Thursday, February 12, 2015

செடியாய வல்வினைகள் தீர்ப்பாய்!

விடிவதுமே வெண்ணீற்றை மெய்யிற் பூசி
வெளுத்தமைந்த கீளொடுகோ வணமுந் தற்றுச்
செடியுடைய வல்வினைநோய் தீர்ப்பா யென்றுஞ்
செல்கதிக்கு வழிகாட்டுஞ் சிவனே யென்றுந்
துடியனைய இடைமடவாள் பங்கா வென்றுஞ்
சுடலைதனில் நடமாடுஞ் சோதி யென்றுங்
கடிமலர்தூய்த் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே. 
                                                                                 (அப்பர் தேவாரம் 6.61.2)

இறைவனின் பெருமையைப் பாடுகின்ற தேவாரப்பதிகங்களில்,சாதாரண மக்களுக்குக்கான இறைவழிபாடு குறித்த 

அறிவுரைகளையும் இலைமறைக்காயாக அங்கங்கே புகுத்தியிருக்கிறார் அப்பர் பெருமான்.

1.எப்போது வழிபட வேண்டும்? 

வழிபாட்டுக்கு மிக உகந்த நேரமாக சொல்லப்படுவது, அதிகாலைப்பொழுது.

நாம் அதிகமாய் அறிந்த திருப்பாவையும், திருவெம்பாவையும், வைகறைப்பொழுதில் எழுந்து, இறைவனை எண்ணி கசிந்துருகி வழிபட வலியுறுத்துகின்றன.


இப்போதெல்லாம்,தினமும் 
சீக்கிரம் எழுந்திருப்பவர்கள் குறைந்து வருகிறார்கள்.
பெரும்பாலானோர்க்கு, ஒரு பக்கம் வேலை பளு; மற்றவை நாமாக வரவழைத்துக்கொள்ளும், எண்ண சிதறல்கள் (இரவில் நெடு நேரம் கைப்பேசி, கணிணி என)- அதனால் நேரமாக தூங்க முடிவதில்லை.

சின்னப்பிள்ளைகள் கூட சொல்கின்றன- பள்ளி நாட்களில் ஒரு நேரத்திலும், விடுமுறையில்,வேறு நேரத்திலும், எழுகிறோம் என.


 ஒப்பிட்டுக்காண்க:.
மலர்ந்த மலர்த்தூவி மாமனத்தைக்கூப்பிப்
புலர்ந்தும் புலராத போதும்-கலந்திருந்து
கண்ணீர் அரும்பக்கசியவர்க்குக் காண்பெளியன்
செண்ணீர் சடைக்கரந்ததே!
(திருவிரட்டை மணிமாலை- கபில தேவர்)

விடிவதுமே திரு நீறு அணிந்து வழிபாட்டில் ஈடுபட வேண்டும் என்கிறார் அப்பர்.
கபில தேவரும், புலர்ந்தும் புலராத பொழுதில் வழிபட வேண்டும் என்கிறார்.

அதிகாலையில் கோயிலிலுக்கு சென்று, வழிபடும் போது, மனம் மிக எளிதாக, இறைவழிபாட்டில் ஒன்றும்.

எண்ணிலடங்கா பல சமய இலக்கியங்கள் 
அதிகாலையில் இறைவனை வழிபட வேண்டும் என்பதைச் சொல்லி, அப்படி வழிபட்டால்இறைவனின் திருவருள் கிட்டும் என்ற பயனையும் சொல்கின்றன.

2.என்ன எடுத்துச்செல்ல வேண்டும்?
இறைவன் மிக எளிய பொருட்களை சமர்ப்பித்தாலும் அவற்றை அன்போடு ஏற்றுக்கொள்கிறார்.

கோயிலுக்கு செல்லும் போது அன்று பூத்த அழகிய மலர்களை இறைவனுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்பதையும் பல தேவாரங்களில் சொல்கிறார் அப்பர்.

(காண்க: திருவான்மியூர் அப்பர் தேவாரம்)
விண்ட மாமலர் கொண்டு விரைந்துநீர் 
அண்டர் நாயகன் தன்னடி சூழ்மின்கள் 
பண்டு நீர்செய்த பாவம் பறைந்திடும் 
வண்டு சேர்பொழில் வான்மியூர் ஈசனே.

(விண்ட=மலர்ந்த; பறைந்திடும்- மறைந்திடும்)



மலர்கள் பிரார்த்தனைகளில் முக்கியத்துவம் பெற்றுள்ளன. 

பாண்டிச்சேரி அன்னையை வேண்டுவோர், தம் வீடுகளில் மலர்களால் அவர் படத்தின் முன்னே அலங்கரித்து வழிபடுவதைக்காணலாம்.

மலர்களில் எத்தனைஆயிரம் ஆயிரம் வகைகள்!- தாமரை, அல்லி, அரளி, மல்லிகை, முல்லை,...... என. 

எத்தனை வகைகள், எத்தனை எத்தனை அமைப்புகள், வண்ணங்கள்!
http://enpadhivu.blogspot.sg/2014/11/blog-post.html

ஒரு சங்கப்புலவர் பாடிய  நூறு பூக்களின் பெயர்களை சமீபத்தில் கூட சினிமாவில் பார்த்ததுதான் நினைவுக்கு வருகிறது.

நாகலிங்கப்பூ- இதை பார்த்திருக்கிறீர்களா?

அழகாய் சர்ப்பக்குடையுடன், உள்ளே சிவலிங்கமுமாக.!!!


                                              (Courtesy: Nilal.com for the picture)
ஆம்-ஒவ்வொரு பூவுக்குள்ளும் ஒரு அதிசயம் இருக்கிறது.

பூப்பூத்ததை யார் பார்த்தது; பூக்கள் பூக்கும் தருணம் யாரும் பார்த்ததில்லையே என்று
அன்றாடம்  நம் காதில் விழும் பல திரைப் பாடல்கள், பூக்கள் கவிதைகளின் கருப்பொருளாய் இருப்பதையும் காட்டுகின்றன.

உண்மையில் பூக்களில் பஞ்ச பூதங்களின் அம்சம் இருக்கிறது. அவற்றின் மணமும், தோற்றமும்,
மலர்ச்சியும், சொல்லில் அடங்காத அதன் பண்பும், அவற்றை, இறைவனுடன் தொடர்புக்கொள்ளும் கருவியாக்குகின்றன.
இதனால் தான் பூஜைகளில் பூக்கள் முக்கியமாக இருக்கின்றன.

"மலர்ந்த மலர்த்தூவி மாமனத்தைக்கூப்பி":  கையில் உள்ள மலர்கள் மலர்ந்தும், நம் மனம் இறைவனை நோக்கிக்குவிந்தும் இருக்க வேண்டும் என்கிறார் கபில தேவர்!

3. நம் பிரார்த்தனை என்னவாக இருக்க வேண்டும்?

கார் வாங்க பணம் வேண்டும், வீடு வாங்க வேண்டும், பதவி உயர்வு வேண்டும், ...- இப்படியா?

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும் 
  உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் 
    பெருமைபெறும் நினது புகழ் பேசவேண்டும் பொய்மை பேசா திருக்க வேண்டும் .....- இப்படியா?இப்படிக்கேட்போர் நம்மில் எத்தனை பேர்?

மாணிக்க வாசகர் சொல்வார்- வேண்டத்தக்கது அறிவோய் நீ; வேண்ட முழுதும் தருவோய் நீ என.


பிறவிக்குக்காரணமான வினைகள் தீர வேண்டும் என்பது தான் சரியான வேண்டுதல்.! 

திருக்குறள் உள்பட பல நூல்கள் பிறவிப்பிணியைப்பற்றிப்பேசுகின்றன.

இந்த பதிவின் தொடக்கத்தில் உள்ள, திருகன்றாப்பூர் தேவாரத்தில்,செடியுடைய வல்வினைநோய் தீர்ப்பாய்: 
(செடி-துன்பம்).
துன்பத்தை உடைய/உண்டாக்குகின்ற
 வல்வினைகளைத்தீர்ப்பாய் என்று கேட்கிறார் அப்பர் பெருமான் .

ஒப்பிட்டுக்காண்க:

குலசேகர ஆழ்வாரின் பாசுரம்

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே 
நெடியானே வேங்கடவா நின்கோயிலின்  வாசல் 
அடியாரும் வானவரு மரம்பையரும் 
கிடந்தியங்கும் 
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே !

செடியாய = செடியைப்போல. 
செடி வெட்டினால் திரும்ப வேரூன்றுவதைப்போல பிறவி வரக்காரணமான வல்வினைகள், திரும்ப திரும்ப முளைக்கின்றன.
அத்தகைய வல்வினைகளைத்தீர்க்கும் திருமால் என்கிறார் குலசேகர ஆழ்வார்.

செடியாய என்று ஆழ்வாரும், செடியுடைய என்று அப்பர் பெருமானும், சொல்லுகிற வல்வினை நோய் தீரவேண்டும்;செல்கதிக்கு காட்ட வேண்டும் என்றும் நம் வேண்டுதல் இருக்க வேண்டும்.

இப்படி வேண்டுவோரின் நெஞ்சினுள்ளே இறைவனைக்காணலாம் என்கிறார் அப்பர் பெருமான்.

நடுதறி- கன்றினைக்கட்ட பயன்படும் குச்சி;

சைவ பெண் ஒருத்தி, திருமணமான பின்னர் அவள் கணவன் வீட்டில் இருப்போர், அவளை சிவ பூஜை செய்ய விடாமல் தடுக்க அவள், கன்றினைக்கட்டியிருந்த தறியில் சிவன் இருப்பதாய் எண்ணி வேண்டினாள்; அவளுக்கு இறைவன் காட்சி தந்தார்.

இந்தச் செய்தி அறிந்த அப்பர்- திருக்கன்றாப்பூர் இறைவனைக்குறித்து பதிகம் பாடினார்.

பதிகத்தின் ஒவ்வொரு பாடலும் கன்றாபூர் நடுதறி என்று சிவபெருமானைக்குறிக்கிறது.

திருக்கன்றாப்பூர் தலத்தைப்பற்றி மேலும் படிக்க:



Saturday, January 10, 2015

எப்படி சொல்லித்தர வேண்டும் தேவாரம்?

"அம்மா பார்வதி!, தண்ணி கொண்டாந்து வை. வித்யா வந்துட்டாப்பாரு!."என்ற குரல் கேட்கும்.

நான் காலணிகளைக்கழட்டும் போதே என்னிடம் வித்யா! " - 8 மணி வகுப்புக்கு சரியா 7.50க்கு வந்து இறங்கிடுறியேமா !. நல்லது!!".என்பார்.

இப்படித்தான் தினமும் எனக்கு வரவேற்பு இருக்கும் என் திருமுறை ஆசிரியர்- பெரும்பாண நம்பி திரு.மா.கோடிலிங்கம் அவர்கள் இல்லத்தில்.


நானாக தேவாரம், வள்ளலார் பாடல்கள் எனப்படிக்கத்தொடங்கி,யார் சொல்லித்தருவார்கள் எனத்தேடிக்கொண்டிருந்த சமயம்!- என் அத்தை மகன் திரு.சேகர் அவர்கள் எனக்கு, கோடிலிங்கம் அய்யாவை அறிமுகம் செய்து வைத்தார்.


என்னிடமுள்ள பல திருமுறை புத்தகங்கள் இவர் தந்தவை. மிக சுத்தமான பராமரிக்கப்படும் அவர் இல்லத்தில், சின்ன சின்ன விஷயத்தில் கூட நேர்த்தியான பாங்கு மிளிரும்.

பல நேரங்களில், என் கணிணி சார் தொழில் நுட்பத்துறையில் உள்ள என் வேலையிடத்தில், என்ன நடக்கிறதென்று கதை சொல்லுவேன். அலுவலக சூழல், வீட்டுச்சூழல் கதைகளுக்கு மத்தியில் பாடம் ஆரம்பிக்கும்.

முதல் முறை செய்யுளைப்பதம் பிரித்து வாசிப்பார்.பென்சிலால் எழுதிக்கொள்வேன்.
பிறகு அழகாய் அடி அடியாய் பொருள் சொல்லுவார். 

எங்கள் நேர்பார்வையில் ரிஷபாரூடர் காலண்டர் இருக்கும்.எந்த சூழலில் ஒரு பாடலை அருளினார்கள் என்பதையும் விளக்குவார்.

மனதில் சட்டெனப்பதியும்!. அடுத்த வகுப்பில் புத்தகத்தைப்பார்க்காமல் பாடுவேன்.

மிகக்கடினமான வேலைப்பளுவிலும், இவர் சொல்லித்தந்த திருப்புகழ் என்னை, திருவான்மியூரிலிருந்து OMR ரோடில் உள்ள சத்யம் அலுவலகம் வரை நிம்மதியாய் கொண்டுச்சேர்க்கும்.


வேலை அதிகம் என செல்லாமல் இருந்தால்,தொலைப்பேசியில்  சனிக்கிழமை வாயேன் என்பார்.

ஒரு முறை சொல்லித்தந்த பாடலில், நாமாக அதிகப்படி சங்கதிகளைக்கூட்டிப்
பாடினாலும், அந்த சங்கதிகளையும் ரசிப்பார். ஒவ்வொரு முறையும், நெய்யும் பாலும் எனத்தொடங்கும் சுந்தரர் தேவாரத்தை இந்தோளம் ராகத்தில் பாடி, இருவரும் சேர்ந்தே ரசிப்போம்.

இந்த வயதிலும் 60 க்கும் மேற்பட்டோருக்கு கற்றுத்தருகிறார். பொள்ளாச்சி மகாலிங்கம் அய்யாவிடம் மிகுந்த அபிமானம் இவருக்கு.

எனக்கு இவரிடம் மிகப்பிடித்த விஷயம்.- திருமுறை, வள்ளலார் பாடல்கள், சித்தர் பாடல்கள் என பலவற்றிலும், இவரது ஆழ்ந்த ஞானம்;இவர் மாணவர்களிடம் காட்டும் அளவு கடந்த பரிவு.

" சார். எனக்கு இந்த தேவாரம் சொல்லித்தாங்க!" என்று உரிமையாக இவரிடம் கேட்க முடியும். எதைக்கேட்டாலும் அவர் அறியாதது இல்லை.

இன்றைய புகழ் பெற்ற கர்னாடக இசைக்கலைஞர்களில் பலர் திருமுறை பயில வருகிறார்கள்.

ஒவ்வொரு முறை நான் வேலைக்காக வெளி நாடு செல்லும் போதும், இவரிடம் ஆசி பெற வருவேன்.

கணவன் மனைவியாக இருவரும் சேர்ந்து எனக்கு விபூதி, குங்குமம் தருவார்கள்; இடையே வித்யா சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ என்பார்.

என் வீட்டில் நடந்த எங்கள் நிச்சயதார்த்தத்தில், மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழிலிருந்து தொடுக்கும்  கடவுள் எனத்தொட்ங்கும் வருகைப்பருவப்பாடலை, நான் சபைக்கு வரும் நேரம் எங்களை வாழ்த்திப்பாடினார்,

எல்லாரிடமும் வித்யா எங்கள் வீட்டுப்பொண்ணு என்பார்.அந்த அன்பை சொற்களைத்தாண்டி, பல முறை மனதார உணர்ந்திருக்கிறேன்.

உத்யோகம் ஸ்தீரீகளுக்கும் லட்சணம் தான். நல்லா மேல வரணும்; வேலையை விடாதே என அறிவுரை சொல்வார்.

இந்த முறை சிங்கப்பூரிலிருந்து போகும்போது வெகு நாட்கள் கழித்து அவர் வீட்டுக்குப்போனேன். அன்பாக உரையாடி, சாப்பிட வைத்து பை நிறைய புத்தகங்களும், மனம் நிறைய வாழ்த்துக்களோடும், வழி அனுப்பினார்.

தாய் தந்தை, குரு, மற்ற உறவுகள், நண்பர்கள் என யார் அமைவதும் இறைவன் கொடுக்கும் வரம் தான்.
அந்த வகையில் என் குருவாய் வந்த கோடிலிங்கம் சார் எனக்கு ஒரு வரம். அவர் நல்ல மன, உடல் நலத்தோடு வாழ இறைவனை வேண்டுகிறேன்!.