Friday, April 07, 2017

மன்னையின் பாடல் பெற்ற பாமணி சிவன் கோயில்!

நான் மன்னார்குடியில் வளர்ந்தாலும், இந்த கோயிலின் மகத்துவம் என் பள்ளிநாட்களில் அறிந்திருக்கவில்லை. சமீபத்தில் குடமுழுக்கு கண்ட தேவாரத்திருத்தலம்.

மன்னை என்றால் ஸ்ரீ ராஜகோபாலஸ்வாமி கோயில் தான் அனைவரும் அறிந்தது. இந்த நாகநாத சுவாமி கோயில் மன்னையிலிருந்து 2  கி.மி. தூரத்தில் தான் இருக்கிறது.

எங்கள் சின்ன செங்கமலம் !


மன்னையில் ஓடும் நதி, காவிரியின் கிளை ஆறான பாமணி. இந்த ஆற்றின் அருகே அமைந்த தலம்.

இந்த கோயிலின் சிறப்புகள் பல.

1.புற்று மண்ணால் ஆன சிவலிங்கத்திருமேனி. ஆதிசேஷன் பூஜித்த தலம். பெரும்பாலும் புற்றுக்கோயில்களில் நித்ய அபிஷேகம் செய்ய மாட்டார்கள். இங்கு மாம்பழ சாறில் அபிஷேகம் தினமும் செய்யப்படுவது சிறப்பு.தலவிருட்சம் மாமரம்.

2.திருவாரூர் தலம் காலத்தால் மிக பழமையானது என்பார்கள். முசுகுந்த சக்கரவர்த்தி காலத்தியது என்று சொல்வார்கள். இந்த கோயிலில் முசுகுந்தர் பச்சை திராட்சை படைத்தது வழிபட்டார் என்பதால், பச்சை திராட்சையை இறைவனுக்கு படைப்பதும் சிறப்பு.



3.சர்வ தோஷ நிவாரணம் தரும் தலம் இது. தட்சிணாமூர்த்தி சிம்மத்தின் மீது இருப்பது மிக அபூர்வமான  ஒன்றாகும் . 



4.சனீஸ்வரரும் பைரவரும் சேர்ந்து இருப்பதால், சனிதோஷ நிவாரண தலமாக இருக்கிறது. 

5.ஆதிசேஷனுக்கு மனித தலையுடன் தனி சன்னதி இருக்கிறது. ராகு கேது தோஷம் நீங்க வழிபாடு செய்ய உகந்த தலம்.

இந்த தலத்தைப்பற்றிய திருஞானசம்பந்தரின் பாடல் அன்றைய சோழ தேசத்தின் நெல்வயல்களின் அழகை வர்ணிக்கிறது.

அங்கமு நான்மறையும் அருள்செய் தழகார்ந்த வஞ்சொல்
மங்கையோர் கூறுடையான் மறையோ னுறைகோயில்
செங்கய னின்றுகளுஞ் செறுவிற் றிகழ்கின்ற சோதிப்
பங்கய நின்றலரும் வயல்சூழ்ந்த பாதாளே.



அங்கமும் நான்மறையும் அருளிச்செய்து -வேதங்கள் நான்கையும், வேதங்களின் ஆறு அங்கங்களையும் உருவாக்கியவர் சிவபெருமான்.ஆறு அங்கங்களும் ஷடங்கங்கள் என்று சொல்லப்படுகின்றன. இவற்றிலிருந்து தான் நாம் பரவலாய் பயன்படுத்தும் சடங்கு என்ற சொல் உருவாயிற்று.ஆறு அங்கங்கள்  எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம் , நிகண்டு,தினமும் முழுஅக்கறையோடு செய்ய வேண்டிய கர்மாக்கள், பாஇலக்கணம் ஆகியவை.


அழகார்ந்த வஞ்சொல் மங்கையோர் கூறுடையான் -வாக்கினிலே இனிமை வேண்டும் என்பது பாரதியாரின் வரி. அம்பாள் அருள் வடிவம். அன்பின் ஊற்று. உலக மாதாவாகிய அன்னை, இனிய அழகான சொற்களை  பேசுபவராக இருக்கிறார். மனதுக்கு  இதம் தரும் சொல்லையே பேசும் அன்னை, சிவபெருமானின் ஒரு பாகமாக இருக்கிறார்.

மறையோன் உறை கோயில்- மறைகளாக இருப்பவரும் இறைவனே.வேதப்பொருளாய் உள்ள இறைவன் உறையும் கோயில் எப்படி இருக்கிறது தெரியுமா? 
செங்கயல் நின்றுகளும்  செருவிற் திகழ்கின்ற சோதிப்பங்கயம் நின்று அலரும் வயல் சூழ் பாதாளே.

தாமரை எப்போதும் சூரிய ஒளியில் தான் மலர்கிறது. (பங்கயம்-தாமரை). செங்கயல் மீன்கள் வயல்களில் புரள்கிற ஒளியில் தாமரை இரவிலே மலரும் அளவில் வயல்கள் சூழ்ந்த பாதாளேஸ்வரம் என்னும் கோயிலில் தான் இறைவன் இருக்கிறார்.

எப்போதும் நீர்வளத்துக்கும் , எல்லாருக்கும் வயிறார உணவிட்டும் வந்த தேசத்தில், இப்போது வறட்சி.விவசாயிகளின் தொடர் போராட்டம்.

வான்முகில் வழாது பெய்யட்டும். காவிரியில் எப்போதும் நீர் இருக்கட்டும்.எல்லாருக்கும் உணவு கொடுக்கும் உழவர் வாழ்க்கை நன்றாக இருக்க என் பிரார்த்தனைகள்.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் மக்களை பாதாளேஸ்வரர் என்னும் பாமணி நாகநாதர் காக்கட்டும் .

(Inputs from Dinamani.com, Dinamalar.com, Thevaaram.com).

3 comments:

Unknown said...

CONGRATS EXCELLENT PRESENTATION.YOUR INTEREST TOWARDS THE FARMERS IS TO BE APPRECIATED.MAY GOD ALWAYS BE WITH YOU TO FULFIL YOUR DESIRES.BEST WISHES

Krithika said...

We had never visited this temple...hope we get to visit this temple soon...good writing Vidya...

valentianejaili said...
This comment has been removed by a blog administrator.