Wednesday, March 12, 2014

அப்பரின் அரிய பதிகங்கள்- ஒரு பார்வை (1)

தேவாரப்பாடல்கள், ஓதுவாமூர்த்திகளாலும், இறையன்பர்களாலும், ஓதப்பெற்றாலும், எல்லா தேவாரப்பதிகங்களும், மக்களை சென்றடைவதில்லை.

மிக எளிமையாய், அன்பின் உருவாய், உழவாரப்பணி செய்து, இறைப்பணியில், உயர்ந்தவர் திரு நாவுக்கரசர் (அப்பர் பெருமான்).

அவரது பாடல்களில், பலரும் அறிந்தது - "மாசில் வீணையும் மாலை மதியமும்" எனும் பாடலும், என் கடன் பணி செய்து கிடப்பதே எனும் வரிகளும், "கூற்றாயின வாறு விலக்ககலீர்" எனும் பதிகம் முதலியன.

தமிழ் மீது ஆர்வமுள்ளவர்கள், தேவாரப்பதிகங்களை மனம் ஊன்றிப்படித்தால்,சொல் வளமும், சொல்லாற்றலும், வளரும்.
அப்பரின் தேவாரப்பாடல்கள் குறித்த ஆய்வுக்கட்டுரைகளைப்படித்துக்கொண்டிருந்தேன்.

கீழ்காணும் அப்பரின் பதிகத்தைப்பாருங்கள்!

ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே
அடக்குவித்தால் ஆர் ஒருவர் அடங்காதாரே
 ஓட்டுவித்தால் ஆர் ஒருவர் ஓடாதாரே
உருகுவித்தால் ஆர் ஒருவர் உருகாதாரே

பாட்டுவித்தால் ஆர் ஒருவர்  பாடாதாரே
பணிவித்தால் ஆர் ஒருவர் பணியாதாரே
காட்டுவித்தால் ஆர் ஒருவர் காணாதாரே
காண்பார் ஆர் கண்ணுதலாய் காட்டாங்காலே

இந்தப்பாடலின் முதல் வரியைத்தான், கவிஞர் கண்ணதாசன், திரைப்பாடலில், பயன்படுத்தி இருக்கிறார்.

செந்தமிழும் நாப்பழக்கம் இல்லையா? நல்ல தமிழ் ஆளுமை, படித்தால் தானே வரும்,
இது போன்ற எடுத்துக்காட்டுகள் என் போன்ற தமிழ் மாணவர்களை, ஊக்கப்படுத்தும் என நம்புகிறேன்!

தமிழை ஆழமாக படித்து, அதன் இன்பத்தை நுகர்வோம்; பிறருக்கும் பகிர்வோம்