Friday, April 25, 2025

தாயினும் நல்ல தலைவர்-கோணப்பிரான்

மலைக்கோயில்களைப் பார்த்திருப்போம்;கடற்கோயில்களைப் பார்த்திருப்போம். இரண்டும் ஒன்றுசேர இருக்கும் ஒரு கோயிலைக்கண்டதுண்டா?சுனை, மலை,கடல் என மூன்றும் சேர்ந்தத் தலம் இலங்கையில் உள்ள திரிகோணமலை என்னும் திருகோணமாமலை.
சென்ற வாரம் என் மகனுக்கு, திரிகோணம் பற்றிய பிதாகரஸ் தேற்றம் (Pythagoras Theorem) சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தேன். திரிகோணம் (முக்கோணம்) என்ற சொல் பற்றிய எண்ணம் இந்த பதிவாக நீள்கிறது.

கோணம் என்ற சொல்லுக்கு, வளைவு, முனை, சிகரம் எனப்பல பொருள் இருக்கின்றன.
திரிகோணமலை- முப்புறமும் மலை சூழ்ந்த ஊர்.




(Image courtesy: Mr.Veludharan)

தேவாரம் முழுவதிலும் இராவணன் திருக்கயிலை மலையைத்தூக்க முயன்ற குறிப்புகள் இருக்கும்.
அவ்வாறு ஆசைப்பட்ட இராவணனின் ஊரில், பாடல் பெற்ற ஒரு ஊராகக் கடல், சுனை, மலை கொண்ட ஊராக அமைந்திருக்கிறது கோணமலை.
இது இலங்கையின் பாடல் பெற்ற இருதலங்களுள் ஒன்று.
திருகோணமாமலை இலங்கையில் கிழக்குப்பகுதியில் அமைந்திருக்கிறது.








((Image courtesy: Wikipedia-Trinconomalai)


thevaaram.org இணையப்பக்கத்தில், மலை என்று தேடினால் கீழ்காணும் இந்த ஐந்து ஊர்கள் தான் வருகின்றன.



இவற்றில் கணிதவடிவோடு கூடிய பெயருடைய தலம் கோணமலை.

திருஞானசம்பந்தர் தமிழகத்தில் இருந்தபடியே இந்தத்தலத்தைப் பாடினார் என்பார்கள்.
கோணமாமலையைப்பற்றி படிக்கும்போது முன்பிருந்த கோயில், மலைஉச்சியில் இருந்ததாகப் படித்தேன். முந்தைய கோயிலைப் போர்த்துகீசியர்கள் பதினேழாம் நூற்றாண்டில் முற்றிலுமாக அழித்துவிட்டார்கள்.
மலையின் உச்சியில் உள்ள அந்த கோயிலின் கீழே, அலை கடல் வந்து சிவபெருமானின் திருவடி தொழுதபடி இருக்கும். அப்படிப்பட்ட ஒரு கோயில் இந்தோனேசியாவின், பாலி தீவிலும் இருக்கிறது.




(Pura Uluwat, Bali, Indonesia)

பூரா உலுவாத்து ((Pura Uluwatu) என்று அழைக்கப்படும் பாலித்தீவின் கோயில்,மலை உச்சியில் இருக்கும் ஒன்றாகும். அங்கிருந்து பார்த்தால், கீழே, இந்தியப்பெருங்கடல் தெரியும். அந்த கோயில் சங் ஹ்யங் விதி வசா (Sang Hyang Widhi Wasa)எனப்படும், ருத்ர மூர்த்திக்கான ஆலயமாக பதினோராம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து, மஜாபாஹித் பேரரசின் காலத்தில் உருவாக்கப்பட்டது.

இது நான் பகிர நினைத்த கிளைச்செய்தி. பாலியில் கடலும், சுனையும், மலையும் தனித்தனியாக வெவ்வேறு கோயில்களின் அருகில் இருக்கின்றன.

பூரா உலுவாத்து அருகே ஆர்ப்பரித்த இந்தியப்பெருங்கடல், பல ஆண்டுகள் ஆனாலும் என் மனதில் எப்போதும் அலைந்துகொண்டே இருக்கிறது.


இதே பாலித்தீவில் , விஷ்ணுவுக்கான கோயிலில் தீர்த்தா எம்புல் என்ற பெயரில் நன்னீர் சுனை ஒன்று இருக்கிறது.




(Tirta Empul, A natural fountain in Bali, Indonesia)


இப்போது மீண்டும் திருகோணமலைக்குத்திரும்புவோம்.

சிலருக்கு பெரும் சுற்றங்கள் இருக்கமாட்டார்கள். உறவினரோடு பல காரணங்களால் தள்ளி இருக்கலாம். அப்படி இருந்து, மனம் வருந்துபவர்களுக்கு, ஆறுதல் அளிப்பவராக இருக்கிறார், கோணப்பிரான்.

மலையில் ஆறுதல் அடைபவராக இருந்தால் மலை. கடல் வேண்டுமென்றால் கடல். சுனை வேண்டுமென்றால் சுனை.அதுவே சிவபெருமானின் பல திருவேடங்கள் என்றும் தோன்றுகிறது.

அவ்வையின் அமுத மொழியாக வரும் பின் வரும் பாடலும் அதைத்தான் சொல்கிறது.

உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா
உடன்பிறந்தே கொல்லும் வியாதி - உடன்பிறவா
மாமலையி லுள்ள மருந்தே பிணிதீர்க்கும்
அம்மருந்து போல்வாரு முண்டு. (மூதுரை :20)

உடன் பிறந்தவர் மட்டுமே சுற்றத்தார் என்று நினைத்துக்கொண்டு இருக்க வேண்டியது இல்லை. சர்க்கரை-நோய் போன்ற சில வியாதிகள் நாம் பிறக்கும்போதே நம்முடன் சேர்ந்தே பிறந்து நம்மைக் கொல்கின்றன (Type 1 Diabetes Mellitus). நம்முடன் பிறக்காமல், பெரிய மலையில் எங்கோ பிறந்து வளர்ந்த மூலிகை, இடையிலே நம்மை வந்து தாக்கும் பிணியைப் போக்குகின்றன. இந்த மருந்து போன்றவர்களும் நம்முடன் இருக்கிறார்கள்.
மலை மீது உள்ள மூலிகை போன்றவர் சிவபெருமான்.

நாம் அனைவரும் யாருடைய உறவினர்கள் என்பதை நினைவுபடுத்தும் மற்றொரு பாடல் இதோ.

அண்ணல் அரண் முரண் ஏறும், அகலம் வளாய அரவும்,
திண்ணென் கெடிலப் புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!-
அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை. (4.2.11)

தமர் என்றால் உறவினர். இறைவனின் உறவினர் நாம்; அதனால் நாம் அஞ்சுவதற்கு இம்மண்ணுலகத்தில் ஒன்றும் இல்லை என்று நம்மை வாழ்க்கை சவால்களை எதிர்நோக்க தயார்ப்படுத்துகிறார் அப்பர் பெருமான்.
நிற்றி ஈண்டு’ என்று, புக்கு
நெடியவன் - தொழுது, தம்பி,
‘கொற்றவ! நின்னைக் காணக் குறுகினன்,
நிமிர்ந்த கூட்டச்
சுற்றமும், தானும்; உள்ளம் தூயவன்;
தாயின் நல்லான்;
எற்று நீர்க் கங்கை நாவாய்க்கு இறை; குகன்
ஒருவன்
’ என்றான். (கம்பராமாயணம் :1964)
மேற்காணும் கம்பராமாயணச் செய்யுளுக்கும், கோணமாமலை தேவாரத்துக்கும் தொடர்பு இருக்கிறது.
இந்த செய்யுள், இலக்குவன் ராமனுக்கு, குகனை அறிமுகம் செய்யுமிடத்தில் வருகிறது. மனத்தால் நல்லவன் குகன். தேனும், மீனும் தந்த அன்பை எண்ணி, தாயினும் நல்லவன் என்று இலக்குவன், குகனை அறிமுகப்படுத்துகிறான்.

அதிக பழக்கம் இல்லாத போதும் அவன் செய்த விருந்தோம்பல், குகனைப் பற்றிய பிம்பத்தை மேம்படுத்தியது. எனவே தாயின் நல்லான் என்றான் இலக்குவன்.

இதைப்போலவே , தாயினும் நல்லவர் என்று அடியவர்கள் கோணபிரானைப் போற்றிப் பரவுவதாகச் சம்பந்தர் சொல்கிறார்.

தாயினு நல்ல தலைவரென் றடியார்
தம்மடி போற்றிசைப் பார்கள்
வாயினும் மனத்தும் மருவிநின் றகலா
மாண்பினர் காண்பல வேடர்
நோயிலும் பிணியுந் தொழிலர்பா னீக்கி
நுழைதரு நூலினர் ஞாலம்
கோயிலுஞ் சுனையும் கடலுடன் சூழ்ந்த
கோணமா மலையமர்ந் தாரே.

(முதல் திருமுறை:1254 )
இதன் பொருள்:
தாயினும் நல்ல தலைவர் என்று அடியார் தம்மடி போற்றி இசைப்பார்கள்-தாயைவிட நல்ல தலைவர் என்று அடியார்கள்
சிவபெருமானின் திருவடிகளைப் போற்றிப் பரவுவார்கள்.
வாயினும் மனத்தும் மருவி நின்று அகலா
மாண்பினர்
-பல வருடங்கள் கழித்துப்பார்த்த வகுப்பு தோழன்/அல்லது தோழியின் பெயர் வாயில் வர மறுக்கிறது.
அடியவர்களின் மனதில் தூய்மை இருப்பதால், மனதிலும், வாக்கிலும் சிவபெருமான் நிறைந்திருக்கும் மாண்பு கொண்டவராக அருள் பாலிக்கிறார்.
அவருடைய பெயரும் மறக்காது. மனதிலும் நினைத்திருப்போம்.

காண்பல வேடர்
-வீட்டுக்கென்று ஒரு உடை, அலுவலகத்தில் வேறு உடை, கோயிலுக்கு வேறு உடை என்று எப்படி நாம் இருக்கிறோமோ, அப்படி, சிவபெருமானும் பல வேடங்களை உடையவராக காட்சியளிக்கிறார்.

நோயிலும் பிணியும் தொழிலர்பால் நீக்கி-
நோய் தீர்ந்துவிடும். பிணி தீராதது (Chronic)
பிறவிப்பிணி என்ற சொற்றொடரை வள்ளுவர் பயன்படுத்தியிருப்பார்.

பிறவி என்பது தீராப்பிணி.
இறைவனை வழிபடுவதை ஒரு தொழிலாக, தினமும் செய்பவருக்கு, நோய், பிணி இரண்டும் ஏற்படாதவண்ணம் கோணப்பிரான் காத்திடுவார்.

நூலினர்-முப்புரி நூல் அணிந்திருக்கிறார் சிவபெருமான் ,
ஞாலம் நுழைதரு சுனையும்
இப்படி இணையத்தில் யாரும் கொண்டுகூட்டி பொருள் சொல்லிப்பார்க்கவில்லை. ஆனால் இது தான் சரி என்று எனக்குப்படுகிறது.

கம்பராமாயணத்தில், வான மா மழை நுழைதரு மதி என்று ஒரு தொடர் வருகிறது.

கைகேயி, மழைக்காலமேகத்தின் நடுவே நுழைந்த சந்திரனைப்போல தன் கூந்தலில் நுழைந்திருந்த மலர்மாலையை எடுத்துப்போட்டாள் என்பார் கம்பர்.

கடல் உலகைச் சூழும் ஒன்று. 
சுனை ஊற்றெடுக்கும் . 
பாறைகளின் வழி உலகுக்குள் நுழையும் ஒன்று.

ஞாலம் நுழைதரு சுனையும்
என்பது கொண்டுகூட்டச் சரியென்றே நினைக்கிறேன்.

கோயிலும்கடலுடன் சூழ்ந்த
கோணமா மலையமர்ந் தாரே.


திருக்கோயிலும், சுனையும் கடலுடன் சூழ விளங்கும்
திருக்கோணமாமலையில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார்.

வாய்ப்புக்கிடைத்தால் நாமும் இயற்கை எழில்கொஞ்சும் கோணமாமலையைத் தரிசிக்கலாம். தாயை விட நல்லவர். அவரின் தாள் பணியலாம். (முற்றும் )

Friday, March 21, 2025

ஆமாறு யார் அறிவார்?

இரண்டு லட்சத்திற்கும் அதிகமானச் சொற்களைக்கொண்ட தமிழ் மொழி, திருநெறிய தமிழ் என்று திருஞானசம்பந்தப்பெருமானால் கொண்டாடப்பட்ட மொழியாகும். இன்று தமிழில்  புழக்கத்தில் உள்ள சொற்கள் பத்தாயிரத்துக்கும் கீழே தான் இருக்கும் என்கிறார் எழுத்தாளர் திரு.நாஞ்சில் நாடன். 

இவ்வகைக்கட்டுரைகளின் நோக்கம் மெய்யின்பதோடு, தமிழ் இன்பத்தையும் சேர்ப்பதே ஆகும்.  

முதலில் காரைக்கால் அம்மையின் ஒரு பதிகத்தைப்பார்ப்போம். 

விண்வெளியில் அறுபது வயதுள்ள   அமெரிக்கப்பெண்மணி இருக்கும் அதே வேளையில், நம் வீட்டுப்பெண்கள் பொது இடங்களில்  கழிவறை செல்லக்கூட யோசிக்கவேண்டிய நிலை உள்ளது. 

பெண்களுக்கான பாதுகாப்பு என்பது எப்போதும் கேள்விக்குறியாகும் நாட்களில், நினைத்தபோது அம்மையைப்போல பேயுரு கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று நினைக்காத பெண்கள் இல்லை.

 இதுவன்றே ஈசன் திருவுருவம் ஆமா

றிதுவன்றே என்றனக்கோர் சேமம் - இதுவன்றே

மின்னுஞ் சுடருருவாய் மீண்டாயென் சிந்தனைக்கே

இன்னுஞ் சுழல்கின்ற திங்கு (அற்புதத்திருப்பதிகம் பதினோராம் திருமுறை )

இன்று விண்வெளியில் பலமாதங்களுக்குப்பிறகு, பூமித்திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் பற்றிப்பல செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. அவருடைய சென்ற ஆண்டு பதிவில், ஒரே நாளில் பதினைந்து முறை சூரிய உதயம் காண்பதாகச் சொன்னார். பூமிக்குத்திரும்பி தன் குடும்பத்தோடு சேரும் அவர் மனம், விண்வெளியைத்தொட்டுக்கொண்டே இருக்கும் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும் அல்லவா? 

அதைப்போலத்  தான், இறைவனைச் சோதிப்பிழம்பாகத் தரிசனம் செய்த காரைக்கால் அம்மையின் மனமும் இருக்கிறது. 

இதுவென்றே ஈசன் திருவுருவம்: நம்மிடம் அம்மை சொல்கிறார்- இது தான் ஈசனின் திருவுருவம் 

ஆமாறிதுவன்றே:ஆமாறு என்ற சொல் நம் தமிழ் இலக்கியங்களில் பல வகைகளிலும் கையாளப்பட்டு வந்துள்ளது. 

கம்பராமாயணம், திருப்புகழ், திருவருட்பா, திவ்ய பிரபந்தம், திருமுறை என்று எல்லாவற்றிலும் இந்த சொல் பரவிக்கிடக்கிறது. 

ஆமாறு என்றால் உபாயம், சரியான வழியில் ஒன்றை முறையாகச் செய்வது

ஆமாறு= Plan/Device/A proper way of executing something/Strategy)

இறைவனே எனக்கான ஆமாறு என்கிறார் காரைக்கால் அம்மை.

என்று எனக்கோர் சேமம் இதுவன்றே:முன்புள்ள காலங்களில் அஞ்சல் அட்டைகளில் இடதுகோடி மேல் மூலையில், க்ஷேமம் என்று என் பாட்டி எழுதுவதைப் பார்த்திருக்கிறேன். 

க்ஷேமம் என்பது நலம் .இறைவனே எனக்கு நலம் செய்விப்பவர்; பாதுகாப்பு என்னும் சேமம் தருபவர் என்று அம்மை சொல்வதாக நான் புரிந்துக்கொள்கிறேன். 

மின்னுஞ் சுடருருவாய்: அழல் வண்ணம் கொண்ட சிவபெருமான், மின்னும் சுடர் உருவமாகக்காட்சி தருகிறார். 

மீண்டாயென் சிந்தனைக்கே,இன்னுஞ் சுழல்கின்ற திங்கு:

என் சிந்தனையை விட்டு மீளாமல், இன்னும் மனதுக்குள்ளே சுழல்கிறார் சிவபெருமான் என்கிறார் அம்மை. 

இதுவன்றே ஈசன் திருவுருவம் ஆமா

றிதுவன்றே என்றனக்கோர் சேமம் - இதுவன்றே

மின்னுஞ் சுடருருவாய் மீண்டாயென் சிந்தனைக்கே

இன்னுஞ் சுழல்கின்ற திங்கு

ஆமாறு என்ற சொல்லைப் பரிமேலழகர் திருக்குறளுக்கான உரையில் பல இடங்களில் பயன்படுத்தியிருக்கிறார். இந்தச் சொல் திருக்குறளில் இல்லை.



ஆமாறு என்ற சொல்லை இதே வழியில் பயன்படுத்தியுள்ள  பிரபந்தப்பாடலைக் காண்போம்.

ஆமாறு அறியும் பிரானே
      அணி அரங்கத்தே கிடந்தாய்
ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய்
      இருவாட்சிப் பூச்சூட்ட வாராய்  (பெரியாழ்வார் திருமொழி 1888)


இருவாட்சி என்றால் என்ன பூ என்று நீங்கள் அறிவீர்களா? 

ஆமாறு அறியும் பிரானே- ஒன்றை எப்படி முறையாகச் செய்யவேண்டும் என்று அறியும்உணர்ந்த  பிரானே 

  அணி அரங்கத்தே கிடந்தாய்
அணி அரங்கமான, திருவரங்கத்தில் கிடப்பவனே

ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய்:எனக்கு ஏமாற்றம் ஏற்படாமல் தவிர்த்து
இருவாட்சிப் பூச் சூட்ட வாராய்-இருவாட்சி என்பது செடிமல்லிகையைக்குறிக்கிறது. பெரிய வகையிலான இந்தப் பூவுக்கானச் சிறப்புப்பெயர் இருவாட்சி. இதே பெயரில் ஒரு பறவையும் இருக்கிறது (Hornbill)

இருவாட்சி பூச்சூட்ட வாருங்கள் என்று பெரியாழ்வார், அரங்கத்து அம்மானைத்தன்னை ஒரு பெண்ணாகப்பாவித்து  அழைக்கிறார். 

Saturday, October 19, 2024

சும்மாடு எது? அப்பர் வழி கேட்போம்

 சும்மாடு என்ற சொல்லை அறிந்திருக்கிறீர்களா? இப்போதுள்ள 2k kids எனப்படும் தலைமுறை, தெரியாது என சொல்லக்கூடும். 

இந்தப்படத்தைப் பார்த்தபடி  வாசியுங்கள். பல எளிதான தமிழ் சொற்களைப்புழக்கத்தில் கொண்டுவர இது உதவும். 

எப்போதாவது மனம் எதோ இனம்புரியாத சஞ்சலத்தில் இருந்தால், திருமுறையை எடுத்து அதில் ஏதாவது பாடலைப்படிக்கும் போது அது என் மனதுக்கு ஆறுதல் அளிப்பதை உணர்ந்திருக்கிறேன். 

அப்படிதான் இந்த வாரம், பணியிடத்தில் உள்ள சுமை கொஞ்சம் அதிகம், அதோடு நாள்பட்ட சளி, இருமல் என்று உடல் வலி, திடீரென மனதில் வந்த பெற்றோர், உடன்பிறந்தோரின் முகங்கள், யாரை எப்போது பார்ப்பது என்ற ஏக்கம், என எல்லாமும் கலந்ததாய் இருந்தது மனது. அப்பரின் பாடல் கண்முன்னே தென்பட்டது. உடனே ஒரு தெளிவும் பிறந்தது!

நம்மில் பெரும்பாலானோரை விட அதிக சிக்கலானது தான் அப்பர் பெருமானின் வாழ்க்கை. ஆனால், இறைவனின் திருவடி ஒன்றைப்பற்றிக் கொண்டதனால் அவரது வாழ்க்கை பெருவாழ்வாக, இன்றும் சிந்திக்கப்படும் ஒன்றாக மாறிவிட்டது. 


இன்றளவும் நமக்கு கோயில்கள், சுத்தமாய்க் கிடைத்திருப்பதற்கு, அவர் செய்த உழவாரப்பணியே காரணம். 

அப்பர் வாழ்ந்தது ஏழாம் நூற்றாண்டில் இன்று நாம் வாழ்வது இருபத்தோராம் நூற்றாண்டு. இந்த சும்மாடு என்ற சொல் அப்போதே வழக்கத்தில் இருந்திருக்கிறது.

 படத்தில் உள்ள கூடை சுமக்கும் அம்மா தன் கூடைக்குக்கீழே சுருட்டி வைத்திருக்கும் துணி தான் சும்மாடு- சுமையை சுமக்க உதவும் ஒன்று, (ஒரு செல்வம் ). 

அதே போல அத்தா என்ற சொல், அப்பாவைக்குறிக்கும்.இறைவனையும் குறிக்கும்  இன்றும் இஸ்லாமியக்குடும்பங்களில் அத்தா என்று அப்பாவைச் சொல்வார்கள்.

மணிவாசகப்பெருமான், அத்தன் எனக்கு அருளியவாறு ஆர் பெறுவார் அச்சோவே என்பார்.

இவை இரண்டையும் ஒரே பாடலில் திருவானைக்காத் தேவாரத்தில் கண்டேன். 

இன்று வரை இந்த தலம் காணக் கிடைக்கவில்லை. "கோனைக்காவி" என்று தொடங்கும் தேவாரத்தைப்பயின்றிருக்கிறேன். என்றாவது அது வாய்க்கும் என்றே நம்புகிறேன். 

அப்பர் பெருமான் தாய் தந்தை இருவரையும் இழந்த பின்னர், சமண மதத்தைப்பின்பற்றினார். மீண்டும் சைவத்தைத் தழுவியபிறகும், வாழ்வின் நிலையாமை பற்றிய எண்ணங்கள் அவரிடம் மேலோங்கி இருப்பதைக்காணலாம். 

திருவானைக்காத் தலத்திற்கென்று ஒரு தலபுராணம் உள்ளது. ஒரு  யானையும், ஒரு  சிலந்தியும் ஒரே நேரத்தில் சிவபூஜை செய்யலாயின. சிலந்தி தன் எச்சிலைக்கொண்டு சிவலிங்கத் திருமேனியின் மேலே உருவாக்கிய வலையை, யானை பிய்த்தெறிந்தது. சிலந்தி யானையின் தும்பிக்கைக்குள் போய், யானையை வருத்தியது. இரு விலங்குகளும் சிவலோகம் சென்ற பின்னர், சிலந்தி  கோச்செங்கச்சோழனாகப்பிறவி எடுத்தது. முற்பிறவியில் செய்த முயற்சியைத்தொடர்ந்து , சோழ அரசனாக யானை புகாத மாடக்கோயில்கள் பலவற்றைத் தன் தேசம் முழுக்க எழுப்பினான். அவ்வகையான எழுப்பப்பட்ட ஆலயங்களுள் ஒன்று திருவானைக்கா ஆலயம். 

மற்ற ஆலயங்கள், திருஆக்கூர்,குடவாசல், உறையூர்(திருமுக்கீஸ்வரம்),நல்லூர்,  முதலியவை ஆகும். 

கோச்செங்கட்சோழ நாயனார்  63 நாயன்மார்களில் ஒருவர். 

இவர் வாழ்ந்த காலம் கி.மு. 500 ஆக இருக்கலாம். கரிகாலச் சோழன், கிள்ளி வளவன், கோச்செங்கச் சோழன் போன்றோர், ராஜராஜ சோழனை விட ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர்கள். இவர்களின் காலம் சங்க காலம் என்றே அறியப்படுகிறது. 

வழக்கமாக வைணவர்கள் சைவர்களைப்புகழ மாட்டார்கள் என்ற கருத்து நிலவுகிறது. திருமுறைகளைத்தொகுத்தவர், நம்பியாண்டார் நம்பி. அவருடைய ஊர் திருநாரையூர். அந்த ஊரில் உள்ள வைணவ ஆலயத்தைப்பாடிய திருமங்கை ஆழ்வார், வீரமுள்ள அரசரான கோச்செங்கட்சோழனனின் பெருமையைப்பாடுவதாக பல பாசுரங்கள் இருக்கின்றன. 


பைங்கணாள் அரி உருவாய் வெருவ  நோக்கிப்  

பருவரைத் தோள் இரணியனைப் பற்றி வாங்கி 

அங்கை வாள் உகிர் நுதியால் அவனது  ஆகம் 

அங்குருதி பொங்குவித்தான் அடிக் கீழ் நிற்பீர் 

வெங்கண் மாகளிறு உந்தி வெண்ணியேற்ற 

விறல் மன்னர் திறல் அழிய வெம்மா உய்த்த 

செங்கணான் கோச்சோழன் சேர்ந்த கோயில் 

திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (1501-பிரபந்தம் )

பைங்கணாள்-குளிர்ந்த கண்களை உடைய பெருமாள் -விஷ்ணு 

இந்த பாடலில், பெருமாளின் குளிர்ந்த கண்களும், சோழனின்  சிவந்த கண்களும், சூடான (வெம்மையான), வெள்ளை யானையின் கண்களும் சொல்லப்பட்டிருக்கின்றன. இணையத்தில் எங்கும், பிரபந்தத்தையும், திருமுறையையும் சேர்த்து கையாளும் கட்டுரைகள் இல்லை என்பதால் இங்கே பகிர்ந்துள்ளேன். 
அரி -சிங்கம் 
வெருவ -அச்சம் ஏற்படுத்துமாறு 

பருவரை -பருமனான மலை 

ஆகம்-உடல் 

விறல் -வீரம் 

திறல்-வலிமை

வெம்மா-கோபம், வெம்மை  

குளிர்ந்த கண்களையுடைய பெருமாள், சிங்க உருவம் கொண்டு, ஹிரண்யன் அச்சப்படுமாறு அவனை நோக்கி, தனது பருத்த மலை போன்ற தோள்களால் இரண்யனைபிடித்து வாங்கி, தனது கைகளால், வாழ் போன்ற கூர்மையான நகங்களால், அவனது உடலைக்கிழித்தி, இரத்தத்தைப் பொங்க வைத்தார். அவரின் அடிநிழனில் கீழ் நில்லுங்கள். வெண்மையான கண்களையுடைய யானையை உந்தி நகர்த்தி, வெண்ணியாற்றங்கரையில், பல வீரமான மன்னர்களின் வலிமை அழியுமாறு, கோபம் கொண்ட, சிவந்த கண்களை உடைய கோச்செங்கெங்கச்சோழன் சேர்ந்த கோயிலான திருநறையூர் மணிமாடம் சேருங்கள்.

இந்த திருநாரையூரில் உள்ள மாடக்கோயில் , கோச்செங்கட்சோழரால் எழுப்பப்பட்ட்டது. இன்றைய நாளில் இந்த ஊர் நாச்சியார் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. 

திருவானைக்கா பஞ்சபூத தலங்களுள் , நீருக்கானது. இறைவன் இருக்கும் கருவறை எப்போதும் காவேரி நீரால் சூழப்பட்டிருக்கும். அம்மை அகிலாண்டேஸ்வரியின் புகழும் உலகறிந்த ஒன்றாகும். காளமேகப்புலவர், அகிலாண்டேஸ்வரியின் அருள் பெற்ற பின்னர் தான் கவி ஆனார். இந்த தலத்தில் ஆதி சங்கரர், ஸ்ரீ சக்ரங்களை அன்னையின் காதணிகளாக அணிவித்துள்ளார்.

இப்போது தேவாரத்தைப்பார்ப்போம் 

எத்தாயர் எத்தந்தை எச்சுற்றத்தார்

    எம்மாடு சும்மாடாம் ஏவர் நல்லார்

செத்தால்வந் துதவுவார் ஒருவ ரில்லை

    சிறுவிறகால் தீமூட்டிச் செல்லா நிற்பர்

சித்தாய வேடத்தாய் நீடு பொன்னித்

    திருவானைக் காவுடைய செல்வா என்றன்

அத்தாவுன் பொற்பாதம் அடையப் பெற்றால்

    அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே (06-62-01)

  எம்மாடு சும்மாடாம்? மாடு என்றால் செல்வம். எந்த செல்வம் நம்மை சுமக்கும்? நம்முடைய வாழ்வு முடியும்போது அம்பானி அளவு செல்வம் இருந்தாலும், அந்த செல்வம் நம்மை சுமக்காது.

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு

மாடல்ல மற்றை யவை. (திருக்குறள்: 40)

ஒருவருக்கு அழியாத செல்வம் கல்வி மட்டுமே என்கிறார் திருவள்ளுவர். மாடு என்ற சொல் செல்வத்தைக்குறிக்கிறது. 

எத்தாயர் எத்தந்தை எச்சுற்றத்தார் ஏவர் நல்லார்?

எத்தாயர்:

அப்பர் பெருமான் வாழ்ந்த காலத்தில் ஆண்கள் பரவலாக பலதாரம் கொண்டவர்களாக இருந்திருக்கக்கூடும். தாய் என்று வரும்போது அது பெற்றவளையோ, வளர்த்தவர்களையோ, அல்லது அன்னை என்ற இடத்தில் இருப்பவர்களையோ குறிக்கலாம் என்பதால் அங்கு பன்மை விகுதி உள்ளது.

எத்தாயர் என்பது, எத்தனை சிறந்த தாயாராக இருந்தாலும் என்ற பொருளிலும் கையாளப்படலாம்.  

தாயாக இருப்பவர்களிலும், தந்தை எனப்பட்டவரிலும், சுற்றத்தவர்கள் என்றிருப்பவர்களிலும் யார் நல்லவர்? 

செத்தால்வந் துதவுவார் ஒருவ ரில்லை:

நம் வாழ்க்கை முடிந்தால் இதில் யாரும் வந்து உதவமாட்டார்கள். 

சிறுவிறகால் தீமூட்டிச் :
உடனே சிறுவிறகால் தீமூட்டி, நம் உடலை எரித்து நிற்பர்.
அதென்ன சிறுவிறகு ?அதிக நேரம் எடுக்காமல், விரைவாக பற்றுதலுக்காக சிறுவிறகைப்பயன்படுத்துவார்களாம். 
செல்லா நிற்பர்:
செல்லா நிற்பர் என்ற தொடர், சிவபுராணத்தில் ஒரு அடியை நினைவில் கொணர்ந்தது. 
"செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள் எல்லா பிறப்பும் பிறந்திளைத்தேன்" 
செல்லா நின்ற :எப்போதும் இயங்கிக்கொண்டே இருக்கும் தாவர சங்கமம் .

செல்லா நிற்பர்: செல்லா என்பது இறந்தகாலத்தில் இருக்கிறது. நிற்பது என்பது எதிர்காலத்தில் இருக்கிறது. அந்த உடல் எரிந்துமுடிக்கும் வரை கூட நிற்காமல் செல்வர் என்பதனைக்குறிக்க இறந்தகாலத்தை எதிர்க்காலத்துக்குள்  புகுத்திக் சொல்கிறார். 

சித்தாய வேடத்தாய்:சித்து என்பது அறிவு, ஞானம், ஞானம் வந்தால், துன்பம் போய்விடும். அறிவு வடிவான பெருமானே !

நீடு பொன்னித்    திருவானைக் காவுடைய செல்வா:நீண்டு ஓடும் பொன்னி எனப்படும் காவிரிக்கரையில் உள்ள திருவானைக்காவின் தலைவனே,செல்வனே  

அத்தா:இறைவனே 

உன்  பொற்பாதம் அடையப் பெற்றால்:உன்னுடைய பொன்னான திருவடிகளை நான் அடைந்தால்

அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே:அதென்ன அல்லகண்டம்? இந்த வரி இந்த பதிகத்தின் எல்லா பாடல்களிலும் கடைசியில் வருகிறது. கண்டம் என்றால் என்ன என்று தமிழர்களில் யாரைக்கேட்டாலும், ஆசிய கண்டம், ஐரோப்பா கண்டம் என்று சொல்வார்கள். தமிழில் கண்டம் என்ற சொல்லுக்கு பல பொருட்கள் இருக்கின்றன. யானையின் கழுத்தில் உள்ள கயிறு, தாள வகையில் ஒன்று, பகுதி,ஜோதிடக்காரர்கள் மொழியில் வர இருக்கும் ஆபத்து  இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அதில் கண்டம் என்ற சொல், தொண்டை என்ற பொருளில் பயன்படுத்தப்படும் போது அது வடமொழியிலிருந்து வந்திருப்பதை உணரலாம். நீலகண்டம், நீலம்பாய்ந்த கழுத்து/தொண்டைப்பகுதி. 

அல்லகண்டம் என்ற சொல் துன்பத்தைக்குறிக்கும்.இப்போது பலரும், நல்லை அல்லை என்ற திரையிசைப்பாடலை முணுமுணுக்கிறார்கள். அல்லை என்ற சொல் நல்லது அல்லாத - கெட்ட என்ற பொருளில் அறியப்படும். 

உன் திருப்பாதத்தை நான் அடையப்பெற்றால் நான் துன்பம் அடைவேனா? 

உன் திருவடியை அடைந்தபிறகு எனக்கு துன்பங்கள் ஏற்படாது. 

அல்ல கண்டம் கொண்டு அடியேன் என் செய்வேன்: துன்பம் என்ற ஒன்று எனக்கு ஏற்படாது. அப்படி இல்லாத ஒன்றைக்கொண்டு நான் என்ன செய்வேன். ஒன்றும் செய்யமாட்டேன் என்கிறார் அப்பர் பெருமான். 



இந்த பாடல் என்னோடு உங்களுக்கும் ஆறுதலைத்தந்திருக்கும் என்றே நம்புகிறேன் !

Sunday, June 09, 2024

மானமும், தானமும், ஞானமும், வானமும்- திருவாழ்கொளிபுத்தூர் தேவாரங்கள்

 தமிழ்த்தாத்தா உ.வே.சா அவர்களின் ஆசானான திரிசிரபுரம்.மஹாவித்துவான்.மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களின் ஒரு பாடலோடு இந்த பதிவைப்பார்ப்போம்.

மீனாட்சிசுந்தரம் பிள்ளை தான் கந்தர் சஷ்டி கவசம் இயற்றிய தேவராய சுவாமிகளுக்கும் தமிழ் ஆசான். அன்றைய நாளில் மாயூரம் உட்பட பல சிவாலயங்களுக்கு இவர் புராணம் இயற்றியுள்ளார்.

கீழேக்காணும் இந்தப்பாடல் திருவாளொளி புற்றூர் புராணத்தில் இருக்கிறது.


பரிப்பவன் பரிக்கும் போதும் -. அதென்ன பரிப்பவன்? 

இப்போது தான் பாரதம் ஒரு தேர்தலைச் சந்தித்திருக்கிறது. பரதன் என்ற சொல்லுக்குத் தாங்குபவன் என்பது ஒரு பொருளாகும்.  

இந்த செய்யுளில் உள்ள பரிப்பவன் என்ற சொல்லுக்கு, காப்பாற்றுபவன் தாங்குபவன் என்பது பொருள். பரிப்பவன்-காப்பாற்றுபவன். பறிப்பவன் அல்ல. 

தமிழ் இருநூற்றண்டுகளில் எத்தனை சொற்களை இழந்திருக்கிறது என்பதை இதுபோன்ற பாடல்களைக்கொண்டு அறியலாம். 

மும்மூர்த்திகளுக்கும் அவரவருக்கான வேலைகள் இருக்கின்றன. ஒருவர் படைக்கிறார், ஒருவர் பரிக்கிறார்-காப்பாற்றுகிறார், மற்றவர் துடைக்கிறார்-நம் வாழ்க்கையை முடித்துவைக்கிறார். இந்த மூன்று தொழில்கள் நடக்கிறபடி நடக்கட்டும். நாம் இந்த மூன்றின்போதும், நல்ல நறுமணம் கமழுமாறு செய்து, துதிகள் பாடி, தேங்காய் உடைக்கும்போது அந்த ஊற்றை உற்றவனும், நம்முடைய பிறப்பு, இறப்பு என்னும் சுழற்சிக்கான வாயிலை அடைப்பவனுமாகிய சித்தி விநாயகரை எண்ணுவோம் என்கிறார் மீனாட்சி சுந்தரம் பிள்ளை என்று நான் புரிந்துகொண்டேன். 

தேங்காய் உடைப்பது என்பது நம்முடைய துன்பங்களிலிருந்து நமக்கு விடுதலை வேண்டும் என்பதற்காக விநாயகருக்குச் செய்யும் பிரார்த்தனை. பிறவி என்ற துன்பத்தைப்போக்க, அவரைப்பற்றிக்கொள்வோம். 

இணையத்தில் எங்கும் மேலே சொன்னப்பாடலுக்கு விளக்கம் இல்லை. 

திருவாள் ஒளி புற்றூர் :

காவிரி வடகரையில் பாடல் பெற்ற 29ஆவது தலம். வைத்தீஸ்வரன் கோயில் அருகே இருக்கிறது.

வாசுகி என்னும் பாம்பு பாற்கடலைக்கடைந்த பிறகு தன் உடல் வேதனைத்தீர வேண்டிக்கொண்டத் திருத்தலம்- அதனால் புற்றூர்.

அர்ச்சுனன் கானகவாசம் செய்தபோது தண்ணீர் தேடி இங்கு வந்த போது, ஒரு முதியவர் உருவத்தில் வந்த சிவபெருமான், அர்ச்சுனனின் வாளை வாங்கிக்கொண்டு ஒரு கோலைக்கொடுத்து . அதை அங்கிருந்த இடத்தில் தட்டிப்பார்த்து நீர் இருக்கும் இடத்தை அறிந்துக்கொள்ளச் சொன்னார்.

முதியவர் மறைந்துவிட்டார்.

தண்ணீர் கிடைத்த இடத்தில் ஒரு புற்றும் அந்த புற்றுக்குள் ஒரு லிங்கமும் இருந்ததாகவும், அர்ச்சுனனின் வாள் அந்த புற்றுக்குள் ஒளி மிகுந்து காணப்பட்டதாகவும் தலபுராணம் சொல்கிறது.

இந்த தலத்திற்கு சம்பந்தரின் தேவாரமும், சுந்தரரின் தேவாரமும் அழகு சேர்க்கின்றன.

சுந்தரரின் தேவாரத்தில் அவர் மண்ணி ஆற்றைப்பற்றியும் குறிப்பிடுகிறார் .

  குடமுனி கரத்தில் ஏந்துங் குண்டிகை இருந்து நீங்கிப்

படிதனில் வேறு வேறாய்ப் பற்பல நாமந் தாங்கிக்

கடல்கிளர்ந் தென்னச் செல்லுங் காவிரி யென்னு மாற்றின்

வடகரை மண்ணி யின்பால் வந்தனன் கருணை வள்ளல்! (கந்தபுராணம் )

கந்தபுராணம் அகத்தியரின் குண்டலத்திலிருந்து வந்து , பலப்பல பெயர்களோடு, கடல்போலத் திகழும் காவிரியின் வடகரையில் உள்ள மண்ணி என்னும் ஆற்றுக்குக் கந்தன் வந்ததாகச் சொல்கிறது. 

தமிழ்க்கடவுள் வந்த இடம் என்றால், இந்த இடத்தின் பழமைக்கும் மாட்சிக்கும் வேறு ஏதேனும் சொல்ல அவசியம் இல்லை. 

மண்ணுதல் என்ற சொல்லுக்கு கழுவுதல் என்றும் பொருள் இருக்கிறது.

நம்முடைய தீவினைகளைக்கழுவும் வகையில் இந்த தலத்தில் மண்ணி ஆறு பரவியிருக்கிறது. 

மண்ணி ஆற்றின் மலர் நீலோத்பவம். சோழநாட்டில் நீர்வளம் உள்ள இடங்களில் எல்லாம் இந்த மலரைப்பார்க்கலாம். இந்த மலர் இலங்கை நாட்டின்தேசிய  மலரும் கூட. 



படைக்கண் சூலம் பயில வல்லானை, பாவிப்பார் மனம் பாவிக் கொண்டானை,

கடைக்கண் பிச்சைக்கு இச்சை காதலித்தானை, காமன் ஆகம்தனைக் கட்டு    அழித்தானை,

சடைக்கண் கங்கையைத் தாழ வைத்தானை, தண்ணீர்மண்ணிக் கரையானை, தக்கானை,

மடைக்கண் நீலம் மலர் வாழ்கொளி புத்தூர் மாணிக்கத்தை, -மறந்து என் நினைக்கேனே? . (7.57 திருவாழ்கொளிபுத்தூர்)

இன்றைய நாளில் வாள் ஒளி புற்றூர் மருவி திருவாழ்கொளிப்புத்தூர் என்று வழங்கப்படுகிறது.

படைக்கண் சூலம் பயில வல்லானை- தன் கரங்களில் தங்கியுள்ள படைக்கருவிகளில் சூலம் என்ற ஒன்றைப்பழக வல்லவனும்

பாவிப்பார் மனம் பாவிக் கொண்டானை- இந்த வரியைப்பாருங்கள். இதே போல பாவிப்பார், மனம் பாவிப்பானை என்று திருக்கச்சி ஏகம்பத்தின் தேவாரத்தில், தனக்கு இடக்கண் கிடைத்தபோதும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடியிருக்கிறார். 

அந்த தேவாரத்தைக்கீழே காணலாம் 

உற்றவர்க்கு உதவும் பெருமானைஊர்வது ஒன்று உடையான்உம்பர் கோனை,

பற்றினார்க்கு என்றும் பற்றவன் தன்னைபாவிப்பார் மனம் பாவிக் கொண்டானை,

அற்றம் இல் புகழாள் உமை நங்கை ஆதரித்து வழிபடப் பெற்ற

கற்றை வார் சடைக் கம்பன் எம்மானைகாணக் கண் அடியேன் பெற்ற ஆறே! . (கச்சி ஏகம்பம்-சுந்தரர் தேவாரம்) 


பாவிப்பார் மனம் பாவிக் கொண்டானை-தன்னை மனதில் பாவிப்பவர்களின் மனதில் பரவி, அதைத்தன் அகமாகக்கொள்வார் சிவபெருமான் 

கடைக்கண் பிச்சைக்கு இச்சை காதலித்தானை-விரும்பி, மனதில் கர்வமேதுமின்றி, மண்டையோட்டுத்தலையில் பிச்சை வாங்குகிறார் சிவபெருமான்.

நம்மில் பலபேருக்கு செய்யும் தொழிலைப்பற்றிய கர்வம் இருக்கிறது. ஆன்மீக முன்னேற்றம் வேண்டுவோருக்கு இருக்க வேண்டிய மற்றொரு குணம் கர்வம் துறத்தல் என்பதையும் சிந்திப்போம். 

காமன் ஆகம்தனைக் கட்டு    அழித்தானை-உடலழகு மீது கர்வம் கொண்ட மன்மதனை உடல் அழியச் செய்தார். 

ஒரே அடியில் கர்வமில்லாத சிவபெருமானையும், கர்வம் கொண்ட மன்மதனையும் சொன்னது சிறப்பு !

சடைக்கண் கங்கையைத் தாழ வைத்தானை-கங்கையைச்  சடையில் அது அங்கிருந்து உலகுக்கு வரும்படி தாழ  வைத்தவனும் 

தண்ணீர்மண்ணிக் கரையானை-

கங்கையைச்  சொன்ன அதே அடியில் மண்ணி ஆற்றையும் சொல்கிறார் சுந்தரர்.

 தண்ணீர்-குளிர்ந்த நீரை உடைய மண்ணி ஆற்றின் கரையில் அமர்ந்திருக்கிறார் சிவபெருமான் 

தக்கானை- எல்லாத் தகுதிகளும் உடையவனை  (Ultimate Fit)

மடைக்கண் நீலம் மலர் வாழ்கொளி புத்தூர் மாணிக்கத்தை-நீர்மடைகளில் நீலோத்பவ  மலர் மலர்கின்ற திருவாழ்கொளி புத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம் போன்ற  பெருமானை

மறந்து என் நினைக்கேனே? மறந்து வேறொன்றையும் நினைக்க முடியாது.

தக்கேசி எனப்படும் பண்ணில் அமைந்த இந்த பாடல், எப்படி சிவபெருமானை மறக்க முடியும் என்ற பொருளில் அமைந்ததாக இருக்கிறது. 

திருஞானசம்பந்தர் தன்னுடைய இளம்வயதில் முக்தி அடையப்பெற்றவர். அவருடைய திருவாழ்கொளிபுத்தூர் தேவாரம் பாடல் அமைந்த விதத்தில் வித்யாசமாக இருக்கிறது.

ஓராயிரம் பாடலிலே உன் பாடலை நான் அறிவேன், ஆயிரம் மலர்களே போன்ற பல திரையிசைப்பாடல்களில் ஆயிரம் என்ற சொல் மீண்டும் மீண்டும் வருவதைப்பார்க்கலாம். இந்த தேவாரத்தில், ஆயிரம் என்ற சொல் சிவபெருமானுக்கு அடைமொழியாக பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

எண்ணில் ஈரமும் உடையார்; எத்தனையோ இவர் அறங்கள்

கண்ணும் ஆயிரம் உடையார்; கையும் ஓர் ஆயிரம்

                                                       உடையார்;

பெண்ணும் ஆயிரம் உடையார்; பெருமை ஓர் ஆயிரம்

                                                       உடையார்;

வண்ணம் ஆயிரம் உடையார் வாழ் கொளிபுத்தூர் உளாரே

எண்ணில் ஈரமும் உடையார்:மனதில் இரக்கம் மிகுந்தவர் சிவபெருமான். தொண்டர்களின் மனக்கவலைகளுக்கு இறங்குபவர். 
எத்தனையோ இவர் அறங்கள்-அவர் பல அறச்செயல்கள் செய்பவர். 

கண்ணும் ஆயிரம் உடையார்; கையும் ஓர் ஆயிரம்

                                                       உடையார்

கண்களும், கரங்களும் ஆயிரம் உடையவர். எத்தனைக்கோடி உயிரினங்களையும் காப்பாற்றுபவர் என்பதால், அவருக்கு ஆயிரம் கண்களும், கரங்களும் தேவை தானே. 
பெண்ணும் ஆயிரம் உடையார்-
ஆயிரம் பெண்களைக்கொண்டவர் என்று பொருள் கொள்ளக்கூடாது. ஆற்றல் என்பது பெண்வடிவம். சிவனும் சக்தியும் ஒன்றே என்பதால், ஆயிரம் விதமான ஆற்றல்களைக்கொண்டவர்.

பெருமை ஓர் ஆயிரம்

                                                       உடையார்-

 தன்னுடைய இயல்பின் மூலமாகவும், செயல்களின் மூலமாகவும், ஆயிரம் பெருமை உடையவர். 
வண்ணம் ஆயிரம் உடையார் வாழ் கொளிபுத்தூர் உளாரே
ஆயிரம் வண்ணம் கொண்டவர்- திருவாழ்கொளிபுதூரில் வாழும் சிவபெருமான் .
அதே தேவாரத்தில் உள்ள இன்னும் இரண்டு பாடல்களை இந்த பதிவில் பார்ப்போம்.

பரவுவாரையும் உடையார்; பழித்து இகழ்வாரையும்

                                                      உடையார்;

விரவுவாரையும் உடையார்; வெண் தலைப் பலி கொள்வது

                                                      உடையார்;

அரவம் பூண்பதும் உடையார்; ஆயிரம் பேர் மிக

                                                      உடையார்;

வரவும் ஆயிரம் உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே

பரவுவாரையும் உடையார்-பரவுவார்- புகழ்வோரையும் தன்னுடையவர்களாக நினைப்பவர் சிவபெருமான். இது பெரும்பாலான மக்களின் இயல்பு. தங்களுக்கு வாழ்க வாழ்க என்று புகழ்பவர்களை எல்லாருக்கும் பிடிக்கும்.
ஆனால், 
பழித்து இகழ்வாரையும்   உடையார்- தன்னை இகழ்ந்து பேசுபவர்களை வெறுக்காது அவர்களையும் தன்னுடையவர்களாக நினைப்பவர் சிவபெருமான். விருப்பு, வெறுப்பு போன்ற குணநலன்களைக்கடந்தவர். 

விரவுவாரையும் உடையார்-
பரவுவார்
இமையோர்கள்... விரவுவார் மெய்யன்பின் அடியார்கள்’ என்கிறது திருவாசகம்
உண்மையான அன்போடு, கூடி இறைவனில் கலக்கும் அளவுக்கு அன்புடைய தொண்டர்களையும் உடையவர்.

வெண் தலைப் பலி கொள்வது

                                                      உடையார்,அரவம் பூண்பதும் உடையார்-பிரம்மனின் தலையோட்டில் பலி தேர்பவர்;பாம்புகளை அணிந்திருக்கிறார் 

ஆயிரம் பேர் மிக   உடையார்-ஆயிரம் பேர் கொண்டவர்

வரவும் ஆயிரம் உடையார்-வரமும் ஆயிரம் உடையார்

வாழ்கொளிபுத்தூர் உளாரே

சிவபெருமான் யாரிடமும்  வரவு எதிர்பார்க்கவில்லை. அவர் நமக்கு ஆயிரம் வரங்கள் அருள்பவர். அவர் வாழ்கொளிபுத்தூரில் உள்ளவர்.


ஒவ்வொரு மனிதரும் வெவ்வேறு படிநிலைகளைக்கடந்து வாழ்கிறோம். இருபது வயதுத்துடிப்பில், மானம் பெரிதாகத்தோன்றும். கொஞ்சம் முதிர்ச்சி வந்தபிறகு, தானம் செய்வது மனதுக்கு அமைதி அளிப்பதாக நினைக்கிறோம். பிறகு ஞானத்தை நோக்கிய தேடலுக்கு நகர விழைகிறோம். முடிவாக வானுலகம் நோக்கிப்பயணிக்கிறோம். 

இந்த எல்லா வாழ்க்கையையும் உடையவர் சிவபெருமான்.
அவருக்கு நம்மைப்புரியும் என்பதான ஆறுதலைத்தருகிறது இந்தப்பாடல் .

மான வாழ்க்கைய துடையார்
     மலைந்தவர் மதிற்பரி சறுத்தார்
தான வாழ்க்கைய துடையார்
     தவத்தொடு நாம்புகழ்ந் தேத்த
ஞான வாழ்க்கைய துடிடயார்
     நள்ளிருண் மகளிர்நின் றேத்த
வான வாழ்க்கையை துடையார்
     வாழ்கொளி புத்தூ ருளாரே. 

மான வாழ்க்கை அது உடையார்-மானமுள்ள பெருமையான வாழ்க்கையை உடையவர் சிவபெருமான் 
மலைந்தவர்-தம்மை எதிர்த்தவர் 
(வலியுடன் எதிர் பொரும் அசுரர்கள் பொடிபட மட்டித்திட்டு
உயர் கொக்கைக் குத்தி மலைந்த வீரா ...திருப்புகழ் )

மதிற்பரி சறுத்தார்- மதில்களை அழித்தார். (திரிபுரங்களை அழித்தவர் )
 தான வாழ்க்கை அது உடையவர்-தானங்கள் பல செய்கின்ற வாழ்க்கை உடையவர் 
தவத்தோடு நாம் புகழ்ந்தேத்த ஞான வாழ்க்கையது உடையார் -தவத்தின் மூலமாக வரும் ஞானமும் அடையப்பெற்றவர் 
நள்ளிருளில் மகளிர் நின்றேத்த வான வாழ்க்கை அது உடையார் வாழ்கொளி புத்தூருளாரே-
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதன் சிவபெருமான். அவருக்கு நள்ளிரவில் இன்னிசை கீதங்கள் பாடுகின்றனர் வானுலக மங்கையர். அவர்களின் புகழ்வான கீதங்களைக்கேட்டபடியே வானுலக வாழ்க்கையும் கொண்டவர் திருவாழ்கொளிபுத்தூரில் உள்ள ஈசனார். 

அவரைப்புகழ்ந்து ஏத்துவதால் நமக்கும் சிறப்பான மான, தான, ஞான, வான வாழ்க்கை அமையப்பெறலாம். (முற்றும்) 

Friday, February 16, 2024

எங்கிருந்து அழைத்தாலும் வருவார்- திருக்கழிப்பாலை நாயகர்


பால்வண்ணநாதர் வீற்றிருக்கும் இந்த திருக்கழிப்பாலைத்திருக்கோயில், ஆறாம் நூற்றாண்டுக்கு முன்னரிலிருந்தே இருந்துவந்திருக்கிறது. இப்போது கொள்ளிடம் இருக்கும் இடத்திற்கும், திருக்கழிப்பாலைக்கும் இடையே பதினோரு கிலோமீட்டர் தூரம் இருக்கிறது. முதலாம் இராஜஇராஜசோழனின் ஆட்சிக்காலத்தில், அணையாத நந்தா விளக்கெரிக்க நிவந்தம் இந்த கோயிலுக்குக் கொடுக்கப்பட்டதாக கல்வெட்டுகள் சொல்கின்றன. காலமாற்றத்தால், பலநூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்த கட்டுமானம் சிதிலம் அடைந்து, பின்னர் கோயில் மீண்டும் எழுப்பப்பட்டிருக்கிறது. 

அப்பர் பெருமான் திருக்கழிப்பாலையில் ஐந்து பதிகங்களைப் பாடியுள்ளதால், அவர் இங்கு பலகாலம் தங்கியிருந்து உழவாரப்பணி செய்திருக்கக்கூடும். 

அப்பர் பெருமான், மணிவாசகப்பெருமான், பெரியாழ்வார் என்று பலரும் தங்களைப் பெண்ணாக பாவித்துப்பாடிய பாடல்கள் பல இருக்கின்றன. அப்பர் பெருமானின் அப்படிப்பட்ட ஒரு பாடல், எப்போதும் சமயச்சொற்பொழிவு செய்பவர்களால் அடிக்கடி எடுத்துக்காட்டப்படுகிறது. அந்த பாடல் முதலில் இந்தப்பதிவில் சிந்திப்பதற்கு உரியதாக இருக்கிறது.

முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்;

    மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள்;

பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்;

         பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்;

அன்னையையும் அத்தனையும் அன்றே

    நீத்தாள்; அகன்றாள், அகலிடத்தார் ஆசாரத்தை;

தன்னை மறந்தாள்; தன் நாமம் கெட்டாள்;

         தலைப்பட்டாள், நங்கை தலைவன் தாளே! (06-25)

இந்த பாடல் ஆறாம் திருமுறை, அப்பர் பெருமான் திருவாரூரில் அருளியது.

தன்னை மறந்து, தன்னுடைய பெயர் கூட மறந்து,இறைவனின் தாள் பணியும் நங்கையாகத் தன்னைப்பாவிக்க நினைக்கும் எல்லாருக்கும் ஏற்றப்பாடல் இது.

இதைப்போன்ற மற்றொரு பாடல், திருக்கழிப்பாலைப்பற்றிய அப்பர் தேவாரத்தில் இருக்கிறது. 

ஊனப்பே ரொழிய வைத்தார்

ஓதியே யுணர வைத்தார்

ஞானப்பேர் நவில வைத்தார்

ஞானமு நடுவும் வைத்தார்

வானப்பே ராறு வைத்தார்

வைகுந்தற் காழி வைத்தார்

கானப்பேர் காதல் வைத்தார்

கழிப்பாலைச் சேர்ப்ப னாரே. (04-30)

பதம் பிரித்துப்படிக்க:

ஊனப்பேர் ஒழிய வைத்தார்

ஓதியே உணர வைத்தார்

ஞானப்பேர் நவில வைத்தார்

ஞானமும் நடுவும் வைத்தார்

வானப் பேராறு வைத்தார்

வைகுந்தற்கு ஆழி வைத்தார்

கானப்பேர் காதல் வைத்தார்

கழிப்பாலை சேர்ப்பனாரே. 

இன்றைய காலக்கட்டத்தில் வாழ்க்கை மிகவும் புறவயமாகிவருவதைப்பார்க்கிறோம். பிறக்கிற குழந்தைக்குப்பெயர் தேர்வு செய்வதில் தொடங்கி, பெயர் சூட்டுதல், சோறு ஊட்டுதல்  என்று அனைத்தும் இணையம் வழியாக விளம்பரப்படுத்தப்படுகின்றன. 

அப்பர் காட்டுவது அகவயமான மனப்பயிற்சி.பல நூற்றாண்டுகள் கடந்தாலும் அப்பரின் தேவாரங்கள், ஆலய வழிபாட்டு முறைகளுக்கும், நம் அகவயமான இறைத்தேடலுக்கும் வழிகாட்டுகின்றன.

இந்த பாடலின் முதல் நான்கு வரிகளும் சிந்திப்பதற்குரியன. எனக்குத்தெரிந்த ஒரு மத்திய வயதுடையவர்  எல்லாரிடமும் சிடுசிடுவென எரிந்து விழுவார்.அவருடைய உண்மையான பெயர் மறைந்து, அவர் இருந்த அடுக்ககக்குடியிருப்பில் "சிடுசிடு மாமா" என்ற புதிய பெயர் அவரது அடையாளம் ஆனது.

இன்னொரு மூதாட்டி தன் இளமைக்காலம் முதலாகவே கோயிலில் தினமும் எல்லா சன்னதிகளிலும் சுத்தம் செய்து, கோலம் போடுவதை ஒரு தொண்டாகச் செய்து வந்தார். சில நேரங்களில் சிவன் சன்னதியில் அமர்ந்து அவரோடு பேசுவதைப்போல அவரைப்பார்த்தபடி அமர்ந்திருப்பார். இந்த பாட்டிக்கு அவர் செய்த தொண்டே பெயராக ஆனது.- கோலப் பாட்டி.

நம்முடைய உண்மையான அடையாளம் என்ன? நம் ஊனுடலுக்கு உள்ளப்பெயரா? நமது படிப்பா? பார்க்கும் தொழிலா? கழிப்பாலை சேர்ப்பனாராகிய பால்வண்ணப்பெருமான், நமக்கு அவரின் பால் நிறம் போன்ற,  மனதை அருளி, நாம் கொண்ட ஊனப்பெயரை ஒழிய வைப்பார் என்கிறார் அப்பர் பெருமான். 

அப்பர் பெருமானைப்பல திருமுறை பயிலும் குழந்தைகள், அவர் கையில் வைத்திருக்கும் "தோசைத்திருப்பும் கரண்டி" போன்ற உழவாரம் என்ற கருவியை வைத்தே அடையாளம் காண்கிறார்கள். 

திருஞானசம்பந்தர்  "அப்பரே" என்று அழைத்தமையால்,அப்பருக்கு  அவருடைய மற்ற பெயர்கள் ஒழிந்தன. இன்றும் நாம் அவரை அப்பர் பெருமான் என்றே மனமுவந்து சொல்கிறோம்.

இறைவனை நோக்கி நம்முடைய எண்ணம் திரும்பினால், வாழ்க்கை எப்படி அர்த்தமுள்ளதாகும் என்பதை வாழ்ந்துக்காட்டியிருக்கிறார் அப்பர் பெருமான். 

அன்று இன்று போல மின்சாரம் இல்லை, தண்ணீர் வசதி இல்லை. ஒவ்வொரு ஆலயத்தையும் சுத்தம் செய்து, மக்களின் அறவாழ்வுக்கு அடிகோலினார் அப்பர் பெருமான்.

ஓதியே உணர வைத்தார்- ஐந்தெழுத்து மந்திரத்தை, மீண்டும் ஓதுவதாலும், சிவபெருமானைப்பற்றிய நூல்களைப்படிப்பதாலும், அவர் தம்மை உணர வைத்தார்.

ஞானப்பேர் நவில வைத்தார்- இறைவனைப்பற்றிய நினைவோடு தொடர்ந்து இருப்பதால் கிடைக்கும் ஞானம், இந்த உலகவாழ்க்கை எத்தனை நிலையில்லாதது என்பதையும், இறைவன் ஒருவரே பற்றிக்கொள்ளக்கிடைத்தவர் என்பதையும் தெளிவாக்கி, அந்த ஞானம் என்றும் தொடரும்படியாக, இறைவனின் பெயரைத் தொடர்ந்து நவில வைக்கும்.

ஞானமும் நடுவும் வைத்தார்:

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடு வாழ்வார்

என்கிறது திருக்குறள்.

மலர்மிசை ஏகினான் என்பதற்கு, இறைவனை நினைத்துத்தொழும் அடியவர்களின் மனம் என்னும் தாமரையில் இறைவன் வீற்றிருக்கிறார் என்பது பொருள் ஆகும்.

அதைப்போல அப்பர் பெருமான் , தனக்குக்கிடைத்த ஞானம் என்ற பெருவுண்மையை வைக்க ஒரு பெட்டியைப்போல , இறைவன் தான் வீற்றிருக்கும் இதயக்கமலத்தைத்தந்தார் என்கிறார்.

வானப் பேராறான கங்கையையும் சடையில் வைத்தார்; திருமாலுக்குச் சக்கரம் தந்தார்.திருக்கானப்பேர் என்னும் தலத்தின் மீது காதல் கொண்டார் திருக்கழிப்பாலை நாதர்.

இது வரை அப்பரின் பதிகத்தைப்பார்த்தோம்.

அப்பர் பெருமான் பக்தி செய்யும் முறை ஒரு வகை. சுந்தரரின் பாங்கு, ஒரு நண்பனிடம் பழகுவதைப்போன்றது. 

பலரும் வாழ்க்கையில் நொந்துபோன காலக்கட்டங்களில், சொந்தங்கள் என்னைக்கைவிட்டன; ஆனால் நல்ல நண்பர்கள் உற்றத்துணையாக இருந்தார்கள் என்று சொல்லக் கேட்டிருக்கிறோம்.

உறுதுணையாக இருக்கும் நண்பர்கள், காலம், இடம், சூழ்நிலை என்று எதையும் கருத்தில் கொள்ளாமல், தன்னுடைய நண்பனின் கஷ்டத்தைப்போக்க ஓடோடி வருவார்கள். 

அப்படித்தான் சுந்தரரின் வாழ்க்கைக்கு, அவருடைய காதல், திருமணம், அவர் சந்தித்த சிக்கல்கள் என்று பலவற்றிலும் சிவபெருமான் சுந்தரருக்காக ஓடோடி வந்திருக்கிறார்.

சாக்குபோக்கு சொல்லாமல், எங்கிருந்து அழைத்தாலும் உடனே வருவார் என்கிறார் சுந்தரர்.

சிவபெருமான் நம்முடையத்தொடர்பு எல்லைக்குள் தான் இருக்கிறார். 
எங்கேனும் இருந்து உன் அடியேன் உனை நினைந்தால்
அங்கே வந்து என்னோடும் உடனாகி நின்றருளி
இங்கே என் வினையை அறுத்திட்டு எனை ஆளும்
கங்கா நாயகனே கழிப்பாலை மேயானே. (சுந்தரர் தேவாரம்-(07-23))

உலகத்தின் பல இடங்களில் இன்று தமிழர்கள் பரவி வாழ்கிறார்கள்.நினைத்த நேரத்தில், குடும்பத்தினரோடு, முகம் பார்த்து இணையவழி பேசமுடிகிறது என்றாலும், சில ஆண்டுகளுக்கு முந்தைய கோவிட் காலம் ஒவ்வொருவருக்கும்  ஓவ்வொரு விதமான நெருக்கடிகளைக் கொணர்ந்தது.இதுவரை அனுபவித்திராத பலத் துன்பங்களில் ஆட்படுத்தியது.
இன்றைய காலக்கட்டத்தில், வேலைக்குப்போகும் பலருக்கும், பொருளாதார சூழலால், வேலைபோகும் என்ற பயம் மனதில் எப்போதும் இருக்கிறது. 
நம்முடைய மனக்குழப்பங்கள் நீங்க நாமும் சுந்தரரைப்போல அழைப்போம் வாருங்கள். 

உலகில் எங்கேயிருந்து உன்னை நினைந்தாலும், அங்கே வந்து, என்னோடு உற்றத்துணையாய் உடனிருந்து, என்னுடைய துன்பமான வினைகளை அகற்றி, என்னுடைய மனத்துன்பங்களிலிருந்து விடுதலைப்பெற வைக்கும் நீயே, என்னை ஆளும் கங்கை நாயகா, கழிப்பாலையை  விரும்பித் தன் இடமாகக்கொண்டு வீற்றிருக்கும் இறைவா என்று தன்நண்பனைப் பரவுகிறார் சுந்தரமூர்த்தி நாயனார்.


Monday, July 17, 2023

மனமே முருகனின் மயில்வாகனம்- மயிலாடுதுறை தேவாரம் அறிவோம்

 தென்னக இசையின் தாயான காரைக்கால் அம்மையின் வழியாக தான் இந்தளம் என்ற பண் அறிமுகம் ஆனது. இந்தோள ராகமும் இதுவே.

இந்த ராகத்தில் அமைந்த மனமே முருகனின் மயில்வாகனம் என்ற திரையிசைப்பாடல், மயில் ஆடும் துறையைப்பற்றிய சிந்தனைகளைக் கொண்டு வந்தது.

அம்பிகை மயிலாகத்தவம் செய்த இரண்டு தலங்கள்- மயிலாப்பூர் (திருமயிலை) மற்றும் மயிலாடுதுறை.

திருமயிலை சென்னை நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.
மயிலாடுதுறை இப்போது மாவட்டத்தலைநகராக இருக்கிறது. பல பாடல் பெற்ற தலங்கள் அருகில் இருக்கின்றன. 

 அம்பிகை, தட்சனின் யாகத்துக்குச் சென்று, அவமானப்பட்டு, மயில் ரூபம் எடுத்து ஐப்பசி மாதம் முப்பது நாட்களும் தவமிருந்து எம்பெருமானை அடைந்த தலம் மயிலாடுதுறை. 
 
Picture Courtesy: Veludharan.blogspot.com

சோழன் பெருவிரைவு ரயில் மாயவரம் எனப்படும் மயிலாடுதுறையில் முன்னெல்லாம் பதினைந்து நிமிடங்களுக்கு மேல் நின்று செல்லும். இந்த ஊர் கோயிலுக்கு இது வரை செல்லும் வாய்ப்பு கிட்டவில்லை. 

இந்து சமயத்தைப்பொருத்தவரை குறியீடுகளின் வழி, பல தத்துவங்கள் சொல்லப்படுகின்றன. முருகனின் பின்னால் இருக்கும் மயில் மனதைக்குறிக்கிறது என்கிறார்கள். நம் மனம் தூய்மையாக இருந்தால் அது இறைவன் அமரும் வாகனம் ஆகும்.

அம்பிகை இறைவனின் இடப்புறம் இருந்து, இறைவனின் சரிபாதியாக, உணர்ச்சிகளைக்கொண்டு முடிவெடுப்பவளாக இருக்கிறாள்.எனவே அவள் உணர்ச்சிகள் தோன்றும் மனதின் உருவாக மயில் ரூபம் கொண்டாள் என்று நான் புரிந்துக்கொள்கிறேன். 

இந்த ஊரை அருணகிரிநாதர் பாடாமல் விட்டிருக்க வாய்ப்பில்லை.
திருப்புகழில் தேடியபோது, சிகண்டியூர் என்றார் அருணகிரியார்.
சிகண்டி என்றால் மயில். 
கந்தர் அலங்காரம் பாடல் 26
நீலச் சிகண்டியி லேறும் பிரானெந்த நேரத்திலுங்
   கோலக் குறத்தி யுடன்வரு வான்குரு நாதன்சொன்ன
      சீலத்தை மெள்ளத் தெளிந்தறி வார்சிவ யோகிகளே
         காலத்தை வென்றிருப்பார், மரிப் பார்வெறுங் கர்மிகளே

அருணகிரிநாதர் தன் உயிரை மாய்த்துக்கொள்ள நினைத்தபோது, முருகன் அவரை ஆட்கொண்டு உபதேசம் புரிந்தவற்றை, அவர் கந்தர் அலங்காரம் என்ற நூலில் எழுதியுள்ளார். எப்போது வேண்டுமானாலும் மயில் மீது முருகன் வள்ளியோடு வருவார். குருநாதனான அவர் சொன்ன உபதேசத்தைப்பின்பற்றுபவர் மட்டுமே காலம் கடந்து வாழ்வார்கள் என்கிறார் அருணகிரிப்பெருமான். 

மிகவும் பழமையான ஊர். காசிக்கு நிகராக சொல்லப்படும் ஊர்கள் திருவையாறு, திருவெண்காடு, திருவிடைமருதூர்,  திருவாஞ்சியம், சாய்க்காடு மற்றும் மயிலாடுதுறை. ஐப்பசி மாதம் முழுவதும், மயிலாடுதுறை காவிரியில் மூன்று தேவியரும், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகளும் நீராடவருவது சிறப்பாகச் சொல்லப்படுகிறது. 

இங்குள்ள அம்பிகையின் பெயர் அபயாம்பிகை. அபிராமி அம்மைப்பதிகம் போல, இங்கு வாழ்ந்த நல்லதுக்குடி கிருஷ்ணஸ்வாமி என்பவர் எழுதிய அபயாம்பிகை பதிகம் யாருமில்லாத அவருக்கு, அம்பிகை அருள் செய்ததைக்காட்டுகிறது. 



பேச்சுவழக்கில் எல்லாருக்கும் இந்த ஊர் மாயவரம். வடமொழியில் மாயூரம். அப்பர், சம்பந்தர் தேவாரங்களில் மயிலாடுதுறை என்றிருப்பதைப்பார்த்து 1980ஆம் ஆண்டு பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஊர் இது. 


அப்பர் இறைவனின் திருவடி நிழலை விரும்பிப்பற்றியவர். எத்தனையோ துன்பங்கள் அவருடைய வாழ்க்கையில் வந்து சென்றன.தந்தைத்  தாயை சிறுவயதில் இழந்தது முதல், சூலை நோய் கொண்டு அவதிப்பட்டது, கடலில் கல்லைக்கட்டி இடப்பட்டது, சுண்ணாம்பு காளவாய் என்று சொல்லப்படும் சூடான அறையில் வைக்கப்பட்டது, மதம் கொண்ட யானையை எதிர்கொண்டது என்று பல உயிரைக்கூட விட்டுவைக்காத சோதனைகளை இறைவனின் பெருவருளால் தாண்டி வந்தார். 
நம்மில் பலருக்கு சோதனைகள் வரும்போது, இறைவன் இருக்கிறாரா என்ற கேள்வியும், ஏன் நான் மட்டும் அவதிப்படுகிறேன் என்ற கேள்வியும் வருவதுண்டு. 

ஏன் அப்பர் எல்லாரையும் போல சலித்துக்கொள்ளாமல், இறைவனின் திருவடியைப்பற்றினார் என்று யோசித்ததுண்டா? அது ஒன்றே வழி.  இன்றைய காலகட்டத்தில், பலரும் நேர்மறை எண்ணங்களைப்பற்றி சொல்கிறார்கள்.  (Power of Positive Thinking).

அப்பர் பெருமான் அன்று பூத்த மலர்களைக்கொண்டு அதிகாலையில் வழிபாடு செய்வதைப்பற்றி, பல தேவாரங்களில் குறிப்பிட்டிருப்பார். அவர் செய்த தொண்டால், தான் இன்றும் நமக்கு ஆலயங்களைத்தரிசிக்க முடிகிறது. 

மனதை மாற்ற சிலர் நெருக்கமானவர்களிடம் புலம்புவார்கள். சிலர் குடியைக்கையில் எடுப்பார்கள். ஆனால், இறைவனைப்பற்றுதலைப்போன்ற ஆறுதலும், நம்பிக்கையும் வேறு எதிலும் கிடைக்காது. 

ஐந்தாம் திருமுறையிலுள்ள மயிலாடுதுறை அப்பர் பெருமான் அருளிச் செய்த திருப்பதிகத்திலிருந்து சில பாடல்களைப்பார்ப்போம்.

நீற்றினான், நிமிர்புன்சடையான், விடை-
ஏற்றினான், நமை ஆள் உடையான், புலன்
மாற்றினான், மயிலாடுதுறை என்று
போற்றுவார்க்கும் உண்டோ, புவி வாழ்க்கையே.?

இந்த உலக வாழ்க்கை துன்பங்கள் நிறைந்தது தான். ஆனால் திருநீறு அணிந்து, நிமிர்ந்து நிற்கும் பொலிவான சடையுடையவனும், நந்தியைத் தன் வாகனமாகக்கொண்டவனும், என்னை ஆள்பவனும், என்னுடைய புலன்களை மடை மாற்றம் செய்தவனும் ஆனவன் மயிலாடுதுறையில் இருக்கும் சிவபெருமான். அவனைப்போற்றுவோருக்கு உலக வாழ்க்கையும், அதனால் உண்டாகும் துன்பங்களும் இல்லை என்கிறார் அப்பர் பெருமான். 
கோலும், புல்லும், ஒரு கையில் கூர்ச்சமும்,
தோலும், பூண்டு துயரம் உற்று என் பயன்?
நீல மா மயில் ஆடு துறையனே!
நூலும் வேண்டுமோ, நுண் உணர்ந்தோர்கட்கே?

இந்த பாடலில் அப்பர் சொல்லும் கோல் என்பது யோகதண்டம் எனப்படும் மூன்று பாகங்களாகப்பிரிந்த ஒரு கோல்.  புல் என்று அவர் சொல்வது தர்ப்பைப்புல்லைக்குறிக்கிறது. கூர்ச்சம் என்பது தர்ப்பைகளை சேர்த்துக்கட்டி வைக்கப்பட்டிருப்பதைக்குறிக்கிறது. பொதுவாக, கூர்ச்சம் இறைவனையோ, உயிரையோ எழுந்தருளச் செய்யப் பயன்படும் ஒன்றாகும். தோல் என்பது மான் தோலைக்குறிக்கிறது. பூணூல் அணியும் யாருக்கும், முதன்முதலாக அவர்கள் அணியும்போது அதில், மான் தோலின் சிறுபகுதி  சேர்க்கப்படும். அது அவர்களுக்கு தியானத்தின் மேல் நிலையை அடைய உதவும்.
இந்த மூன்றும் உடையவர்கள், இறைவனை உணர வேண்டும். அப்படி இல்லாமல், இந்த பொருட்களைக்கொண்டிருந்தும் துயரத்தோடு அவர்கள் இருந்தால், இந்த பொருட்களால் பயன் ஏதும் இல்லை. 
நீல மயில் உடைய மயில்கள் ஆடும் மயிலாடுதுறை ஈசனே,  மெய்ப்பொருளான உன்னை உணர்ந்தவர்களுக்கு, நூல் எனப்படும் முப்புரிநூல் வேண்டுமா? தேவை இருக்காது என்கிறார் அப்பர்.
மறைமுகமாக இறைவனை அடைய தூய மனமே வேண்டும் என்று சொல்கிறார் என்று நான் எடுத்துக்கொள்கிறேன். 

இதன் தொடர்பில் திருமந்திரத்திலும் இதே போன்ற ஒரு பாடல் இருக்கிறது. 
நூலும் சிகையும் உணரார்நின் மூடர்கள்
நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்
பாலொன்றும் அந்தணர் பார்ப்பார் பரம்உயிர்
ஓரொன் றிரண்டெனில் ஓங்காரம் ஓதிலே .
 

புறத்தோற்றத்தை மட்டும் வைத்துக்கொண்டு பலனில்லை. நூலும், சிகையும் தம்பால் பொருந்தப் பெற்ற அந்தணர்கள், பரமாத்மா ஜீவாத்மா  என்னும் இரண்டையும் நன்குணர்வர் எனில், அது வேதத்தை நன்கு ஓதி, வேதாந்தத்தை நன்கு உணரும் பொழுதே ஆகும்.
 இதுவே இந்த திருமந்திரப்பாடலுக்கான விளக்கம். 

அண்டர் வாழ்வும் அமர ரிருக்கையும்
கண்டு வீற்றிருக் குங்கருத் தொன்றிலோம்
வண்டு சேர்மயி லாடு துறையரன்
தொண்டர் பாதங்கள் சூடித் துதையிலே ((அப்பர் தேவாரம் மயிலாடுதுறை )
எது வாழ்வின் குறிக்கோள்? 
அண்டர் வாழ்வும்- தேவலோக வாழ்க்கையும் 
அமரர் இருக்கையும் - தேவலோக பதவிகளும்
கண்டு- அனுபவித்து
வீற்றிருக்கும் கருத்து ஒன்றிலோம்- அவற்றுக்கெல்லாம் தலைவனாக வீற்றிருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை.
வண்டு சேர்மயிலாடுதுறை அரன்- வண்டுகள் பல மொய்க்கும் பொழில்கள் உடைய மயிலாடுதுறையில் இருக்கும் சிவனின்
தொண்டர் பாதங்கள் சூடித் துதையிலே- தொண்டர்களின் பாதங்களை என் தலையில் சூடித் துதிப்பதே குறிக்கோள்

என்கிறார் அப்பர் பெருமான். பணிவு என்பதன் அடையாளமாக இருந்தவர் அப்பர் பெருமான். தொண்டு என்ற சொல்லுக்கும் பணிவு என்று பொருள் உண்டு. இறைவனின் தொண்டருக்குத்தொண்டராய் இருப்பதன் மூலம் வீடுபேறு கிடைக்கும், இந்த உலக வாழ்க்கையிலிருந்து நிரந்தர விடுதலை கிடைக்கும் எனபதால் அதுவே குறிக்கோள் என்கிறார் அப்பர் பெருமான். 


Sunday, April 09, 2023

திருமுருகாற்றுப்படை- அறிவோம்- சங்க இலக்கியம் -01

 திருமுருகாற்றுப்படை என்பது பதினோராம் திருமுறையில் உள்ளது . கடைச்சங்ககாலப்புலவர் நக்கீரரால் எழுதப்பட்டது. 

சமீபத்தில் தமிழின் மூத்த எழுத்தாளர், திரு.நாஞ்சில் நாடன் அவர்கள் சங்க இலக்கியங்களைக்கற்பதால் கிடைக்கும் நன்மைகளைப்பற்றிப்பேசிய உரை என்னை வெகுவாகக்கவர்ந்தது. 

சென்ற பங்குனி உத்திரத்தில் சுமார் 350 வரிகளை உடைய திருமுருகாற்றுப்படையிலிருந்துத் தொடங்கலாம் என்று படித்துப்பார்த்தேன். 

யாழ்ப்பாணம் ஆறுமுகநாவலர் எழுதிய உரை, தமிழ் இணைய நூலகத்தில் கிடைக்கிறது

அதிலிருந்து நான் புரிந்துக்கொண்டவற்றை, எனக்கும் நினைவில் இருத்திக்கொள்ள ஒரு கற்றல் வாய்ப்பாக அமையும் என்று இங்கே பதிவிடுகிறேன். 



முதலில் திருமுருகாற்றுப்படை வந்த  கதையைப்பார்ப்போம். 

ஆங்கிலத்தில் "Being in the Right Place at the Right time".

என்று சொல்வது அலுவலக சூழலில் அதிகம் பயன்படுத்தப்படும் தொடர். பணி உயர்வு ஒருவருக்குக்கிடைக்கும் பட்சத்தில் அவர் சரியான இடத்தில்,சரியான நேரத்தில் இருந்தார் என்பார்கள். 

சங்கக்கால புலவர் நக்கீரர். அவர் ஒரு முறை இமயமலையை நோக்கிச்சென்றார். இன்று போல, பேருந்து, ரயில் வசதிகள், பயணம் அழைத்துச் செல்லும் முகவர்கள் என்று யாரும் இல்லாத காலம். இரண்டாயிரத்து ஐநூறு  ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தே பயணப்பட்டார்.

வழியில் ஒரு அடர்ந்தக்காட்டில் ஓர் ஆலமரமும் அதனருகே ஓர் ஆறும் இருந்தன. நக்கீரர், அங்கே குளித்துவிட்டு, அந்த மரத்தின் கரையில் சிவபூஜை செய்யத்தொடங்கினார். 

அவர் கண்கள் திறந்திருந்தன. ஒரு  பழுத்த இலை தண்ணீரில் பாதியும், தரையில் பாதியுமாக விழுந்தது. அவர் பார்த்தபோதே நீரிலிருந்த பாதி மீனாகவும், தரையிலிருந்த பாதி பறவையாகவும் மாறியது. ஒன்றை ஒன்று இழுக்க ஆரம்பித்தன. அதை வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்த நக்கீரருக்கு, தனது பூஜையில் கவனச்சிதறல் உண்டானது. 

இன்று நாம் கவனச்சிதறல் இல்லாத கணங்களே இல்லை என்னும் இடத்தில இருக்கிறோம். ஒருவரோடு பேசிக்கொண்டிருக்கும்போதே, நம் கண்கள் தொடுதிரையைப்பார்க்கின்றன.

அங்கு என்ன நடந்திருக்கும் என்று உங்களால் யூகிக்க முடிகிறதா? ஆம்!  

உடனே ஒரு பூதம் ஓடோடி வந்து நக்கீரரைக்கைது செய்து இழுத்துச் சென்றது. "நான் சிவபூஜையில் கவனம் இல்லாமல் இருந்தவர்களைக்  கைது செய்து, ஆயிரம் பேர் வரை  சேர்த்து,ஒரே நேரத்தில்  உண்ணலாம் என்று நினைத்திருந்தேன். நேற்று வரை 999 பேர் கிடைத்தனர். நீ தான் அந்த ஆயிரத்தில் ஒருவன். ஆயிரமாவது ஒருவன்!" என்றது பூதம். 

அந்த பூதம் குளிக்க சென்ற இடைவெளியில்,மற்ற கைதிகள் எல்லாரும் சேர்ந்து நக்கீரரைத்திட்ட ஆரம்பித்தனர். 

நக்கீரர், மற்றவர்களுக்கும் தனக்கும் வழி கிடைக்க, நம்பிக்கையோடு, நேர்மறை எண்ணத்தோடு பாடியதே திருமுருகாற்றுப்படை.

பாடியதோடு அந்த செயல் நிற்கவில்லை. அனைவரும் முருகப்பெருமானின் அருளால் விடுதலை பெற்றனர். 

இன்று நமக்கான மனவிடுதலைக்காக , நிம்மதிக்காக திருமுருகாற்றுப்படையை நாடலாம். அப்படி என்ன இருக்கிறது இந்த சிற்றிலக்கிய நூலில்? வாருங்கள். சேர்ந்தே அனுபவிப்போம். 

இந்த கதையில் அவர் சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருந்தாரா என்பதை  அவரவர் யோசனைக்கே விட்டுவிடுகிறேன். ஆனால், நேர்மறை எண்ணங்கள் இருந்தால், எல்லா இடமும் நல்ல இடம் தான். எல்லா நேரமும் இறைவனை நினைத்தால் விடுதலை கிடைக்கும் என்பதையே இந்த கதை சொல்கிறது.

முருகு என்றால் என்றும் இளமையான என்று பொருள். தலையில் நரை இல்லாத, இளமை அழகோடு என்றும் இருப்பவர் முருகப்பெருமான் அவருடைய ஆறு படைவீடுகளையும் பற்றி விரிவாகப்  பேசுகிறது திருமுருகாற்றுப்படை.


 முதல் தொடர் : 1-6 வரிகள் 

உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு

பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்

கோவற இமைக்குஞ் சேண்விளங் கவிரொள

உ றுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாட்

செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை (5)

மறுவில் கற்பின் வாணுதல் கணவன்



எனக்கு இந்த செய்யுளின் தொடக்கம் மிகவும் பிடித்தது. உலகம் என்று தொடங்குவதால் மட்டுமல்ல. இந்த பாடல் தொடங்கும்போதே, உலகின் இருளை நீக்கும் சூரியனோடு தொடங்குகிறது. 

உலகம் என்ற சொல் சங்க இலக்கியங்கள் முதல் கம்பராமாயணம் வரை, பலவற்றிலும் முதல் சொல்லாக, மங்கலச் சொல்லாகப்பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 

உலகம் உவப்ப- உலகத்தில் உள்ள உயிர்கள் மகிழுமாறு. சூரியனின் பூரண ஒளியை பல மாதங்களுக்குத் தொடர்ச்சியாய் அனுபவிக்காத பல ஐரோப்பிய தேசங்கள் இருக்கின்றன. இவற்றில் எல்லாம் நிறைய பேர் மனசோர்விற்கு ஆளாகி, தற்கொலைக்கூட செய்து கொள்கிறார்கள். உலகின் முதல் ஆதாரம் சூரியன். அந்த ஒளி இல்லையேல் நாம் இல்லை. எனவே சூரியனைப்போற்றியபடி, அதன் வருகையால் மகிழும் உயிர்களைச்சொல்லி ஆரம்பிக்கிறது திருமுருகாற்றுப்படை. 

ஏர்பு வலன் திரிதரு பலர் புகழ்

ஞாயிறு கடல் கண்டு ஆங்கு

ஏர்பு- எழுந்து, 

வலன் திரிதரு- சுற்றி வந்து

பலர்- பல சமயத்தவரும்

புகழ்- போற்றும்

ஞாயிறு- சூரியன்

கடல் கண்டு ஆங்கு- கடலில் தோன்றுவதைக்கண்டு 

ஓ அற - புற இருள், அக இருள் இரண்டும் அற்றுப்போகும்படி 
இமைக்கும் அவிர் ஒளி-  கண் இமைகளை மூடி மனத்தால் பார்ப்பவர்களுக்கு அவர்கள் மனதில் ஒளியாக விளங்கி (அக இருளைப் போக்குவதாகவும்) 

சேண் விளங்கு ஒளி - கண்ணினாலே பார்க்கின்றவர்களுக்கு தூரத்திலேயே தெரியும் ஒளியாக (புற இருளை நீக்குவதாகவும்)

இது வரை வெளிப்பார்வைக்கு சூரியனைச் சொல்வதாய்த்தோன்றும் பொருளிலும், முருகனை அர்த்தம் கொள்வதாக இவ்வரிகள் அமைந்துள்ளன. 
முருகனின் நிறம் இளம் சூரியனை ஒத்தது. ஞாயிறு கடற்கண்டாங்கு சேண்விளங்கொளி  என்னும் வாக்கியம் , நீல நிறமுடைய கடலின் மீது விளங்கும் சிவந்த நிறத்தையுடைய சூரியனை சொல்வதோடு, நீல மயிலின் மீது விளங்கும் செவ்வொளி போன்ற மேனியை உடைய முருகப்பெருமானையும் குறிக்கிறது.
உ றுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாள்-
யார் உறுநர்? உற்றவர்கள். அடியவர்கள். முருகனை நாடி அவரைத்துதிப்பவர்கள்.
மதனுடை- மதன் என்ற சொல்லுக்குத் தமிழில் பல பொருள்கள் இருக்கின்றன. செருக்கு, மன எழுச்சி போன்றவை அவற்றில் சில.
அவர்களைத் தாங்கும் மதனுடை , நோன்றாள்
பணை மருள் நோன்றாள் என்று ஒரு வரியை நெடுநல்வாடையில் பார்த்தேன்.
நோன்றாள் என்றால் வலிமையான தாள் (பாதங்கள்).நோன்மை+ தாள் - வலிமையான பாதங்கள் .
உ றுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாள்-
தன்னுடைய அடியவர்களை எப்படியும் தாங்க வேண்டும் என்ற மனஎழுச்சியோடு இருக்கும் முருகப்பெருமானின் வலிமையான திருவடிகள். 

செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை- இன்றைய காலத் திரைப்படங்களில் ஒரு கதாநாயகன் குறைந்த பட்சம் இருபது பேரை அடிப்பதைப்பார்க்கிறோம். நம் கதாநாயகன் முருகப்பெருமான், அவரது கை எப்படிப்பட்டது? செறுநர்- பகைவர். தேய்த்த- அழித்த, அவர்களை வலிமை இழக்கச்செய்த
செல் உழர்- செல் என்ற தேடினால், இப்போது கிடைக்கும் பொருள், உயிரின் அலகு (Basic Unit of Life:Cell). அவ்வளவே. செல் என்ற சொல்லுக்கு மேகம் என்றும் இடி என்றும் பொருள் இருக்கின்றன. இங்கு சொல்லப்படும் பொருள் இடி போல விழுந்த அடியைக்கொடுத்த 
தடக்கை- தட என்றால் பெரிய. பெரிய கைகள். 

செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை:பகைவர்களை அழிக்கும் இடி போன்ற அடிகளைக்கொடுக்கக்கூடிய பெரிய கைகளை உடைய முருகப்பெருமான் 

மறுவில் கற்பின் வாணுதல் கணவன்-

மறுவில் கற்பின்:

குற்றம் ஒன்றும் சொல்லமுடியாத உயரிய கற்புநெறியை உடைய தெய்வயானையின்  

வாணுதல்- வாள் +நுதல்- ஒளியை உடைய நெற்றியை உடைய தெய்வயானை

கணவன்- அவளுடைய கணவனான முருகப்பெருமான். 

எது பக்தியில் கற்பு? தான் வழிபடும் கடவுளைத் தன் வாழ்நாள் வரையிலும் விடாது தொடர்வது என்று ஆறுமுக நாவலர் தனது உரையில் சுட்டுகிறார். அப்படி முருகப்பெருமானை விடாது தொடரும் தெய்வயானையை நமக்கு உதாரணமாகக்காட்டுகிறார் நக்கீரர்.