Saturday, March 13, 2021

மனக்கவலை மாற்றும் திருக்கோளிலி தேவாரம்!

 சப்த விடங்க தலங்களில் ஒன்று திருக்கோளிலி. உளியைக்கொண்டு செய்யப்படாத, சுயம்புமேனி சிவலிங்கங்களைக்கொண்ட தலங்கள் சப்தவிடங்க தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவற்றில், ஆதித்தலமான திருவாரூரும் ஒன்று. 

திருக்கோளிலி தலத்தில் தேவார மூவரும் பாடியிருக்கிறார்கள். எத்தனை அறிவியல் முன்னேற்றங்கள் இருந்தாலும், மனக்கவலையோடு, இங்கே தூக்கம் தொலைத்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். 

உலகமே கொரோனா தீநுண்மியின் தாக்கத்தில், பயணங்கள் இல்லாமல், ஸ்தம்பித்துபோய் இருக்கும் இந்தக்காலத்தில், நம் அனைவரின் மனதிலும்  எதிர்காலம் பற்றிய கவலை இல்லாமல் இல்லை.

கோள் என்ற சொல் இந்தத்தேவாரத்தில், மாறுபாடு, நவகிரஹங்களால் ஏற்படும் துன்பம் என்ற பொருளில் ஞானசம்பந்தப்பெருமானால் கையாளப்பட்டிருக்கிறது. இந்தப்பதிவில் உள்ள தேவாரப்பாடல், முதல் திருமுறையில் உள்ள தேவாரப்பதிகம் ஆகும் (01-062).

இன்றைய நாளில் இந்த ஊரின் பெயர் திருக்குவளை என்றும் சொல்கிறார்கள். குவளை மலர்களால் தினமும் அர்ச்சனை செய்யப்படுகிறது. 


குவளை என்பது அல்லிமலரைக்குறிக்கும். நீர் வளமுள்ள நிறைய குளங்கள் அமைந்திருக்கும் பகுதியில் அமைந்த சிவாலயம். 

அல்லி மலரை, ஆம்பல் ,செங்கழுநீர் என்றும் சொல்கிறார்கள். சென்னையில் திருவல்லிக்கேணி அல்லி மலர்கள் அதிகம் இந்தப்பகுதி. 

இப்போது கலங்கிய நீரை தெளிவாக்குவதற்குக்கூட ரசாயனங்களைப்பயன்படுத்துகிறோம். சென்னை போன்ற நகரங்களில், குடிநீரை காசுக்கொடுத்து வாங்குபவர்கள் அதிகரித்து வருகிறார்கள். 

இந்தத்திருக்கோளிலி தலத்தின் தலவிருட்சம் தேற்றா மரம். கலங்கிய நீரில் இந்த மரத்தின் கொட்டைகளை அரைத்துப்போட்டால், தெளிந்த நீர் கிடைக்கும். எந்த விதமான உடல் நலிவு உள்ளவர்களையும் தேற்றும் வகையானது இந்த தேற்றா மரம். 


கிளை கிளைக்கும் :

நாளாய போகாமே 

  நஞ்சணியுங் கண்டனுக்கே

ஆளாய அன்புசெய்வோம் 

  மடநெஞ்சே அரன்நாமம்

கேளாய்நங் கிளைகிளைக்குங் 

  கேடுபடாத் திறம்அருளிக்

கோளாய நீக்குமவன் 

  கோளிலியெம் பெருமானே

அறியாமை உடைய மடநெஞ்சே!. நாளை என்று தள்ளிப்போடாமல், இன்றே நஞ்சைத்தன் தொண்டையில் அடக்கி, தம் அடியவரைக்காத்த திருநீலகண்டரை நினைந்து அன்பு செய். அரன் நாமத்தைக்கேள். அதனால், உன் கிளை, கிளைக்கும். நீ மட்டுமல்ல, உன் சுற்றத்தினரின் (கிளை) துன்பங்களும் தீரும். கேடுபடாத திறம் அருளி (துன்பம் இல்லாத வகை அருளி) ,கோள்களால் ஏற்படும் துன்பத்தையும் போக்குவான் திருக்கோளிலியில் வீற்றிருக்கும் எம்பெருமான். 

ஆடரவத் தழகாமை யணிகேழற் கொம்பார்த்த
தோடரவத் தொருகாதன் துணைமலர்நற் சேவடிக்கே
பாடரவத் திசைபயின்று பணிந்தெழுவார் தம்மனத்தில்
கோடரவந் தீர்க்குமவன் கோளிலியெம் பெருமானே.

மலர்போன்ற மென்மையான சேவடிகளைக்கொண்டவர் சிவபெருமான். அவ்ரதுதிருவடிகளை மென்மையான குவளை மலர்களைக்கொண்டு அர்ச்சிப்பது எத்தனை பொருத்தம் கொண்டது!

கேழல்- பன்றி 

ஆடரவத்து-ஆடுகின்ற பாம்பை அணிந்து 

அழகு ஆமை அணி - அழகிய ஆமை ஓட்டையும்  

கேழல் கொம்பு ஆர்த்த -பன்றியின் கொம்பையும் மாலையாகக்கோர்த்து அணிந்திருக்கிறார் சிவபெருமான். 

தோடு அரவத்து ஒரு காதன்- ஒரு காதில் பாம்பே தொடங்க இருக்கிறது (ஒப்பிட்டு நோக்க. தோடுடைய செவியன் )

துணைமலர் நல்சேவடிக்கே -இருமலர்களைப்போன்ற மென்மையான சேவடியை 

 பாடு அரவத்து இசை பயின்று பணிந்தெழுவார்  - பாட்டோசையுடன் துதிபாடல்களைப்பாடி தொழுபவர்களுக்கு 

தம்மனதில் கோடு அரவம் தீர்க்குமவன் கோளிலி எம்பெருமானே-

மனதில் உள்ள மாறுபாட்டை நீக்குபவர் திருக்கோளியில் உள்ள திருக்கோளிலி நாதர் ஆவார்.



இந்தத்தலத்தில் மற்றொரு அற்புதம் சுந்தர மூர்த்தி நாயனாருக்காக குண்டையூர் கிழார் கொடுத்த நெற்பொதிகளை சுமந்து வர ஆட்கள் இல்லாமல் போகவே, சுந்தரமூர்த்தி நாயனார், நீள நினைந்தடியேன் எந்தத்தொடங்கும் தேவாரப்பாடலைப்பாடியவுடன், பூதகணங்கள் அவருக்கு உதவின. இதை மாசிமகத்தன்று ஒரு திருவிழாவாக இன்றும் கொண்டாடுகின்றனர்.