Wednesday, May 02, 2018

பெருவியப்பை போன்ற இறைவன்- திருநெல்வாயில் அரத்துறை

நெய்யொப் பானைநெய் யிற்சுடர் போல்வதோர்
மெய்யொப் பானைவிண் ணோரு மறிகிலார்
ஐயொப் பானை யரத்துறை மேவிய
கையொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே.





அப்பர் தேவாரங்களில் நம்மை அதிகம் சிந்திக்கவைப்பவை அவர் பயன்படுத்தும் உவமைகள். அவர் அனுபவித்த பரம்பொருளை, நம்மையும், அந்த உவமைகள் வழி அனுபவிக்க வைக்கிறார். 

நெய் ஒப்பானை- இறைவன் நெய்யை போன்று இருக்கிறார். ஒரு லிட்டர் பாலில் நம் கண்முன்னே அந்த பாலில் இருக்கும் நெய் தெரிகிறதா என்ன? தயிரை கடைந்தால் மட்டுமே வெண்ணை மேலெழும்.இறைவனும் அப்படி தான். நம் மனதில் இருக்கிறார் என்பதே தெரியாமல் மறைந்து இருக்கிறார். பக்தி உணர்வு மேலெழ, நாம் இறைவனை உறவாக எண்ணி அருகே அன்பால் உருக உருக மட்டுமே, இறைஇன்பம் கிட்டும். 

நெய்யிற் சுடர் போல்வதோர் மெய் ஒப்பானை -நெய் தீபத்தில் தெரியும் புகையில்லாத அழகான சுடரின் ஒளி போன்றவர் இறைவன். 

விண்ணோரும் அறிகிலார் -தேவர்களும் அறியாத இறைவன்.நம் நடைமுறை வாழ்க்கையில் எத்தனையோ வழிபாட்டுத்தலங்களில், பணம் இருப்பவர் ஒரு விதமாகவும், பணமில்லாதவர்கள் வேறு விதமாகவும் நடத்தப்படுவதை பார்க்கிறோம். ஆனால் கருவறையில் இருக்கும் இறைவனை அறிய பக்தி மட்டுமே போதுமானது. தேவர்கள், மேலானவர்கள் என்று சொல்லப்பட்டாலும், அவர்களும் அறியக்கூடிய ஒருவர் இல்லை இறைவன். 

ஐயொப்பானை- ஐ - வியப்பு -எதைப் பார்த்து நமக்கு வியப்பு உண்டாகும்? என்ன அழகான உவமை இது!.  ஒரு வீட்டில் பேச ஆரம்பிக்கிற வயதில் ஒரு குழந்தை இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த குழந்தை புதிதாய் சொல்லும் ஒரு சொல்லே, பெற்றவர்களுக்கு பெரு வியப்பையும், மகிழ்ச்சியையும் உண்டாக்கிவிடும். 

அல்லது, இயற்கையின் பேரழகு நிறைந்த இடங்களில், பெரிய நீரருவி போன்ற இடங்களில் இருக்கும் போதோ, நமக்கு எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா என்று நாம் நினைக்கும் தருணங்களில், இத்தகைய பெருவியப்பு சாத்தியமே. 

அரத்துறை மேவிய கையொப்பானை -கை ஒப்பானை - 
(கை- ஒழுக்கம்-அறம் )-ஒழுக்கத்தை போல இருக்கிறார் இறைவன். இந்த சொல் கோர்வை தான் இந்த பதிகத்தின் மொத்த சாரம்.
நாம் எந்த வேலை செய்தாலும், அதை ஒழுக்கத்தோடு செய்தால், அந்த ஒழுக்கத்தில் இறைவன் இருக்கிறார்.  

கண்டீர் நாம் தொழுவதே -இப்படிப்பட்ட இறைவனை கண்ணார கண்டு தொழுங்கள்.