Saturday, September 21, 2019

திருவேகம்பம் - திருவிருக்குக்குறள்

குறள் என்றாலே நமக்கெல்லாம் திருக்குறள் தான். 

சிறிய ,இரண்டு அடிக்குள் உள்ள பாடல்வகையை குறள் என்று அழைத்திருக்கிறார்கள். 
திருமுறையில் உள்ள பலவகையான செய்யுள் வகைகளில் திருவிருக்குக்குறளும் ஒன்று. 

திருக்குறள் தெரியும்;அது என்ன திரு+இருக்கு+குறள்? 

ரிக் வேதத்தில் உள்ள மந்திரங்கள் ஒலிப்பண்புகள் கொண்டவை.அவற்றை சரியாக சொல்வதன் மூலம், மனஒருமையும், மற்ற நலன்களும் அமையப்பெறும்.

சரி, வடமொழி  எனக்கு பழக்கமான மொழி அல்ல; அதை ஒரு சாரார் மட்டுமே எடுத்துக்கொண்டு விட்டார்கள் என்று சொல்பவர்களுக்கு, எல்லாருக்கும் தினமும் மனதில் மந்திரம் போல நிற்க, சிறிய அளவிலான சொற்களைக்கொண்டு, அதே நற்பலன்களைத்தரும் வகையில் திருஞானசம்பந்தர், பல திருவிருக்குக்குறள் பதிகங்களைப்பாடி உள்ளார். 

இந்தப்பதிவில் இருக்கும் திருவிருக்குக்குறள், காஞ்சி ஏகாம்பரேஸ்வரரைப்பற்றியது. பெரும்பாலான பாடல்கள் "வினை"என்ற சொல்லில் தான் முடிகிறது. 

இதைப்போலவே  சீர்காழி, திருவாரூர், மதுரை, திருவீழிமிழலை, திருவிடைமருதூர் போன்ற தலங்களுக்கும் திருவிருக்குறள்களைப்பாடியுள்ளார் திருஞானசம்பந்தர். 

மனம், சொல், செயல் என்ற மூன்றாலும் நாம் பிறருக்கு செய்யும் நன்மையையும் தீமைக்கும் நமக்கு புண்ணியபலன்களும் பாவங்களும் வந்து சேருகின்றன.

சில மதங்களில் ஏன் துன்பமான பிறவி இருக்கிறது என்பதற்கு பதிலே கிடையாது. சனாதன தர்மம் எனப்படும் இந்துமதத்தில் முழுமையான விடைகள் எல்லாவற்றுக்கும் இருக்கின்றன. விடைகள் அவரவர் தேடுகின்ற அளவிலேயே கிடைக்கின்றன.

என் தேவார ஆசிரியர், பெரும்பாண நம்பி திரு.கோடிலிங்கம் ஐயா சொல்லுவார், என்ன பாத்திரம் கொண்டு வருகிறாயோ, அந்த அளவில் தான் நிறைக்க முடியும் என்று. 

ஏன் நமக்கு ஒரு கஷ்டம் வருகிறது என்று நம் மனம் ஆராயும்போது, பலநேரங்களில் நாம் பிறருக்கு ஏற்படுத்திய கஷ்டம் நினைவில் இருப்பதில்லை. 
வினைகள் யாவும் நினைவில் நிற்பவை அல்ல. வாழ்க்கை அவர் அவர் வினை வழி தான். 

"தர்மம் தலைகாக்கும் ;தக்க சமயத்தில் உயிர்காக்கும் "என்ற திரைப்பாடலுக்கு தலையாட்டும் நம் மக்கள், ஏன் தர்மம் தலையைக்காக்கும் என்பதையும் யோசிக்க வேண்டும்!. நல்ல செயல்களின் பலனாகத்தான் நம் தலை காக்கப்படும்.

"நகரேஷு காஞ்சி" என்று ஒரு வாக்கியம் சொல்வார்கள். நகரங்களில் காஞ்சிபுரம் போன்ற சிறப்புடையது ஒன்றுமில்லை என்று. தமிழ் பேசும் மக்களின் கோயில்களில், காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் , காலத்தால், நாலாயிரம் வருடங்களுக்கு முன்பானது என்பதற்கான சான்றுகள் உள்ளன. சங்க இலக்கியங்களிலும் காஞ்சிபுரம் பற்றிய குறிப்புகள் உள்ளன. 
இந்தக்கோயிலை பெரிதாக நிர்மாணித்துக்கட்ட ஆதி சங்கரர் அரும்பங்கு ஆற்றி இருக்கிறார். 

முத்துசாமி தீக்ஷிதர், பட்டினத்தார் , சைவக்குரவர்கள் நால்வர் என்று பலரும் இந்தத்தலத்தைப்பாடி இருக்கிறார்கள். 

பக்தியின் வழி அறத்தைப்பற்றி நட என்று தான் சமய இலக்கியங்கள் சொல்கின்றன.
சந்தக்கவிகளில் அருணகிரிநாதரைப்போல, திருஞானசம்பந்தரைப்போல, இனி வரும் காலங்களில் யார் எழுதப்போகிறார்கள்?  

இந்தப்பதிகம்,காஞ்சி திருவிருக்குக்குறள்  மூன்றாம் திருமுறையில் இருக்கிறது. 

கருவார்கச்சித் , திருவேகம்பத்
தொருவாவென்ன , மருவாவினையே

(கருவார் கச்சி திருஏகம்பத்து ஒருவா என்ன மருவா வினையே)
ஏகாம்பரம் என்ற பெயர் பரவலாக தமிழ் மக்களிடையே இருக்கிறது.

ஏகம் என்றால் ஒன்று. ஆம்பரம் என்றால் மாமரம். ஒற்றை மாமரத்தின் கீழே உமை அம்மை கையால் பிடித்த மண்ணால் ஆன திருமேனி கொண்டவர் ஏகாம்பரேஸ்வரர். இந்தத்தலம் பஞ்சபூதங்களில் பூமிக்கான தலமாகும். 

ஆதி பகவான் முதற்றே உலகு என்கிறது வள்ளுவரின் குறள். கருவாக -எல்லாவற்றுக்கும் கருப்பொருளாக இருப்பவர் கச்சி ஏகாம்பரேஸ்வரர். அவரை வணங்க நம்மை வந்து தீயவினைகள் சேராது. 

"இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு"

நல்வினை தீவினை இரண்டுமே மீண்டும் பிறப்பைத்தரும். திருவள்ளுவர், இறைவனின் பெருமையை, புகழை மட்டுமே விரும்புகிறவர்களுக்கு, இந்த இருவினைகளும் அண்டாது என்கிறார்.
அதே போல சம்பந்தப்பெருமானும் ,
படமார்கச்சி , இடமேகம்பத்
துடையாயென்ன , அடையாவினையே.என்கிறார் .

படமார்கச்சி= சித்திரவேலைப்பாடுகள் கொண்ட,  (படம்-கொடி), கொடிகள் அசைந்து ஆடும் மாடங்களைக்கொண்ட காஞ்சிபுரத்தைத்தன் இடமாகக்கொண்ட ஏகாம்பரேஸ்வரரை, எங்கள் தலைவன் என்று கொண்டு, அவரை போற்ற, வினைகள் வந்து சேராது.

"விநாயகனே வினைதீர்ப்பவனே"; வேலுண்டு வினையில்லை" போன்ற பாடல்களை அடுத்த முறைகேட்டால், வினைப்பற்றிய இந்தப்பதிகமும் நிச்சயம் நினைவில் இருக்கும். 

மனம், வாக்கு, செயல் என்ற மூன்றிலும் எந்த வினை செய்கிறேனோ, அவை அனைத்தும் இறைவனுக்கு நான் பிரசாதமாகப்படைப்பவை என்ற எண்ணம் தோன்றிவிட்டால், கெட்ட எண்ணங்களோ, சொல்லோ, செயலோ எங்கிருந்து உருவாகும்? 

செப்டம்பர் 11 மஹாகவி பாரதியாரின் நினைவுநாள்.
எந்தமொழியில் எழுதி இருந்தாலும், துக்காராம், தியாகராஜர், பாரதியார் என எல்லாரும் சொல்வது ஒன்று தான்! மனதை வெளுக்க கடவுளின் பெயரைத்தவிர  வேறு வழி இல்லை. 

துணி வெளுக்க மண்ணுண்டு—எங்கள்
முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
தோல் வெளுக்க சாம்பலுண்டு—எங்கள்
முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி!

மணி வெளுக்க சாணையுண்டு—எங்கள்
முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
மனம் வெளுக்க வழியில்லை—எங்கள்

முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி!

முழுபதிகமும் கீழே:
காஞ்சி திருவிருக்குக்குறள்:

கருவார் கச்சித், திருவே கம்பத்
தொருவா வென்ன, மருவா வினையே.  1 

மதியார் கச்சி, நதியே கம்பம்
விதியா லேத்தப், பதியா வாரே.  2 

கலியார் கச்சி, மலியே கம்பம்
பலியாற் போற்ற, நலியா வினையே.  3 

வரமார் கச்சிப், புரமே கம்பம்
பரவா ஏத்த, விரவா வினையே.  4 

படமார் கச்சி, இடமே கம்பத்
துடையா யென்ன, அடையா வினையே.  5 

நலமார் கச்சி, நிலவே கம்பம்
குலவா வேத்தக், கலவா வினையே.  6 

கரியின் னுரியன், திருவே கம்பன்
பெரிய புரமூன், றெரிசெய் தானே.  7 

இலங்கை யரசைத், துலங்க வூன்றும்
நலங்கொள் கம்பன், இலங்கு சரணே.  8 

மறையோன் அரியும், அறியா வனலன்
நெறியே கம்பம், குறியால் தொழுமே.  9 

பறியாத் தேரர், நெறியில் கச்சிச்
செறிகொள் கம்பம், குறுகு வோமே.  10 

கொச்சை வேந்தன், கச்சிக் கம்பம்
மெச்சுஞ் சொல்லை, நச்சும் புகழே.  11


Saturday, June 22, 2019

திருஆண்டார் கோவில் -பாண்டிச்சேரிக்கு அருகில் !

பாண்டிச்சேரிக்கு அருகிலிருக்கும் ஒரு சில பாடல் பெற்றத்தலங்களில் ஒன்று திருஆண்டார் கோவில். 
விழுப்புரத்திலிருந்து பாண்டிச்சேரிக்கு வரும் வழியில் இருக்கிறது இந்தப்பழமையான சிவாலயம். சோழர்காலத்திய கோயில், இந்திய தொல்லியல்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. 

இந்தக்கோயிலுக்கு நாங்கள் போகும்போது மாலை மணி ஆறு அளவில் இருக்கும். சூரிய அஸ்தமனத்தோடு உள்ளே சென்ற நாங்கள், வெளியே வரும்போது இருள் கவிந்து கோயிலின் கோபுரம் வேறு ஒரு ரூபம் காட்டியது. கோயிலுக்கு முன்னர் ஒரு மாரியம்மன் கோயிலும், பின்பக்கம் தனியாக ஒரு வடுகபலமுருகன் கோயிலும் உள்ளன. 

சோழர்காலத்திய கோயிலில் வடுகீஸ்வரர் என்று சிவனுக்கு  பெயர். உள்ளே வடுகபைரவர் என்ற சந்நிதியும் இருந்தது. கோயிலுக்கு உள்ளே ஒரு சிலரே இருந்தனர்.

வடுக என்ற சொல்லுக்கு எல்லை என்பதான பொருள் இருக்கிறது. ஒருகாலத்தில் இது முல்லைநிலமாக இருந்திருக்கிறது. ஒரு குறுநில அரசின் எல்லையாகவும் இருந்திருக்கலாம். 

அமைதியான சூழல், எங்களை வெகு எளிதில் மனஅமைதி கொள்ள வைத்தது. 

சுற்றுப்பிரகாரத்தில் வரும்போது, பிச்சாண்டவர், தலையை ஒருபுறமாக சாய்த்து சடைமுடிகொண்ட தட்சிணாமூர்த்தி, விநாயகர், ஆறுமுகத்தோடு மயில்மேல் அமர்ந்த முருகக்கடவுள், துர்க்கை, சிவபெருமானும் அம்மையுமாக ஒரு ரூபம், சண்டிகேஸ்வரர், சூரியன் சந்திரன் என்று எல்லாரையும் வணங்கி வந்தோம்.

என் மாமனாரின் ஆசை- எங்களின் இந்த இந்தியப்பயணத்தில் எங்களுக்கு இந்தக்கோயிலை காணும் பேறு கிட்டியது.

இந்தக்கோயிலில் திருஞானசம்பந்தப்பெருமான் ஒரு பதிகம் பாடி இருக்கிறார். சிவபெருமானின் கோலத்தைமட்டுமே விளக்குவதாக இந்தப்பதிகம் இருக்கிறது.
தளருங் கொடியன்னா டன்னோ டுடனாகிக்
கிளரு மரவார்த்துக் கிளரு முடிமேலோர்
வளரும் பிறைசூடி வரிவண் டிசைபாட
ஒளிரும் வடுகூரி லாடும் மடிகளே
(கொடிபோன்ற அம்பிகையோடு இருக்கும் பிறைசூடிய பெருமானை  மேலே உள்ள படத்தில் இருக்கும் சிற்பத்தில் காணுங்கள்)


அந்தப்பதிகத்திலிருந்த மற்றொரு பாடல் என்னை வெகுவாக ஈர்த்தது.
வழக்கமாக பழந்தமிழ் இசைக்கருவிகளில், குழல், யாழ், வீணை போன்றவை த்தான் அதிகம் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்தப்பாடலில், பறையைப்போலவும், அதிர்கின்ற குழலைபோலவும், பலவண்டுகள் சத்தமிடும் வடுகூர் என்னும் திருஆண்டார்கோயிலில் இறைவன் இருக்கிறார் என்கிறார் சம்பந்தர்.

பிறையு நெடுநீரும் பிரியா முடியினார்
மறையும் பலபாடி மயானத் துறைவாரும்
பறையு மதிர்குழலும் போலப் பலவண்டாங்
கறையும் வடுகூரி லாடும் மடிகளே.

Friday, May 10, 2019

திருமந்திரம் சொல்லும் பேறு

பத்தாம் திருமுறையாக வகுக்கப்பெற்ற  திருமூலரின் திருமந்திரம், தேவார மூவரின் பாக்களை விட நடையிலும், சொல்ல வரும் பொருளிலும் மாறுபட்டதாகும். 

தேவாரம் இறைவனின் பெருமையை வியந்து பாடும் அழகுடையது.

திருமந்திரம் பேசும் விஷயங்கள் பல. ஒன்பது தந்திரங்களாக பிரிக்கப்பட்டுள்ள திருமந்திரத்தில், முதல் இரு தந்திரங்கள் பேசும் பொருள்கள் , திருக்குறளை ஒத்திருக்கின்றன . 

திருக்குறளில், இருப்பதை போல  கொல்லாமை, நிலையாமை, இன்னா செய்யாமை முதலியவற்றை முதல் தந்திரம் விரித்துரைக்கிறது.

திருக்குறளில் நாற்பத்தி ஐந்தாவது அதிகாரம் பெரியாரை துணைக்கோடல்.
(அரசியல்).
திருவள்ளுவர் பெரிய வல்லமையாக சொல்வது, பெரியவர்களை நம்முடைய சுற்றத்தவராக அவர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு நடத்தல்
"தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை"

நாட்டை ஆள்பவர்களுக்கும் பெரியவர்களின் துணை வேண்டும் என்றால், சாமானியர்களுக்கு வேண்டாமா என்ன ?
இரண்டாம் தந்திரத்தில் குருநிந்தை என்ற தலைப்பில் கீழே உள்ள பாடல் தான் முதலாக வருகிறது.

பெற்று இருந்தாரையும் பேணார் கயவர்கள்
உற்று இருந்தாரை உளைவன சொல்லுவர்
கற்று இருந்தார் வழி உற்று இருந்தார் அவர்
பெற்று இருந்தார் அன்றி யார் பெறும் பேறே.

(மேலும் படிக்க )



பெற்று இருந்தார்- பெற்றோர்
உற்று இருந்தார்- உறவினர்கள்
உளைவன- மனதில் நினைத்து, நினைத்து வருந்தும்படியான தீய சொற்கள் 
கயவர்கள்- கீழானவர்கள் 

கீழானவர்கள் பெற்றவர்களையும் நல்லபடியாக வைத்து காப்பாற்றமாட்டார்கள். தம் உறவினர்கள் மனதில் நினைத்து மருகும்படியான தீய சொற்களை சொல்லுவார்கள். 

நல்லபடியாக பெற்றோரைப்பேணுபவர்களும், உறவினர்களை தீய சொற்களால் நோக செய்யாதவர்களும், நன்றாக கற்றக்பெரியவர்கள் சொன்ன வழியில் இருப்பவர்கள் தான். அவர்கள் அதனை பெரியவர்களை பின்பற்றுவதால் கிடைக்கும் பேறு- பாக்கியம் என்றே கருதுவார்கள்  .