Saturday, June 22, 2019

திருஆண்டார் கோவில் -பாண்டிச்சேரிக்கு அருகில் !

பாண்டிச்சேரிக்கு அருகிலிருக்கும் ஒரு சில பாடல் பெற்றத்தலங்களில் ஒன்று திருஆண்டார் கோவில். 
விழுப்புரத்திலிருந்து பாண்டிச்சேரிக்கு வரும் வழியில் இருக்கிறது இந்தப்பழமையான சிவாலயம். சோழர்காலத்திய கோயில், இந்திய தொல்லியல்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. 

இந்தக்கோயிலுக்கு நாங்கள் போகும்போது மாலை மணி ஆறு அளவில் இருக்கும். சூரிய அஸ்தமனத்தோடு உள்ளே சென்ற நாங்கள், வெளியே வரும்போது இருள் கவிந்து கோயிலின் கோபுரம் வேறு ஒரு ரூபம் காட்டியது. கோயிலுக்கு முன்னர் ஒரு மாரியம்மன் கோயிலும், பின்பக்கம் தனியாக ஒரு வடுகபலமுருகன் கோயிலும் உள்ளன. 

சோழர்காலத்திய கோயிலில் வடுகீஸ்வரர் என்று சிவனுக்கு  பெயர். உள்ளே வடுகபைரவர் என்ற சந்நிதியும் இருந்தது. கோயிலுக்கு உள்ளே ஒரு சிலரே இருந்தனர்.

வடுக என்ற சொல்லுக்கு எல்லை என்பதான பொருள் இருக்கிறது. ஒருகாலத்தில் இது முல்லைநிலமாக இருந்திருக்கிறது. ஒரு குறுநில அரசின் எல்லையாகவும் இருந்திருக்கலாம். 

அமைதியான சூழல், எங்களை வெகு எளிதில் மனஅமைதி கொள்ள வைத்தது. 

சுற்றுப்பிரகாரத்தில் வரும்போது, பிச்சாண்டவர், தலையை ஒருபுறமாக சாய்த்து சடைமுடிகொண்ட தட்சிணாமூர்த்தி, விநாயகர், ஆறுமுகத்தோடு மயில்மேல் அமர்ந்த முருகக்கடவுள், துர்க்கை, சிவபெருமானும் அம்மையுமாக ஒரு ரூபம், சண்டிகேஸ்வரர், சூரியன் சந்திரன் என்று எல்லாரையும் வணங்கி வந்தோம்.

என் மாமனாரின் ஆசை- எங்களின் இந்த இந்தியப்பயணத்தில் எங்களுக்கு இந்தக்கோயிலை காணும் பேறு கிட்டியது.

இந்தக்கோயிலில் திருஞானசம்பந்தப்பெருமான் ஒரு பதிகம் பாடி இருக்கிறார். சிவபெருமானின் கோலத்தைமட்டுமே விளக்குவதாக இந்தப்பதிகம் இருக்கிறது.
தளருங் கொடியன்னா டன்னோ டுடனாகிக்
கிளரு மரவார்த்துக் கிளரு முடிமேலோர்
வளரும் பிறைசூடி வரிவண் டிசைபாட
ஒளிரும் வடுகூரி லாடும் மடிகளே
(கொடிபோன்ற அம்பிகையோடு இருக்கும் பிறைசூடிய பெருமானை  மேலே உள்ள படத்தில் இருக்கும் சிற்பத்தில் காணுங்கள்)


அந்தப்பதிகத்திலிருந்த மற்றொரு பாடல் என்னை வெகுவாக ஈர்த்தது.
வழக்கமாக பழந்தமிழ் இசைக்கருவிகளில், குழல், யாழ், வீணை போன்றவை த்தான் அதிகம் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்தப்பாடலில், பறையைப்போலவும், அதிர்கின்ற குழலைபோலவும், பலவண்டுகள் சத்தமிடும் வடுகூர் என்னும் திருஆண்டார்கோயிலில் இறைவன் இருக்கிறார் என்கிறார் சம்பந்தர்.

பிறையு நெடுநீரும் பிரியா முடியினார்
மறையும் பலபாடி மயானத் துறைவாரும்
பறையு மதிர்குழலும் போலப் பலவண்டாங்
கறையும் வடுகூரி லாடும் மடிகளே.

No comments: