Saturday, September 25, 2021

ஆயிரத்தில் ஒருவன் -திருஆக்கூர் (தான்தோன்றி மாடம்)-சிறப்புலி நாயனார் புராணம்

 இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்

உள்ளுள் உவப்பது உடைத்து.(குறள்:1057)

இகழ்ந்து, கேலி செய்யாது, கொடுத்து உதவுபவரைக்கண்டால், உதவி கேட்பவரின் மனம் உள்ளுக்குள் மகிழும் என்கிறார் திருவள்ளுவர். 

மனதில் அருள் இருந்தால் மட்டுமே, இரப்பவரை கேலி செய்யாமல், அவர்கள் மனம் மகிழுமாறு உதவ முடியும். 

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று வள்ளலார் பெருமான் அருளுக்கு உருவம் ஆனார். 

இன்றைய கொரோனா பெருந்தொற்று காலத்தில் பலருக்கும் பல வித துன்பங்கள்!.

 நிறைய பேர் வேலை இழக்கின்றனர். தானத்தில் பெரிதாய் சொல்லப்படும் அன்னதானத்தை முடிந்தவர்கள் மனமுவந்து செய்யவேண்டியது இப்போது தான். 

இறைவனுக்கு பால், தயிர், மஞ்சள், தேன்,சந்தனம், இளநீர், விபூதி போன்ற திரவியங்கள் அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இவை எல்லாவற்றிலும் சிறப்பானது ஐப்பசி பௌர்ணமி நாளில் செய்யப்படும் அன்னாபிஷேகம். 

அன்னம் பரப்பிரம்மம் . ஒருவர் என்ன வகையான உணவை சாப்பிடுகிறாரோ, அதைக்கொண்டு, அவர்களின் குணநலன்கள் இருக்கும் என்று ஸ்ரீமத் பகவத் கீதையிலும் சொல்லப்பட்டிருக்கிறது. 

தான்தோன்றி என்ற சொல் இலங்கை போன்ற நாடுகளில், தானாக மனம் போன போக்கில் நடப்பவரைக்  குறிப்பிடும் சொல்லாக இன்றைய நாளில் இருக்கிறது. முகக்கவசம் அணியாமல் தான்தோன்றியாய் அலைகிறார்கள் என்று திட்டுகிறார்கள்.

தான் தோன்றி என்ற சொல் மறைந்து இன்றைய தமிழக நாளிதழ்கள் பரவலாக சுயம்பு என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றன.

சுயம்பு என்ற சொல் வடமொழி மூலம் கொண்டது. தான் தோன்றி என்ற சொல்லே தமிழ் மூலம் உடையது.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை தானாக தோன்றி  சுயம்புவாக இறைவன் காட்சியளித்த தலங்கள் பல இருக்கின்றன. அவற்றில், உறையூர் தான்தோன்றிநாதர் கோயில், கரூர் பக்கத்திலிருக்கும் வைணவ ஆலயமான தான்தோன்றிமலை, மற்றும் திரு ஆக்கூர் எனப்படும் தான்தோன்றிமாடத்தில் இருக்கும் சிவாலயம் போன்வையும் அடங்கும்.

தான்தோன்றிமாடம் எனப்படும் திருஆக்கூரின் சிறப்பு, இங்கு அரசர் ஒருவர் ஆயிரம் பேருக்கு செய்த அன்னதானத்தில், ஒருவர் குறைவாக இருக்க, ஆயிரமாவது நபராக- ஆயிரத்தில் ஒருவராக, சிவபெருமான் வந்து உணவருந்தினார். இன்றும் உற்சவருக்கான திருநாமம் ஆயிரத்தில் ஒருவன்;கையில் கோலேந்தி நிற்கிறார்.
  
மாடக்கோயில்கள் என்னும் வகையான கோயில்கள் தமிழகத்திலுள்ள பலவகையான கோயில்களில் ஒரு வகை.

மாடக்கோயில் மற்றும் கரக்கோயில் :
(உள்படம்: திருக்கடம்பூர் ஆலயம் )

தேர் போன்ற அமைப்புள்ள கருவறை உள்ள கடம்பூர் கரக்கோயில் வகையை சார்ந்தவை. 

மாடக்கோயில் என்பது யானை ஏறமுடியாத வகையில் படிக்கட்டுகளோடு அமைந்த கருவறைக்கொண்டவை.

குடவாசல், அம்பர்மாகாளம், திருமருகல், திருஆக்கூர் எனப்படும் தான்தோன்றிமாடம் போன்றக் கோயில்கள் மாடக்கோயில் வகையை சேர்ந்தவை. 



Attribution: Ssriram mt, CC BY-SA 4.0 <https://creativecommons.org/licenses/by-sa/4.0>, via Wikimedia Commons for the picture of Kudavasal


நாம் இந்தப்பதிவில் பார்க்கப்போவது திருஆக்கூர் என்னும் தான்தோன்றிமாடம் பற்றிய பாடல்களைத்தான்!
அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரான கோச்செங்கணான் என்னும் மன்னன் எழுப்பிய 64 மாடக்கோயில்களில் ஒன்று திருஆக்கூர் எனப்படும் தான்தோன்றி மாடத்தில் அமைந்துள்ள சிவாலயம் ஆகும்.
சிறப்புலி நாயனாரின் ஊர் திருஆக்கூர்.

 இந்தப்பதிவில் ,பெரியபுராணத்தில் வரும் சிறப்புலி நாயனார் பற்றிய பாடல்களைப் படித்து உணரப்போகிறோம். 

சிறப்புலி நாயனாரைப் பற்றி பெரியபுராணத்தில் ஆறு பாடல்கள் இருக்கின்றன. சிறப்புலி நாயனார், சிவனடியார்களுக்கு அமுதூட்டும் தொண்டினைத்  தன் வாழ்நாள் முழுவதும் செம்மையாகச் செய்தார். 

சிறப்புலி நாயனார், 63 நாயன்மார்  வரிசையில் முப்பத்தைந்தாவது நாயன்மார். இவருக்கு அடுத்து வருபவர், பிள்ளைக்கறியோடு திருஅமுதுபடைத்த சிறுத்தொண்ட நாயனார் என்பது குறிப்பிடத்தக்கது 


Friday, April 02, 2021

சிவபெருமானின் திருவடியைக்காண விளமல் செல்வோம்!

 

நாம் எல்லாரும் பரவலாக அறிந்த எழுத்தாளர் திரு.கோமல் ஸ்வாமிநாதன். எனக்கு விளமல் என்ற ஊரின் பெயரைக் கேட்டதும் கோமல் ஞாபகம் வந்தது. இரண்டு ஊர்களுமே திருவாரூர் அருகில் இருக்கின்றன. 

பதஞ்சலி மனோஹரர் கோயில்,விளமல்



இந்த கோயில் திருவாரூரிலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. 

இம்மையே உம்மை சிக்கென்னப்பிடித்தேன் என்று மாணிக்கவாசகர் ஈசனின் திருவடியைத்தான் பற்றினார். இறைவனின் திருவடிப்பெருமையை நமக்கு உணர்த்தும் தலம் விளமல். 

பதஞ்சலி என்பது இன்றைய அளவில் வர்த்தகபெயராக  பலரும் அறிந்த ஒரு பெயர். பதஞ்சலி முனிவர் யோக சூத்திரத்தை எழுதியவர் .பாதி உடலில் பாம்பின் உருவம் கொண்டவர்.

நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின்

நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி

மன்று தொழுத பதஞ்சலி வியாக்ரமர்

என்றிவர் என்னோ டெண்மரு மாமே.  

இந்த திருமந்திரத்தில் திருமூலர், தம்மோடு சேர்த்து, சிவபெருமானின் (நந்தியின்) அருள் பெற்ற நால்வரான சனகர், சனந்தனர், சனாதனர் , சனற்குமாரர், சிவயோக முனிவர் பதஞ்சலி முனிவர் மற்றும் வியாக்கிரபாத முனிவர் ஆகிய எட்டுப்பேரையும் குறிப்பிடுகிறார். 

சிதம்பரம் கோயில்- தில்லை, ஆதித்தலமாக போற்றப்படுவதாகும்.

சிதம்பரம் கோயில், பதஞ்சலி முனிவரும்,வியாக்கிரபாத  முனிவரும் ஆனந்த தாண்டவத்தைக் காண தவம் செய்ததால், அவர்களுக்கு சிவபெருமான் ஆனந்த தாண்டவத்தைக்காட்டி அருளிய தலம் . 

அதே போல  அஜபா நடனமும், திருவடித்தரிசனமும் அவர்கள் இருவரும் வேண்ட, அஜபா நடனத்தை அவர்கள் இருவருக்கும் திருவாரூரில் காட்டி அருளினார்.

பதஞ்சலி முனிவர், மண்ணால் ஆன சிவலிங்கத்தைப்பிடித்து விளமல் தலத்தில் வழிபட்டதால், அவர் பெயரோடு சேர்த்து, பதஞ்சலி மனோஹரர் என்று இறைவனும் அழைக்கப்படுகிறார். 

இந்த விளமல் தலத்தில் ,  பதஞ்சலி முனிவரும், வியாக்கிரபாத முனிவரும் திருவடித்தரிசனம் அருளப்பெற்றனர். 

இங்கு கோயில் கொண்டிருக்கும் அம்மையின் பெயர் மதுரபாஷினி . இன்றும் வாய்ப்பேச்சு வராத குழந்தைகளுக்காக பிரார்த்தனை செய்துகொள்ளும் கோயிலாகவும் இந்த கோயில் இருக்கிறது. 

திருஞானசம்பந்த பெருமான் விளமல் திருப்பதிகத்தில்,  இறைவனின் திருவடியைப் பற்றிப் பாடுகிறார். 

அந்தப்பதிகத்தின் பாடல்கள் சிலவற்றைத்தான் இந்தப்பதிவில் பார்க்கப்போகிறோம்.

மத்தக மணிபெற மலர்வதொர்

  மதிபுரை நுதல்கரம்

ஒத்தக நகமணி மிளிர்வதொர்

  அரவினர் ஒளிகிளர்

அத்தக வடிதொழ அருள்பெறு

  கண்ணொடும் உமையவள்

வித்தகர் உறைவது விரிபொழில்

  வளநகர் விளமரே.  (03-088)


அருள்பெறு கண்ணோடும் உமையவள் -அருளை பொழிபவள் அம்பிகை, அருள் நிறைந்த கண்களை உடையவள். அடியவரின் துயரம் பொறுக்காது, அருள் செய்பவள் 

வித்தகர்- வித்தகர்- ஞானம் உடையவர்,சிவபெருமான். பல திருப்புகழ்களில் அருணகிரிநாதரும் வித்தகா என்று முருகப்பெருமானைப் போற்றியுள்ளார்.  வித்தகா என்ற சொல் ஞானமூர்த்தி என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

உறைவது விரிபொழில்

  வளநகர் விளமரே-அம்பிகையும் சிவபெருமானும் உறைகின்ற விரிந்த சோலைகள் சூழ்ந்த வளமான நகர் விளமல் 

மத்தகம் அணி (அழகு) பெற,  -மத்தகம் என்ற சொல்லை , யானையின் நெற்றிக்கு தான் இப்போது பயன்படுத்துகிறோம். 

அண்மையில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் எழுதிய குறுநாவல் ஒன்றின் பெயர் மத்தகம் .

மத்தகம் என்பது சிவபெருமான் தலையின் மேல் என்ற பொருளில் இந்த பதிகத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த தலையின் முகப்புப்பகுதிக்கு அழகு சேர்க்குமாறு,

மலர்வது ஓர் மதி -ஒரு பிறை சந்திரன் மலர்ந்திருக்கிறது. பூவைப்போல, மதியை மலர்ந்திருக்கிறது என்று சொல்கிறார் சம்பந்தப்பெருமான்.

புரை நுதல்-புரை (ஒத்த)- நுதல் (நெற்றி)- இந்த நெற்றி அழகுக்கு அந்த நெற்றியைத்தவிர ஈடாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை. 

நகமணி ஒத்தக-கரங்களில் உள்ள நகங்களைப்போல 

  மிளிர்வதொர்

  அரவினர் -ரத்தினங்களை வாயில் கொண்ட ஐந்து தலை நாகத்தை 

ஒளிகிளர் கரம்-ரத்தினங்களின் ஒளி மிளிர்கின்ற பாம்பினைத்தன். தன் கையில் கங்கணமாகச்சூடியிருப்பவர் சிவபெருமான்.

அத்தக வடிதொழ- அவரின் மேலான திருவடியைத்தொழ, நாம் விளமலுக்குச் செல்வோம் 

அதே பதிகத்தின் மற்றொரு பாடல் :

பண்டலை மழலைசெய் யாழென

  மொழியுமை பாகமாக்

கொண்டலை குரைகழ லடிதொழு

  மவர்வினை குறுகிலர்

விண்டலை யமரர்கள் துதிசெய

  அருள்புரி விறலினர்

வெண்டலை பலிகொளும் விமலர்தம்

  வளநகர் விளமரே.

இந்தப்பாடல் சொல்வது சிவபெருமான் அடியவர்களை வினைகள் சாராது என்னும் நம்பிக்கை மொழி. 

பண்டலை மழலைசெய் யாழென

  மொழியுமை பாகமாக்

கொண்டு 

பண் தலை மழலை செய் யாழ் என மொழி உமை பாகமாக கொண்டு-

சிலர் பேசுவதே பாடுவதைப்போல இருக்கும். உமை அம்மையின் பேச்சு, பண்ணோடு கூடிய இசை மழலையாக இருக்கிறது. அது யாழின் இனிமையை ஒத்ததாக இருக்கிறது. இத்தனை இனிமையான பேச்சுமொழியைக்கொண்ட உமையவளைத்தன் உடலில் ஒரு பாகமாகக்கொண்டவர் சிவபெருமான் .

அலை குரைகழ லடிதொழு

  மவர்வினை குறுகிலர்-அலை (அசைகின்ற), குரை (ஒலிக்கும்), கழலடி தொழும் ,அவர் வினை குறுகிலர்.

வீரக்கழல் அணிந்திருக்கும் சிவபெருமானின் திருவடியைத்தொழுபவர்க்கு வினைகள் சாராது. 

விண்டலை யமரர்கள் துதிசெய

  அருள்புரி விறலினர்- விண் தலை அமரர்கள் (தேவர்கள்),துதி செய்ய அவர்களுக்கு அருள்செய்யும் விறலினர் (அருட்பெருக்கோடு கூடிய வலிமை உடையவர்) சிவபெருமான். 

வெண்டலை பலிகொளும் விமலர்தம்

  வளநகர் விளமரே."பிரம்மன் தலையாம் ஓடுடையார் " என்று திருக்கழிப்பாலை தேவாரத்தில் ஒரு வரி வரும். அதே தான் இங்கும் சொல்லப்படுவது. 

பிரம்மன் தலையை ஓடாகக்கொண்டு , வீடுகள் தோறும் பலி ஏற்றவர் சிவபெருமான். 

விமலர்- பாசம் என்னும் பற்று நீக்கியவர்; தெளிவானவர். அந்த விமலனாகிய சிவபெருமான் வீற்றிருப்பது, வளநகராகிய விளமல் ஆகும். 

அந்த சிவபெருமானின் திருவடியைத்தொழ தொழ, நமக்கும் மனதில்  தெளிவு பிறக்கும், வினைகள் நம்மை வந்து சேராது. 

இந்தக்கோயில் பற்றிய மேல் விவரங்களுக்கு, திரு.வேலுதரன் அவர்களின் இணையப்பக்கத்தையும் கொடுத்துள்ளேன் 

https://veludharan.blogspot.com/2021/03/vilamal-patanjali-manohar-temple.html

Saturday, March 13, 2021

மனக்கவலை மாற்றும் திருக்கோளிலி தேவாரம்!

 சப்த விடங்க தலங்களில் ஒன்று திருக்கோளிலி. உளியைக்கொண்டு செய்யப்படாத, சுயம்புமேனி சிவலிங்கங்களைக்கொண்ட தலங்கள் சப்தவிடங்க தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவற்றில், ஆதித்தலமான திருவாரூரும் ஒன்று. 

திருக்கோளிலி தலத்தில் தேவார மூவரும் பாடியிருக்கிறார்கள். எத்தனை அறிவியல் முன்னேற்றங்கள் இருந்தாலும், மனக்கவலையோடு, இங்கே தூக்கம் தொலைத்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். 

உலகமே கொரோனா தீநுண்மியின் தாக்கத்தில், பயணங்கள் இல்லாமல், ஸ்தம்பித்துபோய் இருக்கும் இந்தக்காலத்தில், நம் அனைவரின் மனதிலும்  எதிர்காலம் பற்றிய கவலை இல்லாமல் இல்லை.

கோள் என்ற சொல் இந்தத்தேவாரத்தில், மாறுபாடு, நவகிரஹங்களால் ஏற்படும் துன்பம் என்ற பொருளில் ஞானசம்பந்தப்பெருமானால் கையாளப்பட்டிருக்கிறது. இந்தப்பதிவில் உள்ள தேவாரப்பாடல், முதல் திருமுறையில் உள்ள தேவாரப்பதிகம் ஆகும் (01-062).

இன்றைய நாளில் இந்த ஊரின் பெயர் திருக்குவளை என்றும் சொல்கிறார்கள். குவளை மலர்களால் தினமும் அர்ச்சனை செய்யப்படுகிறது. 


குவளை என்பது அல்லிமலரைக்குறிக்கும். நீர் வளமுள்ள நிறைய குளங்கள் அமைந்திருக்கும் பகுதியில் அமைந்த சிவாலயம். 

அல்லி மலரை, ஆம்பல் ,செங்கழுநீர் என்றும் சொல்கிறார்கள். சென்னையில் திருவல்லிக்கேணி அல்லி மலர்கள் அதிகம் இந்தப்பகுதி. 

இப்போது கலங்கிய நீரை தெளிவாக்குவதற்குக்கூட ரசாயனங்களைப்பயன்படுத்துகிறோம். சென்னை போன்ற நகரங்களில், குடிநீரை காசுக்கொடுத்து வாங்குபவர்கள் அதிகரித்து வருகிறார்கள். 

இந்தத்திருக்கோளிலி தலத்தின் தலவிருட்சம் தேற்றா மரம். கலங்கிய நீரில் இந்த மரத்தின் கொட்டைகளை அரைத்துப்போட்டால், தெளிந்த நீர் கிடைக்கும். எந்த விதமான உடல் நலிவு உள்ளவர்களையும் தேற்றும் வகையானது இந்த தேற்றா மரம். 


கிளை கிளைக்கும் :

நாளாய போகாமே 

  நஞ்சணியுங் கண்டனுக்கே

ஆளாய அன்புசெய்வோம் 

  மடநெஞ்சே அரன்நாமம்

கேளாய்நங் கிளைகிளைக்குங் 

  கேடுபடாத் திறம்அருளிக்

கோளாய நீக்குமவன் 

  கோளிலியெம் பெருமானே

அறியாமை உடைய மடநெஞ்சே!. நாளை என்று தள்ளிப்போடாமல், இன்றே நஞ்சைத்தன் தொண்டையில் அடக்கி, தம் அடியவரைக்காத்த திருநீலகண்டரை நினைந்து அன்பு செய். அரன் நாமத்தைக்கேள். அதனால், உன் கிளை, கிளைக்கும். நீ மட்டுமல்ல, உன் சுற்றத்தினரின் (கிளை) துன்பங்களும் தீரும். கேடுபடாத திறம் அருளி (துன்பம் இல்லாத வகை அருளி) ,கோள்களால் ஏற்படும் துன்பத்தையும் போக்குவான் திருக்கோளிலியில் வீற்றிருக்கும் எம்பெருமான். 

ஆடரவத் தழகாமை யணிகேழற் கொம்பார்த்த
தோடரவத் தொருகாதன் துணைமலர்நற் சேவடிக்கே
பாடரவத் திசைபயின்று பணிந்தெழுவார் தம்மனத்தில்
கோடரவந் தீர்க்குமவன் கோளிலியெம் பெருமானே.

மலர்போன்ற மென்மையான சேவடிகளைக்கொண்டவர் சிவபெருமான். அவ்ரதுதிருவடிகளை மென்மையான குவளை மலர்களைக்கொண்டு அர்ச்சிப்பது எத்தனை பொருத்தம் கொண்டது!

கேழல்- பன்றி 

ஆடரவத்து-ஆடுகின்ற பாம்பை அணிந்து 

அழகு ஆமை அணி - அழகிய ஆமை ஓட்டையும்  

கேழல் கொம்பு ஆர்த்த -பன்றியின் கொம்பையும் மாலையாகக்கோர்த்து அணிந்திருக்கிறார் சிவபெருமான். 

தோடு அரவத்து ஒரு காதன்- ஒரு காதில் பாம்பே தொடங்க இருக்கிறது (ஒப்பிட்டு நோக்க. தோடுடைய செவியன் )

துணைமலர் நல்சேவடிக்கே -இருமலர்களைப்போன்ற மென்மையான சேவடியை 

 பாடு அரவத்து இசை பயின்று பணிந்தெழுவார்  - பாட்டோசையுடன் துதிபாடல்களைப்பாடி தொழுபவர்களுக்கு 

தம்மனதில் கோடு அரவம் தீர்க்குமவன் கோளிலி எம்பெருமானே-

மனதில் உள்ள மாறுபாட்டை நீக்குபவர் திருக்கோளியில் உள்ள திருக்கோளிலி நாதர் ஆவார்.



இந்தத்தலத்தில் மற்றொரு அற்புதம் சுந்தர மூர்த்தி நாயனாருக்காக குண்டையூர் கிழார் கொடுத்த நெற்பொதிகளை சுமந்து வர ஆட்கள் இல்லாமல் போகவே, சுந்தரமூர்த்தி நாயனார், நீள நினைந்தடியேன் எந்தத்தொடங்கும் தேவாரப்பாடலைப்பாடியவுடன், பூதகணங்கள் அவருக்கு உதவின. இதை மாசிமகத்தன்று ஒரு திருவிழாவாக இன்றும் கொண்டாடுகின்றனர்.

Monday, January 04, 2021

வடதிருமுல்லைவாயில் -லயம் ஜதி பிழையாத நடனம் !- திருமுல்லைவாயில் சுந்தரர் தேவாரம்- ஏழாம் திருமுறை

கூடிய இலயஞ் சதிபிழை யாமைக்

    கொடியிடை உமையவள் காண

ஆடிய அழகா அருமறைப் பொருளே

    அங்கணா எங்குற்றாய் என்று

தேடிய வானோர் சேர்திரு முல்லை

    வாயிலாய் திருப்புகழ் விருப்பால்

பாடிய அடியேன் படுதுயர் களையாய்

    பாசுப தாபரஞ் சுடரே!

திருமுல்லைவாயில் சுந்தரர் தேவாரம்- ஏழாம் திருமுறை 



(Picture Courtesy: Veludharan.blogspot.com)

திருமுல்லைவாயில் பாடல் பெற்ற 22வது தொண்டை நாட்டுத்தலம்.மேலே உள்ள சிற்பம், தலவரலாற்றைக்குறிக்கிறது.

 தொண்டைமானின் யானையின் கால்களில் முல்லைக்கொடி சுற்றிக்கொண்டது. அவற்றை நீக்கும் போது, எழுந்த குருதியில் தான் இந்தத்தலம் சிவபெருமானின் உறைவிடம் என்று அறியப்பட்டது

பல ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை அடையாற்றில் உள்ள புற்றுநோய் மையத்தில் பணியாற்றிய திரு.செல்வம் என்பவரின் குழுவோடு சேர்ந்து உழவாரப்பணி செய்யும் பேறு கிட்டியது. நாங்கள் சென்ற கோயில் ஆவடிக்கு அருகில் உள்ள வடதிருமுல்லைவாயில். 



டிசம்பர் 25, 26, 27 தேதிகளில் சிங்கப்பூரில் நடந்த நாற்பதாவது திருமுறை மாநாட்டில், மேலே கொடுத்துள்ள பாடலை, மாணவியர்கள் அருமையாகப்பாடினார்கள். அவர்கள் பாடிய ராகம் காம்போதி (தக்கேசி பண்).



அதைக்கேட்டபோது மீண்டும் திருமுல்லைவாயில் பற்றிய நினைவுகளை அசைபோடலானேன். 

தோழராக இறைவனைப்பாவித்த சுந்தரர், கம்பீரம் கலந்தத்தொனியில் பாடுகிறார்.

பாடலின் பொருளைப்பார்ப்போம். 

கூடிய இலயஞ் சதிபிழை யாமைக்

    கொடியிடை உமையவள் காண

ஆடிய அழகா


எப்போதும் தாளத்தோடும் சுருதியோடும் அமைந்த பாடல் சுகமானது. மனக்கவலைகளை மாற்றும் அருமருந்தாக வல்லது. அப்படித்தான், அழகர் ஆடும் நடனமும், லயம் எனப்படும் தாளம் பிசகாமல் இருக்கிறது. அதைக்கொடியிடை கொண்ட அம்மை பார்க்கிறாள். இந்த வடதிருமுல்லைவாயிலில் உள்ள அம்மையின் பெயர் கொடியிடை அம்மை. 

அருமறைப் பொருளே

மூவர் பாடிய தேவாரப்பாடல்களில் பல இடங்களில் வேதமாகவும், வேதத்தின் பொருளாகவும் சிவபெருமான் போற்றப்படுகிறார். சுந்தரரும், அருமறையின் பொருளே என்று பாடுகிறார். 

 அங்கணா எங்குற்றாய் என்று

தேடிய வானோர் சேர்திரு முல்லை

    வாயிலாய்

அழகான கண்களை உடையவனே (அங்கணா). ஸ்ரீரங்கம் ரங்கநாதப்பெருமானின் கமலக்கண்ணழகைப்பாடும் பாசுரங்கள் பல. சிவபெருமானின் கண்ணழகைபோற்றும் தேவாரம் இது. 

நீ எங்கே இருக்கிறாய் என்று உன்னைத்தேடிய வானவர்களுக்கு கூட அகப்படாமல், நீ இந்தத் திருமுல்லைவாயில் தலத்தை சேர்ந்தாய். 

திருப்புகழ் விருப்பால்

பாடிய அடியேன் படுதுயர் களையாய்

    பாசுப தாபரஞ் சுடரே!

உனது திருப்புகழைப்பாடுகின்ற விருப்பத்தோடு, பல தலங்களுக்கும் சென்று பாடும் எனது, துயரத்தை (துன்பத்தை) போக்குவாய்.

பாசுபதா- உயிர்களின் தலைவனே
பரஞ்சுடரே- மேலான ஒளி போன்றவனே.

இந்தப்பாடலில் திருப்புகழ் என்ற சொல் வருகிறது.


 பின்னாளில் வந்த அருணகிரிநாதர் திருப்புகழ் இந்தத்தலத்திலும் பாடியிருக்கிறார். Thirupugazh link:

இந்தத் திருப்புகழில் சிவபெருமான் நடனம் ஆடுவது பற்றிக்குறிப்பிடப்படுகிறது. உன் அடியார்களோடு சேர்ந்து, சிறந்த நெறியைப்பிடித்தொழுகும் வாழ்வை எனக்குத்தருவாய் என்று அருணகிரியார் இறைஞ்சுகிறார். 

வள்ளலார் பாடல் :

தேன் என இனிக்கும் திருவருட்கடலே எனத்தொடங்கும் அருளியல் வினாவல் திருவருட்பாவில் சுந்தரா, சுந்தரன் தூதா என்று வள்ளலார், சிவபெருமானை அழகன் என்றும், சுந்தரமூர்த்தி நாயனாரின் தூதர் என்றும் பாடிப்பரவுகிறார். 

சுந்தரமூர்த்தி நாயனார், அருணகிரிநாதர், மற்றும் வள்ளலார் பாடியத்தலம் இது.

சென்னையை சுற்றி, திருவுடை(மேலூர்), வடிவுடை ( திருவொற்றியூர்) மற்றும் கொடியிடை (வடதிருமுல்லை வாயில்)அம்மன் கோயில்களுக்கு பௌர்ணமி தோறும் செல்லும் பக்தர்கள் கூட்டம் அதிகம்.

இதில் கொடியிடை அம்மன் க்ரியா சக்தியாவாள். நாம் சரியாகக்கேட்டால், அள்ளிதருவாள் அம்மை.

அம்மையையும் அப்பனையும் தரிசித்து வாருங்கள் !