Saturday, December 31, 2016

கையில் கைபேசியுடன் கைக்கூப்பினர் ஒரு பால்!- கோவிலுக்குள் எப்படி இருக்க வேண்டும்?


இந்தியாவில் மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் தற்கொலைகள் குறைவு. மனதில் எதிர்மறை சிந்தனைகள் அதிகம் இருந்தாலோ, மனதளவில் ஊக்கம் குறைவாக இருந்தாலோ, கோயிலுக்கு சென்று வந்தால், நம் மனம் தானாய் அமைதி அடைவதைப்பார்க்கலாம்.

ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பது அவ்வையின் மொழி.
ஆ- மனது; லயம்- ஒருமித்தல். மனது ஒருமிக்கும் இடம் ஆலயம்.
சமீபத்தில் ஒரு நாள் கோயிலுக்கு சென்ற பொது, அன்றைய அபிஷேக உபாயதாரர், முழுக்க முழுக்க தன் கைப்பேசியில் பேசுவதும், ஆலயக்கருவறைகளைக்கைப்பேசியில் படம் எடுப்பதுமாக இருந்தார்.

உண்மையில் மனக்கண்ணில் இறைவன் உள்ளே இருக்க வேண்டுமென்றால் எப்படி நம் நடத்தை இருக்க வேண்டும்?
மாணிக்கவாசகர் சிவபுராணத்தில் சொல்வார், ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே!
இறைவன் தன்னை ஆராயாதவர்கள், எண்ணாதவர்கள் உள்ளத்தில் ஒளிந்து தான் இருக்கிறார்.



(இந்த பதிவில் படங்களில் அணி சேர்ப்பது,  சமீபத்தில் குடமுழுக்கு கண்ட சிங்கப்பூர் சிவ துர்கா ஆலயம்.)

இன் இசை வீணையர், யாழினர், ஒருபால்; இருக்கொடு தோத்திரம் இயம்பினர், ஒருபால்;
துன்னிய பிணை மலர்க் கையினர், ஒருபால்; தொழுகையர், அழுகையர்,துவள்கையர், ஒருபால்;
சென்னியில் அஞ்சலி கூப்பினர், ஒருபால். திருப்பெருந்துறை உறை சிவபெருமானே!
என்னையும் ஆண்டுகொண்டு, இன் அருள் புரியும் எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே!

இந்த பாடல் மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளி எழுச்சியில் இருக்கிறது.
பக்தர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் கோயிலில் இருக்கிறார்கள். ஒரு சிலர் கையில் இசை வாத்தியங்களோடு இருக்கின்றனர்; இன்னும் சிலர், தோத்திரங்களை சொல்லியபடி இருக்கின்றனர்; இன்னும் சிலர்- துன்னிய (நெருக்கமாக தொடுத்த), மலர் சரங்களோடு இருக்கின்றனர். இன்னும் சிலர் இறைவனை எண்ணி தொழுகின்றனர். ஒரு சிலர் உணர்ச்சி மேலிட்டு அழுகிறார்கள். இது பக்தியின் இன்னொரு உச்சம். இன்னும் சிலர், இறைவனுக்கு முன்னால் நாம் எத்தனை சிறியவர்கள் என்று எண்ணி அடக்கத்தால் துவண்டு நிற்கின்றனர். இன்னும் சிலரோ, கைகளைதலைக்கு மேல் தூக்கி, இறைவனை துதிக்கின்றனர். திருப்பெருந்துறையில் உள்ள ஆத்மநாதர், அனைவரின் ஆத்மாவையும் அறிவார். அவரை எழுந்திருக்க அன்பர்கள் வேண்டுகின்றனர்.


புது வருடம் பிறக்கப்போகிறது. புதிதாய் நிறைய நல்ல பழக்கங்களை ஆரம்பிக்க வேண்டும் என்று நினைப்போம். உடற்பயிற்சி, மனப்பயிற்சி எல்லாம் தான். அதோடு சேர்ந்து, இனி ஆலயங்களில் கைப்பேசியை வெளியே எடுப்பதில்லை என்பதையும் சேர்த்துக்கொள்வோம்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் !!!!

No comments: