Thursday, June 30, 2016

பொய்யாத விநாயகர்- பதினோராம் திருமுறை- நம்பியாண்டார் நம்பி

மலேசியாவில் உள்ள மலாக்காவுக்கு போன வருடம் சென்றியிருந்தோம்.
ஊர் சுற்றி பார்க்கும்போது, ஒரு நாள் மாலையில் இந்த பொய்யாத விநாயகர் கோயிலுக்கு போனோம்.
அந்த நாள் பாணி செட்டியார் கோயில். உள்ளே கிணறு இருந்தது, பல விக்கிரகங்கள் வெண்கலத்தில் இருந்தன. அந்த காலத்து ஓட்டு வீடு பாணி அமைப்பு.






பக்கத்திலேயே ஒரு தர்கா, அந்த பின்னர் ஒரு சீனக்கோயில் என நாங்கள் மாலை 6.30 மணிக்கு திரும்பும்போது, ரொம்பவே சிலிர்க்கும் அனுபவம். கோயில் மாலை நேர தீபாராதனையை அடுத்து, தர்காவிலும், சீனக்கோயிலிலும் பிரார்த்தனைகள் நடந்தன.
அந்த பக்கம் போனால் நீங்களும் பார்த்து வாருங்கள்!!!.நம் பிரார்த்தனைகளை இந்த பொய்யாத விநாயகர் நிச்சயம் பொய்க்க விடமாட்டார்.

இந்த பதிவில் நாம் பார்க்கப்போவது, பதினோராம் திருமுறையில் உள்ள, நம்பியாண்டார் நம்பி அவர்கள் அருளி செய்த பாடல்.
திருநாரையூரில் உள்ள பொல்லா பிள்ளையாரைப்பற்றிய பாடல்.
பொல்லா என்ற சொல்லுக்கு உளியால் செதுக்கப்படாத என்று பொருள்.

தானாக சுயம்புவாய் வந்தவர் இந்த பொல்லா பிள்ளையார். நம்பியாண்டார் நம்பி  ராஜராஜ சோழரின் கட்டளைப்படி, திருமுறைகளைத்தொகுத்துக்கொடுத்தார். அவர் இந்த பொல்லா பிள்ளையாரின் ஆசி பெற்று தன் பணியைச்செய்தார்.

கொம்பனைய வள்ளி கொழுநன் குறுகாமே
வம்பனைய மாங்கனியை நாரையூர் - நம்பனையே
தன்னவலம் செய்துகொளும் தாழ்தடக்கை யாயென்நோய்
பின்னவலம் செய்வதென்னோ பேசு.


இந்த பாடல் ரொம்பவே அழகாக இருக்கிறது.


நெஞ்சே! பூங்கொம்பு போன்ற(கொம்பனைய) வள்ளியின் கணவன் (முருகன்), குறுகாமே (வந்து அடையும் முன்னரே), வம்பனைய மாங்கனியை (புதிதாக வந்த மாங்கனியை), பெற, நாரையூர் நம்பனை(தன் தாய் தந்தையரை) வலம் வந்தார். உலகை வலம் வருதலை விட, இந்த வழியே சிறந்தது என்று தேர்ந்தார்.

தாய் தந்தையரை வலம் வந்து, தன் துதிக்கையைதாழ்த்தி துதித்து, மாங்கனியை பெற்றார். அந்த விநாயகரை சொல் நெஞ்சே. சொன்னால், நோய் (வினைகள்), மற்றும் அவலம் (துன்பம்) நம்மை என்ன செய்யும்?

No comments: