Sunday, June 05, 2016

இல்லை ஆனா இருக்கு!

ஒரு பூவையோ, பொருளையோ விவரிக்க சொன்னால், விவரிக்க முடியும். ஆனால் இறைவனை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.
இந்த பதிவில் அப்பரின் இரண்டு பதிகங்களை பார்க்க போகிறோம்.

முதல் பாடல் திருவொற்றியூர் பதிகம்.  எது இறைவன் இல்லை என்பதாய் பாடும் பதிகம்.


கால்களில் கடல் மணல் தொட, இந்த பழமையான சிவாலயம்  ஒரு மாறுபட்ட அனுபவம்!!!.
திருவொற்றியூருக்கு  பல சிறப்புகள் உண்டு.

 தினம் தோறும் தியாகேசருக்கு நெய் விளக்கு ஏற்றி வழிபட்ட,கலிய நாயனார் வாழ்ந்த ஊர்;

ராமலிங்க அடிகளார் இந்த கோயிலுக்கு தினம் வருவார். நிறைய பாடல்களை இந்த கோயில் இறைவன், அம்பாளின் மேல் பாடியுள்ளார்;

சுந்தரர் சங்கிலி நாச்சியாரை மணந்தது இந்த கோயிலில் உள்ள மகிழ மரத்தடியில். அந்த மரம் இன்றும் இருக்கிறது. இந்த கோயிலில்,சகஸ்ர லிங்கம் இருக்கிறது.
பட்டினத்தார் இங்கு தான் சமாதி ஆனார்.
ராஜேந்திர சோழர் காலத்துக்கற்றளி.

மனது எளிதில் பிரார்த்தனையில் லயிக்கும் சூழ்நிலை உள்ள கோயில். 
அதிக கூட்டம் அலை மோதும் கோயில்களை பார்க்க, இங்கு அத்தனை கூட்டம் இல்லை. எனவே பிரார்த்தனை செய்ய இது உகந்த கோயில்.


திருவொற்றியூர் அப்பர் தேவாரம் :

(Image courtesy: chennai.wordpress.com)

மண்ணல்லை விண்ணல்லை வலய மல்லை 
    மலையல்லை கடலல்லை வாயு வல்லை
எண்ணல்லை யெழுத்தல்லை யெரியு மல்லை
    யிரவல்லை பகலல்லை யாவு மல்லை
பெண்ணல்லை யாணல்லை பேடு மல்லை
    பிறிதல்லை யானாயும் பெரியாய் நீயே
உண்ணல்லை நல்லார்க்குத் தீயை யல்லை
    உணர்வரிய ஒற்றியூ ருடைய கோவே

இறைவன் மண்,விண், சூரியன் (வலயம்) அல்லர்; மலை அல்லர்; கடல் அல்லர்; காற்றும் அல்லர்.  எண், எழுத்தும் அல்லர்; இரவு, பகல் என மாறி வரும் ஒளியும் அல்லர். பெண் அல்லர், ஆண் அல்லர், மூன்றாம் பாலினமும் அல்லர்

இவை எல்லாவற்றிலும் பரந்து நிற்கின்ற பெரியவன் இறைவன்.அவர் தம்பால் அன்பு கொண்டவர்க்கு என்றும் தீமை செய்யாதவர்.

உணர்வுகளால் அறியவல்லவர் ஒற்றியூரின் அரசனான சிவ பெருமான்!!!

இதற்கு முற்றிலும் மாறுபட்ட பதிகம் அப்பர் திருவலிவலத்தில் பாடியது.




திருவலிவலம் அப்பர் தேவாரம்:

பெண்ணவன் காண் ஆணவன் காண் பெரியோர்க்கென்றும்
பெரியவன் காண் அரியவன் காண் அயனானான் காண்
எண்ணவன் காண் எழுத்தவன் காண் இன்பக்கேள்வி
இசையவன் காண் இயலவன் காண் எல்லாங் காணுங்
கண்ணவன் காண் கருத்தவன் காண் கழிந்தோர் செல்லுங்
கதியவன் காண் கருத்தவன் காண் கழிந்தோர் செல்லுங்
மண்ணவன் காண் வானவர்கள் வணங்கி யேத்தும்
வலிவலத்தான் காண் அவன் என் மனத்துளானே


பெண்ணாகவும், ஆணாகவும், பெரியவர்களுக்கு எல்லாம் பெரியவனாகவும், அயன்(பிரம்மா), அரியாகவும் (விஷ்ணு)  இறைவன் இருக்கிறார்.
எண்ணாகவும், எழுத்தாகவும், கேள்வி இன்பம் தரும் இசையாகவும் இருக்கிறான். எல்லாம் வல்லவன் இறைவன். 

அவர்  எல்லாவற்றையும் நமக்கு காட்டும் கண்ணாகவும், கருத்தாகவும் இருக்கிறார்.இந்த உலகை விட்டு கழிந்தோர் செல்லும் கதியாகவும், அவர்கள் அடங்கும் மண்ணாகவும் இருக்கிறார்.

வானவர்களும் வணங்கி ஏத்தும் இந்த இறைவன் என் மனதில் இருக்கிறார். அவர் மனத்துணை நாதர்.

நாம் காணும் பொருட்களுக்கு அப்பாற்பட்டு எங்கும் நீக்கமற நிறைந்து இருப்பவர் இறைவன் என்பதையே இந்த இரு பதிகங்களும் சொல்கின்றன.

திருவலிவலம் பற்றிய மற்றொரு பதிவை இங்கே (காண்க:)

No comments: