Saturday, May 14, 2016

உளோம்; போகீர் என்றானே!!! (திருவெண்பாக்கம் சுந்தரர் தேவாரம்)

சுந்தரமூர்த்தி நாயனார், இறைவனைத்தன் தோழனாக பாவித்தார்.

உரிமையாய் இறைவனைக்கோபமாக பேசுவதும், சண்டையிடுவதுமாய், பல சுந்தரரின் பதிகங்கள் இருக்கின்றன. இது ரொம்பவே வித்யாசமான நயம்.

ஒரு சில பதிகங்களில், சுந்தரரை பற்றி எண்ணி வியக்கவும், அதில் உள்ள நகைச்சுவை உணர்வு உண்டாக்கும் மகிழ்ச்சியுமாய் படிக்க முடிகிறது.

இந்த பதிவு திருவெண்பாக்கம் தேவாரம் பற்றியது. பூண்டி ஏரிக்காக முன்பிருந்த கோயில் இடமாற்றம் செய்ய பட்டுள்ளது. அங்கிருந்த சிவலிங்க திருமேனி, புரசைவாக்கம் கோவிலில் இருக்கிறது.

முதலில்,பரவை நாச்சியாரை திருவாரூரில் மணந்த சுந்தரர், அதன் பின்னர் பல தலங்களை தரிசித்து, திருவொற்றியூர் வந்தார்.
அங்கு சங்கிலி நாச்சியாரைக்கண்டார். அவரையும் மணம் முடிக்க ஆசைப்பட்டார்.
சங்கிலி நாச்சியாருக்கு திருவொற்றியூரை விட்டு செல்ல மாட்டேன் என்று சத்தியம் செய்து மணம் முடித்தார்.நாட்கள் கழிந்தன.

 திருவாரூர் கோயில் திருவிழாவைக் காண சுந்தரரின் மனம் ஏங்கியது.
திருவாரூருக்கு கிளம்பினார்.
 பண்ணிய சத்தியம் வேலை செய்தது; திருவொற்றியூர் எல்லையைத்தாண்டியதும் சுந்தரரின் கண் பார்வை போயிற்று.

மனோரமா ஆச்சி ஒரு திரைப்படத்தில் சொல்வார். "எங்க வீட்டுக்காரர் அவர் வீட்ல இல்லைன்னு சொல்ல சொன்னாருங்க".பார்க்கும் மக்கள் அனைவரும் ஆச்சி சொல்லும் தொனிக்கே சிரிப்பார்கள்.

கிராமங்களில் முன்பு தடுப்பு ஊசி போட வந்தாலோ, காப்பீடு பற்றி விலக வந்தாலோ, வீட்டுக்குள்ளே இருந்தபடியே, போயிட்டு வாங்கன்னு அனுப்பி விடுவது வழக்கம்.

திருவெண்பாக்கம் தலத்தில், நீ இங்கு இருக்கிறாயோ என்று கேட்டார் சுந்தரர். அதற்கு இறைவன் "உளோம். நீர் போகலாம்" என்று பதில் அளித்தார்.

கண் பார்வை வரவில்லை. இறைவன் சுந்தரருக்கு ஒரு ஊன்று கோலை மட்டும் தந்தார்.அதை எடுத்து கோபமாய் சுந்தரர் வீசவும் நந்தியின் கொம்புகள் உடைந்தன.
இந்த தலத்தில் இறைவனின் பெயர் ஊன்றீஸ்வரர்.இறைவியின் பெயர் மின்னொளி அம்மை.

திருவெண்பாக்கம் தேவாரம் முதல் பாடல் (ஏழாம் திருமுறை: 89வது பதிகம்)

“பிழை உளன பொறுத்திடுவர்” என்று அடியேன் பிழைத்தக்கால்
பழி அதனைப் பாராதே, படலம் என் கண் மறைப்பித்தாய்;
“குழை விரவு வடி காதா! கோயில் உளாயே!” என்ன,
உழை உடையான் உள் இருந்து, “உளோம்; போகீர்!” என்றானே!



(இப்போதுள்ள கோயில் முகப்புத்தோற்றம் )


(கண் பார்வை இழந்த சுந்தரரும், கொம்பு உடைந்த நந்தியும் )



(Pics: Courtesy: http://veludharan.blogspot.sg/)

குழை=குண்டலம். 
குழை அணிந்த, தூங்குங்காதினை உடையவனே!, நான் என்ன  பிழை  செய்தாலும், இறைவன் என்னை பொறுத்துகொள்வார் என்னும் துணிவினால், நான் பிழை செய்தேன். ஆனால் உனக்கு  என்ன பழி வரும் என்று எண்ணி பார்க்காமல் நீ என் கண் பார்வையை மறைத்து விட்டாய்.
இப்போது நீ கோயிலில் இருக்கிறாயோ என்று கேட்டால், மானை ஏந்திய கைகளை உடையவன் உள்ளுக்குள் இருந்து கொண்டு, உளோம் போகீர் என்கிறானே. 


ஒவ்வொரு பாடலும் உளோம் போகீர் என்ற சொற்றொடருடன் இருப்பது இப்பதிகத்தின் அழகு.

No comments: