Saturday, April 29, 2017

உ.வே.சா ஒரு முறை தானே வருவார்! எப்போது நாம் நம் இலக்கியங்களை விரும்பிப்படிப்போம்?- திரு எழு கூற்றிருக்கை

திரு.நாஞ்சில் நாடனின் சிற்றிலக்கியங்களை வாசிக்க வேண்டும், நம் தமிழ் இலக்கியங்களை நேசிக்கவேண்டும் என்ற அவர் வலைப்பக்கம், நுனிப்புல் மேயாமல் ஆழ்ந்து படிக்க வேண்டும், ஆசையாய் படிக்க வேண்டும் என்று சொன்னது. உண்மை தான்!



தமிழை நேசிப்போம், தமிழில் பேசுவோம் என்னும் சிங்கை தமிழ் மொழி விழாவின் அடிநாதத்தோடு, தமிழை ஆழ்ந்து அனுபவிக்க வேண்டியதன் அவசியத்தையும் மனதில் கொள்வோம்.

தமிழின் 96 வகை சிற்றிலக்கியங்களில், சித்திரக்கவி வகையை சார்ந்த திரு எழு கூற்றிருக்கையும் அடங்கும்.
இந்த செய்யுளைப்படிக்கும்போது ஒரு புதிருக்கு விடைகாணும் மகிழ்ச்சி இருந்தது. புதிது புதிதாய், விறல், திறல், புறவம், சம்பை, நாட்டம் என பல புதிய சொற்கள் அறிமுகம் ஆயின. 😃

திருஎழுகூற்றிருக்கை என்றால் என்ன?
 (Picture: For representation only) 

எண் வரிசை( பொருளால்) ஒரு தேர் போல தோன்றும் அமைப்பு கொண்ட செய்யுள் தான் திருஎழுகூற்றிக்கை.
மற்ற மொழிகளில் இது போன்ற செய்யுள் இருக்கிறதா என்று தெரியவில்லை.

இந்த படத்தில் இருப்பது திருஞானசம்பந்தர் எழுதியது. எல்லா தேவார பதிகங்களை தினசரி பாராயணம் செய்ய திருஞானசம்பந்தரின் தந்தையால் முடியவில்லை. அவருக்கு உதவ எண்ணி  சம்பந்தர் பாடிய செய்யுள்இது .

நவீன படைப்புகள் ஒரு பக்கம் இருக்க, நம் முன்னோர் எழுதிய இலக்கியங்களை மறுபடி கரையான் அரிக்க செய்வது நல்லதா? 

வீடு வீடாக சென்று கரையான் அரிக்க கிடந்த சுவடிகளை, மீது நமக்கு இலக்கியங்களை மறுபடி கொண்டு சேர்த்த தமிழ் தாத்தா உ.வே.சா ஒரு முறை தானே வருவார்? 
தமிழ் தாத்தா உ. வே.சாமிநாத அய்யர் 

பொருளாலும் சொல் முறையாலும், நாம் முயற்சி செய்து படித்தால், நம்முடைய எழுதும் முயற்சிக்கும், நம் மொழிப்புலமைக்கும், மனமுதிர்ச்சிக்கும் நிச்சயம் ஆழ்ந்து கற்றல் துணை செய்யும்.
கோலம் போடுவது போல , சொல்லால் ஆன சித்திரம்.மிகுந்த சொற்புலமையும், ஆழ்ந்த பொருள் அறிவும் இருந்தால் மட்டுமே செய்ய முடிந்த அற்புதம்.

யாரெல்லாம் திருஎழுகூற்றிக்கை எழுதி இருக்கிறார்கள்?

1.திருஞானசம்பந்தர்




இணையத்தில் அருணகிரிநாதருடையதை தவிர மற்ற மூன்றுக்கும் முழு உரை இல்லை.முழு பதிகம் மட்டுமே கிடைக்கிறது. 

இந்த பதிவில் நாம் சம்பந்தரின் திருஎழுகூற்றிக்கையைப்பார்ப்போம்.

இசை வடிவில் கேட்க

தேரின் மேல்பாகம் :

மேல் தட்டு :1

ஓர் உரு வாயினை
மான் ஆங்காரத்து ஈர் இயல்பு ஆய்
ஒரு விண் முதல் பூதலம்
1
2
1
சொல்லுக்கும்கற்பனைக்கும் கடந்த இறைவன்,
 படைத்தல்காத்தல்அழித்தல்மறைத்தல்அருளுதல் 
என்ற ஐந்து தொழில்களை செய்வதற்காக ஒரு உருவமாய் இருக்கிறார்
ஆங்காரத்து-ஐந்தொழில் ஆற்ற
சக்தியோடு சேர்ந்து அர்த்தநாரி உருவம் கொண்டாய்
ஐம்பூதங்களையும் படைத்தாய்
மேல் தட்டு  :2
ஒன்றிய
இருசுடர் உம்பர்கள் பிறவும்
படைத்துஅளித்துஅழிப்பமும்மூர்த்திகள் ஆயினை
இருவரோடு
ஒருவன் ஆகி நின்றனை;
1
2
3
2
1
ஐம்பூதங்களை அவற்றுக்குரிய செயல்பாடுகளை ஒழுங்காக செய்யுமாறு இறைவனே 
ஒருமித்தார் . அப்படி செய்ததால் மட்டுமே நமக்கு வாழ  இந்த பூமி சாத்தியம் ஆனது.

இருசுடர் = சூரியன் சந்திரன்
உம்பர்கள்தேவர்கள்
பிறவும்மற்ற உயிர்கள்
என்று அனைத்தையும் படைத்துகாத்துஅழிக்கும் முத்தொழிலும் செய்கிறாய்.
பிரம்மா ஒரு புறமும்விஷ்ணு ஒரு புறமுமாக , இறைவா நீர் மும்மூர்த்தியாகவும்அதே நேரத்தில் ஒரே ரூபமாகவும் இருக்கிறீர்

மேல் தட்டு  :3 (1-2-3-4-3-2-1)
ஓர் ஆல் நீழல்-இறைவன் ஆல மர நிழலில் வீற்று இருக்கிறார். ஆலமரம் என்பதும் ஒரு குறியீடு தான். பரந்த நிழலைத்தருவது ஆலமரம். நமக்கு நிழல் தரும் திருவடி அதுவே.
 ஒண் கழல் இரண்டும்- இந்த அடி எனக்கு மாணிக்க வாசகரை நினைவுபடுத்தியது. இறைவனின் திருவடிகள் இரண்டையும் ஒன்றாக சொல்கிறார்.
முப்பொழுது ஏத்திய-மூன்று வேளைகளிலும் தொழுத

 நால்வர்க்கு ஒளிநெறி காட்டினை-நான்கு சனகாதி முனிவர்களுக்கு, எல்லையில்லா பெருவாழ்வளித்தாய்.
நாட்டம் மூன்றும் ஆகக் கோட்டினை-     நாட்டம்(கண்கள்).இறைவனின் கண்கள்,எவ்வகை இருளையும் போக்குவதாய் ,  சூரியன், சந்திரன் மற்றும் நெருப்பாக இருக்கிறது.
இரு நதி அரவமோடு ஒருமதி சூடினை-கங்கையையும், பாம்பினையும் தலையில் வாய்த்திருக்கும் இறைவன், பிறை நிலவையும் தலையில் சூடி இருக்கிறார்.

மேல் தட்டு 4: (1-2-3-4-5-4-3-2-1)

ஒருதாள் ஈர் அயில் மூ இலைச் சூலம்,
நால்கால் மான்மறி, ஐந்தலை அரவம்,
ஏந்தினை; காய்ந்த நால் வாய் மும் மதத்து
இரு கோட்டு ஒருகரி ஈடு அழித்து உரித்தனை;

ஒருதாள்= தாள் (தண்டு) இறைவனின் திருவடி தாமரையை சுட்டுகிறது.  
ஈர் அயில்= வாள், மழு (கோடரி போன்ற) அயில்(இரும்பினால்) ஆன ஆயுதங்களை ஏந்தியவர். (கந்த சஷ்டி கவசத்தில் அயில் வேல் காக்க என்பது இரும்பினால் ஆன வேல் )
மூ இலைச் சூலம்= திரி சூலம் ஏந்தியவர்
நால்கால் மான்மறி= நான்கு வேதங்களும் இறைவனின் கையில் இருக்கும் மானின் கால்களாக இருக்கின்றன.
மறி= மான் குட்டி  (செம்மறி ஆடு என்ற சொல்லும் இப்படி தான் வந்திருக்குமோ? )

ஐந்தலை அரவம் ஏந்தினை= ஐந்து தலைகளையும் உடைய நாகத்தை இறைவன் கழுத்தில் ஏந்தி இருக்கிறார். ஐந்து தலைகளும் நமசிவாய என்னும் பஞ்சாட்சரத்தை சுட்டுகின்றன.


காய்ந்த நால் வாய் மும் மதத்து இரு கோட்டு ஒருகரி ஈடு அழித்து உரித்தனை-
நால்வாய்-தொங்குகின்ற வாய். (நிறைய அவ்வையாரின் செய்யுள்களில் விநாயகரின் வாயை நால்வாய் என்கிறார்).

இந்த சிற்பம் திருவதிகை கோயிலில் எடுத்தேன். கஜசம்ஹாரமூர்த்தி. கஜாசுரன் என்னும் அரக்கனை வதம் செய்து ஈரத்தோலை அணிந்தவர்.
சிவபெருமானின் உருவங்கள் உக்கிரமாக சொல்லப்பட்டாலும், நம்மை காக்கவே, விஷத்தைக்கூட விழுங்கிய திருநீலகண்டர் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.


மேல் தட்டு 5: (1-2-3-4-5-4-3-2-1)
ஒரு தனு இருகால் வளைய வாங்கி,முப்புரத்தோடு நானிலம் அஞ்ச,கொன்று தலத்து உற அவுணரை அறுத்தனை;ஐம்புலன், நால் ஆம் அந்தக்கரணம்,முக்குணம், இருவளி, ஒருங்கிய வானோர்ஏத்த நின்றனை (1-2-3-4-5-4-3-2-1)


இறைவனைப்பற்றிய இலக்கியங்கள் எல்லாமே உள்முகமாக நம் மனதை நோக்கிய வேறு செய்தியை சொல்பவை.



ஒரு தனு இருகால் வளைய வாங்கி,முப்புரத்தோடு நானிலம் அஞ்ச, கொன்று தலத்து உற அவுணரை அறுத்தனை
மேரு மலையை வில்லாக்கி, இருக்காலை வளைத்து , முப்புரம் (மூன்று கோட்டைகள்) நானிலம் அஞ்ச அரக்கர்களை அழித்தார்.

திரிபுரம் எரித்த வரலாறு படிக்க இங்கே சுட்டுங்கள்

ஐம்புலன், நால் ஆம் அந்தக்கரணம்,முக்குணம், இருவளி, ஒருங்கிய வானோர்ஏத்த நின்றனை

முதல் பாதி திரிபுரம் எரித்த வரலாற்றையும் (வெளிப்புறமாக), அடுத்தபாதி உட்புறமாக , எப்படி நம்மை வெற்றிகொள்ள வேண்டும் என்பதை சொல்கிறது இந்த அடிகள் . 

ஐம்புலன்களை அடக்கி, மனம் , புத்தி, சித்தம், அகங்காரம்-    என்னும் நான்கு கூறுகளைக்கொண்ட அந்தக்கரணம் அடக்கி, முக்குணம்- சத்வம், தேஜஸ், தமோ குணங்கள், இரு வளி ஒருங்கி - சுவாசத்தை சொல்வதாய் நான் எடுத்துக்கொள்கிறேன்,மனதை ஒருநிலைப்படுத்திய தேவர்கள்
ஏத்த நின்றனை- தேவர்கள் புகழ நின்றனை இறைவா.
மேல் தட்டு 6: (1-2-3-4-5-6-7-6-5-4-3-2-1)
ஒருங்கிய மனத்தோடு- மனதை ஒருநிலைப்படுத்தி ,
இரு பிறப்பு ஓர்ந்து-அன்னையின் கருவில் ஒரு முறையும், பூணூல் அணியும்போது ஒரு முறையும் என அந்தணர்களுக்கு இப்பிறப்பு என்பதை சொல்கிறார் சம்பந்தர்.
 முப்பொழுது குறை முடித்து-மூன்று பொழுதும் முறையான கிரியைகளை செய்து (சந்தியா வந்தனம்)
நால்மறை ஓதி-நான்கு வேதங்களை ஓதி
ஐவகை வேள்வி அமைத்து, ஆறு அங்கம் முதல் எழுத்து ஓதி-,வரல் முறை பயின்று,
ஷடங்கம் எனப்படும் வேதத்தின் ஆறு அங்கங்களையும் , 
வரல் முறை- எப்படி மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்ற சொல்முறை பயின்று  
எழுவான்தனை வளர்க்கும்
பிரமபுரம் பேணினை-எழுவான் என்பது கிழக்கு திசை என பொருள்படுகிறது. அப்படி எடுத்துக்கொள்ளாமல் அந்தணர்கள் செய்யும் வேள்வியால், எழுகிற அக்கினி பிழம்பு எழும் சீர்காழி நகரில் இருப்பவர் இறைவன் 

அறுபதம் முரலும் வேணுபுரம் விரும்பினை-அறுபதம்(வண்டு) ரீங்காரமிடும் சீர்காழியை விரும்பினை  
இகலி அமைந்து உணர் புகலி அமர்ந்தனை;
பொங்கு நால்கடல் சூழ் வெங்குரு விளங்கினை-நரகர்கள் தன்னைக் கொடியவன் என்று இகழும் பழி நீங்க யமன் வழிபட்டதால், கடல் சூழ்ந்த சீர்காழி வெங்குரு எனவும் அழைக்கப்படுகிறது. 
பாணி மூஉலகும் புதைய, மேல் மிதந்த
தோணிபுரத்து உறைந்தனை-இது கிருத்தவர்கள் சொல்லும் நோவாவின் கப்பல் போல தான்மூவுலகும் அழிந்தாலும், உலகம் மறுபடி உருவாக வேண்டிய உயிர்பொருள், தோணி வடிவில் மிதந்ததால், இந்த ஊர் தோணிபுரம் (சீர்காழி) எனவும் பெயர் பெற்றது;
தொலையா இருநிதி வாய்ந்த ந்தராய் ஏய்ந்தனை-சங்கநிதி,பதுமதி என்ற இருநிதிகளோடு பொருந்தியவராக இறைவன் இருக்கிறார் 

 வர புரம் ஒன்று உணர் சிரபுரத்து உறைந்தனை-சீர்காழியில் இன்னொரு பெயர் சிரபுரம். (இது அமுதம் பெற வந்த ஒரு அரக்கனின் சிரம் கொய்யப்பட்ட கதை).
 தட்டு 7: (1-2-3-4-5-6-7-6-5-4-3-2-1)
ஒருமலை எடுத்த- இராவணன் இமய மலையை எடுத்தான் 
 இருதிறல் அரக்கன்- திறல் (வலிமை)- பெருவலிமையுடைய அரக்கன்
விறல் கெடுத்து அருளினை- விறல்(வெற்றி)-அரக்கனின் வெற்றியை கெடுத்து அருளினை (பெரும்பாலான சம்பந்தரின் பாடல்களில் இந்த செய்தி நிச்சயம் வரும்). அரக்கன் என்று பயன்படுத்துவது ஒரு குறியீடு தான். ஆணவத்தை அழிப்பதையும், நான் என்ற அகந்தையையும் அழிப்பதையே சொல்கிறது.
புறவம் புரிந்தனை-இது சிபிச்சக்ரவர்த்தி புறாவுக்காக தன் தொடையை அறிந்து கொடுத்த வரலாற்றை சொல்கிறது. சிபி ராஜாவுக்கும், புறவுக்கும் முக்தி கிடைத்த சீர்காழி புறவம் என்ற பெயரிலும் இருக்கிறது. சீர்காழிக்கு உள்ள பெயர்கள் அனைத்தையுமே சம்பந்தர் பாடி என்றுமே அவை நமக்கு தெரியுமாறு செய்து விட்டார். மற்ற தலங்களுக்கும் இப்படி நிறைய பெயர்கள் இருந்திருக்கும்.

முந்நீர்த் துயின்றோன்- முந்நீர்(கடல்)-பாற்கடலில் உறங்கும் விஷ்ணு , நான்முகன்- பிரம்மன் ,
அறியாப்பண்பொடு நின்றனை- அண்ணாமலையார் கதையை சொல்கிறார். எல்லா சிவன் கோயில்களிலும் லிங்கோத்பவர் சிற்பம் இதைத்தான் காட்டும் ; 
சண்பை அமர்ந்தனை- சீர்காழி என்னும் சண்பையில் அமர்ந்த இறைவா. சண்பை என்பது ஒரு பூவின் பெயராக கூட இருக்கும். எங்கள் மன்னைக்கு இன்னொரு பெயர் செண்பக ஆரண்யம் 
ஐயுறும் அமணரும்- சம்பந்தர் வாழ்த காலத்தில், பல சமயங்களுக்கு நடுவே எப்போதும் மனவேறுபாடு இருந்து வந்திருக்கிறது. அதைப்பதிவு செய்வதாய் தான் எடுத்துக்கொள்ளவேண்டும். அமணர்(சமணர்) சூன்யத்தை தான் நம்புகின்றனர். இறைவன் இருக்கிறார் என்பதில் ஐயம் கொள்கின்றனர் என்கிறார்
 அறுவகைத் தேரரும்- தேரர்(பௌத்தர்), இந்த சொல் இன்னும் இலங்கையில் புழக்கத்தில் இருக்கிறது. ஆறு வகையான பிரிவுகள் அன்றைய பௌத்தத்தில் இருந்திருக்கலாம்.
ஊழியும் உணராக் காழி அமர்ந்தனை- ஊழி(ப்ரளயக்காலம்). அதை உணர முடியாத அளவில் தோணிபுரம் என்னும் சீர்காழி என்றும் நிலைபெற்றிருக்கும். அந்த காழியில் அமர்திருப்பவனே.
எச்சன் ஏழ் இசையோன் கொச்சையை மெச்சினை-எச்சன் என்னும் சொல் அக்கினி, யாகம் செய்பவர் என்பதான பொருளில் இருக்கிறது.இது ராவணனின் இசையை இறைவன், இராவணன் கொண்ட பக்தியினால் மெச்சியதாக நான் எடுத்துக்கொள்கிறேன். என் அனுமானம் தவறாக இருக்கலாம் 
ஆறுபதமும்- ஆறு விதமான விழிப்புநிலைகளை இது குறிக்கிறது. ஆழ்ந்த உறக்கம், துரியம்,துரியாதீதம் முதலியன.
ஐந்து அமர் கல்வியும்- அவர் காலத்தில் ஐந்து வகையான கல்வி இருந்திருக்கலாம். எனக்கு சரியான விளக்கம் கிடைக்கவில்லை. இறைவன் கல்வியின் ரூபமாக இருக்கிறார் என்றும் கொள்ளலாம்,
மறை முதல் நான்கும்- நான்கு வேதங்களும் 

மூன்று காலமும்தோன்ற நின்றனை;- கடந்த/நிகழ்எ/திர் காலம் என்ற முக்காலத்தையும் தோன்ற வைத்து நின்றாய்  
இருமையின் ஒருமையும்- இறைவன் வேறு, நாம் வேறு என்பது ஒரு கொள்கை.அனைத்தும் ப்ரஹ்மம் என்பது அத்வைதக்கொள்கை. அதைதான் இந்த அடி நினைவுபடுத்துகிறது 

, ஒருமையின் பெருமையும்- எல்லாமாக, எல்லா உயிர்களுமாக பிரபஞ்சமாக நீக்கமற நிறைந்த ஒருமை இறைவனின் பெருமையும்
மறு இலா மறையோர்- தங்களுக்கு உள்ள கடமைகளை(வேதங்களை முறையாய் படிப்பது, வேள்விகளை செய்து எல்லாருக்காகவும் பிரார்த்திப்பது) என்று வாழும் குறை இல்லாத மறையவர்கள் 
கழுமல முது பதிக் கவுணியன் கட்டுரை- கவுணியர் என்பது சம்பந்தரின் குலம். தன்னை சொல்லிக்கொள்கிறார். இதுபோன்ற முத்திரை அவருடைய எல்லா பதிகங்களில் இருக்கும்.
கழுமல முதுபதிக்கவுணியன் அறியும்
அனைய தன்மையை ஆதலின், நின்னை

நினைய வல்லவர் இல்லை, நீள் நிலத்தே- இது வரை சம்பந்தர் சொன்ன கருத்துகளை அவருடைய தந்தை அறிவார்.
இந்த கருத்துகளை அறிந்தவர் யாரும் நீள்நிலத்தில் (இந்த பூமியில்), நினைய வல்லவர் இல்லை- இறைவனை,நினைக்காமல் இருக்க மாட்டார்கள்.


முழு பதிகம் :
ஓர் உரு ஆயினை; மான் ஆங்காரத்து
ஈர் இயல்பு ஆய், ஒரு விண் முதல் பூதலம்
ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும்
படைத்து, அளித்து, அழிப்ப, மும்மூர்த்திகள் ஆயினை;
இருவரோடு ஒருவன் ஆகி நின்றனை;
ஓர் ஆல் நீழல், ஒண் கழல் இரண்டும்
முப்பொழுது ஏத்திய நால்வர்க்கு ஒளிநெறி
காட்டினை; நாட்டம் மூன்றும் ஆகக் கோட்டினை;
இரு நதி அரவமோடு ஒருமதி சூடினை;
ஒருதாள் ஈர் அயில் மூ இலைச் சூலம்,
நால்கால் மான்மறி, ஐந்தலை அரவம்,
ஏந்தினை; காய்ந்த நால் வாய் மும் மதத்து
இரு கோட்டு ஒருகரி ஈடு அழித்து உரித்தனை;
ஒரு தனு இருகால் வளைய வாங்கி,
முப்புரத்தோடு நானிலம் அஞ்ச,
கொன்று தலத்து உற அவுணரை அறுத்தனை;
ஐம்புலன், நால் ஆம் அந்தக்கரணம்,
முக்குணம், இருவளி, ஒருங்கிய வானோர்
ஏத்த நின்றனை; ஒருங்கிய மனத்தோடு,
இரு பிறப்பு ஓர்ந்து, முப்பொழுது குறை முடித்து,
நால்மறை ஓதி, ஐவகை வேள்வி
அமைத்து, ஆறு அங்கம் முதல் எழுத்து ஓதி,
வரல் முறை பயின்று, எழு வான்தனை வளர்க்கும்
பிரமபுரம் பேணினை;
அறுபதம் முரலும் வேணுபுரம் விரும்பினை;
இகலி அமைந்து உணர் புகலி அமர்ந்தனை;
பொங்கு நால்கடல் சூழ் வெங்குரு விளங்கினை;
பாணி மூஉலகும் புதைய, மேல் மிதந்த
தோணிபுரத்து உறைந்தனை; தொலையா இருநிதி
வாய்ந்த ந்தராய் ஏய்ந்தனை;
வர புரம் ஒன்று உணர் சிரபுரத்து உறைந்தனை;

ஒருமலை எடுத்த இருதிறல் அரக்கன்
விறல் கெடுத்து அருளினை; புறவம் புரிந்தனை;
முந்நீர்த் துயின்றோன், நான்முகன், அறியாப்
பண்பொடு நின்றனை; சண்பை அமர்ந்தனை;
ஐயுறும் அமணரும் அறுவகைத் தேரரும்
ஊழியும் உணராக் காழி அமர்ந்தனை;
எச்சன் ஏழ் இசையோன் கொச்சையை மெச்சினை;
ஆறுபதமும், ஐந்து அமர் கல்வியும்,
மறை முதல் நான்கும்,
மூன்று காலமும், தோன்ற நின்றனை;
இருமையின் ஒருமையும், ஒருமையின் பெருமையும்,மறு இலா மறையோர்
கழுமல முது பதிக் கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதிக்கவுணியன் அறியும்;
அனைய தன்மையை ஆதலின், நின்னை
நினைய வல்லவர் இல்லை, நீள் நிலத்தே.

Friday, April 07, 2017

மன்னையின் பாடல் பெற்ற பாமணி சிவன் கோயில்!

நான் மன்னார்குடியில் வளர்ந்தாலும், இந்த கோயிலின் மகத்துவம் என் பள்ளிநாட்களில் அறிந்திருக்கவில்லை. சமீபத்தில் குடமுழுக்கு கண்ட தேவாரத்திருத்தலம்.

மன்னை என்றால் ஸ்ரீ ராஜகோபாலஸ்வாமி கோயில் தான் அனைவரும் அறிந்தது. இந்த நாகநாத சுவாமி கோயில் மன்னையிலிருந்து 2  கி.மி. தூரத்தில் தான் இருக்கிறது.

எங்கள் சின்ன செங்கமலம் !


மன்னையில் ஓடும் நதி, காவிரியின் கிளை ஆறான பாமணி. இந்த ஆற்றின் அருகே அமைந்த தலம்.

இந்த கோயிலின் சிறப்புகள் பல.

1.புற்று மண்ணால் ஆன சிவலிங்கத்திருமேனி. ஆதிசேஷன் பூஜித்த தலம். பெரும்பாலும் புற்றுக்கோயில்களில் நித்ய அபிஷேகம் செய்ய மாட்டார்கள். இங்கு மாம்பழ சாறில் அபிஷேகம் தினமும் செய்யப்படுவது சிறப்பு.தலவிருட்சம் மாமரம்.

2.திருவாரூர் தலம் காலத்தால் மிக பழமையானது என்பார்கள். முசுகுந்த சக்கரவர்த்தி காலத்தியது என்று சொல்வார்கள். இந்த கோயிலில் முசுகுந்தர் பச்சை திராட்சை படைத்தது வழிபட்டார் என்பதால், பச்சை திராட்சையை இறைவனுக்கு படைப்பதும் சிறப்பு.



3.சர்வ தோஷ நிவாரணம் தரும் தலம் இது. தட்சிணாமூர்த்தி சிம்மத்தின் மீது இருப்பது மிக அபூர்வமான  ஒன்றாகும் . 



4.சனீஸ்வரரும் பைரவரும் சேர்ந்து இருப்பதால், சனிதோஷ நிவாரண தலமாக இருக்கிறது. 

5.ஆதிசேஷனுக்கு மனித தலையுடன் தனி சன்னதி இருக்கிறது. ராகு கேது தோஷம் நீங்க வழிபாடு செய்ய உகந்த தலம்.

இந்த தலத்தைப்பற்றிய திருஞானசம்பந்தரின் பாடல் அன்றைய சோழ தேசத்தின் நெல்வயல்களின் அழகை வர்ணிக்கிறது.

அங்கமு நான்மறையும் அருள்செய் தழகார்ந்த வஞ்சொல்
மங்கையோர் கூறுடையான் மறையோ னுறைகோயில்
செங்கய னின்றுகளுஞ் செறுவிற் றிகழ்கின்ற சோதிப்
பங்கய நின்றலரும் வயல்சூழ்ந்த பாதாளே.



அங்கமும் நான்மறையும் அருளிச்செய்து -வேதங்கள் நான்கையும், வேதங்களின் ஆறு அங்கங்களையும் உருவாக்கியவர் சிவபெருமான்.ஆறு அங்கங்களும் ஷடங்கங்கள் என்று சொல்லப்படுகின்றன. இவற்றிலிருந்து தான் நாம் பரவலாய் பயன்படுத்தும் சடங்கு என்ற சொல் உருவாயிற்று.ஆறு அங்கங்கள்  எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம் , நிகண்டு,தினமும் முழுஅக்கறையோடு செய்ய வேண்டிய கர்மாக்கள், பாஇலக்கணம் ஆகியவை.


அழகார்ந்த வஞ்சொல் மங்கையோர் கூறுடையான் -வாக்கினிலே இனிமை வேண்டும் என்பது பாரதியாரின் வரி. அம்பாள் அருள் வடிவம். அன்பின் ஊற்று. உலக மாதாவாகிய அன்னை, இனிய அழகான சொற்களை  பேசுபவராக இருக்கிறார். மனதுக்கு  இதம் தரும் சொல்லையே பேசும் அன்னை, சிவபெருமானின் ஒரு பாகமாக இருக்கிறார்.

மறையோன் உறை கோயில்- மறைகளாக இருப்பவரும் இறைவனே.வேதப்பொருளாய் உள்ள இறைவன் உறையும் கோயில் எப்படி இருக்கிறது தெரியுமா? 
செங்கயல் நின்றுகளும்  செருவிற் திகழ்கின்ற சோதிப்பங்கயம் நின்று அலரும் வயல் சூழ் பாதாளே.

தாமரை எப்போதும் சூரிய ஒளியில் தான் மலர்கிறது. (பங்கயம்-தாமரை). செங்கயல் மீன்கள் வயல்களில் புரள்கிற ஒளியில் தாமரை இரவிலே மலரும் அளவில் வயல்கள் சூழ்ந்த பாதாளேஸ்வரம் என்னும் கோயிலில் தான் இறைவன் இருக்கிறார்.

எப்போதும் நீர்வளத்துக்கும் , எல்லாருக்கும் வயிறார உணவிட்டும் வந்த தேசத்தில், இப்போது வறட்சி.விவசாயிகளின் தொடர் போராட்டம்.

வான்முகில் வழாது பெய்யட்டும். காவிரியில் எப்போதும் நீர் இருக்கட்டும்.எல்லாருக்கும் உணவு கொடுக்கும் உழவர் வாழ்க்கை நன்றாக இருக்க என் பிரார்த்தனைகள்.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் மக்களை பாதாளேஸ்வரர் என்னும் பாமணி நாகநாதர் காக்கட்டும் .

(Inputs from Dinamani.com, Dinamalar.com, Thevaaram.com).

Sunday, February 12, 2017

கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி (பதினோராம் திருமுறை )

நக்கீரதேவ நாயனார் அருளிச் செய்த  கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி

இந்த பதிவில் பார்க்கப்போகும் அந்தாதி, சற்றே வித்தியாசமானது.

நம் எல்லாருக்கும் பரவலாக தெரிந்த அந்தாதி அபிராமி அந்தாதி. முந்தைய பாடலின் கடைசி சொல்லை வைத்து, அடுத்த பாடல் தொடங்கும், ஒரு வகை பாமாலை அந்தாதி.



இந்த கயிலை பாதி, காளத்தி பாதி அந்தாதியில் பாடல்கள் ஒவ்வொன்றும் முந்தைய பாடலில் கடைசி சொல்லில் தொடங்குகின்றன. ஆனால் பாட்டு ஒவ்வொன்றும், கயிலை, காளத்தி என்று மாறி மாறி இருக்கின்றன.

ஏன் கயிலை பாதி, காளத்தி பாதி?


திருக்காளத்தி (காளஹஸ்தி) தென்கயிலை எனப்போற்றப்படுவது. இந்தத்தலத்தின் இறைவர் திருகணநாதேஸ்வரரும், இறைவி ஞானப்பூங்கோதையும் இவருடைய ஆத்மார்த்த, இஷ்ட தெய்வங்கள். எனவே கயிலையையும், காளத்தியையும் நூறு பாடல்களில் மாறி மாறி பாடியுள்ளார்.
முதல் பாடலில் நக்கீர தேவர் வெண்பா விளக்கேற்றி வழிபடுகிறார்.  இதே போல அப்பரும் ஆழ்வாரும் ஏற்றிய விளக்குகளாய் உள்ள பாடல்களைக்கொண்ட முந்தைய பதிவின் இணைப்பு இங்கே:அப்பரும் ஆழ்வாரும் ஏற்றிய விளக்குகள் !

ஏன் விளக்கேற்ற வேண்டும்? இத்தனை மின்விளக்குகள் இருக்கும் இன்றைய நாட்களிலும் கூட?
இன்றைய காலகட்டத்தில் நமக்கு பல்வேறு விதமாய் நம் மனம் அலைபாய்கிறது. இணையம், அலைபேசி என்று நம் தூக்கம் கூட தொலைந்த இரவுகள் அதிகம்.

இணையத்தில் படித்த ஒரு செய்தி:ஒரு அம்மா, இந்தியாவிலிருந்து தன் மகள், மருமகனோடு கொஞ்ச நாட்கள் இருக்க சென்றாராம். இருவரும் வேலைக்கு செல்வதால், ஆளுக்கு ஒரு நேரத்தில் வீட்டுக்கு வருவார்களாம்.முறையாய் யாரும் வீட்டில் விளக்கேற்றுவதில்லை. அவர்களுக்கு குழந்தை இல்லை. இந்த அம்மா, தினமும் காலையும் மாலையும் விளக்கேற்றி, அவர்களையும் தினமும் வழிபடு செய்ய வைத்திருக்கிறார். எதிர்மறை எண்ணங்கள் தொலைந்ததாக அவர்கள் சொன்னார்களாம்.


தினம் தோறும் விளக்கேற்றி வழிபாடு செய்யும் வீடுகளில், எதிர்மறையான சிந்தனைகள் குறையும். மனது ஒருமைப்பட, நாம் செய்கிற வேலையை திறம்பட முடிக்க, தீப வழிபாடு உதவும்.நெய் விளக்கு எதிர்மறை அலைகளை அகற்றக்கூடியது.திருக்கோயில்களுக்கு செல்லும்போது நெய் தீபம் ஏற்றுவதை ஒரு தொண்டாக செய்யுங்கள்.

சொல்லும் பொருளுமே தூத்திரியும் நெய்யுமா

நல்லிடிஞ்சில் என்னுடைய நாவாகச் சொல்லரிய
வெண்பா விளக்கா வியன்கயிலை மேலிருந்த
பெண்பாகற் கேற்றினேன் பெற்று.

மிக எளிமையாக நாலு வரியில் நம் மனதில் பதியுமாறு உள்ள பாடல்கள் கொண்ட அந்தாதி இது.
கவிஞர் நம்மை போலவா விளக்கேற்றுவார்? அவருக்கு சொல் என்பது திரி, பொருள் என்பது நெய். இது இரண்டையும் ஏந்தும் நல்லிடிஞ்சில்-அகல் அவருடைய நாக்கு.

அந்த நாட்களில் நம்மை போல, விரல்நுனியில் தட்டச்சு செய்யவா முடியும்? அவர் பாடலை சொல்ல சொல்ல, ஒருவர், ஓலைச்சுவடியில் எழுதி இருப்பார். இது போன்ற பாடல்களைப்பார்க்கும்போது, நமக்கு இருக்கும் ஒரு வசதியும் இல்லாத காலத்தில் அவர்களின் நேரம் எத்தனை பயனுள்ளதாய், மொழிக்கும், சிற்பம் முதலிய நுண்கலைகளுக்குமாக செலவழிக்கப்பட்டுள்ளது என்று எண்ணி வியக்கிறேன்.புறத்தில் ஏற்றாமல் தம் அகத்தில் ஏற்றியதால் இன்னும் சிறப்பான, ஒளியான விளக்கு!.

இந்த முதல் பாடலில், பெண் பாகற்கு (சிவனுக்கு) சொல், பொருள், நாக்கு என்ற மூன்றைக்கொண்டு உருவாக்கப்பட்ட வெண்பா விளக்கை ஏற்றுகிறார் .

இந்த அந்தாதியில் நிறைய பாடல்கள் பொருள் திறத்தால் நம்மை அசரவைக்கின்றன. எழுதப்பட்ட காலம் 1200  ஆண்டுகளுக்கு முன்னர்!

இந்த அந்தாதியிலிருந்து இன்னும் சில பாடல்கள்:


உருவு பலகொண் டுணர்வரிதாய் நிற்கும் 

ஒருவன் ஒருபால் இருக்கை - மருவினிய
பூக்கையிற் கொண் டெப்பொழுதும் புத்தேளிர் வந்திறைஞ்சு
மாக்கயிலை என்னும் மலை.
(புத்தேளிர்=தேவர்கள்).


இறைவன் எப்படிப்பட்டவர்?

பல உருவங்களில் நாம் வழிபட்டாலும், அவர் உணர்வதற்கு அரியவர்.அப்பர் பெருமான் சொல்வதைப்போல,பெண் , ஆண் என்ற வேற்றுமைகளைக்கடந்தவர். அந்த இறைவனின் இருப்பிடம், மாக்கயிலை என்னும் மலை. அந்த மலையில், தேவர்கள் கூட நெருக்கமாய் தொடுத்த பூக்களோடு எப்பொழுதும் இறைவனை இறைஞ்சுகின்றனர்.
இறைவனின் பெயரின் சிறப்பு :
நாமாவளி என்று ஒரு வகை பிரார்த்தனையை செய்கிறோம். இறைவனின் பெயரை மறுபடி மறுபடி சொல்லும் பிரார்த்தனை. இந்த நமச்சிவாயத்தை மறுபடி மறுபடி சொன்னால் என்ன நடக்கும் என்று அப்பர், சம்பந்தர், சுந்தரர் என்று எல்லாருமே நமச்சிவாய பதிகங்களில் சொல்லி இருக்கிறார்கள். வேதம் நான்கிலும் மெய்ப்பொருளாவது, நாதன் நாமம் நமச்சிவாயவே என்பது சம்பந்தரின் மொழி.

வாயிலே வைக்கும் அளவில் மருந்தாகித்

தீய பிறவிநோய் தீர்க்குமே - தூயவே
கம்பெருமா தேவியொடு மன்னு கயிலாயத்
தெம்பெருமான் ஓரஞ் செழுத்து.
வேகம்= எழுச்சி மிக்க, பயன்மிகு 

தூயவேகம்பெருமாதேவியொடு மன்னு கயிலாயத்தெம்பெருமான் :பெரும்பாலும் கோயில் பெயர்களுக்கு முன்னால் அருள்மிகு என்று சொல்வது வழக்கம். பெருமாதேவியாகிய பார்வதி, தொண்டர்களுக்கு அருள்பாலிப்பவர். உலகிற்கு அம்மை.அருட்கடல். அவரோடு கைலாயத்தில் இருக்கிறார் சிவனார். அம்மையோடு இருப்பதால், உடலின் சரிபாதியோடு இருப்பதால், அவர் விரைவாய் நம் தொல்வினைகளை தீர்த்து வைப்பார்.

வாயிலே வைக்கும் அளவில் மருந்தாகித்
தீய பிறவிநோய் தீர்க்குமே ஓரஞ்செழுத்து: எப்படி மருந்துகள் நோய்களை தீர்க்கின்றனவோ, அது போல நமச்சிவாய என்னும் மருந்து, பிறவி நோயைத்தீர்க்கும்.
எப்படி வழிபட வேண்டும்?

நமக்கிசைந்த வாநாமும் ஏத்தினால் நம்பர்
தமக்கழகு தாமே அறிவர் -அமைப்பொதும்பிற்
கல்லவா நீடருவிக் காளத்தி ஆள்வாரை
வல்லவா நெஞ்சமே வாழ்த்து.

ஒரு சிலர் சொல்வார்கள், மந்திரங்கள் தெரியாது, எப்படி பூஜை செய்ய வேண்டும் என்று தெரியாது என்று. திருக்காளத்தி கண்ணப்பர் வாழ்ந்த ஊர். அவர் செய்த பூஜை அவருக்கு தோன்றிய அளவில் செய்யப்பட்ட பூஜை. ஆனால் அன்போடு செய்யப்பட்ட பூஜை.அதைத்தான் இறைவனும் விரும்புகிறார்.


நமக்கிசைந்த வாநாமும் ஏத்தினால்
நம்பர் தமக்கழகு தாமே அறிவர்- சிவபெருமான் தாம் செய்யத் தக்கதைத் தாமேயறிவார்.நாம் அவருக்கு சொல்லவேண்டியதில்லை.நமக்கு இசைந்தவாறு (முடிந்தவாறு) நாம் இறைவனை வேண்டினால்,நாம் வேண்டியதை எப்படி தர வேண்டும் என்பதை அவர் அறிவார்.
அமைப்பொதும்பிற்
கல்லவா நீடருவிக் காளத்தி ஆள்வாரை
வல்லவா நெஞ்சமே வாழ்த்து.

(அமை-மூங்கில், பொதும்பு-மரச்செறிவு, நம்பர்=சிவபெருமான்;வல்லவா - இயன்ற அளவு)

மூங்கில் மரங்கள் அடர்ந்துள்ள, கல் என்னும் ஓசையோடு வீழும் நீண்ட  அருவிகளைக்கொண்ட காளத்தி நாதரை, முடிந்தவரை நெஞ்சமே நீ வாழ்த்து.

Saturday, December 31, 2016

கையில் கைபேசியுடன் கைக்கூப்பினர் ஒரு பால்!- கோவிலுக்குள் எப்படி இருக்க வேண்டும்?


இந்தியாவில் மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் தற்கொலைகள் குறைவு. மனதில் எதிர்மறை சிந்தனைகள் அதிகம் இருந்தாலோ, மனதளவில் ஊக்கம் குறைவாக இருந்தாலோ, கோயிலுக்கு சென்று வந்தால், நம் மனம் தானாய் அமைதி அடைவதைப்பார்க்கலாம்.

ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பது அவ்வையின் மொழி.
ஆ- மனது; லயம்- ஒருமித்தல். மனது ஒருமிக்கும் இடம் ஆலயம்.
சமீபத்தில் ஒரு நாள் கோயிலுக்கு சென்ற பொது, அன்றைய அபிஷேக உபாயதாரர், முழுக்க முழுக்க தன் கைப்பேசியில் பேசுவதும், ஆலயக்கருவறைகளைக்கைப்பேசியில் படம் எடுப்பதுமாக இருந்தார்.

உண்மையில் மனக்கண்ணில் இறைவன் உள்ளே இருக்க வேண்டுமென்றால் எப்படி நம் நடத்தை இருக்க வேண்டும்?
மாணிக்கவாசகர் சிவபுராணத்தில் சொல்வார், ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே!
இறைவன் தன்னை ஆராயாதவர்கள், எண்ணாதவர்கள் உள்ளத்தில் ஒளிந்து தான் இருக்கிறார்.



(இந்த பதிவில் படங்களில் அணி சேர்ப்பது,  சமீபத்தில் குடமுழுக்கு கண்ட சிங்கப்பூர் சிவ துர்கா ஆலயம்.)

இன் இசை வீணையர், யாழினர், ஒருபால்; இருக்கொடு தோத்திரம் இயம்பினர், ஒருபால்;
துன்னிய பிணை மலர்க் கையினர், ஒருபால்; தொழுகையர், அழுகையர்,துவள்கையர், ஒருபால்;
சென்னியில் அஞ்சலி கூப்பினர், ஒருபால். திருப்பெருந்துறை உறை சிவபெருமானே!
என்னையும் ஆண்டுகொண்டு, இன் அருள் புரியும் எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே!

இந்த பாடல் மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளி எழுச்சியில் இருக்கிறது.
பக்தர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் கோயிலில் இருக்கிறார்கள். ஒரு சிலர் கையில் இசை வாத்தியங்களோடு இருக்கின்றனர்; இன்னும் சிலர், தோத்திரங்களை சொல்லியபடி இருக்கின்றனர்; இன்னும் சிலர்- துன்னிய (நெருக்கமாக தொடுத்த), மலர் சரங்களோடு இருக்கின்றனர். இன்னும் சிலர் இறைவனை எண்ணி தொழுகின்றனர். ஒரு சிலர் உணர்ச்சி மேலிட்டு அழுகிறார்கள். இது பக்தியின் இன்னொரு உச்சம். இன்னும் சிலர், இறைவனுக்கு முன்னால் நாம் எத்தனை சிறியவர்கள் என்று எண்ணி அடக்கத்தால் துவண்டு நிற்கின்றனர். இன்னும் சிலரோ, கைகளைதலைக்கு மேல் தூக்கி, இறைவனை துதிக்கின்றனர். திருப்பெருந்துறையில் உள்ள ஆத்மநாதர், அனைவரின் ஆத்மாவையும் அறிவார். அவரை எழுந்திருக்க அன்பர்கள் வேண்டுகின்றனர்.


புது வருடம் பிறக்கப்போகிறது. புதிதாய் நிறைய நல்ல பழக்கங்களை ஆரம்பிக்க வேண்டும் என்று நினைப்போம். உடற்பயிற்சி, மனப்பயிற்சி எல்லாம் தான். அதோடு சேர்ந்து, இனி ஆலயங்களில் கைப்பேசியை வெளியே எடுப்பதில்லை என்பதையும் சேர்த்துக்கொள்வோம்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் !!!!

Tuesday, December 27, 2016

திருகலாகிய சிந்தை திருத்தலாம்!- திருமருகல் அப்பர் தேவாரம்

பெருகலாம் தவம் பேதைமை தீரலாம்
திருகலாகிய சிந்தை திருத்தலாம்
பருகலாம் பரமாயதோர் ஆனந்தம்
மருகலானடி வாழ்த்தி வணங்கவே!- அப்பர் தேவாரம் 


ஒரு காலத்தில் தமிழ் பாடல்கள் இல்லாமல் தான் கர்நாடக சங்கீத மேடைகள் இருந்தன. இன்று உள்ள சூழல் முற்றிலும் வேறு.
புது புது பாடல்களைத்தேடி தமிழிசைக்கு என்று ஆசையாய் மேடை ஏற்றும் சூழல் நிச்சயம் வரவேற்புக்குரியது.

சில நாட்களுக்கு முன்னர் திரு.விஜய் சிவா அவர்களின் திருமுறை இசை வட்டைக்கேட்க நேர்ந்தது. அதில் இந்த தேவாரமும் ஒன்று.


அபிராமி அம்மையை துதிப்பதால் என்ன கிடைக்கும் என்று அபிராமி பட்டர் சொல்வார்
தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே

இதை அம்மையை நினைத்து தொழுபவர்களுக்கு கிடைக்கும் பலன்களாகவும் பார்க்கலாம்.  அம்மா, தனம் தா, கல்வி தா, அழகான தெய்வ வடிவான தோற்றத்தைத்தா,நெஞ்சில் வஞ்சனையில்லாத நல்ல உறவுகளைத்தா, நல்லன எல்லாம் தா என்னும் பிரார்த்தனையாகவும் பார்க்கலாம். 


ஒரு பக்கம் ஏழையாக இருப்பவர்கள்  அடுத்தவர்  பொருள் கையில் கிடைத்தால் , காவல்  நிலையத்தில்  கொடுப்பதையும் , மறுப்பக்கம்  எத்தனை கோடி கோடியாய் பணம் இருந்தாலும், பேராசை தீராமல் , தன் அதிகாரத்தை  பயன்படுத்தி ஊர்  காசைக்கொள்ளையடிக்கும்  கூட்டத்தையும் பார்க்கிறோம்.
இவர்களில்  யாருக்கு  நிம்மதியான  உறக்கம்  இருக்கும் ? மனதில் கலக்கம்  இல்லாத  பொழுதுகள்  விடியும்? 



இந்த பதிகத்தில் நான்காவது பாடலிலிருந்து அகப்பொருளாய், ஒரு தலைவி திருமருகல் பெருமானை நினைத்து மருகுவதாய் பாடி இருக்கிறார் அப்பர் பெருமான்.

திருமருகல் நாகபட்டினத்திற்கு அருகே உள்ளது. 
இந்த தலத்தின் வரலாற்றில்,திருமணம் செய்து கொள்ள எண்ணி வீட்டை விட்டு வெளியேறியவர்கள் திருமருகல் வந்தவுடன், மணமகனை பாம்புக்கடித்து அவன் இறந்து விடுகிறான்.

இனி என்ன செய்வது என்று தெரியாமல் அலறித்துடித்த பெண்ணைத்தேற்றி, மணமகனை உயிரோடு எழுப்பினார் திருஞான சம்பந்தப்பெருமான். தேவார மூவர் மூன்று பேரின் வரலாற்றிலும் இப்படி விதி முடிந்தவர்களை மீண்டும் எழசெய்த அற்புதங்கள் உண்டு.

அப்பர் பெருமான் இந்தத் தலத்தின் வரலாற்றை எண்ணியே அகப்பொருளில் இந்த பதிகத்தின் பல பாடல்களைப்பாடி இருக்க வேண்டும். 


திருமருகல் பெருமானை நினைப்பவருக்கு தவம் பெருகும்; பிறப்பெனும் பேதைமை நீங்கும், இறைவனடி சேருகின்ற பேறு கிடைக்கும்.


புத்தி கோணலாய், நேர்வழியில் செல்லாதவர்கள் மனம் திருந்தும். 

பரமானந்தம் என்னும் தேன் பருகக்கிடைக்கும். 
பருகலாம், பெருக்கலாம் என்று ஆம் விகுதி சேர்த்து சொல்லி இருப்பதால், படிப்பவர்கள் ஒரு வேளைக்கிடைக்கலாம் என்பதாய் அர்த்தம் கொள்ள தேவை இல்லை. இது நிச்சயம் திருமருகல் பெருமானை வணங்கி, வாழ்த்துவதால் வரும் பயன்களாம்.



Monday, November 14, 2016

என் மனத்தே வைத்தேனே!-அப்பர் தேவாரம்

இன்று ஐப்பசி மாத பௌர்ணமி. எல்லா சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடக்கிறது.பல வருடங்களுக்கு பிறகு இன்றைய பௌர்ணமி நிலா மிகபெரியதாய்,பூமிக்கு அருகில் நம்மைப்பார்க்க, சிவனாரின் தலையில் இருந்து அருகில் வந்திருக்கிறது.



இந்த பதிவில் ஒரு சில அப்பர் தேவாரங்களைப்பார்க்கலாம்.
திருமீயச்சூர் என்னும் தலம் கும்பகோணத்துக்கு பக்கத்தில் இருக்கிறது. இங்கு தான் முதல் முதலில் லலிதா சஹஸ்ரநாமம் உருவானது. இந்த தலத்தில் அப்பர் பெருமான் பாடிய பாடலில், சொல்லாய் மட்டும் இருக்கிறது நிலா.

ஊனில் ஆவி உயிர்க்கும் பொழுதெலாம்
நான்நி லாவி யிருப்பனென் னாதனைத்
தேன்நி லாவிய சிற்றம் பலவனார்
வான்நி லாவி யிருக்கவும் வைப்பரே


இந்தப்பாடலின் பொருள் :
என் உடலில் உயிர் இயங்கும் பொழுதில் எல்லாம், நான் என் தலைவராகிய சிவனாரையே எண்ணிக்கொண்டிருப்பேன். இன்பத்தேன் விளங்கிய சிவபெருமான் என்னை என்றும் பேரின்ப வீட்டில் நிலைப்பெறுமாறு வைத்திடுவார். 

(திருமீயச்சூர் கோயில் கோபுரம் - பட உதவி- http://jaisspritualonlinejourney.blogspot.sg/)

ஆசையை அடக்கி நல்வழியில் இருப்பவருக்கு நிச்சயம் வீடுபேறு வாய்க்கும் என்று சொல்லும் நாலடியார் செய்யுள் இது.

மெய்வாய்கண் மூக்குச் செவியெனப் பேர்பெற்ற
ஐவாய வேட்கை அவாவினைக் - கைவாய்
கலங்காமற் காத்துய்க்கும் ஆற்ற லுடையான்
விலங்காது வீடு பெறும்.

சிவபெருமானையே எண்ணி இருக்கும் அப்பர் பெருமான் நிச்சயம் என்றும் நிலைபெற்று இருக்கும் பேறு பெற்றுள்ளார்.

அப்பர் பெருமானின் அன்பில் இன்னொரு தேவாரம், திருக்கச்சிஏகம்பம் தலப்பாடல்.

தேனோக்குங் கிளிமழலை யுமைகேள்வன் செழும்பவளம்
தானோக்குந் திருமேனி தழலுருவாஞ் சங்கரனை
வானோக்கும் வளர்மதிசேர் சடையானை வானோர்க்கும்
ஏனோர்க்கும் பெருமானை யென்மனத்தே வைத்தேனே 


காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில், பஞ்சபூத தலங்களில் ஒன்று. காமாட்சி அம்மை, சிவபெருமானை மணல் லிங்கமாய் செய்து பூஜித்த இடம். அம்மையின் அன்பில் இருக்கும் சிவனாருக்கு, தழுவ குழைந்த நாதர் என்னும் பெயரும் உண்டு. 

இந்தப்பாடலின் தொடக்க அடி- அம்மையைப்பற்றியதாய் இருப்பது இன்னும் சிறப்பு. 

தேனோக்குங் கிளிமழலை யுமைகேள்வன்: தேனைபோல, கிளி மொழியில் அழகான மழலை மொழி பேசும் அம்பிகையின் கணவர் 

செழும்பவளம்
தானோக்குந் திருமேனி -பவளம் போன்ற நிறம் உடையவர்;
தழலுருவாஞ் சங்கரனை- நெருப்பைப்போன்ற எல்லாருக்கும் நன்மைகளை மட்டுமே செய்யக்கூடியவர்.

வானோக்கும் வளர்மதிசேர் சடையானை-சிவந்த வானத்தை போல இருக்கும் சடையில்,பிறை நிலவை சூடி இருக்கிறார்.

வானோர்க்கும்
ஏனோர்க்கும் பெருமானை-தேவர்களுக்கும் மற்றவர்களுக்கும் தலைவனாய் இருப்பவனை, என் மனதில் வைத்தேனே !.

அன்போடு இறைவனை மனதில் வைக்க வேண்டும். வைத்தால், இங்கு வாழும் வாழ்க்கையில் உள்ள இன்ப துன்பங்களைத்தாங்கும் வலிமையையும் கிடைக்கும். வீடு பேறாகிய, பிறவா வரத்தையும் பெறலாம். 






Sunday, September 18, 2016

பெரியவா ! திருச்சாட்டியக்குடி (திருவிசைப்பா -ஒன்பதாம் திருமுறை )

பெரியவா ! கருணை இளநிலா வெறிக்கும்
   பிறைதவழ் சடைமொழுப் பவிழ்ந்து
சரியுமா சுழியம் குழைமிளிர்ந் திருபால்
   தாழ்ந்தவா காதுகள் ! கண்டம்
கரியவா ! தாமும் செய்யவாய் முறுவல்
   காட்டுமா ! சாட்டியக் குடியார்
இருகைகூம் பினகண் டலர்ந்தவா முகம் ! ஏழ்
   இருக்கையில் இருந்தஈ சனுக்கே.        

இந்த பதிவில் நாம் பார்க்க போவது ஒன்பதாம் திருமுறையில் உள்ள திருவிசைப்பா பாடல். இது ராஜராஜசோழரின் குருவான கருவூர் தேவர் அருளியது.நேராக வாசித்தால் எளிதில் கருவூர் தேவரின் பாடல்களின் பொருள் புரியவில்லை.வார்த்தைகளில் வித விதமான கோர்வை நயம்

பாடலின் பொருள் தம்மை நோக்கி கைக்கூப்பிய   திருச்சாட்டியக்குடி மக்களைப்பார்த்து இறைவன் முறுவலித்தார் என்பதே.
திருச்சாட்டியக்குடி திருத்துறைப்பூண்டிக்கு  அருகில் இருக்கிறது.
எனக்கு இந்த பாடலின் முதல் சொல்லைப்பார்த்ததும் காஞ்சி பெரியவரின் நினைவு வந்தது. நம் தாய்தந்தையர் பலரும் தரிசனம் செய்த மகான் காஞ்சி பெரியவர்.


ஏழ்   இருக்கையில் இருந்த ஈசனுக்கே: ஏழு நிலைகள்   உடைய திருச்சாட்டியக்குடி கோயிலில் வீற்றிருக்கும் ஈசனுக்கு
கருணை பெரியவா :கருணை ஒன்று, அதனால் விளையும் பயன்கள் பல. அதனால் சொல் எச்சமாக கருணை பெரியவா என்றார் கருவூர் தேவர்.


இளநிலா வெறிக்கும்
   பிறைதவழ் சடைமொழுப் பவிழ்ந்து
சரியுமா சுழியம் குழைமிளிர்ந் திருபால்    தாழ்ந்தவா காதுகள்: 


மொழுப்பு-முடி.   சுழி  அம்  குழை-வளைந்த  அழகிய    குண்டலம்.


இறைவனின் தலையில் தவழும் பிறையால் ஒரு சிறு ஒளி தவழ்கிறது.சடையில் உள்ள முடிகள் அவிழ்ந்து சரிந்து இருக்கின்றன. காதுகளில் வளைந்த அழகிய குண்டலங்கள் தாழ்வாக தொங்குகின்றன.
கண்டம்
கரியவா: தொண்டையில் ஆலகால விஷத்தை அடக்கி உயிர்களைக்காத்ததால் கண்டம் கருத்தவர்.

சாட்டியக் குடியார்
இருகைகூம் பினகண் டலர்ந்தவா முகம் தாமும் செய்யவாய் முறுவல்
   காட்டுமா:திருச்சாட்டியக்குடி மக்கள் தன் கைக்கூப்பி தொழுதலைக்கண்டு,முகம் மலர்ந்து, இறைவனும் முறுவல் பூத்தார்.


Monday, September 12, 2016

வார்த்தை விளையாட்டு- சம்பந்தர் தேவாரம்

இன்றைய நவீன கவிதைகளை ஒரு முறைக்கு மேல் படித்தால் தான் ஒரு பொருள் விளங்குகிறது. நல்ல நவீன கவிதைகள் நம்மில் ஒரு சிந்தனையையும் தோற்றுவிக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை.

இது எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சம்பந்தரின் 
சித்திரக்கவி  வகைகளில் ஒரு வகையான மாலை மாற்று பதிகம்.
யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா. 

இது தமிழா என்று புருவம் உயர்த்துபவர்களும்  இருக்கலாம்!!.இரு வழி யொக்கும் (Palindrome) சொற்கள்/ சொற்றொடர்களுக்கு உதாரணமாக விகடகவி ,தேரு வருதே ,என்பவற்றை   சொல்லலாம். இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் ஒரே மாதிரி இருக்கும் அமைப்பு.

ஆங்கில உதாரணங்கள் : Malayalam, Madam, civic முதலியன.

இப்படி சொற்களாக, சொற்றொடர்களாக, வாக்கியங்களாக நிறைய இருக்கின்றன.
இப்படி நம்மால் கவிதை எழுத முயற்சிக்க முடியுமா? திருப்பி போட்டு வாசித்தாலும் பொருள் இருக்கணும்!!!.

முதல் பாடலின் பொருள் :

யாமாமா= யாம் கடவுள்களா?

நீ ஆம் ஆம்!= நீ மட்டும் தான் கடவுள் 

மா யாழீ= பெரிய யாழை ஏந்தியவனே

காமா = எல்லாராலும் விரும்பப்படுபவனே


காண் நாகாநாங்கள் பார்க்கும்படி நாகத்தைக் கழுத்தில் அணிந்தவனே.
 நாகம் கூட அமைதியாய் இறைவனின் தோளில் இருக்கிறது.
காணா காமா = காமனை மன்மதனை எரித்து யாரும் பார்க்கமுடியாதபடி செய்தவனே
காழீயாசீர்காழியில் எழுந்தருளும் இறைவனே.


Do not Bring us to The Test  என்று ஒரு கிறிஸ்தவர்கள் ஒரு பிரார்த்தனையை சொல்வார்கள் 
மா மாயா = பெரிய மாயங்களைச்செய்பவனே 
நீ மா மாயா= எங்களை பிற 
சோதனைகளிலிருந்து, மாயைகளிலிருந்து காப்பாற்று  இதுவே பிரார்த்தனை.!


ஒலி வடிவில் கேட்க: 

இலக்கணத்திலும் தமிழ் சொல்வன்மையிலும் சிறந்தவர்களால் மட்டுமே பாடக்கூடிய ஒரு வகை சித்திரக்கவி.இந்த மாலை மாற்று பதிகம் எனப்படும்  பதிகம்.
முழு பதிகமும் இங்கே:

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா.

யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா
யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா.

தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா
மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா.

நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே
மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ.

யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ
வீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா.

மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே
யேனாலாகா லேலாகா ழீதேமேகா போலேமே.

நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே
நேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீ.

நேணவராவிழ யாசைழியே வேகதளேரிய ளாயுழிகா
காழியுளாயரி ளேதகவே யேழிசையாழவி ராவணனே.

காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ
பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா.

வேரியுமேணவ காழியொயே யேனைநிணேமட ளோகரதே
தேரகளோடம ணேநினையே யேயொழிகாவண மேயுரிவே.

நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா
காழியுளானின யேனினயே தாழிசயாதமி ழாகரனே.

Tuesday, September 06, 2016

பூசலார் நாயனார் புராணம்- திருநின்றவூர் (பெரிய புராணம்)

(Pic Courtesy: Dinamalar)
பூசலார் நாயனாரைப்பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா?தன் மனதில் ஈசனுக்கு கோயில் கட்டினார்.
ஒரு சிலர்கோயிலில் இருக்கும் ஒரு சில நிமிடங்கள் கூட  செல்பேசியும் கையுமாக அலைவதைப்பார்க்கிறோம். மனது ஒருமிக்க பிரார்த்தனை செய்வது எல்லாருக்குமா வாய்க்கிறது?
பூசலாரிடம் பணம் இல்லை. ஈசனுக்கு கோயில் கட்ட எண்ணுகிறேன் என்று பொருள் உதவி கேட்டார். யாரும் கொடுக்கவும் இல்லை. தன் மனதில் ஒரு கோயில் கட்ட முடிவெடுத்தார்.
திரு.பாலகுமாரன் பூசலாரைப்பற்றி ஒரு நாவல் எழுதி இருக்கிறார்.

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்க்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவனே சிவலிங்கம்
கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே
என்கிறது திருமந்திரம். இது சொல்வது தான் பூசலாரின் வாழ்க்கை.

மண்ணில் ஒரு  பெரிய கோயில் கட்டினால் எத்தனை நேரமும் உழைப்பும் ஆகுமோ, அதை விட மேலான தவம்!!. தனி ஒருவராக வேறு எந்த எண்ணமும் இல்லாமல், அவர் செய்த பணி; எத்தனை பிரகாரங்கள், எத்தனை சன்னதிகள், எத்தனை கோஷ்ட மூர்த்தங்கள் என்று விரிவான திட்டம். அதை மனதில் ஒன்றன்றாய் செய்து முடிக்கிறார்.இணையில்லாத இறை அன்பு. பக்தியின் உச்ச நிலை அதுவே இறைவனையும் ஈர்த்தது.
காஞ்சியில் ஏகாம்பரேஸ்வரர்  கோயில் கட்டப்படும் நேரம். பல்லவர்களின் சிற்பக்கலை ரசனையைப்பற்றி சொல்லவா வேண்டும் ?
கோயில் பணி முடிந்த நிலையில் பல்லவ மன்னனின் உறக்கத்தில் ஈசன் சொன்னார். " இந்த தேதியில் பூசலார் கட்டிய கோயிலின் குட முழுக்கு. அதனால் நீ எழுப்பும் கோயிலின் குடமுழுக்கின் தேதியை மாற்றுக !".
சரியான நேரத்தில் பூசலாரின் வாழ்வின் மேன்மையை இறைவன் உலக மக்களுக்கு பல்லவ மன்னனின் வழியாக உணர்த்தினார்.

ஊரெல்லாம் தேடி பூசலாரைக்கண்ட மன்னன் ,நீங்கள் எழுப்பிய கோயில் எங்கே என்கிறான். பூசலார் பொருள் இல்லாமையால் தான் மனதினால் முயன்ற கோயிலைப்பற்றி சொல்லுகிறார். பல்லவ மன்னன் அவரின் அருள் வாழ்க்கையை எண்ணி வியந்து, அங்கே ஒரு சிவாலயம் எழுப்பினார்  என்பது வரலாறு.
சென்னையில் உள்ள திருநின்றவூர் இருப்பூர்தி வழியாக எளிதில் செல்ல கூடிய கோயில்.
பூசலாரைப்போல கோயில் கட்ட முடியாவிட்டாலும், அவர் பக்தியில் ஒரு துளி நமக்கு வர வேண்டும் என்று பிரார்த்திக்க வேண்டும்.

இறைவனின் பெயர்: இருதயாலீஸ்வரர்
இறைவியின் பெயர்: மரகதவல்லி
பெரிய புராணம் எளிதால் எல்லாரும் புரிந்து கொள்ளும் வகையில் தான் சேக்கிழாரால் அருளப்பட்டது.


கீழே பூசலாரின் புராணத்தில் இருந்து சில அடிகள்.

தொண்டரைச் சென்று கண்ட மன்னவன் தொழுது 'நீர் இங்கு
எண் திசை யோரும் ஏத்த எடுத்த ஆலயம் தான் யாது ?' இங்கு
அண்டர் நாயகரைத் தாபித்து அருளும் நாள் இன்று என்று உம்மைக்
கண்டு அடி பணிய வந்தேன்; கண் நுதல் அருள் பெற்று' என்றான்.
மன்னவன் உரைப்பக் கேட்ட அன்பர் தாம் மருண்டு நோக்கி,
'என்னை ஓர் பொருளாக் கொண்டே எம்பிரான் அருள் செய்தாரேல்
முன்வரு நிதி இலாமை மனத்தினால் முயன்ற கோயில்
இன்னதாம்' என்று சிந்தித்து எடுத்த வாறு எடுத்துச் சொன்னார்.

Monday, August 08, 2016

கண்ணப்பரின் அன்பும், மணிவாசகரின் சொல்நயமும் ! (எட்டாம் திருமுறை)

திருவாசகத்தை அனுபவித்து படிக்க வேண்டுமானால், நீங்கள் கங்கை புத்தக நிலையத்தின் வெளியீடான திரு.கி.வா.ஜா அவர்களின் திருவாசகம்- சில சிந்தனைகள் என்ற நூலை அவசியம் வாங்கிப்படியுங்கள்.

நாமாக பொழிப்புரை கொண்டு படிப்பதை விட, இந்த புத்தகம் நம் இறைதேடலுக்கு நல்ல வழிகாட்டியாய் இருக்கிறது. ஒரு பாடலை மணிவாசகர் ஏன் அப்படி பாடினார் என்பதான கேள்விகளுக்கும் பதில் கிடைக்கிறது.

மற்ற திருமுறைப்பாடல்களை விட திருவாசகம், மணி வாசகரின் எண்ண ஓட்டத்தினால், அவரின் அடக்கத்தினால், படிக்கும் பக்தர்களுக்கும் அடக்கம் என்னும் பெரும் பண்பை உணர்த்த வல்லது.


தமிழில் எத்தனையோ நூல்கள் இருந்தாலும் கண்டிப்பாக ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய நூல்கள் திருக்குறளும், திருவாசகமும்.

உருகி உருகி அவர் எழுதியதைபடித்து உருகாதவர் யார்?

மாணிக்கவாசகர் பெரும்பொருளை கையாளும் அமைச்சராக இருந்தவர். அவர் இறைவனை நாடி செல்லவில்லை. இறைவன் தன் பெருங்கருணையினால் அவருக்கு குருவாய் உபதேசித்தார்.


முதல் அனுபவத்திற்கு பிறகு அவரின் மனம் குருவாய் வந்த தயாளாரை நினைத்து நினைத்து உருகியது. நமக்கும் திருவாசகம் என்ற நூல் கிடைத்தது.

இந்த பதிவில் நாம் பார்க்க போகும் பாடல் :


கண்ணப்பன் ஒப்பது ஓர் அன்பு இன்மை கண்டபின்,

என் அப்பன், என் ஒப்பு இல் என்னையும் ஆட்கொண்டருளி,
வண்ணப் பணித்து, என்னை `வா' என்ற வான் கருணைச்
சுண்ணப் பொன் நீற்றற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!

Picture Credit:By unknown from Tiruchchirappalli (made) - http://collections.vam.ac.uk/item/O41835/painting-the-hunter-tinnen-or-kannappa/, Public Domain, https://commons.wikimedia.org/w/index.php?curid=14858426

திருமணத்தடை நீங்க, ராகு பரிகார ஸ்தலமாக இருக்கும் காளஹஸ்தி, சென்னையிலிருந்து ஒரு நாளில் சென்று வரக்கூடிய இடம். இங்கு தான் கண்ணப்ப நாயனார் வாழ்ந்தார்.


பஞ்ச பூத தலங்களில் வாயு தலமான காளஹஸ்தியில் கருவறையில் மட்டும் குளிர்ந்த காற்று சுழல்வதை நாம் உணரலாம்.

கண்ணப்பர் வேடுவ குலத்தில் பிறந்தவர். இறைவன் மீது கொண்ட அன்பினால்,தனக்கு தெரிந்த வகையில் பூஜை செய்தார். தாம் வேட்டையாடிய மாமிசத்தை படைத்தார். தன் கொண்டையில் இருந்த பூவை கொண்டு அலங்காரம் செய்தார். தன் வாயில் உள்ள நீரை வைத்து அபிஷேகம் செய்தார். இதை எல்லாம் மறைந்து இருந்து பார்த்த அந்தணர் திகைத்தார். அடுத்தது நடந்தது தான் முக்கியமான பரீட்சை.

சிவனாரின் ஒரு கண்ணில் கண்ணீராக செந்நீர் வழிந்தது. அதிர்ந்த கண்ணப்பர், தன் ஒரு கண்ணை நொண்டி, சிவலிங்கத்தில் வைத்தார். அடுத்த கண்ணிலும் குருதி வழிய தொடங்கியது. 

தன் செருப்பணிந்த கால்களை ஒரு கண்ணில் அடையாளமாக வைத்து, தன் இன்னொரு கண்ணையும் நோண்டி எடுக்க முனைந்தார் கண்ணப்பர். 
நம்மில் பலருக்கு  இறைவன் நமக்கு நல்லது செய்தால் மட்டுமே அவர் இருக்கிறார். நமக்கு வாழ்க்கையில் கொஞ்சம் துன்பங்கள் வந்தால் கூட, கடவுள் என்ற ஒருவர் இருக்கிறாரா என்பதான புலம்பல்கள் ஆரம்பித்து விடும்.

கண்ணப்பரின் அன்பு, இறைவனிடம் எதையும் எதிர்பார்க்காத அன்புக்கு ஒரு மிக சிறந்த உதாரணம்.

தமிழில் பல வகையான தூது இலக்கியங்கள் இருக்கின்றன. நாரை விடு தூது, கிளி விடு தூது முதலியன. 
இன்றைய காலகட்டத்தில் நமக்கு வகை  வகையான தொழில் நுட்பங்கள் இருக்கின்றன.
நம் மனதுக்கு நெருக்கமானவர்கள் வெளியூரில் இருந்தாலும் எளிதில் தொடர்பு கொள்ள முடிகிறது.

 அந்த நாட்களில், மனிதர்களிடம் சொல்ல முடியாத விஷயங்களை,குறிப்பாக பிரிவினால் வரும் துன்பத்தை சொல்ல  தம் மனதைத்தேற்றிக்கொள்ள இவ்வகை பாடல்கள் உதவி இருக்கின்றன.

இங்கே மணிவாசகர் தும்பியை தூது விடுகிறார். 

கண்ணப்பன் ஒப்பது ஓர் அன்பு இன்மை கண்டபின்
கண்ணப்பருக்கு இணையான அன்பு என்னிடத்தில் இல்லை என்று அறிந்தபின்னும் 

என் அப்பன்,என் ஒப்பு இல் என்னையும் ஆட்கொண்டருளி

என் அப்பன், எதனோடும் ஒப்பிட முடியாத என்னையும் ஆட்கொண்டு அருளி
வண்ணப் பணித்து
நன்றாக நினைவில் வையுங்கள். மணிவாசகர் அரசியலில் இருந்தார்; அமைச்சர் பதவியில் இருந்தார். இறை அனுபவம் தானாக அவருக்கு கிடைத்தது. அதனால் எப்படி இருக்க வேண்டும் என்ற வகையையும் இறைவன் எனக்கு சொல்லிக்கொடுத்தான் என்கிறார்.

என்னை `வா' என்ற வான் கருணைச்

சுண்ணப் பொன் நீற்றற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!

என்னைத் தில்லைக்கு வருக என்று அருளிய,  வானளவு கருணையுள்ள  பொடி பூசிய அழகிய திருநீறு அணிந்த சிவனாரிடம் சென்று ஊதுவாய் தும்பியே.

இறைவனைக்காண ஏங்கும் மணிவாசகரின் திருக்கோத்தும்பி பாடல் இது.

மதுரைக்கு சென்றால் அவசியம் திருவாதவூருக்கும் போய் வாருங்கள்.

Sunday, August 07, 2016

ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள !- மகிழ்ச்சியின் மொத்த அனுபவம்

இன்றைய சூழலில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று எந்த மனிதனும் சொல்வது இல்லை.
முன்பு தீபாவளிக்கு வாங்கும் ஒற்றை சேலையில் இருந்த சந்தோஷம் இன்று மாதம் இரண்டு சேலையாவது வாங்குவோருக்கு நிச்சயம் இல்லை.

 துய்ப்பதே இன்பம் என்று நினைத்தோம். ஆனால் நிறைவு என்பது வாழ்க்கையில் இல்லாமல் போய் விட்டது.

மட்டற்ற மகிழ்ச்சியில் இருக்கிறேன் என்பதை எப்படி சொல்வீர்கள்?

மட்டற்ற மகிழ்ச்சி  என்பதற்கு வைரமுத்துவின் மடை திறந்து தாவும் நதி அலை நான் பாடல் தான் ஞாபகம் வருகிறது.

ஆனால் இந்த பாடல் சொல்வதும், அந்த நிமிட சந்தோஷம் தான் .

யாருடைய அழகையாவது  வர்ணிக்க வேண்டுமென்றால், ஆயிரம் கண்கள் வேண்டும் என்கிறோம்.


சுந்தர மூர்த்தி நாயனார் சிதம்பரம் கோயிலுக்கு சென்ற போது, இறைவனின் நடனத்தை எப்படிக்கண்டார்? அவருக்கு ஆயிரம் கண்கள் தேவைப்பட்டதா? மனம் எத்தகைய மகிழ்ச்சியை அனுபவித்தது என்பதை சேக்கிழார் பெருமான் சொல்லும் பெரிய புராணப்பாடல் இதோ.

 ஐந்துபேர் அறிவும் கண்களே கொள்ள
அளப்பரும் கரணங்கள் நான்கும்
சிந்தையே ஆகக் குணம்ஒரு மூன்றும்
திருந்துசாத் துவிகமே ஆக
இந்துவாழ் சடையான் ஆடும்
ஆனந்த எல்லையில் தனிப்பெருங்கூத்தின்
வந்தபேர் இன்ப வெள்ளத்துள் திளைத்து
மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார்.

ஐந்துபேர் அறிவும் கண்களே கொள்ள

மனிதனுக்கு புலன் வழி அறிவுகள் ஐந்து.அவை  கண், மூக்கு, செவி, வாய் மற்றும் மெய் வாயிலாய் இயங்குவன.


காதுகளும், செவிகளும், மூக்கும், மெய்யும், கண்களாக செயல் புரிந்தால் எப்படி இருக்கும்? அதை தான் ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள என்கிறார் சேக்கிழார்.
மனது ஒரு நிலைப்பட்டிருப்பதால், எல்லா புலன்களும் கண்களாக 
செயல்பட்டு இறை அனுபவம் சுந்தரருக்கு கிட்டியது.

அளப்பரும் கரணங்கள் நான்கும்

சிந்தையே ஆக

மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் நான்கும் அந்தக்கரணங்கள் என்று சொல்லப்படுகின்றன. இதில் சித்தம் மட்டுமே செயல்பாட்டில் இருக்க, மனம், புத்தி மற்றும் அகங்காரம் எந்த செயலும் இல்லாமல் அடங்கி இருக்கின்றன. சித்தம் சிவனை மட்டுமே காண்கிறது. 

குணம்ஒரு மூன்றும்
திருந்துசாத் துவிகமே ஆக

ரஜோ குணம், தமோ குணம், சத்துவ குணம் ஆகிய மூன்று குணங்களில், சத்துவ குணமே மேலோங்கி இருக்க.

இந்துவாழ் சடையான் 

சந்திரன் இருக்கின்ற சடையினை உடைய சிவபெருமான் 

ஆடும்
ஆனந்த எல்லையில் தனிப்பெருங்கூத்தின்
வந்தபேர் இன்ப வெள்ளத்துள் திளைத்து

இப்போது தான் திரு.இலங்கை ஜெயராஜ் அவர்களின் ஒரு சொற்பொழிவைக்கேட்டு கொண்டிருந்தேன். தமிழிலே இன்பத்தை சிற்றின்பம், பேரின்பம் என்று பிரித்தார்கள். உலகத்தில் உள்ளவற்றால், நம் புலன்கள் வழி கிடைப்பது சிற்றின்பம். உதாரணத்திற்கு ஒரு பாயசத்தைகுடிக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். இதில் சுவைப்புலன் நாவின் வழி அந்த இன்பத்தை அனுபவிக்கிறது.
பாயசத்தில் உள்ள ஏலம் மூக்கு வழி நுகர் புலனுக்கு இன்பம் தருகிறது.
ஐந்து புலன்களும் இன்பம் அனுபவிக்கிற ஒரு இன்பம் உலகில் உண்டு. அதுவே ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் தருகின்ற இன்பம். ஆனால் இது சிற்றின்பம், உலகில் உள்ள சில பொழுதுகளில் மட்டும் தீரும் இன்பம், 

அனால் இறைவனை அனுபவிக்கிற இன்பம் என்பது, இன்பத்தில் நிலையானதாக இருக்கும். அதில் நாம்  கரையுமாறு இருக்கும் என்றார்.

கண்ணில்லா மனிதர் யானையைபற்றி விளக்குவதாக தான் இருக்கிறது. நான் எழுதும் இவ்வரிகள். 


பேரின்பத்தை அனுபவிக்காத ஒருவர் எப்படி இதை விளக்க முடியும்?

திளைத்து என்ற சொல் இங்கே கவனிக்க தக்கது. சாதாரணமாக வெள்ளத்தில் மாட்டிக்கொள்ளும் ஒரு மனிதன் அதிலிருந்து மீண்டு வெளியில் வர வேண்டும் என்று தான் நினைப்பான். ஆனால் இங்கு இறைவன் தரும் பேரின்ப வெள்ளத்தில் திளைத்து என்கிறார் சேக்கிழார்.

திளைத்து என்ற சொல் மகிழ்ச்சியில் மூழ்கி, இன்னும் இதிலேயே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பதை சுட்டுகிறது.

அதற்கு அடுத்த அடி இன்னும் சுகம். 
மாறிலா மகிழ்ச்சியில் மலர்ந்தார்.

நாம் உலகில் அனுபவிக்கும் எந்த மகிழ்ச்சியும் அடுத்த நிமிஷமோ,நாளோ, மாதமோ மாற கூடியது. மாற்றம் இல்லாத, மகிழ்ச்சியில் இருந்த சுந்தரர், அந்த மகிழ்ச்சியில் தானும் இறைவனின் திருவடித்தாமரையில்  மலர்ந்தார்.

Sunday, July 24, 2016

பாரில் அறங்கள் வளரும், அம்மா!

மங்கைய ராகப் பிறப்பதற்கே - நல்ல
     மாதவஞ் செய்திட வேண்டும், அம்மா!
பங்கயக் கைந்நலம் பார்த்தலவோ - இந்தப்
     பாரில் அறங்கள் வளரும், அம்மா!

இது கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் வரிகள்.

பரவலாக எல்லாருக்கும் முதல் இரண்டு வரிகள் தெரிந்திருக்கும்.
ஒரு குடும்பம் தர்ம வழியில், அறம் சார்ந்த வழியில் செல்ல வேண்டுமானால், அது அந்த வீட்டின் பெண் நினைத்தால் மட்டுமே நடக்கும்.
அதனால் தான் கவிமணி, பெண்ணின் கைநயத்தால் வளரும் அறங்கள் என்றார்.

இந்த பதிவில் நாம் அறம் வளர்த்த நாயகி உடன் உறை ஐயாறப்பர் பற்றிய தேவாரத்தைப்பார்க்க  போகிறோம்.


அப்பர் தன்னுடைய முதிய பருவத்தில் திருக்கைலாய காட்சிக்கு ஏங்குகிறார். கைலை யாத்திரை மேற்கொள்கிறார். இறைவன் அவரை திருவையாறு செல்லுமாறும் அங்கு திருக்கைலாயக்காட்சி காணலாம் என்றும் அனுப்பி வைக்கிறார்.
அரிசிலாறு , வெண்ணாறு , வெட்டாறு , குடமுருட்டியாறு  மற்றும்  காவேரியாறு ஒன்று கூடும் ஊர், திருவையாறு.

ஐந்து ஆறுகள் சேர்ந்தது திரு ஐ ஆறு= திருவையாறு .

இந்த ஊரில் கால் வைத்ததும் எல்லா உயிரினங்களும் ஜோடி ஜோடியாய் அப்பரின் கண்ணுக்குத்தெரிகின்றன. அம்மை அப்பனாய் இறைவன் இருக்கிறார் என்பதற்கும், இல்லறம் என்பதை நம் சைவ பெரியவர்கள் எப்படி மதித்தார்கள் என்பதற்கும், இதுவே நல்ல எடுத்துக்காட்டு.



இந்த பதிகத்தில் ஒவ்வொரு பத்தியின் இறுதியிலும் கண்டறியாதன கண்டேன் என்று வரும்.
அப்பர் சிவபெருமானை மட்டுமே அது வரை பெரிதாய் வழிபட்டவர். அவருக்கு இறைவன், அம்மையும் அப்பனும் வேறல்ல என்று அவர் இது வரை காணாத உண்மையை சொல்கிறார்.
தண்மதிக் கண்ணியினானைத் தையல் நல்லாளொடும் பாடி
உண்மெலி சிந்தையானாகி உணரா உருகா வருவேன்
அண்ணல் அமர்ந்து உறைகின்ற ஐயாறு அடைகின்ற போது
வண்ணப் பகன்றிலொடாடி வைகி வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்.

தண்மதி= குளிர்ந்த நிலவு.

அன்றில் பறவை தன் இணை இல்லாமல் உயிர் வாழாது. அந்த அன்றில் பறவை, தன் இணையோடு தன் எதிர் வந்ததாக சொல்கிறார் அப்பர்.

தண்மதிக் கண்ணியினானைத்

குளிர்ந்த சந்திரனது தனது சடையில் அணிந்து கொண்ட சிவபிரானை

தையல் நல்லாளொடும் பாடி

பெண்களில் சிறந்தவளாகிய உமை அம்மையுடன் இணைத்துப் பாடியபடியே
(பெண்களில் நல்லவள் அதனால் தானே அம்மையின் பெயர் அறம் வளர்த்த நாயகி.)


உண்மெலி சிந்தையானாகி உணரா உருகா வருவேன்
குழைந்த உள்ளத்துடன் 
சிவபிரானது திருவடிச் சிறப்பினை உணர்ந்து உருகி வந்த நான் திருவையாறு தலத்தினை அடைந்தேன்

அண்ணல் அமர்ந்து உறைகின்ற ஐயாறு அடைகின்ற போது

தலைவனாகிய சிவபெருமான் அமர்ந்திருக்கும் திருவையாற்றை அடையும்போது 
வண்ணப் பகன்றிலொடாடி வைகி வருவன கண்டேன்

அழகிய வண்ணமுடைய அன்றில் பறவை தனது துணையுடன் இணைந்து வரும் கோலத்தினைக் கண்டேன்

கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்.

அந்தக் கோலத்தினைக் கண்ட எனக்கு சிவபிரானும் பார்வதி தேவியும் இணைந்து வருவது போல் தோன்றியது. மேலும் அந்தக் கோலத்தினில் நான், சிவபிரானின் திருப்பாதங்களையும் கண்டேன். அத்தகைய காட்சியினை நான் இதற்கு முன்னர் கண்டதில்லை.

தஞ்சாவூரிலிருந்து  12 கிலோமீட்டர்  தொலைவில் உள்ள  தலம். வாய்ப்பு இருந்தால் நிச்சயம் சென்று வாருங்கள். அருகில் தியாகராஜரின் சமாதியையும் காணலாம். இயற்கை அழகு உடைய ஊர்.

நமக்கும்  திருக்கைலாய  காட்சி  திருவருளால் கிடைக்கட்டும்  !