Sunday, August 26, 2018

வாழ்ந்தே போம் இறைவா!- பதிகமும் பாசுரமும் !

இறைவனை தாயாக, தோழனாக, தன் குழந்தையாக என்று பல உறவுநிலைகளில் வைத்து நாயன்மார்களும், ஆழ்வார்களும் ,பக்தி செய்வதைப்பார்க்கிறோம். பல நாள் விண்ணப்பம் செய்தாலும், நம் பிரார்த்தனைகள் ஈடேற வில்லை என்றால்  ஒரு ஏமாற்ற நிலை வரும். அந்த நிலையில் சிலர், கடவுள் உண்மையாக இருக்கிறாரா என்ற கேள்வியை முன்வைப்பார்கள். ஒரு சிலர் இறைவனோடு கொண்ட கோபத்தில், கோவிலுக்கு போவதைத்தவிர்ப்பார்கள். 
( Thiruvarur Temple-Pic Credit-gosthala.com)

உண்மையான பக்தி கொண்டவர்களால் ஒரு போதும் கடவுளை விட்டு விலகி இருக்க முடியாது. "வேண்டத்தக்கதை அவன் அறிவான், நம் விருப்பத்தையும் இன்னொரு முறை அவனிடம் சொல்லிடலாமே" என்றே விழைவார்கள். 
அப்படிச்செய்யும்  மறு விண்ணப்பமாய் விரியும் ஒரு பதிகமும், பாசுரமும் இந்தப்பதிவில் பகிர்கிறேன். 

இறைவனைத்தன் தோழனை எண்ணிய சுந்தரர் பாடிய பதிகத்திலிருந்து -
அன்றில் முட்டா தடையுஞ் சோலை
ஆரூ ரகத்தீரே
கன்று முட்டி உண்ணச் சுரந்த
காலி யவைபோல
என்றும் முட்டாப் பாடும் அடியார்
தங்கண் காணாது
குன்றின் முட்டிக் குழியில் விழுந்தால்
வாழ்ந்து போதீரே!


(படத்தில் இருப்பது தான் அன்றில் பறவை ) அன்றில் முட்டாது அடையும் சோலை ஆரூர் அகத்தீரே- 
 நாள் தவறாமல், அன்றில் பறவை உணவுத்தேடி வருகின்ற சோலைகளை உடைய திருவாரூரை தன்னுடைய வீடாகக்கொண்ட  தியாகேசரே!

கன்று முட்டி உண்ணச் சுரந்த காலி யவைபோல-கன்றுகள் முட்டி உண்ணத் தொடங்கிய பின்னே பால் சுரக்கின்ற பசுக்களிடத்தில் பாலை உண்ணும் அக் கன்றுகள் போல

என்றும் முட்டாப் பாடும் அடியார் தங்கண் காணாது- நாள்தோறும் தப்பாது பாடியே உம்மிடத்துப் பயன்பெறுகின்ற அடியார்கள் , பலநாள் பாடியபின்னும் தங்கள் கண் காணப்பெறாது

குன்றின் முட்டிக் குழியில் விழுந்தால் வாழ்ந்து போதீரே!- கோபம் வந்தால் இந்நாளில் சிலர், "எங்கியாவது போய் முட்டிக்கறேன். நீ நல்லா இரு!" என்று வழக்கு மொழியில் சொல்வதைப்போல, அந்நாளில் குன்றில் முட்டி, குழியில் விழுகிறேன் என்று சொல்லி இருப்பார்கள் போலத்தெரிகிறது. இறைவனே நீ மட்டும் நன்றாக இரு என்று இறைவனைக் கோபத்தோடு வாழ்த்துகிறார் சுந்தரர். 


ஆசை வழுவா தேத்து

          மெமக்கிங் கிழுக்காய்த்து - அடியோர்க்கு
 தேசமறிய உமக்கே
          யாளாய்த் திரிகின்றோமுக்கு
 காசினொளியில் திகழும்
          வண்ணம் காட்டீர் எம்பெருமான்
   வாசி வல்லீர் இந்த
          ளூரீர் வாழ்ந்தே போம்நீரே

                      பெரியதிருமொழி 4-9-4 (1331)


ஒன்பதாம் திருமொழியில் உள்ள பாசுரம் திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்தது.  திருஇந்தளூர் என்ற தலம் மாயவரத்தில் உள்ளது. பரிமள ரங்கர் கோயில் என்று அழைக்கப்படும் இந்தத்தலம் 108 திவ்யதேசங்களில் ஒன்று. 

எனக்கு இந்த பாசுரத்தைப்படிக்கும் போது, "வாசி தீரவே" என்ற திருஞானசம்பந்தர் தேவாரம் தான் நினைவுக்கு வந்தது.

ஆசை வழுவாது ஏத்தும் எமக்கிங்கு இழுக்காய்த்து- இறைவன் மீது கொண்ட அன்பு, ஆசையில் எந்த குறையும் இன்றி,  ஏத்துகின்ற எங்களுக்கு இழுக்காகி விட்டது. 

தேசமறிய உமக்கே ஆளாய் திரிகின்றோமுக்கு -இந்த நாடே அறியும்படி,உன்னுடைய அடியவராக திரிகின்ற எனக்கு 

காசினொளியில் திகழும்   வண்ணம் காட்டீர்- காசு என்ற சொல்லுக்கு பொன் என்றும் பொருள் உண்டு. தங்கம் போல மிளிர்கின்ற உனது மேனி வண்ணத்தை காண்பியுங்கள். 
(Thirundhalur- temple Gopuram-PC-mayuram-raja.blogspot.com)

திருஇந்தளூர் தலத்தில் திருமங்கை ஆழ்வார் வரும்போது கருவறை கதவு சாத்தியிருந்தது. இறைவன் தனக்கு முகம் காட்டவில்லை என்ற வருத்தத்தை அவர் பதிவு செய்கிறார். 

         வாசி வல்லீர் இந்தளூரீர் வாழ்ந்தே போம்நீரே
வாசி -வேறுபாடு. என்னிடம் வேறுபாடு காட்டுவதில் வல்லவராய் இருக்கிறீர், இந்தளூரில் இருக்கிற பெருமாளே, நீர் நல்லபடியாய் வாழ்ந்தேபோம்! என்கிறார் ஆழ்வார்.