Wednesday, January 26, 2022

எளிதாய்க்கற்கலாம் திருமுறை-விமர்சனம்- திரு.ஆர்.வி.எஸ்

வியாசபாரதம், ரமணர் பற்றிய கட்டுரைகள், எங்களூர் மன்னையின் வாழ்க்கையை விரித்துரைக்கும் ஹரித்ராநதி எனப்பலவும் எழுதிவரும் ஆர்.வி.எஸ் அவர்களின் விமர்சனமும் முகநூலில் உள்ளது.

அது இங்கே மீள்பதிவு :


நாலாயிர திவ்யப் பிரபந்தங்கள், தேவாரம் திருவாசகம் போன்ற திருமுறைகளின் மொழிச் செறிவும் அழகும் எப்போதும் வாசிப்பவர்களின் உள்ளத்தைக் கவர்பவை. இவை நம்மை “தமிழண்டா” என்று நெஞ்சு நிமிர்த்த வைப்பவை.

இறைத்தமிழின் செல்வாக்கினை நாம் பல நவீன தமிழ்ப் பாடல்களிலும் கட்டுரைகளிலும் கூட காணலாம். என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற அப்பரின் வாக்கு சகஜமாக தற்போதும் உரையாடல்களில் புழங்கும் வரி. சுடலைப் பொடி பூசியவனை ”என் உள்ளம் கவர் கள்வன்” என்று பாராட்டிப் பாடிய சம்பந்தரின் சொற்கள் இன்று வரை நம் மனதைக் கொள்ளை கொண்டு போகிறது. எண்பதுகளில் உள்ளம் கவர்ந்த கள்வன் என்றொரு திரைப்படம் (பாண்டியராஜன் நடித்தது) கூட வெளிவந்த ஞாபகம். ”நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்” என்பது நாவுக்கரசர் தேவாரமாக முழங்கியது. ”எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறு ஒன்று அறியேன் பராபரமே!” என்ற ஸ்ரீதாயுமானவர் ஸ்வாமியின் திருவார்த்தைகள் இப்போது எதற்கு பிரசித்தி என்பது வாசிப்பவர்கள் அனைவரும் தெரிந்ததே!
திருமதி வித்யா அருண் மன்னார்குடிக்காரர். ஃபேஸ்புக்தான் எங்களின் உறவுப் பாலம். சிங்கையில் வசிக்கிறார். எங்கள் காவிரிக்கரைக்கே உரித்தான மொழி நேசம் இருப்பதோடு பாடல் பெற்ற திருமுறைத் தலங்கள் பல எங்கள் காவிரிக்கரையில் அமைந்திருப்பதினால் திருமுறையிலும் பேரார்வர்த்தோடு இருக்கிறார்.அனுதினமும் பத்து பக்கங்களாவது வாசிக்கும் பழக்கமுள்ள நான் சென்ற சில நாள்களாக அம்மாவின் தேக அசௌகரியத்தினால் எந்தவொருப் புத்தகத்தையும் தொடுவதற்குக்கூட நேரமில்லாமல் இருந்தேன். திருமுறைகளில் எனக்கிருக்கும் ஆர்வத்தைக் கண்டு திருமதி வித்யா அருண் தானெழுதி அகநாழிகை வெளியிட்ட “எளிதாய்க் கற்கலாம் திருமுறை” என்ற புத்தகத்தை பரிசாக அனுப்பியிருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் (25-30 நாள்கள்) நான் படித்த புத்தகம் இது.
திருவான்மியூர் பண்ணிசைப் பாணர் மா. கோடிலிங்கம் ஐயாவிடம் முறையாக மூன்றாண்டுகள் திருமுறைக் கற்றிருக்கிறார் திருமதி வித்யா அருண். கர்நாடக சங்கீதம் அறிந்தவர்.
பதினோராம் திருமுறையில் அதிரா அடிகள் எழுதிய திருமும்மணிக்கோவையிலிருந்து புத்தகம் துவங்குகிறது. எதற்கும் மனம் தளராமல் இருக்க வேண்டும் என்பதற்காக விநாயகனை வேண்டும் இப்பாடலில் உந்தத் தளரா, சந்தத் தளரா என்று வரிக்கு வரி தளரா எழுதி மந்தத் தளரா மலர்ச்சரணங்கள் வாழ்த்துமினே என்கிறார் அதிரா அடிகள்.
தண்ணீர் உறிஞ்சாத நெட்டி போல இறைபக்தியை உறிஞ்சாத என் நெஞ்சினிலும் நீ நிறைந்தாயே என்று கருவூர்த் தேவர் உருகும் ஒன்பதாம் திருமுறைப் பாடலைக் கொடுத்திருப்பது இந்நூல் ஆசிரியரின் தெய்வ பக்தியையும் திருமுறையினை உள்வாங்கியிருக்கும் பாங்கினையும் காட்டுகிறது.
தருமபுரம் யாழ்முறிநாதர் கோயில் சைவநெறியைப் பின்பற்றும் அனைவரும் அறிந்த தலம். தனது நண்பரான திருநீலக்கண்ட யாழ்ப்பாணர் தனது யாழினால் மீட்டமுடியாத பண்ணை ஞானசம்பந்தப் பெருமான் இந்தத் தலத்தில் பாடியதாக வரலாறு. அந்தத் திருத்தலத்துப் பாடலான “மாதர் மடப்பிடியும் மட அன்னமும் அன்னதோர்...” இடம்பெற்றிருக்கிறது.
ஒன்பதாம் திருமுறை திருவிசைப்பாவில் கருவூரார் எழுதிய பெரியவா கருணை என்று தொடங்கும் பாடல் திருத்துறைப்பூண்டி அருகிலிருக்கும் திருச்சாட்டியக்குடி இறைவின் மீது பாடப்பெற்றது. வார்த்தைகளில் விளையாடிருக்கும் அப்பாடலில் இளநிலா எறிக்கும் பிறைதவழ் சடைமொழுப்பு அவிழ்ந்து என்ற வரிகளில் வரும் இளநிலா எண்பதுகளில் எழுதப்பட்ட இளையநிலா பொழிகிறதுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டது. 🙂 பெரியவா கருணை என்று சேர்த்துப்படிக்கும் போது காஞ்சிப் பெரியவா ஞாபகம் நமக்கு வருவது போல இந் நூல் ஆசிரியருக்கும் வருவதில் ஆச்சரியமென்ன!!
மன்னார்குடியரான அவர் எங்கள் ஊர் பாமணி நாகநாதர் ஆலயத்தினைப் பற்றியும் இந்நூலில் எழுதியிருக்கிறார். பாதாளேச்வரம் என்றழக்கப்படும் தலத்தினை “வயல் சூழ்ந்த பாதாளே” என்று சம்பந்தர் பாடும்போது மன்னையின் மண்வளம் தெரிகிறது. சிவ வைணவ பேதமின்றி இந்தக் கட்டுரையில் எங்கள் கோபாலனின் திருப்படமும் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
புத்தகம் முழுக்க ஆங்காங்கே ஆழ்வார்களின் பாசுரங்களும், வள்ளலார், பட்டினத்தடிகள் ஆகியோரின் பாடல்களும் பாயசத்தில் மிதக்கும் முந்திரி போல திருக்குறள்களும் இடம்பெற்றிருக்கின்றன. பக்கங்களைத் திருப்பும் போதும் விரல்கள் உராயாமல் வழவழத் தாளில் அச்சிடப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கட்டுரையிலும் அதில் சம்பந்தப்பட்ட பொருள்கள் மலர்கள் தெய்வங்கள் மனிதர்கள் ஆகியோரின் படங்களும் ஆங்காங்கே பொருத்தமாக இடம்பெற்றிருக்கின்றன. பொன் வாசுதேவனுக்கும் பாராட்டுகள்!
திருமதி வித்யா அருண் அவர்களின் முதல் நூலாம். இன்னும் நிறைய எழுத என் மனமார்ந்த
வாழ்த்துகள்
!
குறிப்பு: புத்தகத்தின் கடைசியில் இதில் இடம்பெற்றிருக்கும் பாடல்களை இணையத்திலும் படித்து ரசிக்கும்படியாக QR code கொடுத்திருப்பது புதுமை! மொபைலில் க்ளிக்கி படிக்கலாம்! 🙂

No comments: