Saturday, August 23, 2025

கண்களும் தோள்களும் -திருவொற்றியூர் தேவாரம்

 எண்தோள் வீசி நின்றாடும் பிரான் தன்னை கண்காள் காண்மின்களோ !

இந்த பாடல் வரி அப்பரின் திரு அங்க மாலையில் வரும் வரி.

திருமுறை முழுவதிலும் எண்தோள் உடையவன் என்று அங்கங்கே சிவபெருமானைக்குறிப்பிட்டிருப்பார்கள். 

இந்த வரியைச் சிந்தித்துக்கொண்டே  இந்த பதிவில் என்னோடு உடன் வாருங்கள். 

சமீபத்தில், அலுவலக வேலையாக பாங்காக்(Bangkok) நகருக்குப்பயணமானேன். 

நம்ம ஊரின், விமான நிலையங்களில், கோயில்கள் சிற்பங்கள் என்று நம் கலை அம்சங்கள் சுட்டிக்காட்டப்படுவதைப்போல பாங்காக் விமான நிலையத்தின் குடிநுழைவு வாயிலுக்கு அருகில் இந்த சிற்பம் இருந்தது. 

தேவர்களும் அசுரர்களும் மேருமலையை மத்தாக்கி, வாசுகியைக்கயிறாக்கி, பாற்கடலைக்கடைந்துக்கொண்டிருந்தார்கள். அவர்களை வேடிக்கைப்பார்த்தப்படி,மிக வேகமாக மனிதர்கள்,பயணம் என்ற பெயரில்  உலகின் ஒரு மூலையிலிருந்து வேறொரு ஊருக்குச் சென்றுக்கொண்டிருந்தனர். 

இந்த சிற்பத்தின் மத்தியில் இருப்பவர் மஹாவிஷ்ணு. என் மனம் உய்ய வைத்த பிரானை நோக்கி நகர்ந்தது. அவர் அங்கே காட்சிப்படுத்தப்படவில்லை. ஆலகால விஷம் வந்தபோது அவர் தான் காப்பாற்றினார். 

அலுவலக நண்பர்கள் கிழக்காசியப் பகுதிகளில் சுற்றிக்கொண்டிருந்தால்,  இந்தியாவிற்கும், தாய்லாந்து போன்ற தேசங்களுக்கும் இருக்கும் தொடர்பைப்பற்றி பேசுவார்கள்.

புலியூர் கேசிகன் என்ற ஒரு எழுத்தாளர் கிட்டத்தட்ட நூறு நூல்கள், தனித்தமிழ் ஆராய்ச்சிக்கென வெளியிட்டுள்ளார். தீராத தமிழ்க்காதல் கொண்டவர். 

காளமேக புலவரின் பாடல்களைத்திரட்டி ஒரு நூலாக வெளியிட்டுள்ளார். 


சிவபெருமானுக்கு மூன்று கண்கள் என்று எல்லாரும் சொன்னாலும், அவருக்கு எஞ்சி இருப்பது அரைக்கண் என்கிறார் காளமேகப்புலவர்.

முதலில் இருந்த மூன்று கண்களில் பாதியை அம்மைக்குக்கொடுத்துவிட்டார்.

மீதமிருக்கும்  ஒன்றரைக்கண்ணில், ஒரு கண்ணைக் கண்ணப்பர் நோண்டி எடுத்துவிட்டார். மீதம் இருப்பது அரைக்கண்ணே என்கிறார் காளமேகப்புலவர். 

இதைப்போல பாடல்கள் தேவாரத்தில் நிச்சயம் இருக்கும் அல்லவா ?

தேடிக்கண்டுகொண்டேன்!கீழ்க்காணும் திருவொற்றியூர் பதிகத்தை!

இன்றரைக் கண்ணுடை யாரெங்கு 
  மில்லை இமய மென்னுங்
குன்றரைக் கண்ணன் குலமகட் 
  பாவைக்குக் கூறிட்டநாள்
அன்றரைக் கண்ணுங் கொடுத்துமை 
  யாளையும் பாகம்வைத்த
ஒன்றரைக் கண்ணன்கண் டீரொற்றி 
  யூருறை உத்தமனே (04-086:அப்பர் தேவாரம்)

காளமேகப்புலவர் சொன்னதை அவருக்குப்பல நூற்றாண்டுகள் முன்னரே அப்பர் தன்னுடையப்பதிகத்தில் சொல்லிவிட்டார். 

இன்றரைக் கண்ணுடை யாரெங்கு 
  மில்லை:இன்று அரைக்கண் உடையவர் என்று ஒருவரும் உலகில் இல்லை. 

இமய மென்னுங்- இமயம் என்னும்

குன்றரைக் கண்ணன் குலமகட் 
  பாவைக்குக் கூறிட்டநாள் அன்று  :

இந்த வரியை இரண்டாகப்பிரிக்க வேண்டும்.தமிழ் இணையப்பல்கலைக்கழகத்தில் கண்ட பொழிப்புரை இந்த வரியைப்பிரிக்க வழிகாட்டியது. #tvu

 குன்றர் ஐக்கு: இமயம் என்னும் குன்றத்தின் ஐ-தலைவன்/அரசன்.இமவான் 

 அண் நல் குலமகள் பாவைக்குகூறிட்ட  ஞான்று :
இமவான் பெற்றெடுத்த மகள் அல்ல பார்வதி. இமவானுக்குக்கிடைத்தவள். 

இமவானுக்குப்பக்கத்தில், அண்மையில் கிடைத்த நல் குலமகளான பாவை- பார்வதிக்கு தன் உடலைக்கூறிட்ட பொழுது - பிரித்துக்கொடுத்தபோது 

அரைக் கண்ணுங் கொடுத்துமை 
  யாளையும் பாகம்வைத்த: அரைக்கண்ணும் கொடுத்து, உமையாளைத் தன் உடலின் பாகத்தில் சரிபாதியாகச் சேர்த்து  வைத்த 

ஒன்றரைக் கண்ணன்கண் டீரொற்றி 
  யூருறை உத்தமனே :

ஒன்றரைக் கண்ணன் கண்டீர், ஒற்றியூர் உறை உத்தமனே: ஒன்றரை கண்ணுடையவன், ஒற்றியூரில் கோயில் கொண்டுள்ள உத்தமனான சிவபெருமான்.

இப்போது கண்களோடு சேர்த்து, தோள்களை ஆராய்வோமா?

இன்று வரை வழக்கில் உள்ள சொற்றொடர், தோளில் பாரத்தைச்  சுமப்பது.

தோள்வலிமையைப்போற்றி, கம்பன் முதல் பலக்கவிஞர்களும் பாடியிருக்கிறார்கள்.

ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா

உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா

களிபடைத்த மொழியினாய் வா வா வா

கடுமை கொண்ட தோளினாய் வா வா வா

தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா

சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா

எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா

ஏறுபோல் நடையினாய் வா வா வா.

 சமீபத்திய நூற்றாண்டில் மஹாகவி பாரதியும், திடமான தோள் கொண்ட இளைஞர்களை வா வா வா என்று அழைக்கிறார்.



கீழ்காணும் படம் நான் தங்கியிருந்த விடுதியின் வாசலில் எடுத்தது. மஞ்சள் நிற பூக்களால் அலங்கரிக்கப்பட்ட இவர் சிவபெருமான் எனத்தெளிவு கொண்டேன். கையில் சூலமும், பக்கத்தில் இருந்த ரிஷபமும் அவரது கோலத்தை உணர்த்தின. 

எட்டு தோள்கள் இருக்கவேண்டுமென்றால், நான்கு முகங்கள் இருக்க வேண்டும் என்ற கணக்கில் இந்த சிலை இருக்கிறது. 

திருமுறையில் நான்முகன் என்று பிரம்மாவைத்தான் குறிப்பிடுகிறார்கள்.
சிவபெருமானை எண் தோள் உடையவன் என்று அப்பர், மாணிக்கவாசகர் என்று பலரும் சொல்கிறார்கள்.
அடுத்து பார்க்கப்போகும் திருவாசகம் குழைத்தப்பத்தில் உள்ள பாடல். 

பலரும் அறிந்த பாடல். அன்றே எனது ஆவியும், உடலும், உடைமை எல்லாவற்றையும் குன்றைப்போல வலிமையான சிவபெருமானே, நீ என்னை ஆட்கொண்டபோதே எடுத்துக்கொண்டாய். இன்று  ஓர் இடையூறு (துன்பம்) எனக்கு உண்டா?  எட்டு தோள்களையும், மூன்று கண்களையும் உடைய எம்மானே, சிவபெருமானே. நான் நல்லது செய்தாலும், அல்லது செய்தாலும், நான் அதற்குப்பொறுப்பல்ல. 

ன்றே என்றன் ஆவியும்

    உடலும் உடைமை எல்லாமும்

குன்றே அனையாய் என்னைஆட்

    கொண்ட போதே கொண்டிலையோ

இன்றோர் இடையூ றெனக்குண்டோ

    எண்தோள் முக்கண் எம்மானே

நன்றே செய்வாய் பிழைசெய்வாய்

    நானோ இதற்கு நாயகமே 



பாங்காக் நகரில் இருந்து திரும்பும்போது, சிங்கப்பூரின் சாங்கியில் உள்ள இந்த பேரூற்று,எனக்கு சிவபெருமானின் தலையில் உள்ள கங்கை பெருக்கெடுத்து ஓடுவதைப்போல தோன்றியது.
உங்களுக்கும் தானே? அடுத்த பதிவில் சந்திப்போம். 

Friday, April 25, 2025

தாயினும் நல்ல தலைவர்-கோணப்பிரான்

மலைக்கோயில்களைப் பார்த்திருப்போம்;கடற்கோயில்களைப் பார்த்திருப்போம். இரண்டும் ஒன்றுசேர இருக்கும் ஒரு கோயிலைக்கண்டதுண்டா?சுனை, மலை,கடல் என மூன்றும் சேர்ந்தத் தலம் இலங்கையில் உள்ள திரிகோணமலை என்னும் திருகோணமாமலை.
சென்ற வாரம் என் மகனுக்கு, திரிகோணம் பற்றிய பிதாகரஸ் தேற்றம் (Pythagoras Theorem) சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தேன். திரிகோணம் (முக்கோணம்) என்ற சொல் பற்றிய எண்ணம் இந்த பதிவாக நீள்கிறது.

கோணம் என்ற சொல்லுக்கு, வளைவு, முனை, சிகரம் எனப்பல பொருள் இருக்கின்றன.
திரிகோணமலை- முப்புறமும் மலை சூழ்ந்த ஊர்.




(Image courtesy: Mr.Veludharan)

தேவாரம் முழுவதிலும் இராவணன் திருக்கயிலை மலையைத்தூக்க முயன்ற குறிப்புகள் இருக்கும்.
அவ்வாறு ஆசைப்பட்ட இராவணனின் ஊரில், பாடல் பெற்ற ஒரு ஊராகக் கடல், சுனை, மலை கொண்ட ஊராக அமைந்திருக்கிறது கோணமலை.
இது இலங்கையின் பாடல் பெற்ற இருதலங்களுள் ஒன்று.
திருகோணமாமலை இலங்கையில் கிழக்குப்பகுதியில் அமைந்திருக்கிறது.








((Image courtesy: Wikipedia-Trinconomalai)


thevaaram.org இணையப்பக்கத்தில், மலை என்று தேடினால் கீழ்காணும் இந்த ஐந்து ஊர்கள் தான் வருகின்றன.



இவற்றில் கணிதவடிவோடு கூடிய பெயருடைய தலம் கோணமலை.

திருஞானசம்பந்தர் தமிழகத்தில் இருந்தபடியே இந்தத்தலத்தைப் பாடினார் என்பார்கள்.
கோணமாமலையைப்பற்றி படிக்கும்போது முன்பிருந்த கோயில், மலைஉச்சியில் இருந்ததாகப் படித்தேன். முந்தைய கோயிலைப் போர்த்துகீசியர்கள் பதினேழாம் நூற்றாண்டில் முற்றிலுமாக அழித்துவிட்டார்கள்.
மலையின் உச்சியில் உள்ள அந்த கோயிலின் கீழே, அலை கடல் வந்து சிவபெருமானின் திருவடி தொழுதபடி இருக்கும். அப்படிப்பட்ட ஒரு கோயில் இந்தோனேசியாவின், பாலி தீவிலும் இருக்கிறது.




(Pura Uluwat, Bali, Indonesia)

பூரா உலுவாத்து ((Pura Uluwatu) என்று அழைக்கப்படும் பாலித்தீவின் கோயில்,மலை உச்சியில் இருக்கும் ஒன்றாகும். அங்கிருந்து பார்த்தால், கீழே, இந்தியப்பெருங்கடல் தெரியும். அந்த கோயில் சங் ஹ்யங் விதி வசா (Sang Hyang Widhi Wasa)எனப்படும், ருத்ர மூர்த்திக்கான ஆலயமாக பதினோராம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து, மஜாபாஹித் பேரரசின் காலத்தில் உருவாக்கப்பட்டது.

இது நான் பகிர நினைத்த கிளைச்செய்தி. பாலியில் கடலும், சுனையும், மலையும் தனித்தனியாக வெவ்வேறு கோயில்களின் அருகில் இருக்கின்றன.

பூரா உலுவாத்து அருகே ஆர்ப்பரித்த இந்தியப்பெருங்கடல், பல ஆண்டுகள் ஆனாலும் என் மனதில் எப்போதும் அலைந்துகொண்டே இருக்கிறது.


இதே பாலித்தீவில் , விஷ்ணுவுக்கான கோயிலில் தீர்த்தா எம்புல் என்ற பெயரில் நன்னீர் சுனை ஒன்று இருக்கிறது.




(Tirta Empul, A natural fountain in Bali, Indonesia)


இப்போது மீண்டும் திருகோணமலைக்குத்திரும்புவோம்.

சிலருக்கு பெரும் சுற்றங்கள் இருக்கமாட்டார்கள். உறவினரோடு பல காரணங்களால் தள்ளி இருக்கலாம். அப்படி இருந்து, மனம் வருந்துபவர்களுக்கு, ஆறுதல் அளிப்பவராக இருக்கிறார், கோணப்பிரான்.

மலையில் ஆறுதல் அடைபவராக இருந்தால் மலை. கடல் வேண்டுமென்றால் கடல். சுனை வேண்டுமென்றால் சுனை.அதுவே சிவபெருமானின் பல திருவேடங்கள் என்றும் தோன்றுகிறது.

அவ்வையின் அமுத மொழியாக வரும் பின் வரும் பாடலும் அதைத்தான் சொல்கிறது.

உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா
உடன்பிறந்தே கொல்லும் வியாதி - உடன்பிறவா
மாமலையி லுள்ள மருந்தே பிணிதீர்க்கும்
அம்மருந்து போல்வாரு முண்டு. (மூதுரை :20)

உடன் பிறந்தவர் மட்டுமே சுற்றத்தார் என்று நினைத்துக்கொண்டு இருக்க வேண்டியது இல்லை. சர்க்கரை-நோய் போன்ற சில வியாதிகள் நாம் பிறக்கும்போதே நம்முடன் சேர்ந்தே பிறந்து நம்மைக் கொல்கின்றன (Type 1 Diabetes Mellitus). நம்முடன் பிறக்காமல், பெரிய மலையில் எங்கோ பிறந்து வளர்ந்த மூலிகை, இடையிலே நம்மை வந்து தாக்கும் பிணியைப் போக்குகின்றன. இந்த மருந்து போன்றவர்களும் நம்முடன் இருக்கிறார்கள்.
மலை மீது உள்ள மூலிகை போன்றவர் சிவபெருமான்.

நாம் அனைவரும் யாருடைய உறவினர்கள் என்பதை நினைவுபடுத்தும் மற்றொரு பாடல் இதோ.

அண்ணல் அரண் முரண் ஏறும், அகலம் வளாய அரவும்,
திண்ணென் கெடிலப் புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!-
அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை. (4.2.11)

தமர் என்றால் உறவினர். இறைவனின் உறவினர் நாம்; அதனால் நாம் அஞ்சுவதற்கு இம்மண்ணுலகத்தில் ஒன்றும் இல்லை என்று நம்மை வாழ்க்கை சவால்களை எதிர்நோக்க தயார்ப்படுத்துகிறார் அப்பர் பெருமான்.
நிற்றி ஈண்டு’ என்று, புக்கு
நெடியவன் - தொழுது, தம்பி,
‘கொற்றவ! நின்னைக் காணக் குறுகினன்,
நிமிர்ந்த கூட்டச்
சுற்றமும், தானும்; உள்ளம் தூயவன்;
தாயின் நல்லான்;
எற்று நீர்க் கங்கை நாவாய்க்கு இறை; குகன்
ஒருவன்
’ என்றான். (கம்பராமாயணம் :1964)
மேற்காணும் கம்பராமாயணச் செய்யுளுக்கும், கோணமாமலை தேவாரத்துக்கும் தொடர்பு இருக்கிறது.
இந்த செய்யுள், இலக்குவன் ராமனுக்கு, குகனை அறிமுகம் செய்யுமிடத்தில் வருகிறது. மனத்தால் நல்லவன் குகன். தேனும், மீனும் தந்த அன்பை எண்ணி, தாயினும் நல்லவன் என்று இலக்குவன், குகனை அறிமுகப்படுத்துகிறான்.

அதிக பழக்கம் இல்லாத போதும் அவன் செய்த விருந்தோம்பல், குகனைப் பற்றிய பிம்பத்தை மேம்படுத்தியது. எனவே தாயின் நல்லான் என்றான் இலக்குவன்.

இதைப்போலவே , தாயினும் நல்லவர் என்று அடியவர்கள் கோணபிரானைப் போற்றிப் பரவுவதாகச் சம்பந்தர் சொல்கிறார்.

தாயினு நல்ல தலைவரென் றடியார்
தம்மடி போற்றிசைப் பார்கள்
வாயினும் மனத்தும் மருவிநின் றகலா
மாண்பினர் காண்பல வேடர்
நோயிலும் பிணியுந் தொழிலர்பா னீக்கி
நுழைதரு நூலினர் ஞாலம்
கோயிலுஞ் சுனையும் கடலுடன் சூழ்ந்த
கோணமா மலையமர்ந் தாரே.

(முதல் திருமுறை:1254 )
இதன் பொருள்:
தாயினும் நல்ல தலைவர் என்று அடியார் தம்மடி போற்றி இசைப்பார்கள்-தாயைவிட நல்ல தலைவர் என்று அடியார்கள்
சிவபெருமானின் திருவடிகளைப் போற்றிப் பரவுவார்கள்.
வாயினும் மனத்தும் மருவி நின்று அகலா
மாண்பினர்
-பல வருடங்கள் கழித்துப்பார்த்த வகுப்பு தோழன்/அல்லது தோழியின் பெயர் வாயில் வர மறுக்கிறது.
அடியவர்களின் மனதில் தூய்மை இருப்பதால், மனதிலும், வாக்கிலும் சிவபெருமான் நிறைந்திருக்கும் மாண்பு கொண்டவராக அருள் பாலிக்கிறார்.
அவருடைய பெயரும் மறக்காது. மனதிலும் நினைத்திருப்போம்.

காண்பல வேடர்
-வீட்டுக்கென்று ஒரு உடை, அலுவலகத்தில் வேறு உடை, கோயிலுக்கு வேறு உடை என்று எப்படி நாம் இருக்கிறோமோ, அப்படி, சிவபெருமானும் பல வேடங்களை உடையவராக காட்சியளிக்கிறார்.

நோயிலும் பிணியும் தொழிலர்பால் நீக்கி-
நோய் தீர்ந்துவிடும். பிணி தீராதது (Chronic)
பிறவிப்பிணி என்ற சொற்றொடரை வள்ளுவர் பயன்படுத்தியிருப்பார்.

பிறவி என்பது தீராப்பிணி.
இறைவனை வழிபடுவதை ஒரு தொழிலாக, தினமும் செய்பவருக்கு, நோய், பிணி இரண்டும் ஏற்படாதவண்ணம் கோணப்பிரான் காத்திடுவார்.

நூலினர்-முப்புரி நூல் அணிந்திருக்கிறார் சிவபெருமான் ,
ஞாலம் நுழைதரு சுனையும்
இப்படி இணையத்தில் யாரும் கொண்டுகூட்டி பொருள் சொல்லிப்பார்க்கவில்லை. ஆனால் இது தான் சரி என்று எனக்குப்படுகிறது.

கம்பராமாயணத்தில், வான மா மழை நுழைதரு மதி என்று ஒரு தொடர் வருகிறது.

கைகேயி, மழைக்காலமேகத்தின் நடுவே நுழைந்த சந்திரனைப்போல தன் கூந்தலில் நுழைந்திருந்த மலர்மாலையை எடுத்துப்போட்டாள் என்பார் கம்பர்.

கடல் உலகைச் சூழும் ஒன்று. 
சுனை ஊற்றெடுக்கும் . 
பாறைகளின் வழி உலகுக்குள் நுழையும் ஒன்று.

ஞாலம் நுழைதரு சுனையும்
என்பது கொண்டுகூட்டச் சரியென்றே நினைக்கிறேன்.

கோயிலும்கடலுடன் சூழ்ந்த
கோணமா மலையமர்ந் தாரே.


திருக்கோயிலும், சுனையும் கடலுடன் சூழ விளங்கும்
திருக்கோணமாமலையில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார்.

வாய்ப்புக்கிடைத்தால் நாமும் இயற்கை எழில்கொஞ்சும் கோணமாமலையைத் தரிசிக்கலாம். தாயை விட நல்லவர். அவரின் தாள் பணியலாம். (முற்றும் )

Friday, March 21, 2025

ஆமாறு யார் அறிவார்?

இரண்டு லட்சத்திற்கும் அதிகமானச் சொற்களைக்கொண்ட தமிழ் மொழி, திருநெறிய தமிழ் என்று திருஞானசம்பந்தப்பெருமானால் கொண்டாடப்பட்ட மொழியாகும். இன்று தமிழில்  புழக்கத்தில் உள்ள சொற்கள் பத்தாயிரத்துக்கும் கீழே தான் இருக்கும் என்கிறார் எழுத்தாளர் திரு.நாஞ்சில் நாடன். 

இவ்வகைக்கட்டுரைகளின் நோக்கம் மெய்யின்பதோடு, தமிழ் இன்பத்தையும் சேர்ப்பதே ஆகும்.  

முதலில் காரைக்கால் அம்மையின் ஒரு பதிகத்தைப்பார்ப்போம். 

விண்வெளியில் அறுபது வயதுள்ள   அமெரிக்கப்பெண்மணி இருக்கும் அதே வேளையில், நம் வீட்டுப்பெண்கள் பொது இடங்களில்  கழிவறை செல்லக்கூட யோசிக்கவேண்டிய நிலை உள்ளது. 

பெண்களுக்கான பாதுகாப்பு என்பது எப்போதும் கேள்விக்குறியாகும் நாட்களில், நினைத்தபோது அம்மையைப்போல பேயுரு கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று நினைக்காத பெண்கள் இல்லை.

 இதுவன்றே ஈசன் திருவுருவம் ஆமா

றிதுவன்றே என்றனக்கோர் சேமம் - இதுவன்றே

மின்னுஞ் சுடருருவாய் மீண்டாயென் சிந்தனைக்கே

இன்னுஞ் சுழல்கின்ற திங்கு (அற்புதத்திருப்பதிகம் பதினோராம் திருமுறை )

இன்று விண்வெளியில் பலமாதங்களுக்குப்பிறகு, பூமித்திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் பற்றிப்பல செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. அவருடைய சென்ற ஆண்டு பதிவில், ஒரே நாளில் பதினைந்து முறை சூரிய உதயம் காண்பதாகச் சொன்னார். பூமிக்குத்திரும்பி தன் குடும்பத்தோடு சேரும் அவர் மனம், விண்வெளியைத்தொட்டுக்கொண்டே இருக்கும் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும் அல்லவா? 

அதைப்போலத்  தான், இறைவனைச் சோதிப்பிழம்பாகத் தரிசனம் செய்த காரைக்கால் அம்மையின் மனமும் இருக்கிறது. 

இதுவென்றே ஈசன் திருவுருவம்: நம்மிடம் அம்மை சொல்கிறார்- இது தான் ஈசனின் திருவுருவம் 

ஆமாறிதுவன்றே:ஆமாறு என்ற சொல் நம் தமிழ் இலக்கியங்களில் பல வகைகளிலும் கையாளப்பட்டு வந்துள்ளது. 

கம்பராமாயணம், திருப்புகழ், திருவருட்பா, திவ்ய பிரபந்தம், திருமுறை என்று எல்லாவற்றிலும் இந்த சொல் பரவிக்கிடக்கிறது. 

ஆமாறு என்றால் உபாயம், சரியான வழியில் ஒன்றை முறையாகச் செய்வது

ஆமாறு= Plan/Device/A proper way of executing something/Strategy)

இறைவனே எனக்கான ஆமாறு என்கிறார் காரைக்கால் அம்மை.

என்று எனக்கோர் சேமம் இதுவன்றே:முன்புள்ள காலங்களில் அஞ்சல் அட்டைகளில் இடதுகோடி மேல் மூலையில், க்ஷேமம் என்று என் பாட்டி எழுதுவதைப் பார்த்திருக்கிறேன். 

க்ஷேமம் என்பது நலம் .இறைவனே எனக்கு நலம் செய்விப்பவர்; பாதுகாப்பு என்னும் சேமம் தருபவர் என்று அம்மை சொல்வதாக நான் புரிந்துக்கொள்கிறேன். 

மின்னுஞ் சுடருருவாய்: அழல் வண்ணம் கொண்ட சிவபெருமான், மின்னும் சுடர் உருவமாகக்காட்சி தருகிறார். 

மீண்டாயென் சிந்தனைக்கே,இன்னுஞ் சுழல்கின்ற திங்கு:

என் சிந்தனையை விட்டு மீளாமல், இன்னும் மனதுக்குள்ளே சுழல்கிறார் சிவபெருமான் என்கிறார் அம்மை. 

இதுவன்றே ஈசன் திருவுருவம் ஆமா

றிதுவன்றே என்றனக்கோர் சேமம் - இதுவன்றே

மின்னுஞ் சுடருருவாய் மீண்டாயென் சிந்தனைக்கே

இன்னுஞ் சுழல்கின்ற திங்கு

ஆமாறு என்ற சொல்லைப் பரிமேலழகர் திருக்குறளுக்கான உரையில் பல இடங்களில் பயன்படுத்தியிருக்கிறார். இந்தச் சொல் திருக்குறளில் இல்லை.



ஆமாறு என்ற சொல்லை இதே வழியில் பயன்படுத்தியுள்ள  பிரபந்தப்பாடலைக் காண்போம்.

ஆமாறு அறியும் பிரானே
      அணி அரங்கத்தே கிடந்தாய்
ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய்
      இருவாட்சிப் பூச்சூட்ட வாராய்  (பெரியாழ்வார் திருமொழி 1888)


இருவாட்சி என்றால் என்ன பூ என்று நீங்கள் அறிவீர்களா? 

ஆமாறு அறியும் பிரானே- ஒன்றை எப்படி முறையாகச் செய்யவேண்டும் என்று அறியும்உணர்ந்த  பிரானே 

  அணி அரங்கத்தே கிடந்தாய்
அணி அரங்கமான, திருவரங்கத்தில் கிடப்பவனே

ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய்:எனக்கு ஏமாற்றம் ஏற்படாமல் தவிர்த்து
இருவாட்சிப் பூச் சூட்ட வாராய்-இருவாட்சி என்பது செடிமல்லிகையைக்குறிக்கிறது. பெரிய வகையிலான இந்தப் பூவுக்கானச் சிறப்புப்பெயர் இருவாட்சி. இதே பெயரில் ஒரு பறவையும் இருக்கிறது (Hornbill)

இருவாட்சி பூச்சூட்ட வாருங்கள் என்று பெரியாழ்வார், அரங்கத்து அம்மானைத்தன்னை ஒரு பெண்ணாகப்பாவித்து  அழைக்கிறார்.