Saturday, September 25, 2021

ஆயிரத்தில் ஒருவன் -திருஆக்கூர் (தான்தோன்றி மாடம்)-சிறப்புலி நாயனார் புராணம்

 இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்

உள்ளுள் உவப்பது உடைத்து.(குறள்:1057)

இகழ்ந்து, கேலி செய்யாது, கொடுத்து உதவுபவரைக்கண்டால், உதவி கேட்பவரின் மனம் உள்ளுக்குள் மகிழும் என்கிறார் திருவள்ளுவர். 

மனதில் அருள் இருந்தால் மட்டுமே, இரப்பவரை கேலி செய்யாமல், அவர்கள் மனம் மகிழுமாறு உதவ முடியும். 

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று வள்ளலார் பெருமான் அருளுக்கு உருவம் ஆனார். 

இன்றைய கொரோனா பெருந்தொற்று காலத்தில் பலருக்கும் பல வித துன்பங்கள்!.

 நிறைய பேர் வேலை இழக்கின்றனர். தானத்தில் பெரிதாய் சொல்லப்படும் அன்னதானத்தை முடிந்தவர்கள் மனமுவந்து செய்யவேண்டியது இப்போது தான். 

இறைவனுக்கு பால், தயிர், மஞ்சள், தேன்,சந்தனம், இளநீர், விபூதி போன்ற திரவியங்கள் அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இவை எல்லாவற்றிலும் சிறப்பானது ஐப்பசி பௌர்ணமி நாளில் செய்யப்படும் அன்னாபிஷேகம். 

அன்னம் பரப்பிரம்மம் . ஒருவர் என்ன வகையான உணவை சாப்பிடுகிறாரோ, அதைக்கொண்டு, அவர்களின் குணநலன்கள் இருக்கும் என்று ஸ்ரீமத் பகவத் கீதையிலும் சொல்லப்பட்டிருக்கிறது. 

தான்தோன்றி என்ற சொல் இலங்கை போன்ற நாடுகளில், தானாக மனம் போன போக்கில் நடப்பவரைக்  குறிப்பிடும் சொல்லாக இன்றைய நாளில் இருக்கிறது. முகக்கவசம் அணியாமல் தான்தோன்றியாய் அலைகிறார்கள் என்று திட்டுகிறார்கள்.

தான் தோன்றி என்ற சொல் மறைந்து இன்றைய தமிழக நாளிதழ்கள் பரவலாக சுயம்பு என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றன.

சுயம்பு என்ற சொல் வடமொழி மூலம் கொண்டது. தான் தோன்றி என்ற சொல்லே தமிழ் மூலம் உடையது.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை தானாக தோன்றி  சுயம்புவாக இறைவன் காட்சியளித்த தலங்கள் பல இருக்கின்றன. அவற்றில், உறையூர் தான்தோன்றிநாதர் கோயில், கரூர் பக்கத்திலிருக்கும் வைணவ ஆலயமான தான்தோன்றிமலை, மற்றும் திரு ஆக்கூர் எனப்படும் தான்தோன்றிமாடத்தில் இருக்கும் சிவாலயம் போன்வையும் அடங்கும்.

தான்தோன்றிமாடம் எனப்படும் திருஆக்கூரின் சிறப்பு, இங்கு அரசர் ஒருவர் ஆயிரம் பேருக்கு செய்த அன்னதானத்தில், ஒருவர் குறைவாக இருக்க, ஆயிரமாவது நபராக- ஆயிரத்தில் ஒருவராக, சிவபெருமான் வந்து உணவருந்தினார். இன்றும் உற்சவருக்கான திருநாமம் ஆயிரத்தில் ஒருவன்;கையில் கோலேந்தி நிற்கிறார்.
  
மாடக்கோயில்கள் என்னும் வகையான கோயில்கள் தமிழகத்திலுள்ள பலவகையான கோயில்களில் ஒரு வகை.

மாடக்கோயில் மற்றும் கரக்கோயில் :
(உள்படம்: திருக்கடம்பூர் ஆலயம் )

தேர் போன்ற அமைப்புள்ள கருவறை உள்ள கடம்பூர் கரக்கோயில் வகையை சார்ந்தவை. 

மாடக்கோயில் என்பது யானை ஏறமுடியாத வகையில் படிக்கட்டுகளோடு அமைந்த கருவறைக்கொண்டவை.

குடவாசல், அம்பர்மாகாளம், திருமருகல், திருஆக்கூர் எனப்படும் தான்தோன்றிமாடம் போன்றக் கோயில்கள் மாடக்கோயில் வகையை சேர்ந்தவை. 



Attribution: Ssriram mt, CC BY-SA 4.0 <https://creativecommons.org/licenses/by-sa/4.0>, via Wikimedia Commons for the picture of Kudavasal


நாம் இந்தப்பதிவில் பார்க்கப்போவது திருஆக்கூர் என்னும் தான்தோன்றிமாடம் பற்றிய பாடல்களைத்தான்!
அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரான கோச்செங்கணான் என்னும் மன்னன் எழுப்பிய 64 மாடக்கோயில்களில் ஒன்று திருஆக்கூர் எனப்படும் தான்தோன்றி மாடத்தில் அமைந்துள்ள சிவாலயம் ஆகும்.
சிறப்புலி நாயனாரின் ஊர் திருஆக்கூர்.

 இந்தப்பதிவில் ,பெரியபுராணத்தில் வரும் சிறப்புலி நாயனார் பற்றிய பாடல்களைப் படித்து உணரப்போகிறோம். 

சிறப்புலி நாயனாரைப் பற்றி பெரியபுராணத்தில் ஆறு பாடல்கள் இருக்கின்றன. சிறப்புலி நாயனார், சிவனடியார்களுக்கு அமுதூட்டும் தொண்டினைத்  தன் வாழ்நாள் முழுவதும் செம்மையாகச் செய்தார். 

சிறப்புலி நாயனார், 63 நாயன்மார்  வரிசையில் முப்பத்தைந்தாவது நாயன்மார். இவருக்கு அடுத்து வருபவர், பிள்ளைக்கறியோடு திருஅமுதுபடைத்த சிறுத்தொண்ட நாயனார் என்பது குறிப்பிடத்தக்கது