Saturday, May 28, 2016

அப்பரும் ஆழ்வாரும் ஏற்றிய விளக்குகள் !

ஒரு அப்பர் தேவாரமும், ஆழ்வார் பாசுரமும் ஒரே மாதிரி இருக்கின்றன. இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்ததில்லை. ஒருவர் சிவபெருமானையும், மற்றவர் பெருமாளையும் நோக்கி பாடிய பாடல்களின் பொருள் ஒன்றே.

அன்பே தகளியாக ஆர்வமே நெய்யாக
இன்பு (உ)ருகு சிந்தை இடுதிரியா- நண்பு (உ)ருகி
ஞான சுடர் விளக்(கு) ஏற்றினேன்- நாரணற்கு
ஞான தமிழ் புரிந்த நான் - (பூதத்தாழ்வார்)

உடம்பெனும் மனையகத்து உள்ளமே தகளியாக
மடம்படு உணர் நெய்யட்டி உயிரெனும் திரிமயக்கி
இடம்படு ஞானத்தீயால் எரிகொள விருந்துநோக்கில்
கடம்பமர் காளை தாதை கழலடி காணலாமே ( அப்பர்)

இந்த ஆழ்வார் பாசுரத்தின் பின்னால் ஒரு சுவையான கதை இருக்கிறது.

திருக்கோவிலூரில் மழை பெய்த ஒரு நாளில் பொய்யாழ்வார், பூதத்தாழ்வார், பேய் ஆழ்வார் ஆகிய மூவரும், ஒரு சிறிய இடத்தில் மழைக்காக அண்டி இருந்தனர்.அவர்கள் மூவருக்கு மட்டுமே இடம் இருந்தது. இருள் படர்ந்த இரவு!. அப்போது அவர்கள் மூவரும் தங்களை யாரோ நெருக்குவதாக உணர்கின்றனர். 

மூன்று ஆழ்வார்களும் ,ஆளுக்கு ஒரு பாடல் பாட, பூதத்தாழ்வார் பாடிய இப்பாடலினால் ஒளி வந்தது. கண்ணன் அவர்கள் மூவரையும் பார்த்து புன்னகைக்கிறார்.

இப்போது அப்பரின் பதிகத்தை பார்ப்போம். 
அப்பரின் இந்த பதிகம் திருக்கடம்பூர் கோயிலில் பாடபெற்றது. இந்த கோயில் கடலூர் மாவட்டத்தில் இருக்கிறது.கரக்கோயில் வகையை சேர்ந்தது. கரக்கோயில் என்ற வகை கோயில்கள் தேர் போல இருக்கும். தமிழகத்தில் இருக்கும் பாடல் பெற்ற ஒரே கரக்கோயில் இது என்கிறது விக்கி
(Attribute to:By Kadamburvijay - சொந்த முயற்சி, CC BY-SA 3.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=16212523)

நிறைய அற்புதமான சிற்பங்கள் உள்ள கோயில்.

அப்பரின் பதிகங்களில் அதிகமாக உவமைகளை காணலாம். இந்த பதிகம் அந்த வகையினதே.

எப்போது ஈசனின் திருவடியைகாணலாம்? உடம்பு என்பதை ஒரு வீடாக கொண்டால், அந்த வீட்டில், உள்ளம் என்பதை ஒரு தகளியாக (அகல் ஆக) உவமை செய்து கொள்வோம். அந்த தகளியில் தீபம் ஏற்ற நமக்கு தேவைப்படும் நெய்யாக நம் இறை உணர்வு இருக்க வேண்டும்.

நம் உயிரே, அந்த தகளியில் உள்ள திரியாக இருக்க வேண்டும். இப்படி ஏற்றப்படும் விளக்கினால் தான் திருக்கடம்பூர் தந்தையின் கழலடியைக்காணலாம்.

துன்பமும் கவலைகளும் நம்மை வந்து நெருக்கும்போது, நாம் சொல்ல வேண்டிய கீழ்காணும் பாடலும், திருக்கடம்பூரின் அப்பர் தேவாரம் தான். கீதையின் சாரமான உன் பணியை செய்; பலனை எதிர்பாராதே என்ற அதே தொனியில் என் கடன் பணி செய்து கிடப்பதே; இறைவனுக்கு கடமை தன் அடியவரான என்னையும் தாங்குதல் என்கிறார் அப்பர் பெருமான்.

நம் கடம்பனை பெற்றவள் பங்கினன் 
தென் கடம்பை திருக் கர கோயிலான் 
தன் கடன் அடியேனையும் தாங்குதல் 
என் கடன் பணி செய்து கிடப்பதே 


3 comments:

சைதை முரளி said...

ஒப்பீடு செய்து துவங்கிய விதம் அருமை. மகிழ்ச்சி. பாராட்டுக்கள்.

Unknown said...

ஓம் நமசிவாய
மனமது செம்மையுற
திருமுறை ஓதும் செல்வியே!!
சிவனருளால்
சித்தம் தெளிவுற _உலகில்
சிறக்க வாழ்க!!!

vijiprathap said...

அருமையான ஒப்பீடு தொடர்க உம் பணி வாழ்த்துக்கள்