Sunday, November 25, 2018

பட்டினத்தார் அருளிய திருவிடைமருதூர் மும்மணிக்கோவை (பதினோராம் திருமுறை)

"காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே"

என்ற பட்டினத்தாரின் வாக்கிலுள்ள உண்மை

எல்லாருக்கும் தெரிந்த ஒன்றே.
பட்டினத்தார் தன் உலக வாழ்க்கையின் கடைசி வருடங்களை

திருவிடைமருதூரில் கழித்தார்.

அவர் அருளிச்செய்த திருவிடைமருதூர் மும்மணிக்கோவையிலிருந்து
ஒரு சில பாடல்களை இந்தபதிவில் பகிர்கிறேன்.

ஒரு சில பாடல்கள் எழுபது அடிகள் கூட கொண்டவையாக
இருக்கின்றன. மும்மணிக்கோவை என்பது, வெண்பாவும், ஆசிரியப்பாவும்,
கட்டளைகளித்துறையில் அமைந்த பாடல்களையும் மாறிமாறி
கொண்டிருக்கிறது. ஒரு சில பாடல்களில் அந்தாதி அமைப்பை
பார்த்தேன். இது தமிழின் சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றாகும். 

அம்பாளின் சக்தி பீடங்களில் ஒன்றான இக்கோயிலில்
மகாலிங்க ஸ்வாமி அருள்பாலிக்கிறார்.


மருது என்ற பெயரைக்கேட்டால் பெரும்பாலும் தமிழர்களுக்கு
மருதுபாண்டியர்கள் நினைவு தான் வரும்.

"மருதா மருதா" என்று சிவனை
அருந்தமிழில் அழைக்கிறார் பட்டினத்து பிள்ளை.

ஐந்து தேர்கள் கொண்ட சிறப்புடையது இந்தக்கோயில்.
சமீபத்திய வருடங்களில் பூஜ்யஸ்ரீ தயானந்த ஸ்வாமிகளின் அருளாசியுடன்,
ஐந்து தேர்களோடு சிறப்பாக திருவிழா நடந்தேறியது.



கண்ணெண்றும் நந்தமக்கோர்
  காப்பென்றும் கற்றிருக்கும்
எண்ணென்றும் மூல
  எழுத்தென்றும் - ஒண்ணை
மருதஅப்பா என்றும் உனை
  வாழ்த்தாரேல் மற்றும்
கருதஅப்பால் உண்டோ கதி.

அப்பா... மருதப்பா, உன்னை கண்ணென்றும்,
எங்களை காக்கும் காப்பென்றும், நாங்கள் கற்ற எண்ணும்,
எழுத்தும் நீயே என்றும் உன்னை வாழ்த்துவதே எங்களுக்கு கதியை,
நல்ல வழியைத்தரும். அப்படி வாழ்த்தாவிடில் எங்களுக்கு ஏது கதி?


திருமுறையில் உள்ள அனைத்து பாடல்களுமே, பெரும்பாலும், தீயவினை மாளும் வழியைக்காட்டுவனவாக உள்ளன. கெட்ட செயல்களை செய்தால் தான் பாவம் என்றில்லை. 


விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் கடைசி பாடல், மனம் வாக்கு, செயல் 
என்று நான் எதை செய்தாலும், அதை நாராயணனுக்கு 
அர்ப்பணிக்கிறேன் என்று முடியும். இப்போதுள்ள நுகர்வு
 கலாச்சாரத்தில், அளவுக்கு மீறிய ஆசையும், பொறாமை,
 போட்டிகளும் இல்லாத மனிதர்கள் இல்லை.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற
என்கிறார் வள்ளுவர்.

கப்பலில் பெருவணிகம் செய்த செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர்
பட்டினத்தார். பெருநெறியை பிடித்தொழுகினார்;
அனைத்தையும் உதறினார்.

வழிபிழைத்து நாமெல்லாம்
  வந்தவா செய்து
பழிபிழைத்த பாவங்கள்
  எல்லாம் - பொழில்சூழ்
மருதிடத்தான் என்றொருகால்
  வாய்கூப்ப வேண்டா
கருதிடத்தாம் நில்லா கரந்து.
எப்படியோ இறைவனின் கருணையால் இதுவரை
பிழைத்துவந்துவிட்டோம். வந்த வழியில் சேர்த்த பாவங்கள் எல்லாம்,
பொழில் சூழ்ந்த மருதனை வாயால் கூட அழைக்கவேண்டாம்.
மனத்தால் நினைத்தாலே அந்த பாவங்கள் மறைந்துவிடும் என்கிறார்
பட்டினத்தார்.


அன்றென்றும் ஆமென்றும்
  ஆறு சமயங்கள்
ஒன்றொன்றொடு ஒவ்வா
  துரைத்தாலும் - என்றும்
ஒருதனையே நோக்குவார்
  உள்ளத் திருக்கும்
மருதனையே நோக்கி வரும்.

பட்டினத்தார் காலத்திலும், சமயப்பிரிவினைகள் இருந்திருக்கின்றன.
ஒன்றோடு ஒன்று அவை ஒவ்வாமை கொண்டிருந்திருக்கின்றன.

ஒருவனே இறைவன் என்ற கருத்தை கொண்டிருக்கும் மனிதர்களுக்கு

குழப்பம் இல்லை. அவர்கள் உள்ளம் மருதனைதான் நோக்கி ஓடி வரும்
என்கிறார் பட்டினத்தார். எளிதில் தினமும் சொல்லும்படியான எளிமையான
பாடல்களைத்தான் இந்தப்பதிவில் பகிர்ந்துள்ளேன்.