Saturday, December 31, 2016

கையில் கைபேசியுடன் கைக்கூப்பினர் ஒரு பால்!- கோவிலுக்குள் எப்படி இருக்க வேண்டும்?


இந்தியாவில் மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் தற்கொலைகள் குறைவு. மனதில் எதிர்மறை சிந்தனைகள் அதிகம் இருந்தாலோ, மனதளவில் ஊக்கம் குறைவாக இருந்தாலோ, கோயிலுக்கு சென்று வந்தால், நம் மனம் தானாய் அமைதி அடைவதைப்பார்க்கலாம்.

ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பது அவ்வையின் மொழி.
ஆ- மனது; லயம்- ஒருமித்தல். மனது ஒருமிக்கும் இடம் ஆலயம்.
சமீபத்தில் ஒரு நாள் கோயிலுக்கு சென்ற பொது, அன்றைய அபிஷேக உபாயதாரர், முழுக்க முழுக்க தன் கைப்பேசியில் பேசுவதும், ஆலயக்கருவறைகளைக்கைப்பேசியில் படம் எடுப்பதுமாக இருந்தார்.

உண்மையில் மனக்கண்ணில் இறைவன் உள்ளே இருக்க வேண்டுமென்றால் எப்படி நம் நடத்தை இருக்க வேண்டும்?
மாணிக்கவாசகர் சிவபுராணத்தில் சொல்வார், ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே!
இறைவன் தன்னை ஆராயாதவர்கள், எண்ணாதவர்கள் உள்ளத்தில் ஒளிந்து தான் இருக்கிறார்.



(இந்த பதிவில் படங்களில் அணி சேர்ப்பது,  சமீபத்தில் குடமுழுக்கு கண்ட சிங்கப்பூர் சிவ துர்கா ஆலயம்.)

இன் இசை வீணையர், யாழினர், ஒருபால்; இருக்கொடு தோத்திரம் இயம்பினர், ஒருபால்;
துன்னிய பிணை மலர்க் கையினர், ஒருபால்; தொழுகையர், அழுகையர்,துவள்கையர், ஒருபால்;
சென்னியில் அஞ்சலி கூப்பினர், ஒருபால். திருப்பெருந்துறை உறை சிவபெருமானே!
என்னையும் ஆண்டுகொண்டு, இன் அருள் புரியும் எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே!

இந்த பாடல் மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளி எழுச்சியில் இருக்கிறது.
பக்தர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் கோயிலில் இருக்கிறார்கள். ஒரு சிலர் கையில் இசை வாத்தியங்களோடு இருக்கின்றனர்; இன்னும் சிலர், தோத்திரங்களை சொல்லியபடி இருக்கின்றனர்; இன்னும் சிலர்- துன்னிய (நெருக்கமாக தொடுத்த), மலர் சரங்களோடு இருக்கின்றனர். இன்னும் சிலர் இறைவனை எண்ணி தொழுகின்றனர். ஒரு சிலர் உணர்ச்சி மேலிட்டு அழுகிறார்கள். இது பக்தியின் இன்னொரு உச்சம். இன்னும் சிலர், இறைவனுக்கு முன்னால் நாம் எத்தனை சிறியவர்கள் என்று எண்ணி அடக்கத்தால் துவண்டு நிற்கின்றனர். இன்னும் சிலரோ, கைகளைதலைக்கு மேல் தூக்கி, இறைவனை துதிக்கின்றனர். திருப்பெருந்துறையில் உள்ள ஆத்மநாதர், அனைவரின் ஆத்மாவையும் அறிவார். அவரை எழுந்திருக்க அன்பர்கள் வேண்டுகின்றனர்.


புது வருடம் பிறக்கப்போகிறது. புதிதாய் நிறைய நல்ல பழக்கங்களை ஆரம்பிக்க வேண்டும் என்று நினைப்போம். உடற்பயிற்சி, மனப்பயிற்சி எல்லாம் தான். அதோடு சேர்ந்து, இனி ஆலயங்களில் கைப்பேசியை வெளியே எடுப்பதில்லை என்பதையும் சேர்த்துக்கொள்வோம்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் !!!!

Tuesday, December 27, 2016

திருகலாகிய சிந்தை திருத்தலாம்!- திருமருகல் அப்பர் தேவாரம்

பெருகலாம் தவம் பேதைமை தீரலாம்
திருகலாகிய சிந்தை திருத்தலாம்
பருகலாம் பரமாயதோர் ஆனந்தம்
மருகலானடி வாழ்த்தி வணங்கவே!- அப்பர் தேவாரம் 


ஒரு காலத்தில் தமிழ் பாடல்கள் இல்லாமல் தான் கர்நாடக சங்கீத மேடைகள் இருந்தன. இன்று உள்ள சூழல் முற்றிலும் வேறு.
புது புது பாடல்களைத்தேடி தமிழிசைக்கு என்று ஆசையாய் மேடை ஏற்றும் சூழல் நிச்சயம் வரவேற்புக்குரியது.

சில நாட்களுக்கு முன்னர் திரு.விஜய் சிவா அவர்களின் திருமுறை இசை வட்டைக்கேட்க நேர்ந்தது. அதில் இந்த தேவாரமும் ஒன்று.


அபிராமி அம்மையை துதிப்பதால் என்ன கிடைக்கும் என்று அபிராமி பட்டர் சொல்வார்
தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே

இதை அம்மையை நினைத்து தொழுபவர்களுக்கு கிடைக்கும் பலன்களாகவும் பார்க்கலாம்.  அம்மா, தனம் தா, கல்வி தா, அழகான தெய்வ வடிவான தோற்றத்தைத்தா,நெஞ்சில் வஞ்சனையில்லாத நல்ல உறவுகளைத்தா, நல்லன எல்லாம் தா என்னும் பிரார்த்தனையாகவும் பார்க்கலாம். 


ஒரு பக்கம் ஏழையாக இருப்பவர்கள்  அடுத்தவர்  பொருள் கையில் கிடைத்தால் , காவல்  நிலையத்தில்  கொடுப்பதையும் , மறுப்பக்கம்  எத்தனை கோடி கோடியாய் பணம் இருந்தாலும், பேராசை தீராமல் , தன் அதிகாரத்தை  பயன்படுத்தி ஊர்  காசைக்கொள்ளையடிக்கும்  கூட்டத்தையும் பார்க்கிறோம்.
இவர்களில்  யாருக்கு  நிம்மதியான  உறக்கம்  இருக்கும் ? மனதில் கலக்கம்  இல்லாத  பொழுதுகள்  விடியும்? 



இந்த பதிகத்தில் நான்காவது பாடலிலிருந்து அகப்பொருளாய், ஒரு தலைவி திருமருகல் பெருமானை நினைத்து மருகுவதாய் பாடி இருக்கிறார் அப்பர் பெருமான்.

திருமருகல் நாகபட்டினத்திற்கு அருகே உள்ளது. 
இந்த தலத்தின் வரலாற்றில்,திருமணம் செய்து கொள்ள எண்ணி வீட்டை விட்டு வெளியேறியவர்கள் திருமருகல் வந்தவுடன், மணமகனை பாம்புக்கடித்து அவன் இறந்து விடுகிறான்.

இனி என்ன செய்வது என்று தெரியாமல் அலறித்துடித்த பெண்ணைத்தேற்றி, மணமகனை உயிரோடு எழுப்பினார் திருஞான சம்பந்தப்பெருமான். தேவார மூவர் மூன்று பேரின் வரலாற்றிலும் இப்படி விதி முடிந்தவர்களை மீண்டும் எழசெய்த அற்புதங்கள் உண்டு.

அப்பர் பெருமான் இந்தத் தலத்தின் வரலாற்றை எண்ணியே அகப்பொருளில் இந்த பதிகத்தின் பல பாடல்களைப்பாடி இருக்க வேண்டும். 


திருமருகல் பெருமானை நினைப்பவருக்கு தவம் பெருகும்; பிறப்பெனும் பேதைமை நீங்கும், இறைவனடி சேருகின்ற பேறு கிடைக்கும்.


புத்தி கோணலாய், நேர்வழியில் செல்லாதவர்கள் மனம் திருந்தும். 

பரமானந்தம் என்னும் தேன் பருகக்கிடைக்கும். 
பருகலாம், பெருக்கலாம் என்று ஆம் விகுதி சேர்த்து சொல்லி இருப்பதால், படிப்பவர்கள் ஒரு வேளைக்கிடைக்கலாம் என்பதாய் அர்த்தம் கொள்ள தேவை இல்லை. இது நிச்சயம் திருமருகல் பெருமானை வணங்கி, வாழ்த்துவதால் வரும் பயன்களாம்.



Monday, November 14, 2016

என் மனத்தே வைத்தேனே!-அப்பர் தேவாரம்

இன்று ஐப்பசி மாத பௌர்ணமி. எல்லா சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடக்கிறது.பல வருடங்களுக்கு பிறகு இன்றைய பௌர்ணமி நிலா மிகபெரியதாய்,பூமிக்கு அருகில் நம்மைப்பார்க்க, சிவனாரின் தலையில் இருந்து அருகில் வந்திருக்கிறது.



இந்த பதிவில் ஒரு சில அப்பர் தேவாரங்களைப்பார்க்கலாம்.
திருமீயச்சூர் என்னும் தலம் கும்பகோணத்துக்கு பக்கத்தில் இருக்கிறது. இங்கு தான் முதல் முதலில் லலிதா சஹஸ்ரநாமம் உருவானது. இந்த தலத்தில் அப்பர் பெருமான் பாடிய பாடலில், சொல்லாய் மட்டும் இருக்கிறது நிலா.

ஊனில் ஆவி உயிர்க்கும் பொழுதெலாம்
நான்நி லாவி யிருப்பனென் னாதனைத்
தேன்நி லாவிய சிற்றம் பலவனார்
வான்நி லாவி யிருக்கவும் வைப்பரே


இந்தப்பாடலின் பொருள் :
என் உடலில் உயிர் இயங்கும் பொழுதில் எல்லாம், நான் என் தலைவராகிய சிவனாரையே எண்ணிக்கொண்டிருப்பேன். இன்பத்தேன் விளங்கிய சிவபெருமான் என்னை என்றும் பேரின்ப வீட்டில் நிலைப்பெறுமாறு வைத்திடுவார். 

(திருமீயச்சூர் கோயில் கோபுரம் - பட உதவி- http://jaisspritualonlinejourney.blogspot.sg/)

ஆசையை அடக்கி நல்வழியில் இருப்பவருக்கு நிச்சயம் வீடுபேறு வாய்க்கும் என்று சொல்லும் நாலடியார் செய்யுள் இது.

மெய்வாய்கண் மூக்குச் செவியெனப் பேர்பெற்ற
ஐவாய வேட்கை அவாவினைக் - கைவாய்
கலங்காமற் காத்துய்க்கும் ஆற்ற லுடையான்
விலங்காது வீடு பெறும்.

சிவபெருமானையே எண்ணி இருக்கும் அப்பர் பெருமான் நிச்சயம் என்றும் நிலைபெற்று இருக்கும் பேறு பெற்றுள்ளார்.

அப்பர் பெருமானின் அன்பில் இன்னொரு தேவாரம், திருக்கச்சிஏகம்பம் தலப்பாடல்.

தேனோக்குங் கிளிமழலை யுமைகேள்வன் செழும்பவளம்
தானோக்குந் திருமேனி தழலுருவாஞ் சங்கரனை
வானோக்கும் வளர்மதிசேர் சடையானை வானோர்க்கும்
ஏனோர்க்கும் பெருமானை யென்மனத்தே வைத்தேனே 


காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில், பஞ்சபூத தலங்களில் ஒன்று. காமாட்சி அம்மை, சிவபெருமானை மணல் லிங்கமாய் செய்து பூஜித்த இடம். அம்மையின் அன்பில் இருக்கும் சிவனாருக்கு, தழுவ குழைந்த நாதர் என்னும் பெயரும் உண்டு. 

இந்தப்பாடலின் தொடக்க அடி- அம்மையைப்பற்றியதாய் இருப்பது இன்னும் சிறப்பு. 

தேனோக்குங் கிளிமழலை யுமைகேள்வன்: தேனைபோல, கிளி மொழியில் அழகான மழலை மொழி பேசும் அம்பிகையின் கணவர் 

செழும்பவளம்
தானோக்குந் திருமேனி -பவளம் போன்ற நிறம் உடையவர்;
தழலுருவாஞ் சங்கரனை- நெருப்பைப்போன்ற எல்லாருக்கும் நன்மைகளை மட்டுமே செய்யக்கூடியவர்.

வானோக்கும் வளர்மதிசேர் சடையானை-சிவந்த வானத்தை போல இருக்கும் சடையில்,பிறை நிலவை சூடி இருக்கிறார்.

வானோர்க்கும்
ஏனோர்க்கும் பெருமானை-தேவர்களுக்கும் மற்றவர்களுக்கும் தலைவனாய் இருப்பவனை, என் மனதில் வைத்தேனே !.

அன்போடு இறைவனை மனதில் வைக்க வேண்டும். வைத்தால், இங்கு வாழும் வாழ்க்கையில் உள்ள இன்ப துன்பங்களைத்தாங்கும் வலிமையையும் கிடைக்கும். வீடு பேறாகிய, பிறவா வரத்தையும் பெறலாம். 






Sunday, September 18, 2016

பெரியவா ! திருச்சாட்டியக்குடி (திருவிசைப்பா -ஒன்பதாம் திருமுறை )

பெரியவா ! கருணை இளநிலா வெறிக்கும்
   பிறைதவழ் சடைமொழுப் பவிழ்ந்து
சரியுமா சுழியம் குழைமிளிர்ந் திருபால்
   தாழ்ந்தவா காதுகள் ! கண்டம்
கரியவா ! தாமும் செய்யவாய் முறுவல்
   காட்டுமா ! சாட்டியக் குடியார்
இருகைகூம் பினகண் டலர்ந்தவா முகம் ! ஏழ்
   இருக்கையில் இருந்தஈ சனுக்கே.        

இந்த பதிவில் நாம் பார்க்க போவது ஒன்பதாம் திருமுறையில் உள்ள திருவிசைப்பா பாடல். இது ராஜராஜசோழரின் குருவான கருவூர் தேவர் அருளியது.நேராக வாசித்தால் எளிதில் கருவூர் தேவரின் பாடல்களின் பொருள் புரியவில்லை.வார்த்தைகளில் வித விதமான கோர்வை நயம்

பாடலின் பொருள் தம்மை நோக்கி கைக்கூப்பிய   திருச்சாட்டியக்குடி மக்களைப்பார்த்து இறைவன் முறுவலித்தார் என்பதே.
திருச்சாட்டியக்குடி திருத்துறைப்பூண்டிக்கு  அருகில் இருக்கிறது.
எனக்கு இந்த பாடலின் முதல் சொல்லைப்பார்த்ததும் காஞ்சி பெரியவரின் நினைவு வந்தது. நம் தாய்தந்தையர் பலரும் தரிசனம் செய்த மகான் காஞ்சி பெரியவர்.


ஏழ்   இருக்கையில் இருந்த ஈசனுக்கே: ஏழு நிலைகள்   உடைய திருச்சாட்டியக்குடி கோயிலில் வீற்றிருக்கும் ஈசனுக்கு
கருணை பெரியவா :கருணை ஒன்று, அதனால் விளையும் பயன்கள் பல. அதனால் சொல் எச்சமாக கருணை பெரியவா என்றார் கருவூர் தேவர்.


இளநிலா வெறிக்கும்
   பிறைதவழ் சடைமொழுப் பவிழ்ந்து
சரியுமா சுழியம் குழைமிளிர்ந் திருபால்    தாழ்ந்தவா காதுகள்: 


மொழுப்பு-முடி.   சுழி  அம்  குழை-வளைந்த  அழகிய    குண்டலம்.


இறைவனின் தலையில் தவழும் பிறையால் ஒரு சிறு ஒளி தவழ்கிறது.சடையில் உள்ள முடிகள் அவிழ்ந்து சரிந்து இருக்கின்றன. காதுகளில் வளைந்த அழகிய குண்டலங்கள் தாழ்வாக தொங்குகின்றன.
கண்டம்
கரியவா: தொண்டையில் ஆலகால விஷத்தை அடக்கி உயிர்களைக்காத்ததால் கண்டம் கருத்தவர்.

சாட்டியக் குடியார்
இருகைகூம் பினகண் டலர்ந்தவா முகம் தாமும் செய்யவாய் முறுவல்
   காட்டுமா:திருச்சாட்டியக்குடி மக்கள் தன் கைக்கூப்பி தொழுதலைக்கண்டு,முகம் மலர்ந்து, இறைவனும் முறுவல் பூத்தார்.


Monday, September 12, 2016

வார்த்தை விளையாட்டு- சம்பந்தர் தேவாரம்

இன்றைய நவீன கவிதைகளை ஒரு முறைக்கு மேல் படித்தால் தான் ஒரு பொருள் விளங்குகிறது. நல்ல நவீன கவிதைகள் நம்மில் ஒரு சிந்தனையையும் தோற்றுவிக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை.

இது எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சம்பந்தரின் 
சித்திரக்கவி  வகைகளில் ஒரு வகையான மாலை மாற்று பதிகம்.
யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா. 

இது தமிழா என்று புருவம் உயர்த்துபவர்களும்  இருக்கலாம்!!.இரு வழி யொக்கும் (Palindrome) சொற்கள்/ சொற்றொடர்களுக்கு உதாரணமாக விகடகவி ,தேரு வருதே ,என்பவற்றை   சொல்லலாம். இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் ஒரே மாதிரி இருக்கும் அமைப்பு.

ஆங்கில உதாரணங்கள் : Malayalam, Madam, civic முதலியன.

இப்படி சொற்களாக, சொற்றொடர்களாக, வாக்கியங்களாக நிறைய இருக்கின்றன.
இப்படி நம்மால் கவிதை எழுத முயற்சிக்க முடியுமா? திருப்பி போட்டு வாசித்தாலும் பொருள் இருக்கணும்!!!.

முதல் பாடலின் பொருள் :

யாமாமா= யாம் கடவுள்களா?

நீ ஆம் ஆம்!= நீ மட்டும் தான் கடவுள் 

மா யாழீ= பெரிய யாழை ஏந்தியவனே

காமா = எல்லாராலும் விரும்பப்படுபவனே


காண் நாகாநாங்கள் பார்க்கும்படி நாகத்தைக் கழுத்தில் அணிந்தவனே.
 நாகம் கூட அமைதியாய் இறைவனின் தோளில் இருக்கிறது.
காணா காமா = காமனை மன்மதனை எரித்து யாரும் பார்க்கமுடியாதபடி செய்தவனே
காழீயாசீர்காழியில் எழுந்தருளும் இறைவனே.


Do not Bring us to The Test  என்று ஒரு கிறிஸ்தவர்கள் ஒரு பிரார்த்தனையை சொல்வார்கள் 
மா மாயா = பெரிய மாயங்களைச்செய்பவனே 
நீ மா மாயா= எங்களை பிற 
சோதனைகளிலிருந்து, மாயைகளிலிருந்து காப்பாற்று  இதுவே பிரார்த்தனை.!


ஒலி வடிவில் கேட்க: 

இலக்கணத்திலும் தமிழ் சொல்வன்மையிலும் சிறந்தவர்களால் மட்டுமே பாடக்கூடிய ஒரு வகை சித்திரக்கவி.இந்த மாலை மாற்று பதிகம் எனப்படும்  பதிகம்.
முழு பதிகமும் இங்கே:

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா.

யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா
யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா.

தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா
மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா.

நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே
மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ.

யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ
வீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா.

மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே
யேனாலாகா லேலாகா ழீதேமேகா போலேமே.

நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே
நேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீ.

நேணவராவிழ யாசைழியே வேகதளேரிய ளாயுழிகா
காழியுளாயரி ளேதகவே யேழிசையாழவி ராவணனே.

காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ
பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா.

வேரியுமேணவ காழியொயே யேனைநிணேமட ளோகரதே
தேரகளோடம ணேநினையே யேயொழிகாவண மேயுரிவே.

நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா
காழியுளானின யேனினயே தாழிசயாதமி ழாகரனே.

Tuesday, September 06, 2016

பூசலார் நாயனார் புராணம்- திருநின்றவூர் (பெரிய புராணம்)

(Pic Courtesy: Dinamalar)
பூசலார் நாயனாரைப்பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா?தன் மனதில் ஈசனுக்கு கோயில் கட்டினார்.
ஒரு சிலர்கோயிலில் இருக்கும் ஒரு சில நிமிடங்கள் கூட  செல்பேசியும் கையுமாக அலைவதைப்பார்க்கிறோம். மனது ஒருமிக்க பிரார்த்தனை செய்வது எல்லாருக்குமா வாய்க்கிறது?
பூசலாரிடம் பணம் இல்லை. ஈசனுக்கு கோயில் கட்ட எண்ணுகிறேன் என்று பொருள் உதவி கேட்டார். யாரும் கொடுக்கவும் இல்லை. தன் மனதில் ஒரு கோயில் கட்ட முடிவெடுத்தார்.
திரு.பாலகுமாரன் பூசலாரைப்பற்றி ஒரு நாவல் எழுதி இருக்கிறார்.

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்க்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவனே சிவலிங்கம்
கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே
என்கிறது திருமந்திரம். இது சொல்வது தான் பூசலாரின் வாழ்க்கை.

மண்ணில் ஒரு  பெரிய கோயில் கட்டினால் எத்தனை நேரமும் உழைப்பும் ஆகுமோ, அதை விட மேலான தவம்!!. தனி ஒருவராக வேறு எந்த எண்ணமும் இல்லாமல், அவர் செய்த பணி; எத்தனை பிரகாரங்கள், எத்தனை சன்னதிகள், எத்தனை கோஷ்ட மூர்த்தங்கள் என்று விரிவான திட்டம். அதை மனதில் ஒன்றன்றாய் செய்து முடிக்கிறார்.இணையில்லாத இறை அன்பு. பக்தியின் உச்ச நிலை அதுவே இறைவனையும் ஈர்த்தது.
காஞ்சியில் ஏகாம்பரேஸ்வரர்  கோயில் கட்டப்படும் நேரம். பல்லவர்களின் சிற்பக்கலை ரசனையைப்பற்றி சொல்லவா வேண்டும் ?
கோயில் பணி முடிந்த நிலையில் பல்லவ மன்னனின் உறக்கத்தில் ஈசன் சொன்னார். " இந்த தேதியில் பூசலார் கட்டிய கோயிலின் குட முழுக்கு. அதனால் நீ எழுப்பும் கோயிலின் குடமுழுக்கின் தேதியை மாற்றுக !".
சரியான நேரத்தில் பூசலாரின் வாழ்வின் மேன்மையை இறைவன் உலக மக்களுக்கு பல்லவ மன்னனின் வழியாக உணர்த்தினார்.

ஊரெல்லாம் தேடி பூசலாரைக்கண்ட மன்னன் ,நீங்கள் எழுப்பிய கோயில் எங்கே என்கிறான். பூசலார் பொருள் இல்லாமையால் தான் மனதினால் முயன்ற கோயிலைப்பற்றி சொல்லுகிறார். பல்லவ மன்னன் அவரின் அருள் வாழ்க்கையை எண்ணி வியந்து, அங்கே ஒரு சிவாலயம் எழுப்பினார்  என்பது வரலாறு.
சென்னையில் உள்ள திருநின்றவூர் இருப்பூர்தி வழியாக எளிதில் செல்ல கூடிய கோயில்.
பூசலாரைப்போல கோயில் கட்ட முடியாவிட்டாலும், அவர் பக்தியில் ஒரு துளி நமக்கு வர வேண்டும் என்று பிரார்த்திக்க வேண்டும்.

இறைவனின் பெயர்: இருதயாலீஸ்வரர்
இறைவியின் பெயர்: மரகதவல்லி
பெரிய புராணம் எளிதால் எல்லாரும் புரிந்து கொள்ளும் வகையில் தான் சேக்கிழாரால் அருளப்பட்டது.


கீழே பூசலாரின் புராணத்தில் இருந்து சில அடிகள்.

தொண்டரைச் சென்று கண்ட மன்னவன் தொழுது 'நீர் இங்கு
எண் திசை யோரும் ஏத்த எடுத்த ஆலயம் தான் யாது ?' இங்கு
அண்டர் நாயகரைத் தாபித்து அருளும் நாள் இன்று என்று உம்மைக்
கண்டு அடி பணிய வந்தேன்; கண் நுதல் அருள் பெற்று' என்றான்.
மன்னவன் உரைப்பக் கேட்ட அன்பர் தாம் மருண்டு நோக்கி,
'என்னை ஓர் பொருளாக் கொண்டே எம்பிரான் அருள் செய்தாரேல்
முன்வரு நிதி இலாமை மனத்தினால் முயன்ற கோயில்
இன்னதாம்' என்று சிந்தித்து எடுத்த வாறு எடுத்துச் சொன்னார்.

Monday, August 08, 2016

கண்ணப்பரின் அன்பும், மணிவாசகரின் சொல்நயமும் ! (எட்டாம் திருமுறை)

திருவாசகத்தை அனுபவித்து படிக்க வேண்டுமானால், நீங்கள் கங்கை புத்தக நிலையத்தின் வெளியீடான திரு.கி.வா.ஜா அவர்களின் திருவாசகம்- சில சிந்தனைகள் என்ற நூலை அவசியம் வாங்கிப்படியுங்கள்.

நாமாக பொழிப்புரை கொண்டு படிப்பதை விட, இந்த புத்தகம் நம் இறைதேடலுக்கு நல்ல வழிகாட்டியாய் இருக்கிறது. ஒரு பாடலை மணிவாசகர் ஏன் அப்படி பாடினார் என்பதான கேள்விகளுக்கும் பதில் கிடைக்கிறது.

மற்ற திருமுறைப்பாடல்களை விட திருவாசகம், மணி வாசகரின் எண்ண ஓட்டத்தினால், அவரின் அடக்கத்தினால், படிக்கும் பக்தர்களுக்கும் அடக்கம் என்னும் பெரும் பண்பை உணர்த்த வல்லது.


தமிழில் எத்தனையோ நூல்கள் இருந்தாலும் கண்டிப்பாக ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய நூல்கள் திருக்குறளும், திருவாசகமும்.

உருகி உருகி அவர் எழுதியதைபடித்து உருகாதவர் யார்?

மாணிக்கவாசகர் பெரும்பொருளை கையாளும் அமைச்சராக இருந்தவர். அவர் இறைவனை நாடி செல்லவில்லை. இறைவன் தன் பெருங்கருணையினால் அவருக்கு குருவாய் உபதேசித்தார்.


முதல் அனுபவத்திற்கு பிறகு அவரின் மனம் குருவாய் வந்த தயாளாரை நினைத்து நினைத்து உருகியது. நமக்கும் திருவாசகம் என்ற நூல் கிடைத்தது.

இந்த பதிவில் நாம் பார்க்க போகும் பாடல் :


கண்ணப்பன் ஒப்பது ஓர் அன்பு இன்மை கண்டபின்,

என் அப்பன், என் ஒப்பு இல் என்னையும் ஆட்கொண்டருளி,
வண்ணப் பணித்து, என்னை `வா' என்ற வான் கருணைச்
சுண்ணப் பொன் நீற்றற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!

Picture Credit:By unknown from Tiruchchirappalli (made) - http://collections.vam.ac.uk/item/O41835/painting-the-hunter-tinnen-or-kannappa/, Public Domain, https://commons.wikimedia.org/w/index.php?curid=14858426

திருமணத்தடை நீங்க, ராகு பரிகார ஸ்தலமாக இருக்கும் காளஹஸ்தி, சென்னையிலிருந்து ஒரு நாளில் சென்று வரக்கூடிய இடம். இங்கு தான் கண்ணப்ப நாயனார் வாழ்ந்தார்.


பஞ்ச பூத தலங்களில் வாயு தலமான காளஹஸ்தியில் கருவறையில் மட்டும் குளிர்ந்த காற்று சுழல்வதை நாம் உணரலாம்.

கண்ணப்பர் வேடுவ குலத்தில் பிறந்தவர். இறைவன் மீது கொண்ட அன்பினால்,தனக்கு தெரிந்த வகையில் பூஜை செய்தார். தாம் வேட்டையாடிய மாமிசத்தை படைத்தார். தன் கொண்டையில் இருந்த பூவை கொண்டு அலங்காரம் செய்தார். தன் வாயில் உள்ள நீரை வைத்து அபிஷேகம் செய்தார். இதை எல்லாம் மறைந்து இருந்து பார்த்த அந்தணர் திகைத்தார். அடுத்தது நடந்தது தான் முக்கியமான பரீட்சை.

சிவனாரின் ஒரு கண்ணில் கண்ணீராக செந்நீர் வழிந்தது. அதிர்ந்த கண்ணப்பர், தன் ஒரு கண்ணை நொண்டி, சிவலிங்கத்தில் வைத்தார். அடுத்த கண்ணிலும் குருதி வழிய தொடங்கியது. 

தன் செருப்பணிந்த கால்களை ஒரு கண்ணில் அடையாளமாக வைத்து, தன் இன்னொரு கண்ணையும் நோண்டி எடுக்க முனைந்தார் கண்ணப்பர். 
நம்மில் பலருக்கு  இறைவன் நமக்கு நல்லது செய்தால் மட்டுமே அவர் இருக்கிறார். நமக்கு வாழ்க்கையில் கொஞ்சம் துன்பங்கள் வந்தால் கூட, கடவுள் என்ற ஒருவர் இருக்கிறாரா என்பதான புலம்பல்கள் ஆரம்பித்து விடும்.

கண்ணப்பரின் அன்பு, இறைவனிடம் எதையும் எதிர்பார்க்காத அன்புக்கு ஒரு மிக சிறந்த உதாரணம்.

தமிழில் பல வகையான தூது இலக்கியங்கள் இருக்கின்றன. நாரை விடு தூது, கிளி விடு தூது முதலியன. 
இன்றைய காலகட்டத்தில் நமக்கு வகை  வகையான தொழில் நுட்பங்கள் இருக்கின்றன.
நம் மனதுக்கு நெருக்கமானவர்கள் வெளியூரில் இருந்தாலும் எளிதில் தொடர்பு கொள்ள முடிகிறது.

 அந்த நாட்களில், மனிதர்களிடம் சொல்ல முடியாத விஷயங்களை,குறிப்பாக பிரிவினால் வரும் துன்பத்தை சொல்ல  தம் மனதைத்தேற்றிக்கொள்ள இவ்வகை பாடல்கள் உதவி இருக்கின்றன.

இங்கே மணிவாசகர் தும்பியை தூது விடுகிறார். 

கண்ணப்பன் ஒப்பது ஓர் அன்பு இன்மை கண்டபின்
கண்ணப்பருக்கு இணையான அன்பு என்னிடத்தில் இல்லை என்று அறிந்தபின்னும் 

என் அப்பன்,என் ஒப்பு இல் என்னையும் ஆட்கொண்டருளி

என் அப்பன், எதனோடும் ஒப்பிட முடியாத என்னையும் ஆட்கொண்டு அருளி
வண்ணப் பணித்து
நன்றாக நினைவில் வையுங்கள். மணிவாசகர் அரசியலில் இருந்தார்; அமைச்சர் பதவியில் இருந்தார். இறை அனுபவம் தானாக அவருக்கு கிடைத்தது. அதனால் எப்படி இருக்க வேண்டும் என்ற வகையையும் இறைவன் எனக்கு சொல்லிக்கொடுத்தான் என்கிறார்.

என்னை `வா' என்ற வான் கருணைச்

சுண்ணப் பொன் நீற்றற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!

என்னைத் தில்லைக்கு வருக என்று அருளிய,  வானளவு கருணையுள்ள  பொடி பூசிய அழகிய திருநீறு அணிந்த சிவனாரிடம் சென்று ஊதுவாய் தும்பியே.

இறைவனைக்காண ஏங்கும் மணிவாசகரின் திருக்கோத்தும்பி பாடல் இது.

மதுரைக்கு சென்றால் அவசியம் திருவாதவூருக்கும் போய் வாருங்கள்.

Sunday, August 07, 2016

ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள !- மகிழ்ச்சியின் மொத்த அனுபவம்

இன்றைய சூழலில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று எந்த மனிதனும் சொல்வது இல்லை.
முன்பு தீபாவளிக்கு வாங்கும் ஒற்றை சேலையில் இருந்த சந்தோஷம் இன்று மாதம் இரண்டு சேலையாவது வாங்குவோருக்கு நிச்சயம் இல்லை.

 துய்ப்பதே இன்பம் என்று நினைத்தோம். ஆனால் நிறைவு என்பது வாழ்க்கையில் இல்லாமல் போய் விட்டது.

மட்டற்ற மகிழ்ச்சியில் இருக்கிறேன் என்பதை எப்படி சொல்வீர்கள்?

மட்டற்ற மகிழ்ச்சி  என்பதற்கு வைரமுத்துவின் மடை திறந்து தாவும் நதி அலை நான் பாடல் தான் ஞாபகம் வருகிறது.

ஆனால் இந்த பாடல் சொல்வதும், அந்த நிமிட சந்தோஷம் தான் .

யாருடைய அழகையாவது  வர்ணிக்க வேண்டுமென்றால், ஆயிரம் கண்கள் வேண்டும் என்கிறோம்.


சுந்தர மூர்த்தி நாயனார் சிதம்பரம் கோயிலுக்கு சென்ற போது, இறைவனின் நடனத்தை எப்படிக்கண்டார்? அவருக்கு ஆயிரம் கண்கள் தேவைப்பட்டதா? மனம் எத்தகைய மகிழ்ச்சியை அனுபவித்தது என்பதை சேக்கிழார் பெருமான் சொல்லும் பெரிய புராணப்பாடல் இதோ.

 ஐந்துபேர் அறிவும் கண்களே கொள்ள
அளப்பரும் கரணங்கள் நான்கும்
சிந்தையே ஆகக் குணம்ஒரு மூன்றும்
திருந்துசாத் துவிகமே ஆக
இந்துவாழ் சடையான் ஆடும்
ஆனந்த எல்லையில் தனிப்பெருங்கூத்தின்
வந்தபேர் இன்ப வெள்ளத்துள் திளைத்து
மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார்.

ஐந்துபேர் அறிவும் கண்களே கொள்ள

மனிதனுக்கு புலன் வழி அறிவுகள் ஐந்து.அவை  கண், மூக்கு, செவி, வாய் மற்றும் மெய் வாயிலாய் இயங்குவன.


காதுகளும், செவிகளும், மூக்கும், மெய்யும், கண்களாக செயல் புரிந்தால் எப்படி இருக்கும்? அதை தான் ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள என்கிறார் சேக்கிழார்.
மனது ஒரு நிலைப்பட்டிருப்பதால், எல்லா புலன்களும் கண்களாக 
செயல்பட்டு இறை அனுபவம் சுந்தரருக்கு கிட்டியது.

அளப்பரும் கரணங்கள் நான்கும்

சிந்தையே ஆக

மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் நான்கும் அந்தக்கரணங்கள் என்று சொல்லப்படுகின்றன. இதில் சித்தம் மட்டுமே செயல்பாட்டில் இருக்க, மனம், புத்தி மற்றும் அகங்காரம் எந்த செயலும் இல்லாமல் அடங்கி இருக்கின்றன. சித்தம் சிவனை மட்டுமே காண்கிறது. 

குணம்ஒரு மூன்றும்
திருந்துசாத் துவிகமே ஆக

ரஜோ குணம், தமோ குணம், சத்துவ குணம் ஆகிய மூன்று குணங்களில், சத்துவ குணமே மேலோங்கி இருக்க.

இந்துவாழ் சடையான் 

சந்திரன் இருக்கின்ற சடையினை உடைய சிவபெருமான் 

ஆடும்
ஆனந்த எல்லையில் தனிப்பெருங்கூத்தின்
வந்தபேர் இன்ப வெள்ளத்துள் திளைத்து

இப்போது தான் திரு.இலங்கை ஜெயராஜ் அவர்களின் ஒரு சொற்பொழிவைக்கேட்டு கொண்டிருந்தேன். தமிழிலே இன்பத்தை சிற்றின்பம், பேரின்பம் என்று பிரித்தார்கள். உலகத்தில் உள்ளவற்றால், நம் புலன்கள் வழி கிடைப்பது சிற்றின்பம். உதாரணத்திற்கு ஒரு பாயசத்தைகுடிக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். இதில் சுவைப்புலன் நாவின் வழி அந்த இன்பத்தை அனுபவிக்கிறது.
பாயசத்தில் உள்ள ஏலம் மூக்கு வழி நுகர் புலனுக்கு இன்பம் தருகிறது.
ஐந்து புலன்களும் இன்பம் அனுபவிக்கிற ஒரு இன்பம் உலகில் உண்டு. அதுவே ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் தருகின்ற இன்பம். ஆனால் இது சிற்றின்பம், உலகில் உள்ள சில பொழுதுகளில் மட்டும் தீரும் இன்பம், 

அனால் இறைவனை அனுபவிக்கிற இன்பம் என்பது, இன்பத்தில் நிலையானதாக இருக்கும். அதில் நாம்  கரையுமாறு இருக்கும் என்றார்.

கண்ணில்லா மனிதர் யானையைபற்றி விளக்குவதாக தான் இருக்கிறது. நான் எழுதும் இவ்வரிகள். 


பேரின்பத்தை அனுபவிக்காத ஒருவர் எப்படி இதை விளக்க முடியும்?

திளைத்து என்ற சொல் இங்கே கவனிக்க தக்கது. சாதாரணமாக வெள்ளத்தில் மாட்டிக்கொள்ளும் ஒரு மனிதன் அதிலிருந்து மீண்டு வெளியில் வர வேண்டும் என்று தான் நினைப்பான். ஆனால் இங்கு இறைவன் தரும் பேரின்ப வெள்ளத்தில் திளைத்து என்கிறார் சேக்கிழார்.

திளைத்து என்ற சொல் மகிழ்ச்சியில் மூழ்கி, இன்னும் இதிலேயே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பதை சுட்டுகிறது.

அதற்கு அடுத்த அடி இன்னும் சுகம். 
மாறிலா மகிழ்ச்சியில் மலர்ந்தார்.

நாம் உலகில் அனுபவிக்கும் எந்த மகிழ்ச்சியும் அடுத்த நிமிஷமோ,நாளோ, மாதமோ மாற கூடியது. மாற்றம் இல்லாத, மகிழ்ச்சியில் இருந்த சுந்தரர், அந்த மகிழ்ச்சியில் தானும் இறைவனின் திருவடித்தாமரையில்  மலர்ந்தார்.

Sunday, July 24, 2016

பாரில் அறங்கள் வளரும், அம்மா!

மங்கைய ராகப் பிறப்பதற்கே - நல்ல
     மாதவஞ் செய்திட வேண்டும், அம்மா!
பங்கயக் கைந்நலம் பார்த்தலவோ - இந்தப்
     பாரில் அறங்கள் வளரும், அம்மா!

இது கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் வரிகள்.

பரவலாக எல்லாருக்கும் முதல் இரண்டு வரிகள் தெரிந்திருக்கும்.
ஒரு குடும்பம் தர்ம வழியில், அறம் சார்ந்த வழியில் செல்ல வேண்டுமானால், அது அந்த வீட்டின் பெண் நினைத்தால் மட்டுமே நடக்கும்.
அதனால் தான் கவிமணி, பெண்ணின் கைநயத்தால் வளரும் அறங்கள் என்றார்.

இந்த பதிவில் நாம் அறம் வளர்த்த நாயகி உடன் உறை ஐயாறப்பர் பற்றிய தேவாரத்தைப்பார்க்க  போகிறோம்.


அப்பர் தன்னுடைய முதிய பருவத்தில் திருக்கைலாய காட்சிக்கு ஏங்குகிறார். கைலை யாத்திரை மேற்கொள்கிறார். இறைவன் அவரை திருவையாறு செல்லுமாறும் அங்கு திருக்கைலாயக்காட்சி காணலாம் என்றும் அனுப்பி வைக்கிறார்.
அரிசிலாறு , வெண்ணாறு , வெட்டாறு , குடமுருட்டியாறு  மற்றும்  காவேரியாறு ஒன்று கூடும் ஊர், திருவையாறு.

ஐந்து ஆறுகள் சேர்ந்தது திரு ஐ ஆறு= திருவையாறு .

இந்த ஊரில் கால் வைத்ததும் எல்லா உயிரினங்களும் ஜோடி ஜோடியாய் அப்பரின் கண்ணுக்குத்தெரிகின்றன. அம்மை அப்பனாய் இறைவன் இருக்கிறார் என்பதற்கும், இல்லறம் என்பதை நம் சைவ பெரியவர்கள் எப்படி மதித்தார்கள் என்பதற்கும், இதுவே நல்ல எடுத்துக்காட்டு.



இந்த பதிகத்தில் ஒவ்வொரு பத்தியின் இறுதியிலும் கண்டறியாதன கண்டேன் என்று வரும்.
அப்பர் சிவபெருமானை மட்டுமே அது வரை பெரிதாய் வழிபட்டவர். அவருக்கு இறைவன், அம்மையும் அப்பனும் வேறல்ல என்று அவர் இது வரை காணாத உண்மையை சொல்கிறார்.
தண்மதிக் கண்ணியினானைத் தையல் நல்லாளொடும் பாடி
உண்மெலி சிந்தையானாகி உணரா உருகா வருவேன்
அண்ணல் அமர்ந்து உறைகின்ற ஐயாறு அடைகின்ற போது
வண்ணப் பகன்றிலொடாடி வைகி வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்.

தண்மதி= குளிர்ந்த நிலவு.

அன்றில் பறவை தன் இணை இல்லாமல் உயிர் வாழாது. அந்த அன்றில் பறவை, தன் இணையோடு தன் எதிர் வந்ததாக சொல்கிறார் அப்பர்.

தண்மதிக் கண்ணியினானைத்

குளிர்ந்த சந்திரனது தனது சடையில் அணிந்து கொண்ட சிவபிரானை

தையல் நல்லாளொடும் பாடி

பெண்களில் சிறந்தவளாகிய உமை அம்மையுடன் இணைத்துப் பாடியபடியே
(பெண்களில் நல்லவள் அதனால் தானே அம்மையின் பெயர் அறம் வளர்த்த நாயகி.)


உண்மெலி சிந்தையானாகி உணரா உருகா வருவேன்
குழைந்த உள்ளத்துடன் 
சிவபிரானது திருவடிச் சிறப்பினை உணர்ந்து உருகி வந்த நான் திருவையாறு தலத்தினை அடைந்தேன்

அண்ணல் அமர்ந்து உறைகின்ற ஐயாறு அடைகின்ற போது

தலைவனாகிய சிவபெருமான் அமர்ந்திருக்கும் திருவையாற்றை அடையும்போது 
வண்ணப் பகன்றிலொடாடி வைகி வருவன கண்டேன்

அழகிய வண்ணமுடைய அன்றில் பறவை தனது துணையுடன் இணைந்து வரும் கோலத்தினைக் கண்டேன்

கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்.

அந்தக் கோலத்தினைக் கண்ட எனக்கு சிவபிரானும் பார்வதி தேவியும் இணைந்து வருவது போல் தோன்றியது. மேலும் அந்தக் கோலத்தினில் நான், சிவபிரானின் திருப்பாதங்களையும் கண்டேன். அத்தகைய காட்சியினை நான் இதற்கு முன்னர் கண்டதில்லை.

தஞ்சாவூரிலிருந்து  12 கிலோமீட்டர்  தொலைவில் உள்ள  தலம். வாய்ப்பு இருந்தால் நிச்சயம் சென்று வாருங்கள். அருகில் தியாகராஜரின் சமாதியையும் காணலாம். இயற்கை அழகு உடைய ஊர்.

நமக்கும்  திருக்கைலாய  காட்சி  திருவருளால் கிடைக்கட்டும்  !

Tuesday, July 19, 2016

இயற்கை எழில் கொஞ்சும் -இலம்பையங்கோட்டூர் சம்பந்தர் தேவாரம்!!!

சம்பந்தரின் தேவார பதிகங்களில், இயற்கை அழகு பற்றிய வர்ணனை நிச்சயம் இருக்கும்.   

ஏன் அவர் இயற்கை அழகை ஒவ்வொரு தளத்திலும் வர்ணித்தார் என்று யோசிக்கிறேன்.
அப்பரையும், சுந்தரரையும் விட, சம்பந்தரின் தேவாரத்தில் இந்த வர்ணனைகள் அதிகம் இருக்கின்றன.

சம்பந்தர் அவதரித்த காலத்தில் இப்போது இருப்பதைப்போல, தொழிற்சாலைகள் இருந்திருக்காது. அவர், இயற்கையின் பூரண அழகை போகும் ஒவ்வொரு ஊரிலும் பார்த்திருப்பார்.அவர் இயற்கையின் ரசிகர் .


மற்றொரு காரணமாக நான் நினைப்பது, பல நூற்றாண்டுகள் கடந்து வாழும் நம் போன்றவர்களுக்கு அந்த ஊர் அப்போது எப்படி இருந்தது என்பதை சொல்லும் டைம் கேப்ஸுல் (Time Capsule)ஆகவும், பதிகங்களைப்பயன்படுத்தி இருக்கிறார்.

அப்படி ஒரு பதிகம் இதோ. 
தலம்: இலம்பையங்கோட்டூர்
இந்த தலம்  காஞ்சீபுரம் வட்டத்தில் இருக்கிறது. பிரளய காலத்தில் சிவனார் அமைதியாய் தவமிருக்க தேர்வு செய்த இடம் என்றும் தலக்குறிப்பு கூறுகிறது.

இயற்கை அழகு மிகுந்த இது போன்ற கிராமிய மணம் கமழும் கோயில்களுக்கு போய் வந்தால், இயல்பாகவே நம் மன இறுக்கம் தளர்ந்து விடும்.

உளம் கொள்வார் உச்சி ஆர் கச்சி ஏகம்பன், ஒற்றியூர் உறையும்
                                         அண்ணாமலை அண்ணல்,
விளம்புவான் எனது உரை தனது உரை ஆக, வெள்ள நீர் விரிசடைத்
                                                             தாங்கிய விமலன்-
குளம்பு உறக் கலை துள, மலைகளும் சிலம்ப, கொழுங்கொடி
                          எழுந்து எங்கும் கூவிளம் கொள்ள,
இளம்பிறை தவழ் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையாப்
                        பேணி, என் எழில் கொள்வது இயல்பே?





(Temple Pics Courtesy: http://sivayatra.blogspot.sg/2014/12/blog-post.html)

இந்த பதிகத்தின் பொருளை இப்போது பார்ப்போம்: 

இந்தியாவில்  உருவான மான் இனம்  கலை மான். நிறைய  இலக்கியங்களில்  கலைமானைப்பற்றிய குறிப்புகள் இருக்கின்றன.



(Pic Courtesy: http://araathuhistory.blogspot.com/2011/12/blog-post.html)

குளம்பு உறக் கலை துள, மலைகளும் சிலம்ப

கலை மான்கள் தங்கள் கால் குளம்புகள் நிலத்தில் பதியுமாறு துள்ள, அங்கே எழும்பும் ஓசையை மலைகள் எதிரொலிக்கின்றன.

இது கிட்ட தட்ட 1300 ஆண்டுகளுக்கு முன்னர் பாடிய பதிகம். அப்போது இந்த கோயிலின் அருகில் குன்றுகள் இருந்திருக்க கூடும்.

கொழுங்கொடி
                          எழுந்து எங்கும் கூவிளம் கொள்ள


கூவிளம்= வில்வம் 
வளமையான  கொடிகள் , வில்வ  மரத்தை சுற்றிப்படர்ந்திருக்கின்றன.

Pic courtesy: http://ayurvedaherb.blogspot.sg/2016_01_01_archive.html
இளம்பிறை தவழ் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையாப்
                        பேணி
இளம்பிறை தவழும் வான் அளவிய பொழில்கள் சூழ்ந்த இலம்பையங்கோட்டூரைத் தனது இருப்பிடமாகக் கொண்டு 

என் எழில் கொள்வது இயல்பே?
ஒரு பெண்ணாக தன்னை பாவித்து பாடி இருக்கிறார் சம்பந்தர்.

உன்னை தரிசிக்க வந்த என் அழகைக்கொள்வது நீதியோ என்கிறார்.

உளம் கொள்வார் உச்சி ஆர் கச்சி ஏகம்பன்,
ஒற்றியூர் உறையும்
                                         அண்ணாமலை அண்ணல்


Courtesy:http://www.tantra-kundalini.com/sahasrara.htm
இறைவனை உள்ளத்தில் வைத்து தியானிப்பவர்களுக்கு, முடிவில் சஹஸ்ரஹார சக்ரம் எனப்படும் (ஆயிரம் இதழ் கொண்ட தாமரை) அவர்களின் உச்சியில் பூக்கும். இந்த நிலை உள்ளவர்கள் தான் சமாதி நிலை அடைந்தவர்கள். சமீப நூற்றாண்டுகளில், ரமண மகரிஷி, ராமகிருஷ்ண பரமஹம்சர் முதலிய பெரியவர்கள் அடைந்த நிலை இது.

இறைவனைதத்யானிப்பவர்களுக்கு அவர்கள் உச்சியில் இருப்பவர் , ஒற்றியூர், காஞ்சிபுரம் மற்றும் அண்ணாமலையின் இறைவனாகிய சிவன்.

 எனது உரை தனது உரை ஆக விளம்புவான்
தெய்வத்தமிழ் என்பது இது தான். என் வாயில் வருகின்றன தேவாரம் எனதல்ல, அது இறைவனின் உரை என்கிறார் சம்பந்தர். அவர் வாயில் வருவன, இறைவனின் மொழிகளே.

வெள்ள நீர் விரிசடைத்
                                                             தாங்கிய விமலன்

கங்கையின் வெள்ளைத்தைதன் விரி சடையில் தாங்கிய தூயவர்.

இறைவனின் பண்புகளையும், இலம்பையங்கோட்டூரின் அழகையும் சொல்லி, இவர் என் அழகைக்கொள்வது இயல்போ? என வியந்து பாடுகிறார்.




Thursday, June 30, 2016

பொய்யாத விநாயகர்- பதினோராம் திருமுறை- நம்பியாண்டார் நம்பி

மலேசியாவில் உள்ள மலாக்காவுக்கு போன வருடம் சென்றியிருந்தோம்.
ஊர் சுற்றி பார்க்கும்போது, ஒரு நாள் மாலையில் இந்த பொய்யாத விநாயகர் கோயிலுக்கு போனோம்.
அந்த நாள் பாணி செட்டியார் கோயில். உள்ளே கிணறு இருந்தது, பல விக்கிரகங்கள் வெண்கலத்தில் இருந்தன. அந்த காலத்து ஓட்டு வீடு பாணி அமைப்பு.






பக்கத்திலேயே ஒரு தர்கா, அந்த பின்னர் ஒரு சீனக்கோயில் என நாங்கள் மாலை 6.30 மணிக்கு திரும்பும்போது, ரொம்பவே சிலிர்க்கும் அனுபவம். கோயில் மாலை நேர தீபாராதனையை அடுத்து, தர்காவிலும், சீனக்கோயிலிலும் பிரார்த்தனைகள் நடந்தன.
அந்த பக்கம் போனால் நீங்களும் பார்த்து வாருங்கள்!!!.நம் பிரார்த்தனைகளை இந்த பொய்யாத விநாயகர் நிச்சயம் பொய்க்க விடமாட்டார்.

இந்த பதிவில் நாம் பார்க்கப்போவது, பதினோராம் திருமுறையில் உள்ள, நம்பியாண்டார் நம்பி அவர்கள் அருளி செய்த பாடல்.
திருநாரையூரில் உள்ள பொல்லா பிள்ளையாரைப்பற்றிய பாடல்.
பொல்லா என்ற சொல்லுக்கு உளியால் செதுக்கப்படாத என்று பொருள்.

தானாக சுயம்புவாய் வந்தவர் இந்த பொல்லா பிள்ளையார். நம்பியாண்டார் நம்பி  ராஜராஜ சோழரின் கட்டளைப்படி, திருமுறைகளைத்தொகுத்துக்கொடுத்தார். அவர் இந்த பொல்லா பிள்ளையாரின் ஆசி பெற்று தன் பணியைச்செய்தார்.

கொம்பனைய வள்ளி கொழுநன் குறுகாமே
வம்பனைய மாங்கனியை நாரையூர் - நம்பனையே
தன்னவலம் செய்துகொளும் தாழ்தடக்கை யாயென்நோய்
பின்னவலம் செய்வதென்னோ பேசு.


இந்த பாடல் ரொம்பவே அழகாக இருக்கிறது.


நெஞ்சே! பூங்கொம்பு போன்ற(கொம்பனைய) வள்ளியின் கணவன் (முருகன்), குறுகாமே (வந்து அடையும் முன்னரே), வம்பனைய மாங்கனியை (புதிதாக வந்த மாங்கனியை), பெற, நாரையூர் நம்பனை(தன் தாய் தந்தையரை) வலம் வந்தார். உலகை வலம் வருதலை விட, இந்த வழியே சிறந்தது என்று தேர்ந்தார்.

தாய் தந்தையரை வலம் வந்து, தன் துதிக்கையைதாழ்த்தி துதித்து, மாங்கனியை பெற்றார். அந்த விநாயகரை சொல் நெஞ்சே. சொன்னால், நோய் (வினைகள்), மற்றும் அவலம் (துன்பம்) நம்மை என்ன செய்யும்?

Sunday, June 19, 2016

பிறவாமை காக்கும் பிரான்(பதினோராம் திருமுறை- காரைக்கால் அம்மை)

இன்று மாங்கனித்  திருவிழா!!!.

காரைக்கால் அம்மையின் வாழ்வில் இறைவன் ஒரு பெரும் அற்புதத்தை நிகழ்த்திய நாள்!.

ஒரு வணிகரின் மனைவியாய் ,இல்லறத்தில் வாழ்ந்து சிவனாரை துதித்து வந்தார். ஒரு நாள் ஒரு சிவனடியார்  வந்து அவர் வாசலில் நிற்க, தன் கணவர் முந்தைய நாள் வாங்கி வந்த மாங்கனிகளில் ஒன்றை, சிவனடியாருக்கு கொடுத்தார். 

மதிய உணவுக்கு வீடு வந்த அம்மையின் கணவன் பரமதத்தன், மாம்பழத்தை கேட்க, ஒன்றை பரிமாறினார். இன்னொரு மாம்பழத்தை கேட்க, என்ன செய்வது என்று தெரியாமல், சிவனை வேண்டினார். அவர் கைகளிகளில் ஒரு மாம்பழம் வந்து இறங்கியது. 

அந்த பழத்தை அரிந்து பரிமாறினார்.

அதை உண்ட பரமதத்தன், இந்த மாம்பழம் முற்றிலும் வேறு சுவையில் இருக்கிறது. எப்படி இது வந்தது? என்று கேட்க, சிவன் அருளால் கிடைத்த பழம் என்றார். பயந்து போன பரமதத்தன், வேறு ஊருக்கு சென்று மற்றொரு திருமணம் செய்து கொண்டான். அம்மையின் கால்களில் விழுந்து விட்டான். 
அது காலும், மனித பெண்ணாய் இருந்த அம்மை, எனக்கு பேய் வடிவு கொடு என கேட்க, இறைவன் அவரின் அழகு கோலத்தை மாற்றி, பேய் வடிவு தந்தார். 

எப்படி அவ்வை, தனக்கு முதியவர் கோலம் வேண்டும் என பிள்ளையாரை கேட்டாரோ, அது போல காரைக்கால் அம்மை, பேய் உரு கேட்டார்.

காரைக்காலில் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் இந்த நிகழ்ச்சி மாங்கனி திருவிழாவாக கடைப்பிடிக்கபடுகிறது. பக்தர்களும் மாங்கனியை வாங்கி சிவனுக்கு படைக்கின்றனர்.

இந்த பதிவில்  உள்ள பாடல்கள், காரைக்கால் அம்மை இயற்றிய திருவிரட்டை மணி மாலை, என்னும் பதினோராம் திருமுறையில் உள்ளன .

கட்டளைக் கலித்துறையும், நேரிசை வெண்பாவும் அந்தாதியாய் மாறி மாறி வர இருபது பாடல்களால் தொகுக்கப்படுவது ‘இரட்டைமணி மாலை’  ஆகும்.
இரு விதமான பாக்களால் ஆன அழகிய தமிழ் மாலை.!!!

நிறைய அவ்வையாரின் மூதுரை, நல்வழி போன்ற செய்யுள்களில் நேரிசை வெண்பாக்களை காணலாம். 

நேரிசை வெண்பா என்பது பொதுவாய் நான்கு அடிகளைகொண்டு இருக்கும். நான்காவது அடி மட்டும் 3 சொற்களைக்கொண்டு இருக்கும். இரண்டாவது அடியில் தனிச்சொல் இருக்கும்.
இந்த பதிவில் இருக்கும் இரண்டு பாடல்களும் நேரிசை வெண்பாக்கள் தான்.
ஈசன் அவனல்லாது இல்லை எனநினைந்து
கூசி மனத்தகத்துக் கொண்டிருந்து - பேசி
மறவாது வாழ்வாரை மண்ணுலகத் தென்றும்
பிறவாமைக் காக்கும் பிரான். 


மிக எளிமையாய் விளங்கும் பாடல்!!!. ஈசன் இல்லாமல் நாம் இல்லை என்பதை புரிந்து, நம்மைக்குறித்து நாம் என்ன கர்வம் கொண்டிருந்தாலும், இறைவன் இல்லாமல் நாம் இல்லை என்று எண்ணி, அவர் முன்னே நாம் மிக சிறியவர் என்று கூசி, அவரை மனதில் எப்போதும் எண்ணி கொண்டிருப்பவர்களை, மீண்டும் பிறவாமல் காப்பார் இறைவன்.

சங்கரனைத் தாழ்ந்த சடையானை அச்சடைமேற்
பொங்கரவம் வைத்துகந்த புண்ணியனை - அங்கொருநாள்
ஆவாஎன்று ஆழாமைக் காப்பானை எப்பொழுதும்
ஓவாது நெஞ்சே உரை. 


நம்மை பிறவாமல் காப்பாற்றும் பிரானை எப்போதும் ஓவாது (இடைவிடாது) நெஞ்சே நீ உரை என்கிறார் அம்மையார்.

நம்மை பிறவிக்கடலில் ஆழாமல் காக்க வல்லவர் சங்கரனார். அவர் தாழ் சடை உடையவர்; பாம்பினைத்தன் (பொங்கு அரவம்) தலையில் வைத்திருப்பவர். நம் இறுதி நாளில் (அங்கொரு நாளில்) நம்மை மீண்டும் பிறவி என்னும் கடலில் ஆழாமல் காப்பவனை, நெஞ்சே நீ இடைவிடாது உரைத்திடுவாய்!

இந்த மாதிரி 4 வரி பாடல்கள், எளிதில் நம்மால் மனதில் உள்வாங்க முடியும். இவற்றை நம் அன்றாட பிரார்த்தனையில் சொல்லலாமே!!!