Friday, April 25, 2025

தாயினும் நல்ல தலைவர்-கோணப்பிரான்

மலைக்கோயில்களைப் பார்த்திருப்போம்;கடற்கோயில்களைப் பார்த்திருப்போம். இரண்டும் ஒன்றுசேர இருக்கும் ஒரு கோயிலைக்கண்டதுண்டா?சுனை, மலை,கடல் என மூன்றும் சேர்ந்தத் தலம் இலங்கையில் உள்ள திரிகோணமலை என்னும் திருகோணமாமலை.
சென்ற வாரம் என் மகனுக்கு, திரிகோணம் பற்றிய பிதாகரஸ் தேற்றம் (Pythagoras Theorem) சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தேன். திரிகோணம் (முக்கோணம்) என்ற சொல் பற்றிய எண்ணம் இந்த பதிவாக நீள்கிறது.

கோணம் என்ற சொல்லுக்கு, வளைவு, முனை, சிகரம் எனப்பல பொருள் இருக்கின்றன.
திரிகோணமலை- முப்புறமும் மலை சூழ்ந்த ஊர்.




(Image courtesy: Mr.Veludharan)

தேவாரம் முழுவதிலும் இராவணன் திருக்கயிலை மலையைத்தூக்க முயன்ற குறிப்புகள் இருக்கும்.
அவ்வாறு ஆசைப்பட்ட இராவணனின் ஊரில், பாடல் பெற்ற ஒரு ஊராகக் கடல், சுனை, மலை கொண்ட ஊராக அமைந்திருக்கிறது கோணமலை.
இது இலங்கையின் பாடல் பெற்ற இருதலங்களுள் ஒன்று.
திருகோணமாமலை இலங்கையில் கிழக்குப்பகுதியில் அமைந்திருக்கிறது.








((Image courtesy: Wikipedia-Trinconomalai)


thevaaram.org இணையப்பக்கத்தில், மலை என்று தேடினால் கீழ்காணும் இந்த ஐந்து ஊர்கள் தான் வருகின்றன.



இவற்றில் கணிதவடிவோடு கூடிய பெயருடைய தலம் கோணமலை.

திருஞானசம்பந்தர் தமிழகத்தில் இருந்தபடியே இந்தத்தலத்தைப் பாடினார் என்பார்கள்.
கோணமாமலையைப்பற்றி படிக்கும்போது முன்பிருந்த கோயில், மலைஉச்சியில் இருந்ததாகப் படித்தேன். முந்தைய கோயிலைப் போர்த்துகீசியர்கள் பதினேழாம் நூற்றாண்டில் முற்றிலுமாக அழித்துவிட்டார்கள்.
மலையின் உச்சியில் உள்ள அந்த கோயிலின் கீழே, அலை கடல் வந்து சிவபெருமானின் திருவடி தொழுதபடி இருக்கும். அப்படிப்பட்ட ஒரு கோயில் இந்தோனேசியாவின், பாலி தீவிலும் இருக்கிறது.




(Pura Uluwat, Bali, Indonesia)

பூரா உலுவாத்து ((Pura Uluwatu) என்று அழைக்கப்படும் பாலித்தீவின் கோயில்,மலை உச்சியில் இருக்கும் ஒன்றாகும். அங்கிருந்து பார்த்தால், கீழே, இந்தியப்பெருங்கடல் தெரியும். அந்த கோயில் சங் ஹ்யங் விதி வசா (Sang Hyang Widhi Wasa)எனப்படும், ருத்ர மூர்த்திக்கான ஆலயமாக பதினோராம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து, மஜாபாஹித் பேரரசின் காலத்தில் உருவாக்கப்பட்டது.

இது நான் பகிர நினைத்த கிளைச்செய்தி. பாலியில் கடலும், சுனையும், மலையும் தனித்தனியாக வெவ்வேறு கோயில்களின் அருகில் இருக்கின்றன.

பூரா உலுவாத்து அருகே ஆர்ப்பரித்த இந்தியப்பெருங்கடல், பல ஆண்டுகள் ஆனாலும் என் மனதில் எப்போதும் அலைந்துகொண்டே இருக்கிறது.


இதே பாலித்தீவில் , விஷ்ணுவுக்கான கோயிலில் தீர்த்தா எம்புல் என்ற பெயரில் நன்னீர் சுனை ஒன்று இருக்கிறது.




(Tirta Empul, A natural fountain in Bali, Indonesia)


இப்போது மீண்டும் திருகோணமலைக்குத்திரும்புவோம்.

சிலருக்கு பெரும் சுற்றங்கள் இருக்கமாட்டார்கள். உறவினரோடு பல காரணங்களால் தள்ளி இருக்கலாம். அப்படி இருந்து, மனம் வருந்துபவர்களுக்கு, ஆறுதல் அளிப்பவராக இருக்கிறார், கோணப்பிரான்.

மலையில் ஆறுதல் அடைபவராக இருந்தால் மலை. கடல் வேண்டுமென்றால் கடல். சுனை வேண்டுமென்றால் சுனை.அதுவே சிவபெருமானின் பல திருவேடங்கள் என்றும் தோன்றுகிறது.

அவ்வையின் அமுத மொழியாக வரும் பின் வரும் பாடலும் அதைத்தான் சொல்கிறது.

உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா
உடன்பிறந்தே கொல்லும் வியாதி - உடன்பிறவா
மாமலையி லுள்ள மருந்தே பிணிதீர்க்கும்
அம்மருந்து போல்வாரு முண்டு. (மூதுரை :20)

உடன் பிறந்தவர் மட்டுமே சுற்றத்தார் என்று நினைத்துக்கொண்டு இருக்க வேண்டியது இல்லை. சர்க்கரை-நோய் போன்ற சில வியாதிகள் நாம் பிறக்கும்போதே நம்முடன் சேர்ந்தே பிறந்து நம்மைக் கொல்கின்றன (Type 1 Diabetes Mellitus). நம்முடன் பிறக்காமல், பெரிய மலையில் எங்கோ பிறந்து வளர்ந்த மூலிகை, இடையிலே நம்மை வந்து தாக்கும் பிணியைப் போக்குகின்றன. இந்த மருந்து போன்றவர்களும் நம்முடன் இருக்கிறார்கள்.
மலை மீது உள்ள மூலிகை போன்றவர் சிவபெருமான்.

நாம் அனைவரும் யாருடைய உறவினர்கள் என்பதை நினைவுபடுத்தும் மற்றொரு பாடல் இதோ.

அண்ணல் அரண் முரண் ஏறும், அகலம் வளாய அரவும்,
திண்ணென் கெடிலப் புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!-
அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை. (4.2.11)

தமர் என்றால் உறவினர். இறைவனின் உறவினர் நாம்; அதனால் நாம் அஞ்சுவதற்கு இம்மண்ணுலகத்தில் ஒன்றும் இல்லை என்று நம்மை வாழ்க்கை சவால்களை எதிர்நோக்க தயார்ப்படுத்துகிறார் அப்பர் பெருமான்.
நிற்றி ஈண்டு’ என்று, புக்கு
நெடியவன் - தொழுது, தம்பி,
‘கொற்றவ! நின்னைக் காணக் குறுகினன்,
நிமிர்ந்த கூட்டச்
சுற்றமும், தானும்; உள்ளம் தூயவன்;
தாயின் நல்லான்;
எற்று நீர்க் கங்கை நாவாய்க்கு இறை; குகன்
ஒருவன்
’ என்றான். (கம்பராமாயணம் :1964)
மேற்காணும் கம்பராமாயணச் செய்யுளுக்கும், கோணமாமலை தேவாரத்துக்கும் தொடர்பு இருக்கிறது.
இந்த செய்யுள், இலக்குவன் ராமனுக்கு, குகனை அறிமுகம் செய்யுமிடத்தில் வருகிறது. மனத்தால் நல்லவன் குகன். தேனும், மீனும் தந்த அன்பை எண்ணி, தாயினும் நல்லவன் என்று இலக்குவன், குகனை அறிமுகப்படுத்துகிறான்.

அதிக பழக்கம் இல்லாத போதும் அவன் செய்த விருந்தோம்பல், குகனைப் பற்றிய பிம்பத்தை மேம்படுத்தியது. எனவே தாயின் நல்லான் என்றான் இலக்குவன்.

இதைப்போலவே , தாயினும் நல்லவர் என்று அடியவர்கள் கோணபிரானைப் போற்றிப் பரவுவதாகச் சம்பந்தர் சொல்கிறார்.

தாயினு நல்ல தலைவரென் றடியார்
தம்மடி போற்றிசைப் பார்கள்
வாயினும் மனத்தும் மருவிநின் றகலா
மாண்பினர் காண்பல வேடர்
நோயிலும் பிணியுந் தொழிலர்பா னீக்கி
நுழைதரு நூலினர் ஞாலம்
கோயிலுஞ் சுனையும் கடலுடன் சூழ்ந்த
கோணமா மலையமர்ந் தாரே.

(முதல் திருமுறை:1254 )
இதன் பொருள்:
தாயினும் நல்ல தலைவர் என்று அடியார் தம்மடி போற்றி இசைப்பார்கள்-தாயைவிட நல்ல தலைவர் என்று அடியார்கள்
சிவபெருமானின் திருவடிகளைப் போற்றிப் பரவுவார்கள்.
வாயினும் மனத்தும் மருவி நின்று அகலா
மாண்பினர்
-பல வருடங்கள் கழித்துப்பார்த்த வகுப்பு தோழன்/அல்லது தோழியின் பெயர் வாயில் வர மறுக்கிறது.
அடியவர்களின் மனதில் தூய்மை இருப்பதால், மனதிலும், வாக்கிலும் சிவபெருமான் நிறைந்திருக்கும் மாண்பு கொண்டவராக அருள் பாலிக்கிறார்.
அவருடைய பெயரும் மறக்காது. மனதிலும் நினைத்திருப்போம்.

காண்பல வேடர்
-வீட்டுக்கென்று ஒரு உடை, அலுவலகத்தில் வேறு உடை, கோயிலுக்கு வேறு உடை என்று எப்படி நாம் இருக்கிறோமோ, அப்படி, சிவபெருமானும் பல வேடங்களை உடையவராக காட்சியளிக்கிறார்.

நோயிலும் பிணியும் தொழிலர்பால் நீக்கி-
நோய் தீர்ந்துவிடும். பிணி தீராதது (Chronic)
பிறவிப்பிணி என்ற சொற்றொடரை வள்ளுவர் பயன்படுத்தியிருப்பார்.

பிறவி என்பது தீராப்பிணி.
இறைவனை வழிபடுவதை ஒரு தொழிலாக, தினமும் செய்பவருக்கு, நோய், பிணி இரண்டும் ஏற்படாதவண்ணம் கோணப்பிரான் காத்திடுவார்.

நூலினர்-முப்புரி நூல் அணிந்திருக்கிறார் சிவபெருமான் ,
ஞாலம் நுழைதரு சுனையும்
இப்படி இணையத்தில் யாரும் கொண்டுகூட்டி பொருள் சொல்லிப்பார்க்கவில்லை. ஆனால் இது தான் சரி என்று எனக்குப்படுகிறது.

கம்பராமாயணத்தில், வான மா மழை நுழைதரு மதி என்று ஒரு தொடர் வருகிறது.

கைகேயி, மழைக்காலமேகத்தின் நடுவே நுழைந்த சந்திரனைப்போல தன் கூந்தலில் நுழைந்திருந்த மலர்மாலையை எடுத்துப்போட்டாள் என்பார் கம்பர்.

கடல் உலகைச் சூழும் ஒன்று. 
சுனை ஊற்றெடுக்கும் . 
பாறைகளின் வழி உலகுக்குள் நுழையும் ஒன்று.

ஞாலம் நுழைதரு சுனையும்
என்பது கொண்டுகூட்டச் சரியென்றே நினைக்கிறேன்.

கோயிலும்கடலுடன் சூழ்ந்த
கோணமா மலையமர்ந் தாரே.


திருக்கோயிலும், சுனையும் கடலுடன் சூழ விளங்கும்
திருக்கோணமாமலையில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார்.

வாய்ப்புக்கிடைத்தால் நாமும் இயற்கை எழில்கொஞ்சும் கோணமாமலையைத் தரிசிக்கலாம். தாயை விட நல்லவர். அவரின் தாள் பணியலாம். (முற்றும் )

6 comments:

Anonymous said...

Well written 👍💐

Veludharan said...

அருமை மா

Anonymous said...

அருமை அருமை vazhga valamudan

Anonymous said...

அருமை மேடம்

Anonymous said...

அருமை

Sabari A Nathan said...

It should take it forward next generation. Keep it up Good works. #Thiruchitrambalam 🙏