Monday, August 08, 2016

கண்ணப்பரின் அன்பும், மணிவாசகரின் சொல்நயமும் ! (எட்டாம் திருமுறை)

திருவாசகத்தை அனுபவித்து படிக்க வேண்டுமானால், நீங்கள் கங்கை புத்தக நிலையத்தின் வெளியீடான திரு.கி.வா.ஜா அவர்களின் திருவாசகம்- சில சிந்தனைகள் என்ற நூலை அவசியம் வாங்கிப்படியுங்கள்.

நாமாக பொழிப்புரை கொண்டு படிப்பதை விட, இந்த புத்தகம் நம் இறைதேடலுக்கு நல்ல வழிகாட்டியாய் இருக்கிறது. ஒரு பாடலை மணிவாசகர் ஏன் அப்படி பாடினார் என்பதான கேள்விகளுக்கும் பதில் கிடைக்கிறது.

மற்ற திருமுறைப்பாடல்களை விட திருவாசகம், மணி வாசகரின் எண்ண ஓட்டத்தினால், அவரின் அடக்கத்தினால், படிக்கும் பக்தர்களுக்கும் அடக்கம் என்னும் பெரும் பண்பை உணர்த்த வல்லது.


தமிழில் எத்தனையோ நூல்கள் இருந்தாலும் கண்டிப்பாக ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய நூல்கள் திருக்குறளும், திருவாசகமும்.

உருகி உருகி அவர் எழுதியதைபடித்து உருகாதவர் யார்?

மாணிக்கவாசகர் பெரும்பொருளை கையாளும் அமைச்சராக இருந்தவர். அவர் இறைவனை நாடி செல்லவில்லை. இறைவன் தன் பெருங்கருணையினால் அவருக்கு குருவாய் உபதேசித்தார்.


முதல் அனுபவத்திற்கு பிறகு அவரின் மனம் குருவாய் வந்த தயாளாரை நினைத்து நினைத்து உருகியது. நமக்கும் திருவாசகம் என்ற நூல் கிடைத்தது.

இந்த பதிவில் நாம் பார்க்க போகும் பாடல் :


கண்ணப்பன் ஒப்பது ஓர் அன்பு இன்மை கண்டபின்,

என் அப்பன், என் ஒப்பு இல் என்னையும் ஆட்கொண்டருளி,
வண்ணப் பணித்து, என்னை `வா' என்ற வான் கருணைச்
சுண்ணப் பொன் நீற்றற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!

Picture Credit:By unknown from Tiruchchirappalli (made) - http://collections.vam.ac.uk/item/O41835/painting-the-hunter-tinnen-or-kannappa/, Public Domain, https://commons.wikimedia.org/w/index.php?curid=14858426

திருமணத்தடை நீங்க, ராகு பரிகார ஸ்தலமாக இருக்கும் காளஹஸ்தி, சென்னையிலிருந்து ஒரு நாளில் சென்று வரக்கூடிய இடம். இங்கு தான் கண்ணப்ப நாயனார் வாழ்ந்தார்.


பஞ்ச பூத தலங்களில் வாயு தலமான காளஹஸ்தியில் கருவறையில் மட்டும் குளிர்ந்த காற்று சுழல்வதை நாம் உணரலாம்.

கண்ணப்பர் வேடுவ குலத்தில் பிறந்தவர். இறைவன் மீது கொண்ட அன்பினால்,தனக்கு தெரிந்த வகையில் பூஜை செய்தார். தாம் வேட்டையாடிய மாமிசத்தை படைத்தார். தன் கொண்டையில் இருந்த பூவை கொண்டு அலங்காரம் செய்தார். தன் வாயில் உள்ள நீரை வைத்து அபிஷேகம் செய்தார். இதை எல்லாம் மறைந்து இருந்து பார்த்த அந்தணர் திகைத்தார். அடுத்தது நடந்தது தான் முக்கியமான பரீட்சை.

சிவனாரின் ஒரு கண்ணில் கண்ணீராக செந்நீர் வழிந்தது. அதிர்ந்த கண்ணப்பர், தன் ஒரு கண்ணை நொண்டி, சிவலிங்கத்தில் வைத்தார். அடுத்த கண்ணிலும் குருதி வழிய தொடங்கியது. 

தன் செருப்பணிந்த கால்களை ஒரு கண்ணில் அடையாளமாக வைத்து, தன் இன்னொரு கண்ணையும் நோண்டி எடுக்க முனைந்தார் கண்ணப்பர். 
நம்மில் பலருக்கு  இறைவன் நமக்கு நல்லது செய்தால் மட்டுமே அவர் இருக்கிறார். நமக்கு வாழ்க்கையில் கொஞ்சம் துன்பங்கள் வந்தால் கூட, கடவுள் என்ற ஒருவர் இருக்கிறாரா என்பதான புலம்பல்கள் ஆரம்பித்து விடும்.

கண்ணப்பரின் அன்பு, இறைவனிடம் எதையும் எதிர்பார்க்காத அன்புக்கு ஒரு மிக சிறந்த உதாரணம்.

தமிழில் பல வகையான தூது இலக்கியங்கள் இருக்கின்றன. நாரை விடு தூது, கிளி விடு தூது முதலியன. 
இன்றைய காலகட்டத்தில் நமக்கு வகை  வகையான தொழில் நுட்பங்கள் இருக்கின்றன.
நம் மனதுக்கு நெருக்கமானவர்கள் வெளியூரில் இருந்தாலும் எளிதில் தொடர்பு கொள்ள முடிகிறது.

 அந்த நாட்களில், மனிதர்களிடம் சொல்ல முடியாத விஷயங்களை,குறிப்பாக பிரிவினால் வரும் துன்பத்தை சொல்ல  தம் மனதைத்தேற்றிக்கொள்ள இவ்வகை பாடல்கள் உதவி இருக்கின்றன.

இங்கே மணிவாசகர் தும்பியை தூது விடுகிறார். 

கண்ணப்பன் ஒப்பது ஓர் அன்பு இன்மை கண்டபின்
கண்ணப்பருக்கு இணையான அன்பு என்னிடத்தில் இல்லை என்று அறிந்தபின்னும் 

என் அப்பன்,என் ஒப்பு இல் என்னையும் ஆட்கொண்டருளி

என் அப்பன், எதனோடும் ஒப்பிட முடியாத என்னையும் ஆட்கொண்டு அருளி
வண்ணப் பணித்து
நன்றாக நினைவில் வையுங்கள். மணிவாசகர் அரசியலில் இருந்தார்; அமைச்சர் பதவியில் இருந்தார். இறை அனுபவம் தானாக அவருக்கு கிடைத்தது. அதனால் எப்படி இருக்க வேண்டும் என்ற வகையையும் இறைவன் எனக்கு சொல்லிக்கொடுத்தான் என்கிறார்.

என்னை `வா' என்ற வான் கருணைச்

சுண்ணப் பொன் நீற்றற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!

என்னைத் தில்லைக்கு வருக என்று அருளிய,  வானளவு கருணையுள்ள  பொடி பூசிய அழகிய திருநீறு அணிந்த சிவனாரிடம் சென்று ஊதுவாய் தும்பியே.

இறைவனைக்காண ஏங்கும் மணிவாசகரின் திருக்கோத்தும்பி பாடல் இது.

மதுரைக்கு சென்றால் அவசியம் திருவாதவூருக்கும் போய் வாருங்கள்.

Sunday, August 07, 2016

ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள !- மகிழ்ச்சியின் மொத்த அனுபவம்

இன்றைய சூழலில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று எந்த மனிதனும் சொல்வது இல்லை.
முன்பு தீபாவளிக்கு வாங்கும் ஒற்றை சேலையில் இருந்த சந்தோஷம் இன்று மாதம் இரண்டு சேலையாவது வாங்குவோருக்கு நிச்சயம் இல்லை.

 துய்ப்பதே இன்பம் என்று நினைத்தோம். ஆனால் நிறைவு என்பது வாழ்க்கையில் இல்லாமல் போய் விட்டது.

மட்டற்ற மகிழ்ச்சியில் இருக்கிறேன் என்பதை எப்படி சொல்வீர்கள்?

மட்டற்ற மகிழ்ச்சி  என்பதற்கு வைரமுத்துவின் மடை திறந்து தாவும் நதி அலை நான் பாடல் தான் ஞாபகம் வருகிறது.

ஆனால் இந்த பாடல் சொல்வதும், அந்த நிமிட சந்தோஷம் தான் .

யாருடைய அழகையாவது  வர்ணிக்க வேண்டுமென்றால், ஆயிரம் கண்கள் வேண்டும் என்கிறோம்.


சுந்தர மூர்த்தி நாயனார் சிதம்பரம் கோயிலுக்கு சென்ற போது, இறைவனின் நடனத்தை எப்படிக்கண்டார்? அவருக்கு ஆயிரம் கண்கள் தேவைப்பட்டதா? மனம் எத்தகைய மகிழ்ச்சியை அனுபவித்தது என்பதை சேக்கிழார் பெருமான் சொல்லும் பெரிய புராணப்பாடல் இதோ.

 ஐந்துபேர் அறிவும் கண்களே கொள்ள
அளப்பரும் கரணங்கள் நான்கும்
சிந்தையே ஆகக் குணம்ஒரு மூன்றும்
திருந்துசாத் துவிகமே ஆக
இந்துவாழ் சடையான் ஆடும்
ஆனந்த எல்லையில் தனிப்பெருங்கூத்தின்
வந்தபேர் இன்ப வெள்ளத்துள் திளைத்து
மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார்.

ஐந்துபேர் அறிவும் கண்களே கொள்ள

மனிதனுக்கு புலன் வழி அறிவுகள் ஐந்து.அவை  கண், மூக்கு, செவி, வாய் மற்றும் மெய் வாயிலாய் இயங்குவன.


காதுகளும், செவிகளும், மூக்கும், மெய்யும், கண்களாக செயல் புரிந்தால் எப்படி இருக்கும்? அதை தான் ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள என்கிறார் சேக்கிழார்.
மனது ஒரு நிலைப்பட்டிருப்பதால், எல்லா புலன்களும் கண்களாக 
செயல்பட்டு இறை அனுபவம் சுந்தரருக்கு கிட்டியது.

அளப்பரும் கரணங்கள் நான்கும்

சிந்தையே ஆக

மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் நான்கும் அந்தக்கரணங்கள் என்று சொல்லப்படுகின்றன. இதில் சித்தம் மட்டுமே செயல்பாட்டில் இருக்க, மனம், புத்தி மற்றும் அகங்காரம் எந்த செயலும் இல்லாமல் அடங்கி இருக்கின்றன. சித்தம் சிவனை மட்டுமே காண்கிறது. 

குணம்ஒரு மூன்றும்
திருந்துசாத் துவிகமே ஆக

ரஜோ குணம், தமோ குணம், சத்துவ குணம் ஆகிய மூன்று குணங்களில், சத்துவ குணமே மேலோங்கி இருக்க.

இந்துவாழ் சடையான் 

சந்திரன் இருக்கின்ற சடையினை உடைய சிவபெருமான் 

ஆடும்
ஆனந்த எல்லையில் தனிப்பெருங்கூத்தின்
வந்தபேர் இன்ப வெள்ளத்துள் திளைத்து

இப்போது தான் திரு.இலங்கை ஜெயராஜ் அவர்களின் ஒரு சொற்பொழிவைக்கேட்டு கொண்டிருந்தேன். தமிழிலே இன்பத்தை சிற்றின்பம், பேரின்பம் என்று பிரித்தார்கள். உலகத்தில் உள்ளவற்றால், நம் புலன்கள் வழி கிடைப்பது சிற்றின்பம். உதாரணத்திற்கு ஒரு பாயசத்தைகுடிக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். இதில் சுவைப்புலன் நாவின் வழி அந்த இன்பத்தை அனுபவிக்கிறது.
பாயசத்தில் உள்ள ஏலம் மூக்கு வழி நுகர் புலனுக்கு இன்பம் தருகிறது.
ஐந்து புலன்களும் இன்பம் அனுபவிக்கிற ஒரு இன்பம் உலகில் உண்டு. அதுவே ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் தருகின்ற இன்பம். ஆனால் இது சிற்றின்பம், உலகில் உள்ள சில பொழுதுகளில் மட்டும் தீரும் இன்பம், 

அனால் இறைவனை அனுபவிக்கிற இன்பம் என்பது, இன்பத்தில் நிலையானதாக இருக்கும். அதில் நாம்  கரையுமாறு இருக்கும் என்றார்.

கண்ணில்லா மனிதர் யானையைபற்றி விளக்குவதாக தான் இருக்கிறது. நான் எழுதும் இவ்வரிகள். 


பேரின்பத்தை அனுபவிக்காத ஒருவர் எப்படி இதை விளக்க முடியும்?

திளைத்து என்ற சொல் இங்கே கவனிக்க தக்கது. சாதாரணமாக வெள்ளத்தில் மாட்டிக்கொள்ளும் ஒரு மனிதன் அதிலிருந்து மீண்டு வெளியில் வர வேண்டும் என்று தான் நினைப்பான். ஆனால் இங்கு இறைவன் தரும் பேரின்ப வெள்ளத்தில் திளைத்து என்கிறார் சேக்கிழார்.

திளைத்து என்ற சொல் மகிழ்ச்சியில் மூழ்கி, இன்னும் இதிலேயே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பதை சுட்டுகிறது.

அதற்கு அடுத்த அடி இன்னும் சுகம். 
மாறிலா மகிழ்ச்சியில் மலர்ந்தார்.

நாம் உலகில் அனுபவிக்கும் எந்த மகிழ்ச்சியும் அடுத்த நிமிஷமோ,நாளோ, மாதமோ மாற கூடியது. மாற்றம் இல்லாத, மகிழ்ச்சியில் இருந்த சுந்தரர், அந்த மகிழ்ச்சியில் தானும் இறைவனின் திருவடித்தாமரையில்  மலர்ந்தார்.