Sunday, June 19, 2016

பிறவாமை காக்கும் பிரான்(பதினோராம் திருமுறை- காரைக்கால் அம்மை)

இன்று மாங்கனித்  திருவிழா!!!.

காரைக்கால் அம்மையின் வாழ்வில் இறைவன் ஒரு பெரும் அற்புதத்தை நிகழ்த்திய நாள்!.

ஒரு வணிகரின் மனைவியாய் ,இல்லறத்தில் வாழ்ந்து சிவனாரை துதித்து வந்தார். ஒரு நாள் ஒரு சிவனடியார்  வந்து அவர் வாசலில் நிற்க, தன் கணவர் முந்தைய நாள் வாங்கி வந்த மாங்கனிகளில் ஒன்றை, சிவனடியாருக்கு கொடுத்தார். 

மதிய உணவுக்கு வீடு வந்த அம்மையின் கணவன் பரமதத்தன், மாம்பழத்தை கேட்க, ஒன்றை பரிமாறினார். இன்னொரு மாம்பழத்தை கேட்க, என்ன செய்வது என்று தெரியாமல், சிவனை வேண்டினார். அவர் கைகளிகளில் ஒரு மாம்பழம் வந்து இறங்கியது. 

அந்த பழத்தை அரிந்து பரிமாறினார்.

அதை உண்ட பரமதத்தன், இந்த மாம்பழம் முற்றிலும் வேறு சுவையில் இருக்கிறது. எப்படி இது வந்தது? என்று கேட்க, சிவன் அருளால் கிடைத்த பழம் என்றார். பயந்து போன பரமதத்தன், வேறு ஊருக்கு சென்று மற்றொரு திருமணம் செய்து கொண்டான். அம்மையின் கால்களில் விழுந்து விட்டான். 
அது காலும், மனித பெண்ணாய் இருந்த அம்மை, எனக்கு பேய் வடிவு கொடு என கேட்க, இறைவன் அவரின் அழகு கோலத்தை மாற்றி, பேய் வடிவு தந்தார். 

எப்படி அவ்வை, தனக்கு முதியவர் கோலம் வேண்டும் என பிள்ளையாரை கேட்டாரோ, அது போல காரைக்கால் அம்மை, பேய் உரு கேட்டார்.

காரைக்காலில் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் இந்த நிகழ்ச்சி மாங்கனி திருவிழாவாக கடைப்பிடிக்கபடுகிறது. பக்தர்களும் மாங்கனியை வாங்கி சிவனுக்கு படைக்கின்றனர்.

இந்த பதிவில்  உள்ள பாடல்கள், காரைக்கால் அம்மை இயற்றிய திருவிரட்டை மணி மாலை, என்னும் பதினோராம் திருமுறையில் உள்ளன .

கட்டளைக் கலித்துறையும், நேரிசை வெண்பாவும் அந்தாதியாய் மாறி மாறி வர இருபது பாடல்களால் தொகுக்கப்படுவது ‘இரட்டைமணி மாலை’  ஆகும்.
இரு விதமான பாக்களால் ஆன அழகிய தமிழ் மாலை.!!!

நிறைய அவ்வையாரின் மூதுரை, நல்வழி போன்ற செய்யுள்களில் நேரிசை வெண்பாக்களை காணலாம். 

நேரிசை வெண்பா என்பது பொதுவாய் நான்கு அடிகளைகொண்டு இருக்கும். நான்காவது அடி மட்டும் 3 சொற்களைக்கொண்டு இருக்கும். இரண்டாவது அடியில் தனிச்சொல் இருக்கும்.
இந்த பதிவில் இருக்கும் இரண்டு பாடல்களும் நேரிசை வெண்பாக்கள் தான்.
ஈசன் அவனல்லாது இல்லை எனநினைந்து
கூசி மனத்தகத்துக் கொண்டிருந்து - பேசி
மறவாது வாழ்வாரை மண்ணுலகத் தென்றும்
பிறவாமைக் காக்கும் பிரான். 


மிக எளிமையாய் விளங்கும் பாடல்!!!. ஈசன் இல்லாமல் நாம் இல்லை என்பதை புரிந்து, நம்மைக்குறித்து நாம் என்ன கர்வம் கொண்டிருந்தாலும், இறைவன் இல்லாமல் நாம் இல்லை என்று எண்ணி, அவர் முன்னே நாம் மிக சிறியவர் என்று கூசி, அவரை மனதில் எப்போதும் எண்ணி கொண்டிருப்பவர்களை, மீண்டும் பிறவாமல் காப்பார் இறைவன்.

சங்கரனைத் தாழ்ந்த சடையானை அச்சடைமேற்
பொங்கரவம் வைத்துகந்த புண்ணியனை - அங்கொருநாள்
ஆவாஎன்று ஆழாமைக் காப்பானை எப்பொழுதும்
ஓவாது நெஞ்சே உரை. 


நம்மை பிறவாமல் காப்பாற்றும் பிரானை எப்போதும் ஓவாது (இடைவிடாது) நெஞ்சே நீ உரை என்கிறார் அம்மையார்.

நம்மை பிறவிக்கடலில் ஆழாமல் காக்க வல்லவர் சங்கரனார். அவர் தாழ் சடை உடையவர்; பாம்பினைத்தன் (பொங்கு அரவம்) தலையில் வைத்திருப்பவர். நம் இறுதி நாளில் (அங்கொரு நாளில்) நம்மை மீண்டும் பிறவி என்னும் கடலில் ஆழாமல் காப்பவனை, நெஞ்சே நீ இடைவிடாது உரைத்திடுவாய்!

இந்த மாதிரி 4 வரி பாடல்கள், எளிதில் நம்மால் மனதில் உள்வாங்க முடியும். இவற்றை நம் அன்றாட பிரார்த்தனையில் சொல்லலாமே!!!

No comments: