Tuesday, May 31, 2016

சேரமான்பெருமாள் நாயனார் - பொன்வண்ணத் தந்தாதி!!!

 என் மாமனாருக்கு சமீபத்தில் 70 வயதானது. அவரது ஆசை தன் வாழ்நாளில் 1000 சிவாலயங்களை தரிசிக்க வேண்டும் என்பது  . நாங்கள் சிங்கையிலிருந்து இந்தியா செல்லும்போதெல்லாம், இந்தியாவில் இது வரை பார்க்காத இடங்களுக்கு 4-5 நாட்கள் ஒதுக்கு சுற்றி பார்க்க நினைக்கிறோம்.






இந்த முறை கேரளாவை தேர்ந்தெடுத்தோம். கொச்சினில் ஒரு வீடு எடுத்து தங்கினோம், அங்கிருந்து காலடி, ஆல புழா, வாழச்சால் நீர்வீழ்ச்சி, குருவாயூர், திருவஞ்சிகுளம் என பல ஊர்களுக்கும் சென்று வந்தோம் .

அருமையான சுற்றுலா. அவரின் 70 வயது பிறந்த நாளில் நாங்கள் திரு அஞ்சைக்களம் எனும் மலை நாட்டில் உள்ள ஒரே பாடல் பெற்ற ஊரில், அபிஷேகம் செய்தோம்.
கேரளா கோயில்களில் நடராஜர் சிலை உள்ள ஒரே கோயில் இது.
ப்ரஹாரம் முழுதும் நிறைய ஓவியங்கள் சுந்தரருக்கும் , சேரமான் பெருமாள் நாயனாருக்கும் உள்ள நட்பை சொல்லின.
முற்றிலும் கேரளா பாணி கோயில் இது.

திருவஞ்சிகுளம் என அழைக்கப்படும்  இந்த ஊரை ஆண்டவர்,சேரமான் பெருமாள் நாயனார். சுந்தரரிடம் மிகுந்த அன்பு கொண்டவர்.அவரின் பாடல் பற்றியதே இந்த பதிவு.

பால் வண்ணம் பருவம் கண்டு என்ற  பாடலைக்கேட்டு இருப்பீர்கள்.எல்லா அடியும் வண்ணம் என்று இருக்கும் .
 நிறைய கவிஞர் கண்ணதாசன் பாடல்களை கேட்கும் போது அவரது மொழி ஆளுமை நம்மை அசர வைக்கும்.

 நல்ல கவிஞர்கள் பலரும் சமய இலக்கியங்களை ஆழ்ந்து படித்திருப்பார்கள். அதுவே அவர்களுக்கு சொற்கள் மீது நல்ல ஆளுமையை தந்திருக்கும்..
அதற்கு ஒரு நல்ல உதாரணம் பதினோராம் திருமுறையில் உள்ள இந்த பாடல்.


பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
    மேனி பொலிந்திலங்கும்
மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
    வீழ்சடை வெள்ளிக்குன்றம்
தன் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
    மால்விடை தன்னைக்கண்ட
என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
    ஆகிய ஈசனுக்கே
.இந்த பாடலை அருளியவர் சேரமான் பெருமாள் நாயனார். சேர நாட்டு அரசர். அப்போது மலை நாட்டு பகுதியிலும் தமிழே மொழியாக இருந்துள்ளது.

என் தேவார ஆசிரியர் திரு.மா.கோடிலிங்கம் சொல்வார்: எங்கம்மா பார்வதி கருப்பு. என் அப்பா சிவனார் நல்ல நிறம்னு.
 சிவனாரை அழல் வண்ண மேனி பிரான் என்று போற்றுவார் அப்பர்.

நிறைய நேரங்களில் நம் குடும்பங்களில் நிறம் பற்றிய பேச்சு எழுவதைப்பார்க்கலாம். குறிப்பாக பெண் பார்க்கும்போது, பெண் சிவப்பாக இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு பரவலாக இருக்கிறது.

சிவனார் சிவப்பு; அம்மையோ கருப்பு. அம்மைக்கு தன் உடலில் சரி பாதி தந்த சிவனார் சொல்லும் செய்தி, கருப்பும் சிவப்புக்கும் பேதமில்லை என்பதே.


இப்போது பாடலின் பொருளை பார்ப்போம்.
கடைசி இரண்டு அடிகளில் இருந்து தொடங்க வேண்டும்.
தன்னைக்கண்ட என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்  ஆகிய ஈசனுக்கே, பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
    மேனி பொலிந்திலங்கும்.

தன்னை உணர்தலே மெய்யுணர்வு. தானும்  இறைவனும் வேறில்லை என்று அறியும் அறிவே ஞானத்தின் இறுதி நிலை.

அப்படி தன்னைக்கண்ட (அறிந்த) எனது மேனி, அப்படி கண்டபின் என்ன நிறம் ஆனதோ, அந்த நிறத்தை தன் இயல்பான நிறமாக கொண்டவர் சிவபெருமான். அந்த நிறம் பொன் வண்ணம் ஆகும்.



மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
    வீழ்சடை 
தாழ்ந்து தொங்குகின்ற சடைகள்,மின்னல் என்ன நிறமோ அந்த நிறமே.

வெள்ளிக்குன்றம்
தன் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
    மால்விடை

பெரிய இடப(ரிஷப )
 ஊர்தி, வெள்ளி மலை என்ன நிறமோ அந்த நிறமே.
பொன்னும் வெள்ளி நிறமுமாக அவருக்கு ஏற்பட்ட இறைக்காட்சியை சொல்கிறார் சேரமான் பெருமாள் நாயனார்.

1 comment:

Maha Tejo Mandala Guru said...

Nice explanation.... Just want to know what is the colour of Minnal? சடை என்பதை இங்கு எந்த நிறமாக குறிக்கிறார்கள்? மின்னல் வெள்ளை நிறம் தானே சரியா?