Tuesday, September 06, 2016

பூசலார் நாயனார் புராணம்- திருநின்றவூர் (பெரிய புராணம்)

(Pic Courtesy: Dinamalar)
பூசலார் நாயனாரைப்பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா?தன் மனதில் ஈசனுக்கு கோயில் கட்டினார்.
ஒரு சிலர்கோயிலில் இருக்கும் ஒரு சில நிமிடங்கள் கூட  செல்பேசியும் கையுமாக அலைவதைப்பார்க்கிறோம். மனது ஒருமிக்க பிரார்த்தனை செய்வது எல்லாருக்குமா வாய்க்கிறது?
பூசலாரிடம் பணம் இல்லை. ஈசனுக்கு கோயில் கட்ட எண்ணுகிறேன் என்று பொருள் உதவி கேட்டார். யாரும் கொடுக்கவும் இல்லை. தன் மனதில் ஒரு கோயில் கட்ட முடிவெடுத்தார்.
திரு.பாலகுமாரன் பூசலாரைப்பற்றி ஒரு நாவல் எழுதி இருக்கிறார்.

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்க்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவனே சிவலிங்கம்
கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே
என்கிறது திருமந்திரம். இது சொல்வது தான் பூசலாரின் வாழ்க்கை.

மண்ணில் ஒரு  பெரிய கோயில் கட்டினால் எத்தனை நேரமும் உழைப்பும் ஆகுமோ, அதை விட மேலான தவம்!!. தனி ஒருவராக வேறு எந்த எண்ணமும் இல்லாமல், அவர் செய்த பணி; எத்தனை பிரகாரங்கள், எத்தனை சன்னதிகள், எத்தனை கோஷ்ட மூர்த்தங்கள் என்று விரிவான திட்டம். அதை மனதில் ஒன்றன்றாய் செய்து முடிக்கிறார்.இணையில்லாத இறை அன்பு. பக்தியின் உச்ச நிலை அதுவே இறைவனையும் ஈர்த்தது.
காஞ்சியில் ஏகாம்பரேஸ்வரர்  கோயில் கட்டப்படும் நேரம். பல்லவர்களின் சிற்பக்கலை ரசனையைப்பற்றி சொல்லவா வேண்டும் ?
கோயில் பணி முடிந்த நிலையில் பல்லவ மன்னனின் உறக்கத்தில் ஈசன் சொன்னார். " இந்த தேதியில் பூசலார் கட்டிய கோயிலின் குட முழுக்கு. அதனால் நீ எழுப்பும் கோயிலின் குடமுழுக்கின் தேதியை மாற்றுக !".
சரியான நேரத்தில் பூசலாரின் வாழ்வின் மேன்மையை இறைவன் உலக மக்களுக்கு பல்லவ மன்னனின் வழியாக உணர்த்தினார்.

ஊரெல்லாம் தேடி பூசலாரைக்கண்ட மன்னன் ,நீங்கள் எழுப்பிய கோயில் எங்கே என்கிறான். பூசலார் பொருள் இல்லாமையால் தான் மனதினால் முயன்ற கோயிலைப்பற்றி சொல்லுகிறார். பல்லவ மன்னன் அவரின் அருள் வாழ்க்கையை எண்ணி வியந்து, அங்கே ஒரு சிவாலயம் எழுப்பினார்  என்பது வரலாறு.
சென்னையில் உள்ள திருநின்றவூர் இருப்பூர்தி வழியாக எளிதில் செல்ல கூடிய கோயில்.
பூசலாரைப்போல கோயில் கட்ட முடியாவிட்டாலும், அவர் பக்தியில் ஒரு துளி நமக்கு வர வேண்டும் என்று பிரார்த்திக்க வேண்டும்.

இறைவனின் பெயர்: இருதயாலீஸ்வரர்
இறைவியின் பெயர்: மரகதவல்லி
பெரிய புராணம் எளிதால் எல்லாரும் புரிந்து கொள்ளும் வகையில் தான் சேக்கிழாரால் அருளப்பட்டது.


கீழே பூசலாரின் புராணத்தில் இருந்து சில அடிகள்.

தொண்டரைச் சென்று கண்ட மன்னவன் தொழுது 'நீர் இங்கு
எண் திசை யோரும் ஏத்த எடுத்த ஆலயம் தான் யாது ?' இங்கு
அண்டர் நாயகரைத் தாபித்து அருளும் நாள் இன்று என்று உம்மைக்
கண்டு அடி பணிய வந்தேன்; கண் நுதல் அருள் பெற்று' என்றான்.
மன்னவன் உரைப்பக் கேட்ட அன்பர் தாம் மருண்டு நோக்கி,
'என்னை ஓர் பொருளாக் கொண்டே எம்பிரான் அருள் செய்தாரேல்
முன்வரு நிதி இலாமை மனத்தினால் முயன்ற கோயில்
இன்னதாம்' என்று சிந்தித்து எடுத்த வாறு எடுத்துச் சொன்னார்.

No comments: