தை உடையவனும் 
சிராப்பள்ளி குன்றுடையானை - சிராப்பள்ளி குன்றை உடையவனை 
கூற என் உள்ளம் குளிருமே -இந்த சிவனாரை போற்றி பணிவதில் என் உள்ளம் குளிருமே.

Sunday, June 05, 2016

இல்லை ஆனா இருக்கு!

ஒரு பூவையோ, பொருளையோ விவரிக்க சொன்னால், விவரிக்க முடியும். ஆனால் இறைவனை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.
இந்த பதிவில் அப்பரின் இரண்டு பதிகங்களை பார்க்க போகிறோம்.

முதல் பாடல் திருவொற்றியூர் பதிகம்.  எது இறைவன் இல்லை என்பதாய் பாடும் பதிகம்.


கால்களில் கடல் மணல் தொட, இந்த பழமையான சிவாலயம்  ஒரு மாறுபட்ட அனுபவம்!!!.
திருவொற்றியூருக்கு  பல சிறப்புகள் உண்டு.

 தினம் தோறும் தியாகேசருக்கு நெய் விளக்கு ஏற்றி வழிபட்ட,கலிய நாயனார் வாழ்ந்த ஊர்;

ராமலிங்க அடிகளார் இந்த கோயிலுக்கு தினம் வருவார். நிறைய பாடல்களை இந்த கோயில் இறைவன், அம்பாளின் மேல் பாடியுள்ளார்;

சுந்தரர் சங்கிலி நாச்சியாரை மணந்தது இந்த கோயிலில் உள்ள மகிழ மரத்தடியில். அந்த மரம் இன்றும் இருக்கிறது. இந்த கோயிலில்,சகஸ்ர லிங்கம் இருக்கிறது.
பட்டினத்தார் இங்கு தான் சமாதி ஆனார்.
ராஜேந்திர சோழர் காலத்துக்கற்றளி.

மனது எளிதில் பிரார்த்தனையில் லயிக்கும் சூழ்நிலை உள்ள கோயில். 
அதிக கூட்டம் அலை மோதும் கோயில்களை பார்க்க, இங்கு அத்தனை கூட்டம் இல்லை. எனவே பிரார்த்தனை செய்ய இது உகந்த கோயில்.


திருவொற்றியூர் அப்பர் தேவாரம் :

(Image courtesy: chennai.wordpress.com)

மண்ணல்லை விண்ணல்லை வலய மல்லை 
    மலையல்லை கடலல்லை வாயு வல்லை
எண்ணல்லை யெழுத்தல்லை யெரியு மல்லை
    யிரவல்லை பகலல்லை யாவு மல்லை
பெண்ணல்லை யாணல்லை பேடு மல்லை
    பிறிதல்லை யானாயும் பெரியாய் நீயே
உண்ணல்லை நல்லார்க்குத் தீயை யல்லை
    உணர்வரிய ஒற்றியூ ருடைய கோவே

இறைவன் மண்,விண், சூரியன் (வலயம்) அல்லர்; மலை அல்லர்; கடல் அல்லர்; காற்றும் அல்லர்.  எண், எழுத்தும் அல்லர்; இரவு, பகல் என மாறி வரும் ஒளியும் அல்லர். பெண் அல்லர், ஆண் அல்லர், மூன்றாம் பாலினமும் அல்லர்

இவை எல்லாவற்றிலும் பரந்து நிற்கின்ற பெரியவன் இறைவன்.அவர் தம்பால் அன்பு கொண்டவர்க்கு என்றும் தீமை செய்யாதவர்.

உணர்வுகளால் அறியவல்லவர் ஒற்றியூரின் அரசனான சிவ பெருமான்!!!

இதற்கு முற்றிலும் மாறுபட்ட பதிகம் அப்பர் திருவலிவலத்தில் பாடியது.




திருவலிவலம் அப்பர் தேவாரம்:

பெண்ணவன் காண் ஆணவன் காண் பெரியோர்க்கென்றும்
பெரியவன் காண் அரியவன் காண் அயனானான் காண்
எண்ணவன் காண் எழுத்தவன் காண் இன்பக்கேள்வி
இசையவன் காண் இயலவன் காண் எல்லாங் காணுங்
கண்ணவன் காண் கருத்தவன் காண் கழிந்தோர் செல்லுங்
கதியவன் காண் கருத்தவன் காண் கழிந்தோர் செல்லுங்
மண்ணவன் காண் வானவர்கள் வணங்கி யேத்தும்
வலிவலத்தான் காண் அவன் என் மனத்துளானே


பெண்ணாகவும், ஆணாகவும், பெரியவர்களுக்கு எல்லாம் பெரியவனாகவும், அயன்(பிரம்மா), அரியாகவும் (விஷ்ணு)  இறைவன் இருக்கிறார்.
எண்ணாகவும், எழுத்தாகவும், கேள்வி இன்பம் தரும் இசையாகவும் இருக்கிறான். எல்லாம் வல்லவன் இறைவன். 

அவர்  எல்லாவற்றையும் நமக்கு காட்டும் கண்ணாகவும், கருத்தாகவும் இருக்கிறார்.இந்த உலகை விட்டு கழிந்தோர் செல்லும் கதியாகவும், அவர்கள் அடங்கும் மண்ணாகவும் இருக்கிறார்.

வானவர்களும் வணங்கி ஏத்தும் இந்த இறைவன் என் மனதில் இருக்கிறார். அவர் மனத்துணை நாதர்.

நாம் காணும் பொருட்களுக்கு அப்பாற்பட்டு எங்கும் நீக்கமற நிறைந்து இருப்பவர் இறைவன் என்பதையே இந்த இரு பதிகங்களும் சொல்கின்றன.

திருவலிவலம் பற்றிய மற்றொரு பதிவை இங்கே (காண்க:)

Tuesday, May 31, 2016

சேரமான்பெருமாள் நாயனார் - பொன்வண்ணத் தந்தாதி!!!

 என் மாமனாருக்கு சமீபத்தில் 70 வயதானது. அவரது ஆசை தன் வாழ்நாளில் 1000 சிவாலயங்களை தரிசிக்க வேண்டும் என்பது  . நாங்கள் சிங்கையிலிருந்து இந்தியா செல்லும்போதெல்லாம், இந்தியாவில் இது வரை பார்க்காத இடங்களுக்கு 4-5 நாட்கள் ஒதுக்கு சுற்றி பார்க்க நினைக்கிறோம்.






இந்த முறை கேரளாவை தேர்ந்தெடுத்தோம். கொச்சினில் ஒரு வீடு எடுத்து தங்கினோம், அங்கிருந்து காலடி, ஆல புழா, வாழச்சால் நீர்வீழ்ச்சி, குருவாயூர், திருவஞ்சிகுளம் என பல ஊர்களுக்கும் சென்று வந்தோம் .

அருமையான சுற்றுலா. அவரின் 70 வயது பிறந்த நாளில் நாங்கள் திரு அஞ்சைக்களம் எனும் மலை நாட்டில் உள்ள ஒரே பாடல் பெற்ற ஊரில், அபிஷேகம் செய்தோம்.
கேரளா கோயில்களில் நடராஜர் சிலை உள்ள ஒரே கோயில் இது.
ப்ரஹாரம் முழுதும் நிறைய ஓவியங்கள் சுந்தரருக்கும் , சேரமான் பெருமாள் நாயனாருக்கும் உள்ள நட்பை சொல்லின.
முற்றிலும் கேரளா பாணி கோயில் இது.

திருவஞ்சிகுளம் என அழைக்கப்படும்  இந்த ஊரை ஆண்டவர்,சேரமான் பெருமாள் நாயனார். சுந்தரரிடம் மிகுந்த அன்பு கொண்டவர்.அவரின் பாடல் பற்றியதே இந்த பதிவு.

பால் வண்ணம் பருவம் கண்டு என்ற  பாடலைக்கேட்டு இருப்பீர்கள்.எல்லா அடியும் வண்ணம் என்று இருக்கும் .
 நிறைய கவிஞர் கண்ணதாசன் பாடல்களை கேட்கும் போது அவரது மொழி ஆளுமை நம்மை அசர வைக்கும்.

 நல்ல கவிஞர்கள் பலரும் சமய இலக்கியங்களை ஆழ்ந்து படித்திருப்பார்கள். அதுவே அவர்களுக்கு சொற்கள் மீது நல்ல ஆளுமையை தந்திருக்கும்..
அதற்கு ஒரு நல்ல உதாரணம் பதினோராம் திருமுறையில் உள்ள இந்த பாடல்.


பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
    மேனி பொலிந்திலங்கும்
மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
    வீழ்சடை வெள்ளிக்குன்றம்
தன் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
    மால்விடை தன்னைக்கண்ட
என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
    ஆகிய ஈசனுக்கே
.இந்த பாடலை அருளியவர் சேரமான் பெருமாள் நாயனார். சேர நாட்டு அரசர். அப்போது மலை நாட்டு பகுதியிலும் தமிழே மொழியாக இருந்துள்ளது.

என் தேவார ஆசிரியர் திரு.மா.கோடிலிங்கம் சொல்வார்: எங்கம்மா பார்வதி கருப்பு. என் அப்பா சிவனார் நல்ல நிறம்னு.
 சிவனாரை அழல் வண்ண மேனி பிரான் என்று போற்றுவார் அப்பர்.

நிறைய நேரங்களில் நம் குடும்பங்களில் நிறம் பற்றிய பேச்சு எழுவதைப்பார்க்கலாம். குறிப்பாக பெண் பார்க்கும்போது, பெண் சிவப்பாக இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு பரவலாக இருக்கிறது.

சிவனார் சிவப்பு; அம்மையோ கருப்பு. அம்மைக்கு தன் உடலில் சரி பாதி தந்த சிவனார் சொல்லும் செய்தி, கருப்பும் சிவப்புக்கும் பேதமில்லை என்பதே.


இப்போது பாடலின் பொருளை பார்ப்போம்.
கடைசி இரண்டு அடிகளில் இருந்து தொடங்க வேண்டும்.
தன்னைக்கண்ட என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்  ஆகிய ஈசனுக்கே, பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
    மேனி பொலிந்திலங்கும்.

தன்னை உணர்தலே மெய்யுணர்வு. தானும்  இறைவனும் வேறில்லை என்று அறியும் அறிவே ஞானத்தின் இறுதி நிலை.

அப்படி தன்னைக்கண்ட (அறிந்த) எனது மேனி, அப்படி கண்டபின் என்ன நிறம் ஆனதோ, அந்த நிறத்தை தன் இயல்பான நிறமாக கொண்டவர் சிவபெருமான். அந்த நிறம் பொன் வண்ணம் ஆகும்.



மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
    வீழ்சடை 
தாழ்ந்து தொங்குகின்ற சடைகள்,மின்னல் என்ன நிறமோ அந்த நிறமே.

வெள்ளிக்குன்றம்
தன் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
    மால்விடை

பெரிய இடப(ரிஷப )
 ஊர்தி, வெள்ளி மலை என்ன நிறமோ அந்த நிறமே.
பொன்னும் வெள்ளி நிறமுமாக அவருக்கு ஏற்பட்ட இறைக்காட்சியை சொல்கிறார் சேரமான் பெருமாள் நாயனார்.

Saturday, May 28, 2016

அப்பரும் ஆழ்வாரும் ஏற்றிய விளக்குகள் !

ஒரு அப்பர் தேவாரமும், ஆழ்வார் பாசுரமும் ஒரே மாதிரி இருக்கின்றன. இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்ததில்லை. ஒருவர் சிவபெருமானையும், மற்றவர் பெருமாளையும் நோக்கி பாடிய பாடல்களின் பொருள் ஒன்றே.

அன்பே தகளியாக ஆர்வமே நெய்யாக
இன்பு (உ)ருகு சிந்தை இடுதிரியா- நண்பு (உ)ருகி
ஞான சுடர் விளக்(கு) ஏற்றினேன்- நாரணற்கு
ஞான தமிழ் புரிந்த நான் - (பூதத்தாழ்வார்)

உடம்பெனும் மனையகத்து உள்ளமே தகளியாக
மடம்படு உணர் நெய்யட்டி உயிரெனும் திரிமயக்கி
இடம்படு ஞானத்தீயால் எரிகொள விருந்துநோக்கில்
கடம்பமர் காளை தாதை கழலடி காணலாமே ( அப்பர்)

இந்த ஆழ்வார் பாசுரத்தின் பின்னால் ஒரு சுவையான கதை இருக்கிறது.

திருக்கோவிலூரில் மழை பெய்த ஒரு நாளில் பொய்யாழ்வார், பூதத்தாழ்வார், பேய் ஆழ்வார் ஆகிய மூவரும், ஒரு சிறிய இடத்தில் மழைக்காக அண்டி இருந்தனர்.அவர்கள் மூவருக்கு மட்டுமே இடம் இருந்தது. இருள் படர்ந்த இரவு!. அப்போது அவர்கள் மூவரும் தங்களை யாரோ நெருக்குவதாக உணர்கின்றனர். 

மூன்று ஆழ்வார்களும் ,ஆளுக்கு ஒரு பாடல் பாட, பூதத்தாழ்வார் பாடிய இப்பாடலினால் ஒளி வந்தது. கண்ணன் அவர்கள் மூவரையும் பார்த்து புன்னகைக்கிறார்.

இப்போது அப்பரின் பதிகத்தை பார்ப்போம். 
அப்பரின் இந்த பதிகம் திருக்கடம்பூர் கோயிலில் பாடபெற்றது. இந்த கோயில் கடலூர் மாவட்டத்தில் இருக்கிறது.கரக்கோயில் வகையை சேர்ந்தது. கரக்கோயில் என்ற வகை கோயில்கள் தேர் போல இருக்கும். தமிழகத்தில் இருக்கும் பாடல் பெற்ற ஒரே கரக்கோயில் இது என்கிறது விக்கி
(Attribute to:By Kadamburvijay - சொந்த முயற்சி, CC BY-SA 3.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=16212523)

நிறைய அற்புதமான சிற்பங்கள் உள்ள கோயில்.

அப்பரின் பதிகங்களில் அதிகமாக உவமைகளை காணலாம். இந்த பதிகம் அந்த வகையினதே.

எப்போது ஈசனின் திருவடியைகாணலாம்? உடம்பு என்பதை ஒரு வீடாக கொண்டால், அந்த வீட்டில், உள்ளம் என்பதை ஒரு தகளியாக (அகல் ஆக) உவமை செய்து கொள்வோம். அந்த தகளியில் தீபம் ஏற்ற நமக்கு தேவைப்படும் நெய்யாக நம் இறை உணர்வு இருக்க வேண்டும்.

நம் உயிரே, அந்த தகளியில் உள்ள திரியாக இருக்க வேண்டும். இப்படி ஏற்றப்படும் விளக்கினால் தான் திருக்கடம்பூர் தந்தையின் கழலடியைக்காணலாம்.

துன்பமும் கவலைகளும் நம்மை வந்து நெருக்கும்போது, நாம் சொல்ல வேண்டிய கீழ்காணும் பாடலும், திருக்கடம்பூரின் அப்பர் தேவாரம் தான். கீதையின் சாரமான உன் பணியை செய்; பலனை எதிர்பாராதே என்ற அதே தொனியில் என் கடன் பணி செய்து கிடப்பதே; இறைவனுக்கு கடமை தன் அடியவரான என்னையும் தாங்குதல் என்கிறார் அப்பர் பெருமான்.

நம் கடம்பனை பெற்றவள் பங்கினன் 
தென் கடம்பை திருக் கர கோயிலான் 
தன் கடன் அடியேனையும் தாங்குதல் 
என் கடன் பணி செய்து கிடப்பதே 


Saturday, May 14, 2016

உளோம்; போகீர் என்றானே!!! (திருவெண்பாக்கம் சுந்தரர் தேவாரம்)

சுந்தரமூர்த்தி நாயனார், இறைவனைத்தன் தோழனாக பாவித்தார்.

உரிமையாய் இறைவனைக்கோபமாக பேசுவதும், சண்டையிடுவதுமாய், பல சுந்தரரின் பதிகங்கள் இருக்கின்றன. இது ரொம்பவே வித்யாசமான நயம்.

ஒரு சில பதிகங்களில், சுந்தரரை பற்றி எண்ணி வியக்கவும், அதில் உள்ள நகைச்சுவை உணர்வு உண்டாக்கும் மகிழ்ச்சியுமாய் படிக்க முடிகிறது.

இந்த பதிவு திருவெண்பாக்கம் தேவாரம் பற்றியது. பூண்டி ஏரிக்காக முன்பிருந்த கோயில் இடமாற்றம் செய்ய பட்டுள்ளது. அங்கிருந்த சிவலிங்க திருமேனி, புரசைவாக்கம் கோவிலில் இருக்கிறது.

முதலில்,பரவை நாச்சியாரை திருவாரூரில் மணந்த சுந்தரர், அதன் பின்னர் பல தலங்களை தரிசித்து, திருவொற்றியூர் வந்தார்.
அங்கு சங்கிலி நாச்சியாரைக்கண்டார். அவரையும் மணம் முடிக்க ஆசைப்பட்டார்.
சங்கிலி நாச்சியாருக்கு திருவொற்றியூரை விட்டு செல்ல மாட்டேன் என்று சத்தியம் செய்து மணம் முடித்தார்.நாட்கள் கழிந்தன.

 திருவாரூர் கோயில் திருவிழாவைக் காண சுந்தரரின் மனம் ஏங்கியது.
திருவாரூருக்கு கிளம்பினார்.
 பண்ணிய சத்தியம் வேலை செய்தது; திருவொற்றியூர் எல்லையைத்தாண்டியதும் சுந்தரரின் கண் பார்வை போயிற்று.

மனோரமா ஆச்சி ஒரு திரைப்படத்தில் சொல்வார். "எங்க வீட்டுக்காரர் அவர் வீட்ல இல்லைன்னு சொல்ல சொன்னாருங்க".பார்க்கும் மக்கள் அனைவரும் ஆச்சி சொல்லும் தொனிக்கே சிரிப்பார்கள்.

கிராமங்களில் முன்பு தடுப்பு ஊசி போட வந்தாலோ, காப்பீடு பற்றி விலக வந்தாலோ, வீட்டுக்குள்ளே இருந்தபடியே, போயிட்டு வாங்கன்னு அனுப்பி விடுவது வழக்கம்.

திருவெண்பாக்கம் தலத்தில், நீ இங்கு இருக்கிறாயோ என்று கேட்டார் சுந்தரர். அதற்கு இறைவன் "உளோம். நீர் போகலாம்" என்று பதில் அளித்தார்.

கண் பார்வை வரவில்லை. இறைவன் சுந்தரருக்கு ஒரு ஊன்று கோலை மட்டும் தந்தார்.அதை எடுத்து கோபமாய் சுந்தரர் வீசவும் நந்தியின் கொம்புகள் உடைந்தன.
இந்த தலத்தில் இறைவனின் பெயர் ஊன்றீஸ்வரர்.இறைவியின் பெயர் மின்னொளி அம்மை.

திருவெண்பாக்கம் தேவாரம் முதல் பாடல் (ஏழாம் திருமுறை: 89வது பதிகம்)

“பிழை உளன பொறுத்திடுவர்” என்று அடியேன் பிழைத்தக்கால்
பழி அதனைப் பாராதே, படலம் என் கண் மறைப்பித்தாய்;
“குழை விரவு வடி காதா! கோயில் உளாயே!” என்ன,
உழை உடையான் உள் இருந்து, “உளோம்; போகீர்!” என்றானே!



(இப்போதுள்ள கோயில் முகப்புத்தோற்றம் )


(கண் பார்வை இழந்த சுந்தரரும், கொம்பு உடைந்த நந்தியும் )



(Pics: Courtesy: http://veludharan.blogspot.sg/)

குழை=குண்டலம். 
குழை அணிந்த, தூங்குங்காதினை உடையவனே!, நான் என்ன  பிழை  செய்தாலும், இறைவன் என்னை பொறுத்துகொள்வார் என்னும் துணிவினால், நான் பிழை செய்தேன். ஆனால் உனக்கு  என்ன பழி வரும் என்று எண்ணி பார்க்காமல் நீ என் கண் பார்வையை மறைத்து விட்டாய்.
இப்போது நீ கோயிலில் இருக்கிறாயோ என்று கேட்டால், மானை ஏந்திய கைகளை உடையவன் உள்ளுக்குள் இருந்து கொண்டு, உளோம் போகீர் என்கிறானே. 


ஒவ்வொரு பாடலும் உளோம் போகீர் என்ற சொற்றொடருடன் இருப்பது இப்பதிகத்தின் அழகு.

Sunday, April 24, 2016

என்னிலும் இனியன் ஈசனே -திரு இன்னம்பர் -அப்பர் தேவாரம்

திரு இன்னம்பர் எழுத்தறிநாதர் கோவில் கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
15 ஆண்டுகளுக்கு முன்பு போனோம். புகைப்படம் எடுக்க வில்லை.
எங்களோடு வந்த ஒரு பெண்மணி தன் பேரன் நன்றாக படிக்க வேண்டும் என்று நோட்டு புத்தகமும் பென்சிலும் வாங்கி சிவனுக்கு சமர்ப்பித்தார்; விந்தையாக இருந்தது.


(Pics: from Internet)
திரு இன்னம்பர் :ஊர் பெயர்ரொம்பவே வித்யாசமாக இருக்கிறது. பெரும்பாலும் நம் தமிழ் நாட்டு திருத்தல பெயர்களின் முடிவு, ஊர், ஈச்சரம், குடி, காடு, கோயில், மலை பள்ளி வாயில் என்றே முடியும்.

உதாரணம்
ஊர்: ஒற்றியூர் 
ஈச்சரம்: பசுபதீச்சரம், கபாலிச்சரம்
குடி: கற்குடி
காடு: திருமறைக்காடு
கோயில்: காளையார்கோவில்
மலை: திரு ஈங்கோய் மலை
பள்ளி: சிராப்பள்ளி
வாயில்: திருமுல்லைவாயில்.

அம்பர் என்பது ஆகாயத்தைக் குறிக்கிறது.ஆகாயத்தில் வலம் வரும் சூரியன் இழந்த தன் ஆற்றலைப் பெற வேண்டி இத்தல இறைவனை பூஜித்துள்ளான். சூரியன் பூஜித்ததால் இத்தலம் இன்னம்பர் என்று பெயர் பெற்றது. 

பங்குனி மாதம் 13, 14, 15 தேதிகளில் சூரிய ஒளி காலையில் சிவலிங்கத் திருமேனி மீது படுகின்றது.
பெரிய ருத்ராக்ஷ பந்தல்; அதில் பெரிய லிங்க திருமேனியாய்சிவனார்.
பார்க்கவே பரவசம் தரும் அனுபவம்.

இப்பகுதியை ஆண்டு வந்த மன்னனிடம் கணக்கராக பணியாற்றி வந்தார் சுதஸ்மன் என்ற ஆதிசைவர். கோவில் கட்டுமானப் பணிகளை மேற்பார்வை செய்து வந்த இவரிடம் ஒரு முறை அரசன் வரவு செலவு கணக்குகளைப் பற்றி விசாரித்தான். அரசரிடம் கணக்கை ஒப்படைத்தார் சுதஸ்மன். கணக்கில் அரசருக்கு ஐயம் ஏற்பட்டது. தன் மீது வீண் பழி வருமோ என்று கவலைப்பட்ட சுதஸ்மன் இத்தல இறைவனிடம் வேண்டினார். ஈசன் சுதஸ்மன் உருவில் மன்னரிடம் சென்று மன்னருக்கு கணக்கில் ஏற்பட்ட ஐயத்தைப் போக்கினார். அதனாலேயே இத்தல இறைவனுக்கு எழுத்தறிநாதர் என்ற பெயர்
ஏற்பட்டது. (Courtesy:shivatemples.com)

இறைவன் குழந்தைகள் நன்கு படிக்க அருள் பாலிக்கிறார்.

போன வாரம் தான் சித்ரா பௌர்ணமி முடிந்தது. என் பள்ளி நாட்களில், பொய் சொன்னால்
சித்ரகுப்தன் கணக்குல எழுதிடுவார்னு ஒரு நம்பிக்கை உண்டு.
இந்த அப்பர் தேவாரத்தைப்பாருங்கள்.

தொழுது தூமலர் தூவித் துதித்து நின்று
அழுது காமுற்று அரற்றுகின்றாரையும்
பொழுது போக்கிப் புறக்கணிப்பாரையும் 
எழுதும் கீழ்கணக்கு இன்னம்பர் ஈசனே.

வீண் பொழுது நிறைய வழிகளில் போகிறது. தொலைக்காட்சி முன்னே, தேவையில்லாத வம்பு பேச்சுகளில் என பல வழிகளில் போகிறது.
இறைவன் இறைபக்தியில் நிலைத்து இருப்பாரையும், வீண் பொழுது போக்குபவரையும் கீழ் கணக்கு (குறிப்பு) எழுதுகிறார் என்கிறார் அப்பர் பெருமான்.

இன்னொரு பாடல் :

என்னில் யாரும் எனக்கினியார் இல்லை
என்னிலும் இனியான் ஒருவன் உளன்
என்னுள்ளே உயிர்ப்பாய் புறம்போந்து புக்
கென்னுள்ளே நிற்கும் இன்னம்பர் ஈசனே

நம் எல்லோருக்குமே மிகவும் பிடித்த நபர் முதலில் நாம் தான்.
நம்மை விட நமக்கு இனியவர் யாரும் இல்லை.

என்னை விட எனக்கு இனிமையானவன் ஒருவன் இருக்கின்றான். அவன் இன்னம்பர் ஈசனே.


என்னுள்ளே உயிர்ப்பாய் புறம்போந்து புக்
கென்னுள்ளே நிற்கும் இன்னம்பர் ஈசனே

கடைசி இரண்டு அடிகள் மிக நுட்பமானவை.
திருமந்திரம் சொல்லும்
உள்ளம் பெருங்கோயில் ஊருடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ள தெளிந்தார்க்கு ஜீவன் சிவ லிங்கம்
கள்ள புலன் ஐந்தும் காளா மணி விளக்கே என்று.


உயிர்ப்பாய்= பிராணனாய்
உள்ளக்கமலத்தில் உள்ள இறைவனை மந்திர முறைப்படி வெளி கொணர்ந்து முறையாய் ஆவாகனம் செய்து, அவரை உள்ளே நிறுத்தும் சிவ பூஜையை குறிக்கின்றன இந்த அடிகள்.
நாயன்மார் வரலாற்றில் பூசலார் இதைத்தான் செய்தார். வாயிலார் நாயனாரும் தன் இதயத்தில் தான் தன்னிலும் இனியானுக்கு இடம் கொடுத்தார்.


Wednesday, April 06, 2016

பிறவி பெருங்கடல் கடந்தோம் !- (காரைக்கால் அம்மையின் அற்புதத் திருவந்தாதி )

எத்தனை எத்தனை விதமான உயிரினங்கள் இருக்கின்றன  உலகத்தில். 

நாம் பல நேரங்களில்- இருப்பது ஒரு வாழ்க்கை;  வாழ்க்கையை முழுமையாய் அனுபவித்து விட வேண்டும் என்று சிலர் சொல்வதை கேட்கலாம். உங்கள் வீட்டுச்சின்ன பிள்ளையின் புத்தகத்தை வாங்கி பாருங்கள்.

 எத்தனை எத்தனை ஜீவ ராசிகள்; ஒரு வனவிலங்கு பூங்காவிற்கு போனாலே புரியும்; நாம் குரங்காய் பிறந்திருக்கலாம்; ஒட்டக சிவுங்கியாய் இருந்திருக்கலாம்; முதலையாக கூட பிறந்திருக்கலாம்;திமிங்கலமாக கூட பிறவி எடுத்திருக்கலாம்

கிளிகளில் மட்டுமே 30க்கும் மேற்பட்ட வகைகளை இங்கு சிங்கை பறவை பூங்காவில் காணலாம்.







அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும் 
பிற்பயக்கும் நற்பா லவை.-திருக்குறள் .

பிறர் அழத் திரட்டிய செல்வம் அழ அழப் போய்விடும். நல்வழியில் வந்த செல்வமென்றால் அதனை இழந்தாலும் மீண்டும் வந்து பயன் தரும்.

எங்கள் ஊரில் நகர மன்ற தலைவராய் இருந்தார் ஒரு பெண்மணி. அவர் வெறும் கைப்பாவை; அவர் கணவர் அவர் பெயரால் செய்த அட்டகாசம்  ரொம்பவே அதிகம். சாலை போடுவதில் தொடங்கி, இறப்பு சான்றிதழ் வரை எல்லாவற்றுக்கும் லஞ்சம்.
ஊர் பணத்தைக்கொள்ளை அடித்து, பணக்காரர்  ஆனார்.
இப்போது கணவர் கான்சர் நோயாளி; ஒரே மகன் வெளி நாட்டு விபத்தில் காலமாகி அவன் உடல் இங்கு வந்து சேரவே இரு வாரங்கள் ஆகி விட்டன.
இப்போது இந்த செல்வத்தால் பயன் என்ன?

பிறவி கணக்கு பாவ புண்ணியம்  பார்த்தே தான்; அதனால் தான் நற்பண்புகளை  நம்முடைய திருக்குறள், நாலடியார், நல்வழி முதலிய நூல்கள் வலியுறுத்துகின்றன.

இறைவன் திருவடியில் பற்று வைத்து அற வழியில் நடப்பவர்களால் மட்டுமே, பிறவி என்னும் பெருங்கடலை கடக்க முடியும்.
பிறந்து மொழி பயின்ற நாள் முதல், இறைவன் மீது அன்பு உடையவர் காரைக்கால் அம்மையார். அந்த நாட்களில் கணவன் சொல்லே மந்திரம் என்பதாய் தான் பெண்களின் வாழ்க்கை இருந்திருக்கும். 

பரமதத்தன் வேறொரு பெண்ணை திருமணம் செய்த பின், மனித உடலோடு வாழ பிடிக்காமல், பேய் உரு கொண்டார் அம்மையார்.

இனியோ நாம்உய்ந்தோம் இறைவன் அருள்சேர்ந்தோம்
இனியோ ரிடரில்லோம் நெஞ்சே - இனியோர்
வினைக்கடலை யாக்குவிக்கும் மீளாப் பிறவிக்
கனைக்கடலை நீந்தினோம் காண்.

வினைக்கடலை யாக்குவிக்கும் பிறவிக் கனைக்கடல்

(கனை=மிகுதியான; பெரிய )
பிறவி வினைகளை உண்டாக்குகிறது; வினைகள் மீண்டும் பிறவிக்கு காரணமாகின்றன.
ஒன்று மற்றொன்றை உண்டாக்கும் சங்கிலி தொடர்கிறது.
இந்த சங்கிலியிலிருந்து விடுபட்டோம் நெஞ்சே; இனி கவலை இல்லை; இறைவன் அடி சேர்ந்தோம் என்கிறார் அம்மையார்.



Wednesday, March 30, 2016

திருவிடைமருதூர்-சுந்தரர் தேவாரம் (7ஆம் திருமுறை)

ஐவகை அரையர்அவர் ஆகி
ஆட்சி கொண்டொரு கால்அவர் நீங்கார்

அவ்வகைஅவர் வேண்டுவ தானால்

அவரவர்வழி யொழுகிநான் வந்து

செய்வகையறியேன் சிவலோகா

தீவ ணா சிவ னே எரியாடீ

எவ்வகைஎனக் குய்வகை யருளாய்

இடைம ருதுறை யெந்தைபி ரானே.

இந்த சுந்தரர் தேவாரம் அலுவலக சூழலை தான் கண் முன்னே கொண்டு நிறுத்தியது.

உங்களுக்கு மேலே ஒரு 35 வயதில் ஒரு அதிகாரியும், அவருக்கு மேலே நாற்பதுகளில் ஒரு அதிகாரி என்று வைத்து கொள்ளுங்கள். இருவருக்கும் ஒருவரை ஒருவருக்கு அத்தனை பிடித்தமில்லை என்று வைத்து கொள்வோம்.

இப்போ உங்களை கூப்பிட்டு, இந்த இளைய அதிகாரி ஒரு வேலையை இன்றே முடிக்க வேண்டும் என்றும், மற்றொரு வேலை முக்கியமில்லை என்றும் சொல்கிறார். 
நீங்களும் தலையாட்டி வேலையை செய்து கொண்டிருக்கிறீர்கள்.

மதிய இடைவேளைக்கு பிறகு, வயதில் மூத்த அதிகாரி உங்களை அழைத்து வேலை விஷயமாய் கேட்கிறார். எந்த வேலையை காலை வரை செய்தீர்களோ அது முக்கியமில்லை என்கிறார். 

நீங்கள் பந்தாடபட்டதாய் உணர்கிறீர்கள். உங்கள் வாதத்தை அவர்கள் இருவரும் கேட்பதை இல்லை.
இப்படியே பல மாதங்கள் கடப்பதாய் வைத்து கொள்வோம். இந்த இரு அதிகாரிகளும் எங்கும் பணி மாற்றம் ஆக வாய்ப்பில்லை என்று வைத்து கொள்வோம்.

இப்போது ஒன்று, வேறு வழி இல்லாமல் சகித்து கொண்டு வேலையில் இருப்பீர்கள்; உங்களுக்கு மன அழுத்தம் அதிகமாய் இருக்கும்;
 இல்லை எனில் , நீங்கள் வேறு வேலை தேடி கொண்டிருப்பீர்கள்.

இந்த உவமையை இப்போது தேவாரத்தில் பொருத்தி பார்ப்போம்.

நம் உடலில் உள்ள ஐந்து புலன்களும், தத்தம் வழியில் நம்மை அரசாளுமானால் நம் நிலை என்ன?
அரையர் என்றால் அரசர் என்று பொருள்.

திருமுறையில் பல இடங்களில் எந்தை என்ற சொல் வரும். என் தந்தை என்பதன் சுருக்க வடிவம் இது.
மாணிக்க வாசகர் "எந்தையே ஈசா உடலிடம் கொண்டாய்; யான் இதற்கிலன் ஓர் கைம்மாறே "என்பார்.

ஐம்புலன்களாகிய  ஐந்து அரசர்களும் (ஐவரும்) என்னை தம் வழியில் செலுத்துவதால்  அவரவர் வேண்டும் வழியில் செல்கிறேன் நான். வேறென்ன செய்வது? செய்வகை அறியேன்.

இந்த அரசர்களின்பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள் என தெரியவில்லை;அரசாட்சி முறையில் தேர்தல் மாதிரி வாய்ப்புகளும் இல்லை :)





இவர்களிடமிருந்து நான் உய்யும் வழியை  நீ காட்டு; இடைமருதூரில் உள்ள எந்தையே; நெருப்பை போன்ற செந்நிறம் உடையவனே; சிவபெருமானே, தீயோடு நின்று ஆடுபவனே என்கிறார் சுந்தரர்.

நிறைய சமய இலக்கியங்கள் ஐம்புலன்களுக்கு கட்டளை இடுவதையும், மனதிற்கு கட்டளை இடுவதையும் பார்க்கிறோம். திரு அங்க மாலை போன்ற பதிகங்கள் இவற்றுக்கு உதாரணம்.

தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது 
வாஅய்மை வேண்ட வரும்.

இது திருக்குறள். ஆசை அறுத்த நிலை மட்டுமே தூய நிலை; ஆசையை அறுப்பதற்கு ஐம்புலன்களும் நமக்கு உதவியாய் இருக்க வேண்டுமே தவிர நம்மை ஆளக்கூடாது.

இன்றுள்ள பணபுழக்கம், பார்க்கும் ஆடைகளை வாங்கி குவிக்க கண் சொல்கிறது, செவி விளம்பர பக்கம் சாய்கிறது. 

நம் பெரியவர்கள் ஏகாதசி விரதம், திங்கள் விரதம் என நாக்கை கட்டுபடுத்தி ஒன்றொன்றாய் நம் புலன்களை இறை தேடலில் செலுத்தினார்கள்.

ஐம்புலன்களை கட்டுப்பாட்டில் வைப்பது என்பது நம்மில் பலருக்கு  யாரோ எங்கோ முன்னொரு காலத்தில் செய்த ஒரு பழக்கம் மட்டுமே; நாம் அதை ஆராய்ந்ததில்லை. 

ஆளரவமில்லாத ஒரு தீவுக்கு ஒரு 3 நாட்கள் செல்கிறோம் என்று வைத்து கொள்வோம். நம் கண்கள் வழக்கமாய் இணைய வாசலில் தேடும்  Facebook, whatsapp முதலியவை எப்படியாவது கிடைக்குமா என்று தேடுபவராய் நீங்க இருந்தால் உங்கள் மனம் உங்கள் கட்டுபாட்டில் இல்லை என்று தான் பொருள்.


சின்ன சின்ன சுய சோதனைகளில் தெரியும், நம் புலன்கள் நம்மை எப்படி அரசாள்கின்றன என.

இந்த திருத்தல புகைப்படங்கள் என் சகோதரி திருமதி.கிருஷ்ணவேணி அனுப்பியவை. பெரிய நந்தி.நிம்மதியான கிராமிய மணம் வீசும் சூழல். இன்னும் இடைமருதூர் சென்றதில்லை நான். 

இறைவா, எங்களை உன் வழி நடத்து; ஐம்புலங்களிலிருந்து நாங்கள் உய்யும் வழி காட்டு.






Wednesday, March 23, 2016

புள்ளிருக்கு வேளூர்- வைத்தீஸ்வரன்கோவில் தேவாரம்

இன்று பங்குனி உத்திரம்; பங்குனி மாத பௌர்ணமி நாள்; முருகன் தெய்வ யானையை மணந்த நாள்; 
ஹோலி பண்டிகையும் இன்றே.
ஆண்டாள் ரங்க மன்னாரை மணந்த நாள்; பார்வதி பரமேஸ்வரர் திருமண நாள் என பல சிறப்பு பெற்ற நாள்.
இங்கு சிங்கையில் எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள, பால சுப்பிரமணியர் கோவிலில் காவடிகள் ஆடி வந்து கொண்டிருகின்றன.

நிறைமதி சூழ் வானம் எப்படி இருள் அகன்றிடுமோ அப்படி நாம் மன இருளை இறைவன் நீக்க வேண்டும் என பிரார்த்திக்கும் அப்பர் பெருமான் தேவாரம் இங்கே.

இருளாய உள்ளத்தின் இருளை நீக்கி
இடர்பாவம் கெடுத்து ஏழையெனை உய்யத்
தெருளாத சிந்தைதனைத் தெருட்டித் தன்போல்
சிவலோக தெறியரிய சிந்தை தந்த
அருளானை ஆதி மா தவத்து ளானை 
ஆறங்க நால் வேதத்து அப்பால் நின்ற
பொருளானை புள்ளிருக்கு வேளூரானைப்
போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே 

(ஆறாம் திருமுறை- அப்பர் தேவாரம்)


வைத்தீஸ்வரன் கோவிலுக்கு பண்டைய பெயர்- புள்ளிருக்கு வேளூர்.
ஜடாயு முக்தி பெற்ற தளம்; வேதங்கள் சிவ பெருமானை பூஜித்த  தலம். இங்கு முருகன் செல்ல பிள்ளை. வேள்- முருக பெருமான்.- செல்வ முத்துக்குமார சுவாமி - இவர் தன் தாய் தகப்பனை தினமும் இங்கு பூஜிக்கிறார்.

மாலை நேர கற்பூர ஆரத்திக்கு சென்று பாருங்கள்; ஒரு புடவையையும், வேட்டியையும் மாறி மாறி மேல தூக்கி போட்டு பிடிப்பார்கள். அதே நேரம் முருகனுக்கு கற்பூர தீபம் ஆகும்.
குழந்தை குமரனை தூங்க வைக்க அம்மையும் அப்பனும் காட்டும் விளையாட்டு இது.

முருகனுக்கு உகந்த பங்குனி உத்திரத்தில் புள்ளிருக்கு வேளூர் தேவாரம் பற்றி எழுதுவது பொருத்தமாக இருக்கும்.

தீராத ரோகங்களைத் தீர்த்து வைக்கிறார் இங்குள்ள வைத்தியநாதர்.
அது மட்டுமல்ல; நம் மனதில் உள்ள தேவை இல்லாத பயங்கள்; தெளிவு இல்லாத மன நிலை , இறைவன் பாதத்தில் சரணாகதி செய்த பொழுதில்  தெளிகிறது.
பிறப்பெனும் பேதைமை நீங்க- சிறப்பென்னும் செம்பொருள் காண்பது அறிவு என்கிறது திருக்குறள்.


உண்மை பொருளை நோக்கி பயணிக்க பயணிக்க, பிறவி பிணி தீர்ந்து, தெளிவு பிறக்கிறது.


(Image Courtesy: Dinamalar and Indianrail)


அப்பர் பெருமான் சொல்கிறார்-

 என் இருண்ட உள்ளத்தின் இருளை நீக்கி
என் தீவினைகளையும், துயரங்களையும் போக்கி , நான் உய்ய- பிறவி பிணியிலிருந்து விடுபட-என் தெளிவற்ற மனதில் (தெருளாத சிந்தை), தெளிவை உண்டாக்கி , சிவலோக நெறியை அறியும் வழியை எனக்கு வழங்கிய அருளாளன்- சிவ பெருமான்.
இவர்  தொடக்கத்திலிருந்தே  (ஆதி நாள் முதலாகவே) பெரிய தவத்தில் நிலை பெற்று இருப்பவர். நான்கு வேதங்களுக்கும், ஆறு அங்கங்களுக்கும் அப்பால் நின்றவர்; புள்ளிருக்கு வேலூரில் உள்ள இந்த இறைவனை போற்றாமல் நாட்களை வீணடித்து விட்டேனே.