Monday, December 29, 2014

மனத்துணை நாதர் (திருவலிவலம்)- அப்பர் தேவாரம்

பெண்ணவன் காண் ஆணவன் காண் பெரியோர்க்கென்றும்
பெரியவன் காண் அரியவன் காண் அயனானான் காண்
எண்ணவன் காண் எழுத்தவன் காண் இன்பக்கேள்வி
இசையவன் காண் இயலவன் காண் எல்லாங் காணுங்
கண்ணவன் காண் கருத்தவன் காண் கழிந்தோர் செல்லுங்
கதியவன் காண் கருத்தவன் காண் கழிந்தோர் செல்லுங்
மண்ணவன் காண் வானவர்கள் வணங்கி யேத்தும்
வலிவலத்தான் காண் அவன் என் மனத்துளானே.
                                            (புகைப்பட உதவி: ஆலய வாணி)

பல சிவாலயங்களில் இறைவனின் பெயரே மனதிற்கு நிம்மதி அளிக்கிறது.
திருப்பாதிரிப்புலியூர் சிவனாரின் பெயர்- தோன்றாத்துணை நாதர்.

இம்மாதிரி பெயர்கள் (சிவ நாமங்கள்) "தெய்வம் நமக்குத்துணை பாப்பா- ஒரு தீங்கு வரமாட்டாது பாப்பா "என்ற பாரதியாரின் வரிகளை முன்னிறுத்துகின்றன.

இறைவனை பல வடிவங்களிலும், வகைகளிலும் கண்டார் அப்பர் பெருமான்.

இந்தப்பாடலிலும் எண், எழுத்து, இசை முதலியவாக இருக்கிறார் இறைவன் என்கிறார்.

பெண்ணாகவும், ஆணாகவும், பெரியவர்களுக்கு எல்லாம் பெரியவனாகவும், அயன்(பிரம்மா), அரியாகவும் (விஷ்ணு)  இறைவனைக்காண்கிறார்.
கண்டேன் அவர் திருப்பாதம்- கண்டறியாதன கண்டேன் என்ற திருவையாறு தேவாரத்தில், காணுகிற உயிர்கள் அனைத்தும் அதன் இணையோடு வர- ஆணாகவும், பெண்ணாகவும் இருப்பவர் சிவனே எனத்தெளிந்தார்.

இந்தத் தேவாரமும் அப்பர் பெருமான் கண்கள் காணுகின்ற பலவற்றிலும், காணாத மனம் உணர்கிற பலவற்றிலும், இறைவனே இருப்பதாய் சொல்கிறார்.

இந்த மண்ணில் வாழ்வோர் சென்றடையும் கதியாகவும், அவர்கள் உடல் சென்றடையும் நிலமாகவும் இருக்கிறார் இறைவன்.

உயிரற்ற உடலுக்கும், உயிரான ஜீவனுக்குமான கதியாய் நிற்கிறார்;
வானவர்களும்  வணங்கும் வலிவலம் மேவிய- மனத்துணை நாதர்!




Friday, November 14, 2014

திருமந்திரம் அறிவோம்!

2014 தொடக்கத்திலிருந்து, ஒரு கையேட்டில், அழகான, ஆழமான பொருள் கொண்ட பாடல்களைத்தேடி எழுதி வைக்கலானேன்.

இறையருளால், இம்முயற்சி அழகாக கை வரப்பெற்றது.

பல பதிகங்களும், திருமந்திரம், வள்ளலார் பாடல்கள், தாயுமானவர் பாடல்கள், குற்றாலக்குறவஞ்சி, பிரப்பந்தம் முதலியவற்றிலிருந்து, எனக்குப் பல புதிய (#100) பாடல்கள்  அறிமுகம் ஆயின.

புத்தாண்டின் தொடக்கத்தில் எடுக்கும் புதிய தீர்மானங்களில், இது போன்ற தீர்மானங்களால், நமக்கு,பலன்கள் பல.

தேடித்தேடிப்படிக்கத்தூண்டுவதால்,  நல்ல உற்சாகம் தரும் முயற்சி இது; இறையருளை நாடி மனம் பயணிக்க உதவுகிறது; எளிதில் மனம் ஒன்றுகிறது.

என் திருமுறை ஆசிரியர், திரு.மா. கோடிலிங்கம் ,கடந்த முறை பார்த்த போது பல புத்தகங்களைத்தந்தார்.அந்த புத்தகங்களும், சைவம், மதுரை மின் தொகுப்புப்பக்கங்களும், இதற்கு, மிக மிக உதவின.

இந்த தொகுப்பை, தினசரி வழிபாட்டுக்கு என வைத்துக்கொண்டுள்ளேன். சிற்றுந்திலோ, மின் தொடர் வண்டியிலோ போகும் போதும், படித்துக்கொண்டே செல்லலாம்.

திருமந்திரத்திலிருந்து ஒரு பாடல் இங்கே!இந்த பாடல், எல்லோரும் வாழ்க்கையில் கடைப்பிக்க வேண்டிய நல்ல செயல்களை நினைவு படுத்துகிறது.

யாவர்க்குமாம் இறைவர்கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுரை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே

நான்கு அடிகளுமே, நாலு விதமான அறங்களை வலியுறுத்துகின்றன. 1.இறைத்தொண்டு,
2.ஜீவகாருண்யம்,
3. மனித நேயம்
4.இனியவை கூறல்,

இன்னொரு வகையில் பார்த்தால், 2-4  அடிகளில் உள்ள அறங்களைக்கடைப்பிடித்தால்,இறைவன், உங்கள் அருகில் இருப்பார்; ஒரு சிறு இலையை சமர்ப்பித்து வழிபட்டால் போதும்.

1.கிருஷ்ணர் கீதையில் சொல்கிறார்- "ஒரு பக்தன் உண்மையான பக்தியோடு, ஒரு இலையோ, ஒரு பூவோ, கனியோ, தண்ணீரோ சமர்ப்பித்தாலும், அதை நான் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறேன்".

அதே பொருளை நினைவுப்படுத்துகிறது, முதல் அடி!

2."பசுவிற்கு வாயுரை- அது உண்ண புல் போன்ற உணவு ஒரு வாய் அளவேனும் தாருங்கள்.".பசுவை பேணிக்காப்பது நம் பெரியவர்கள் காட்டும் நெறிமுறையே.

3."ஐயமிட்டு உண் என்கிறது ஆத்திசூடி":-யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி.
உண்ணும்போது, ஒரு கைப்பிடியாவது, பிறருக்குக்கொடுத்து உண்ணுங்கள்;
அவ்வைப்பாட்டியும், வள்ளுவரும், சொன்ன மொழியே இது.

4.பாரதியார்- நிதி மிகுந்தோர் பொற்குவை தாரீர்; இல்லை என்றோர்- இன்சொல் அருளீர் என்றார்.

யாராவது துன்பப்பட்டால், அவர்களுக்கு, ஆறுதலால், இன்மொழி சொல்லுங்கள்.
இன்சொல் மனதில் சோர்வை நீக்கும்;மனதில் தெம்பை அளிக்கும்.
இனியவை கூறல் என்றே ஒரு அதிகாரம் வைத்தார் திருவள்ளுவர். இன்றைய நவீன மேலாண்மை கொள்கைகளும் இதையே தான் வலியுறுத்துகின்றன.

Saturday, June 14, 2014

The Great Brahadeeswaram- Thanjavur Big Temple that has crossed 1000 years....


தஞ்சாவூர் பெருவுடையார் கோவில் (Brihadeswara Temple, Thanjavur), 1000 ஆண்டுகளைக் கடந்து, வானளாவி நிற்கும் நிறைஅழகு அதிசயம் ;

தமிழர் நாகரீகத்தின் உச்சத்தை பறைசாற்றும், இந்தக்கோயில்- ஒவ்வொருவரும்,

கண்ணாரக் கண்டும், கையாரக்கூப்பியும், எண்ணார எண்ணத்தால், எண்ணியும், இன்புற வேண்டிய ஒரு சிவாலயம்.

ராஜராஜ சோழர், தேவாரப்பாடல்களைத்தேடி, நம்பியாண்டார் நம்பியின் துணையோடு, திருமுறைகளாய்த்தொகுத்து, நமக்கு தந்தார்.அவர் இறையன்பில், எழுப்பிய சிவாலயம் இது.

வாயிலார் நாயனார், மனதில் சிவாலயம் எழுப்பினார்; ராஜ ராஜ சோழர், தம் மக்களையும், கருவூலத்தையும் கொண்டு, சிவாலயத்தை, உலகில் அமைத்தார்.

இலங்கையின், பெரிய புத்தர் சிலைகளையும், விகாரங்களையும், கண்டு, அதைப்போல பெரிய கோயிலாய்,பொன்னியின் செல்வர், அமைத்தார்.

"இறைவன் எவ்வளவு பெரியவன்"

என்று, எத்தனை சாதாரணமான மனிதர்களுக்கும், சொல்லாமல் சொல்லும் இந்த அழகிய கற்றளி:-

"ஒரு சின்னமலையோ, மடுவோ இல்லாத தஞ்சைப்பகுதியில்", 60 கிலோமீட்டர் தூரத்திலிருந்து, கருங்கற்களைக்கொண்டு வந்து, கணக்கிலடங்காத சிற்பங்களுடனும், ஓவியங்களுடன், சிவபெருமானுக்கு, மிகுந்த அன்புடன், ராஜராஜ சோழரால், கட்டித்தரப்பட்ட வீடாகும்.

மிக துல்லியமான வடிவியல் கணக்கீடுகளைக்கொண்டு,அமைத்து, ஆகம விதிப்படிக்கட்டப்பட்ட இக்கோயில், சோழர்கள் காலத்தில், முக்கிய அரசு விழாக்கள், நடக்குமிடமாக இருந்திருக்கிறது.

(பட உதவி: விக்கிபீடியா)

இந்த கோயிலின் பல சிறப்புகளில், எனக்கு தெரிந்த சில:

1.கருவறை மேலுள்ள விமானம்,  216 அடி உயரமுள்ளது. முன் கோபுரம், 30 அடி உயரமே உடையது. கருவறை மேலுள்ள விமானம் மிக உயரமாய் இருப்பது இந்த கோயிலின் சிறப்பு. இந்த கோயிலின் கருவறை கோபுரத்தின் நிழல் தரையில் விழாது
2.கோபுரக்கலசம், 80 டன் எடையினாலான ஒரே கல்லில் ஆனது.
3.இந்த கோயிலின் நந்தி, 16 அடி நீளமும், 13 அடி உயரமும் உடையது. ஒரே கல்லில், செதுக்கப்பட்டது.
4.கோயிலின், முதல் தளத்தில், பரத நாட்டியத்தின் 81  முத்திரைகளை  விளக்கும், சிற்பங்கள் உள்ளன.

தஞ்சை கோவிலை பற்றி தேவாரப்பாடல்கள் இல்லை. ஏனெனில் இந்த கோயில், தேவார மூவர் காலத்திற்கு பின்னரே கட்டப்பட்டது.

 சூரியன் உள்ள வரை, சிவபெருமானின், பெருமையையும், சோழரின், புகழையும், முன்னிறுத்தும், இராஜ இராஜேசுவரம்.இதன் அழகைப்பாடினார் கருவூர் தேவர்.இவர், ராஜராஜ சோழரின் குரு; பதினெண் சித்தர்களில், ஒருவரான கருவூர் தேவருக்கும், இந்தக்கோயிலில், சன்னதி இருக்கிறது.

கருவூர் தேவர் தஞ்சை பெரிய கோயிலைப்பற்றி பாடிய பாடல்கள், ஒன்பதாம் திருமுறையில் உள்ளன.

அவற்றில் ஒரு பாடலை இங்கு கொடுத்துள்ளேன்.

உலகெலாம் தொழ வந்து எழு கதிர்ப்பரிதி
ஒன்று நூறாயிர கோடி
அலகெலாம் பொதிந்த திருவுடம்பு அச்சோ
அங்ஙனே அழகிதோ 
அரணம்
பலகுலாம் படைசெய் நெடுநிலை மாடம்
பருவரை ஞாங்கர்வெண் திங்கள்
இலைகுலாம் பதணத் திஞ்சிசூழ் தஞ்சை
இராசராசேச்சரத்து இவர்க்கே.

எத்தனை அழகு இந்த கோயில்?
(பரிதி= சூரியன்;அரணம் = கோட்டை; பருவரை=பெரிய மலை;
இஞ்சி= கோட்டை;ஞாங்கர்=சூரியன்)

உலகம் என்பது ஒரு மங்கல சொல்; பெரிய புராணமும் உலகெலாம் என்றே தொடங்குகிறது.

உலகெலாம் தொழ வந்து, ஒன்று நூறாயிர கோடி,எழு கதிர்ப்பரிதி
அலகெலாம் பொதிந்த திருவுடம்பு அச்சோ
அங்ஙனே அழகிதோ 

ஒரு 100,000 கோடி சூரியன்கள், உலகம் தொழ எழுந்தால், அந்த ஒளி எப்படி இருக்குமோ அப்படி ஒரு பேரழகாம், இராஜ ராஜேசுவரத்தில், உள்ள சிவன்.

பலஅரணம்,குலாம்
 படைசெய் நெடுநிலை மாடம்
பருவரை ஞாங்கர்வெண் திங்கள்
இலைகுலாம் பதணத் திஞ்சிசூழ் தஞ்சை
இராசராசேச்சரத்து இவர்க்கே.

கோயிலின் அழகு எப்படி?தஞ்சையின் அழகு எப்படி?


கோட்டைகள் பல; அழகிய, பெரும்பொருள் கொண்டு எழுப்பப்பட்ட எழு நிலை மாடங்கள் இருக்கின்றன. அந்த மாடங்களின் மேற்பகுதியில், வெள்ளித்தகடுகள் பதிக்கப்பட்டு இருக்கின்றன.அந்த தகடுகள், ஒரு பெரிய மலையின், மேல் சந்திரன் தவழ்வது போன்றே இருக்கிறது.இப்படிப்பட்ட அழகான கோட்டைகள் சூழ்ந்தது தஞ்சை.அங்கு கோயில் கொண்டுள்ளார், சிவனார்.

இந்த பதிவு நம்மை இன்னும் பல முறை தஞ்சைக்கோயிலை நோக்கிப்பயணிக்கத்தூண்டுமென்று நம்புகிறேன்!!!

Wednesday, March 12, 2014

அப்பரின் அரிய பதிகங்கள்- ஒரு பார்வை (1)

தேவாரப்பாடல்கள், ஓதுவாமூர்த்திகளாலும், இறையன்பர்களாலும், ஓதப்பெற்றாலும், எல்லா தேவாரப்பதிகங்களும், மக்களை சென்றடைவதில்லை.

மிக எளிமையாய், அன்பின் உருவாய், உழவாரப்பணி செய்து, இறைப்பணியில், உயர்ந்தவர் திரு நாவுக்கரசர் (அப்பர் பெருமான்).

அவரது பாடல்களில், பலரும் அறிந்தது - "மாசில் வீணையும் மாலை மதியமும்" எனும் பாடலும், என் கடன் பணி செய்து கிடப்பதே எனும் வரிகளும், "கூற்றாயின வாறு விலக்ககலீர்" எனும் பதிகம் முதலியன.

தமிழ் மீது ஆர்வமுள்ளவர்கள், தேவாரப்பதிகங்களை மனம் ஊன்றிப்படித்தால்,சொல் வளமும், சொல்லாற்றலும், வளரும்.
அப்பரின் தேவாரப்பாடல்கள் குறித்த ஆய்வுக்கட்டுரைகளைப்படித்துக்கொண்டிருந்தேன்.

கீழ்காணும் அப்பரின் பதிகத்தைப்பாருங்கள்!

ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே
அடக்குவித்தால் ஆர் ஒருவர் அடங்காதாரே
 ஓட்டுவித்தால் ஆர் ஒருவர் ஓடாதாரே
உருகுவித்தால் ஆர் ஒருவர் உருகாதாரே

பாட்டுவித்தால் ஆர் ஒருவர்  பாடாதாரே
பணிவித்தால் ஆர் ஒருவர் பணியாதாரே
காட்டுவித்தால் ஆர் ஒருவர் காணாதாரே
காண்பார் ஆர் கண்ணுதலாய் காட்டாங்காலே

இந்தப்பாடலின் முதல் வரியைத்தான், கவிஞர் கண்ணதாசன், திரைப்பாடலில், பயன்படுத்தி இருக்கிறார்.

செந்தமிழும் நாப்பழக்கம் இல்லையா? நல்ல தமிழ் ஆளுமை, படித்தால் தானே வரும்,
இது போன்ற எடுத்துக்காட்டுகள் என் போன்ற தமிழ் மாணவர்களை, ஊக்கப்படுத்தும் என நம்புகிறேன்!

தமிழை ஆழமாக படித்து, அதன் இன்பத்தை நுகர்வோம்; பிறருக்கும் பகிர்வோம்