Friday, May 10, 2019

திருமந்திரம் சொல்லும் பேறு

பத்தாம் திருமுறையாக வகுக்கப்பெற்ற  திருமூலரின் திருமந்திரம், தேவார மூவரின் பாக்களை விட நடையிலும், சொல்ல வரும் பொருளிலும் மாறுபட்டதாகும். 

தேவாரம் இறைவனின் பெருமையை வியந்து பாடும் அழகுடையது.

திருமந்திரம் பேசும் விஷயங்கள் பல. ஒன்பது தந்திரங்களாக பிரிக்கப்பட்டுள்ள திருமந்திரத்தில், முதல் இரு தந்திரங்கள் பேசும் பொருள்கள் , திருக்குறளை ஒத்திருக்கின்றன . 

திருக்குறளில், இருப்பதை போல  கொல்லாமை, நிலையாமை, இன்னா செய்யாமை முதலியவற்றை முதல் தந்திரம் விரித்துரைக்கிறது.

திருக்குறளில் நாற்பத்தி ஐந்தாவது அதிகாரம் பெரியாரை துணைக்கோடல்.
(அரசியல்).
திருவள்ளுவர் பெரிய வல்லமையாக சொல்வது, பெரியவர்களை நம்முடைய சுற்றத்தவராக அவர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு நடத்தல்
"தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை"

நாட்டை ஆள்பவர்களுக்கும் பெரியவர்களின் துணை வேண்டும் என்றால், சாமானியர்களுக்கு வேண்டாமா என்ன ?
இரண்டாம் தந்திரத்தில் குருநிந்தை என்ற தலைப்பில் கீழே உள்ள பாடல் தான் முதலாக வருகிறது.

பெற்று இருந்தாரையும் பேணார் கயவர்கள்
உற்று இருந்தாரை உளைவன சொல்லுவர்
கற்று இருந்தார் வழி உற்று இருந்தார் அவர்
பெற்று இருந்தார் அன்றி யார் பெறும் பேறே.

(மேலும் படிக்க )



பெற்று இருந்தார்- பெற்றோர்
உற்று இருந்தார்- உறவினர்கள்
உளைவன- மனதில் நினைத்து, நினைத்து வருந்தும்படியான தீய சொற்கள் 
கயவர்கள்- கீழானவர்கள் 

கீழானவர்கள் பெற்றவர்களையும் நல்லபடியாக வைத்து காப்பாற்றமாட்டார்கள். தம் உறவினர்கள் மனதில் நினைத்து மருகும்படியான தீய சொற்களை சொல்லுவார்கள். 

நல்லபடியாக பெற்றோரைப்பேணுபவர்களும், உறவினர்களை தீய சொற்களால் நோக செய்யாதவர்களும், நன்றாக கற்றக்பெரியவர்கள் சொன்ன வழியில் இருப்பவர்கள் தான். அவர்கள் அதனை பெரியவர்களை பின்பற்றுவதால் கிடைக்கும் பேறு- பாக்கியம் என்றே கருதுவார்கள்  .

1 comment:

jabonfahrenkrug said...
This comment has been removed by a blog administrator.